மாங்குடிபாலா
திரும்பிப்பார்க்கிறேன் - 1
எல்லோருடைய வாழ்விலும் ஒரு திருப்பு முனை உண்டு. அது திருமணம், படிப்பு, வேலை, அயல்நாடு. அயலூர் வாசம். நட்பு என பல்வேறு பரிணாமங்களில் அமையும். இவைதான் திருப்புமுனைகளா?
இவை நமது வாழ்வை திசை திருப்பிவிட்ட முனைகள் என்று மட்டுமே கொள்ளலாம். அதாவது மற்றவர்களால் மற்றைய நிகழ்வுகளால் நமது வாழ்வில் ஏற்பட்டத் திருப்பங்கள். அப்படியானால் உண்மையான திருப்புமுனை என்றால் என்ன?
நமது கடந்தகால வாழ்க்கையை ஆர அமர அசைபோட்டு வந்த பாதையை வாஞ்சையோடு திரும்பிக் பார்க்கிறோமே அதுதான் உண்மையான திருப்புமுனை! அதில் கடந்தகால களிப்பு - கசப்பு இரண்டுமே கலந்து கட்டி வந்து விழும். கசப்பை எப்படி எதிர் கொண்டோம், களிப்பை எப்படி பகிர்ந்து கொண்டோம் என்பதை நம் மனத்தராசில் மறுபடியும் துல்லியமாக எடைபோடுவது தான் உண்மையான திருப்புமுனை!
அப்போது தான் நாம் கடந்து வந்த பாதை ராஜபாட்டையா இல்லை கல்லும் முள்ளும் கலந்த கரடு முரடான பாதையா என்பது முழுமையாகத் தெரியவரும்.
வந்த பாதை ராஜபாட்டை எனில் பாதை அமைத்துத் தந்தவருக்கு நன்றி கூறிவும் கரடு முரடான பாதை எனில் அதைக் கடந்தது எப்படி என பிற்கால சந்ததிகளுக்கு வரலாறு கூறவும் முடியும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தாலும் இப்படிப்பட்டத் திருப்புமுனையே நமது வாழ்வின் பதிவுகளாக அமையும்.
ஒருமுறை மகாத்மா காந்திஜி அவர்களை வெளி நாட்டு நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். நீங்கள் மக்களுக்குக் கூறும் செய்தி அது போன்ற மகாத்மாக்களின் வாழ்க்கையையே செய்தியாக வரலாறு கூறும்.
நம் போன்ற சாதாரண ஆத்மாக்களின் வாழ்க்கையே செய்தியாக அமையாவிடுட்டாலும், வாழ்க்கையில் நாம் சந்தித்த விஷயங்களை நடுநிலையும் பகிரும் போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும் என்பதில் அட்டி எல்லை. ஏனெனில் மலரும் நினைவுகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது.
அது போன்று எனது மலரும் நினைவுகளை திரும்பிப்பார்க்கிறேன் பேர்வழி என்று மீண்டும் ஒருமுறை அது போன்று வாழ்ந்து பார்க்கும் முயற்சியே இந்தத் தொடர். அப்படிப் பார்க்கும் போது கல்லும் கனியான அற்புதம். முள்ளும் மலரான அதிசயம். இது காலம் செய்த அற்புதம்மட்டுமா இல்லை, நம்முள் வேகம் மறைந்து விவேகம் மலர்வதின் விளைவா?
இது போன்று திரும்பிப் பார்த்ததின் விளைவுகளே "ஆர்.கே.நாராயணன்" அவர்களின் "மால்குடிடேஸ்", சுஜாதா அவர்களின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்" போன்ற காலத்தை வென்ற படைப்புகள்.
அவர்களை மானசீகக் குருவாக மனதார ஏற்று இந்த "ஏகலைவி" தொடுக்கும் எழுத்துக் கணைகளே இந்தத் தொடர். நான் கடந்த வந்த பாதையைக் கைபிடித்து அழைத்துச் சென்று உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.
எல்லோரும் தன்னைப் பற்றிக் கூறும் போது தகப்பன் - பாட்டன். பூட்டன் என மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுவது உண்டு. திவசம் போன்ற சடங்குகளிலும் மூன்று தலைமுறை பற்றிக் கூறுவது உண்டு.
அப்படி மூன்று தலைமுறையோடு அறிமுகம் ஆவது அல்ல என் வரலாறு. என் வரலாறு இருபத்து ஐந்து தலைமுறை வரலாறு உள்ளடக்கியது என்ன நம்பமுடிய வில்லையா? தொடர்ந்து படியுங்கள் பின்னர் நம்புவீர்கர்கள்!
திரும்பிப்பார்க்கிறேன் - 2
நான் பிறந்தது புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த திருமலைராயன் பட்டினத்தில் டி.ஆர் பட்டினம் என்று சுருக்கி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் சின்னஞ்சிறுநகரம். சின்னஞ்சிறு நகரமாக இருந்தாலும் பெண்மை பெரிய வரலாறு உண்டு. தற்போது தொழில் நகரமாகவும் கல்விக்கேந்திரமாகவும் விளங்குகிறது.
இதிகாசகாலம் தொட்டு சோழ மன்னர்வரை சாறுவ திருமலைமன்னன் முதல் பிரஞ்சு ஆட்சிவரை இந்நகரின் பெருமை சொல்லிமாளாதது. நூற்றி எட்டுக் குளங்களும் நூற்றி எட்டு கோவில்களும் அமைந்த ஊர்-இஸ்லாமிய-கிருத்துவ வழிபாட்டுத் தலங்களும் உண்டு. மாசிமகம்-சூரசம்ஹாரம்-ஆயிரம் காளி அம்மன் விழா என ஏகப்பட்ட விழாக்கள்.
அத்துடன் எல்லையோர இராமமான போலகத்தில் அமைந்து இருக்கும் நங்கையாமடம் என்ற சித்தர் பீடம். சங்கீத விற்பன்னர் "பாபநாரம் சிவன்" அவர்கள் பிறந்தது போலகத்தில் தான். நாகப்பட்டினம் சூடாமணி விஹாரத்தின் கட்டுப்பாட்டில் அமைந்த ஊர் இது புதலம் என்ற பெயர் மருவி. போலகம் என்று ஆயிற்று.
ராமாயண காலத்தில் ராவணனிடம் சண்டையிட்டு மரணகாயமுற்ற ஜடாயு ராமன் வரும் வரை அவளிடம் ராவணன் சீதையைத் தூக்கி சென்ற விபரம் கூறும் வரை தனக்கு மரணம் வரக் கூடாது என்று சிவனிடம் வேண்டுகிறான். தன் சிறகுகள் வீழ்ந்த இடத்தில் தீர்த்தம் அமைத்து வழிபடுகிறான். இறைவனும் ராமன் வரும் வரை ஜடாயுவின் ஆயுளை நீட்டிக்கிறான். இந்த வரலாறு மாசிம காற்சவமாக இன்றும் நடக்கும் தலம் இது ஜடாயு குண்டத்தில் இன்றும் சாம்பல் விளைகிறது இதுபற்றி 'தஞ்சைத்தரணியில் என்ற எனது நூலில் "ஆயுளைநீட்டிக்கும் அண்ணல்" என்ற கட்டுரையில் விபரமாக எழுதி இருக்கிறேன்.
அடுத்து ராஜேந்திர சோழனின் பிரதம படைத்தளபதி "ராஜவேல்" பிறந்த ஊர் இது. மாம்பழப் போட்டியில் அண்ணனிடம் தோற்ற ஆறுமுகன்தாய் தந்தையரிடம் கோபித்துப் பழனியில் குடியேறுகிறான். பெற்றோரிடம் கோபித்தப்பாவம் நீங்க இங்கு லிங்கம் அமைத்து வழிபடிகிறான். ராஜவேல் ஆலயம் அமைக்க பூமியை அகழ இந்த லிங்கம் வெளிப்பட அவரையே மூலவராக வைத்து ஆலயல் அமைக்கிறான்.
அந்த ராஜ கோழிச்வரம் என்ற ஆலயமே தற்போது அபிராமி அம்மன் கோவில் என்று வழங்கப்படுகிறது.
திருக்கடவூர் அபிராமிக்கும் இந்த அபிராமிக்கும் தொல் தொடர்பு உண்டு. திருக்கடையூர் அர்ச்சகருக்கு பெயர் அம்பிகா தாசபட்டர். இவருக்கு சியாமளாதாசன் என்ற மகன் பிறக்கிறான். திடீரென அம்மை நோயால் இவனுக்குப் பார்வை பறிபோகிறது. பட்டர் அழுதுபுலம்ப பர்வதராஜபுரம் என்னும் திருமலைராயன் பட்டிணத்திலும் நானே உள்ளேன். அங்கு சென்று சிவதீர்த்தத்தில் நீராடி என்னை வழிபடு வழிபிறக்கும் என்று அருளுகிறாள்.
அப்போது திருமலைராயன் பட்டினத்து அபிராமி அம்மன் கோவில் சிவாச்சாரியாருக்கு வயது முதிர்ந்து விட்டது. திருமணவயதில் கௌரி என்ற பெண் வேறு இருந்தாள். இவர் தனது முதுமை நிலையையும் பெண் திருமணம் பற்றியும் அம்மனிடம் முறையிடுகிறாள். அவர் கனவிலும் அம்மன் அருளுகிறாள்.
திருக்கடவூரிலிருந்து சியாமளாதாசன் என்னை வழிபடவருவான். அவனே உன் மகளை மணப்பான். உனக்குப் பின் அவனே எனக்கு பூஜைபுரிவான் என்கிறாள். அது போலவே சியாமளாதாசன் வந்து இழந்த பார்வையை பெற்று கௌரியை மணம் முடித்து அம்மனை வழிபடுகிறாள். இத்தனை சிறப்புகள் வாய்ந்த இவ்வூர் முத்துக்குளிப்புக்கும் பேர் பெற்றது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னே திருமலைராஜன் என்ற தெலுங்கு மன்னன் இங்கு நல்லாட்சி செய்து வருகிறான். இவன் வெட்டுவித்த துணை ஆறே திருமலைராஜன் ஆறு என்று வழங்கப்படுகிறது. காவிரிக்குக் கல்லணை கட்டியவன் கருதாலன். தன் நகருக்கு தனி ஆறு கண்டு பாசனம் செழிக்க வழி வகுத்தவன் திருமலை மன்னன்.
இவன் தாய் மொழி தெலுங்கு ஆனாலும் தமிழ்மீது தனிப்பற்று இவளுக்கு. "ஆத்மதுரகவி தலைமையில் 64 புலவர்கள் இவன் அரசவையை அலங்கரித்தனர். இவர்களுக்கு தம் புலமை மீது மிகவும் கர்வம் உண்டு தங்களுக்கு நிகர் யாரும் கிடையாது என்று தருக்கித் திரிந்தனர்.
முத்து வாங்கவும் அரசவையில் தன் கவித்திறனை அரங்கேற்றுவும் திருமலைராயன் பட்டினம் வருகிறார். கவி காளமேகம். நகருக்கு நுழையும் போதே காளமேகம் கவிமழை பொழிகிறது. அதுவும் மோர் மழையாகப் பொழிகிறது.
திரும்பிப்பார்க்கிறேன் - 3
ஊருக்குள் நுழையும் போது பசியும் தாகமும் கவிஞரை வாட்டுகிறது. கையில் இருந்தது ஒரு சல்லிக் காசு மட்டுமே. அதை வைத்து எப்படிப் பசி ஆறுவது? எனவே எதிரே வந்த மோர் விற்கும் பெண்மணியிடம் மோர் கேட்கிறார். ஒரு குவளை மோர் ஒரு சல்லிக்காசு என்று அவள் கூற காசைக் கொடுத்து மோர் வாங்குகிறார். மோரில் தண்ணீர் விடாமல், தண்ணீரில் மோர் விட்ட மோர் அது. வாங்கிக் கடகடவென்று குடிக்கிறார் - மடமடவென்று கவிதை பொழிகிறார்.
"கார் என்று பேர்படைத்தாய்க கனத் தூறும் போது
நீரென்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வந்த பின்
திருமலைராயன் பட்டினத்து ஆய்ச்சியர் கை வந்த பின்
மோர் என்று பேர் படைத்தாயே முப்பேரும் பெற்றாயே"
இந்த மோரைத் தண்ணீர் என்றே விளிக்கிறார். நீ ஆகாயத்தில் இருக்கும் போது மேகம் என்று பெயர் பூமிக்கு வந்தபின் நீர் என்று பெயர் பெற்றாய் நீ
திருமலைராயன் பட்டினத்து மோர்விற்கும் பெண்ணிடம் நீ வந்த பின் மோர் என்று பெயர் சூட்டப்பட்டாய்.
இப்படி மூன்று பெயர் பெற்ற உன் சிறப்புதான் என்னே! எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்பதுதானே நியதி! அது போல் நீர் அதிகம் கலந்த மோரால் நமக்குச் சுவையான பாடல் கிட்டியது!
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவைக்களப்புலவர் அதி மதுரகவியின் அடிப்பொடிகளுக்கு ஒரு சந்தேகம். இவர் சிறந்த அறிஞரோ என்று ஒரு சோதனை நடத்தத் திட்டமிடுகின்றனர். அவரைத் தொடர்கின்றனர்.
நடந்து களைத்த அவர் ஒரு மளிகைக் கடை அருகே நிழலுக்கு ஒதுங்குகிறார். அப்போது ஒரு சிறுவன் இரண்டு சல்லிக்காசுக்கு மேகம் - பசு - ரத்தினக்கல் வேண்டும் என்று கேட்கிறான். கடைக்காரர் இது சாத்தியமா என்று சிறுவனை விரட்டி அடிக்கிறார்.
நமது கவிஞர் காராமணி கொடுத்து அனுப்புங்கள் என்கிறார். கடைக்காரர் விழிக்க கவிஞர் விளக்குகிறார். கார் என்றால் மழை. ஆ என்றால் பசு, மணி என்றால் ரத்தினம் என்று விளக்க அடிவருடிகளுக்கு அடிவயிற்றில் கிலி. ஓடிப்போய் அதுமதுரகவியிடம் பற்ற வைக்கிறார்கள்.
பின்னர் அரசவைக்கு காளமேகம் வருகிறார். அனைத்துக் கவிஞர்களும் அலட்சியப் படுத்தி அரி கண்டம் பாடமுடியுமா என்று கேட்க யமகண்டமே பாடுகிறேன் என்று பாடி கவிஞர்களின் செருக்கு அடக்குகிறார். மன்னனின் அபிமானத்தையும் பெறுகிறார். கவிஞர்கள் மனதில் பழிவாங்கும் எண்ணம் மறையவில்லை. மன்னனிடம் ஏதோ கோள் மூட்டுகின்றனர். ஆராயாமல் காளமேகத்தைக் கோபிக்கிறான். அவர் சினந்து சபிக்கிறார். மண்மாரி பொழிந்து நகர் அழிய வேண்டும் என்று திட்டித் தீர்க்கிறார். அவர் திட்டிய இடம் திட்டச் சேரி என்று வழங்கப்படுகிறது.
"செய்யாத செய்த திருமலைராயன் வரையில்
அய்யாவரனே அரை நொடியில் வெய்யதழற்
கண்மாரியான் மதனைக் கட்டழித்தாற் போற்றீயோர்
மண்மாரி யாலழிய வாட்டு".
என்று பாடிய இடம் வாழாமங்கலம் என்று வழங்கப்பட்டது. பின்னர் அரசி வந்து மன்னிப்பு கேட்க வாழ்த்திய இடம் வாழ்மங்கலம் என்று வழங்கப்பட்டது என்பது செவி வழிச் செய்திகள்.
இதற்குச் சான்றாக நகரின் பல பகுதிகளில் இன்றும் புதையப் புதையமணல். அரண்மனை இருந்த இடம் பனந்தோப்பாக மாறி, தற்போது தொழில் நகராக மாறி வருகிறது. கடல் கொண்டதால் மண் மூடிட்டது. அதற்கும் காளமேகத்தின் பாடலுக்கும் பிற்காலத்தில் முடிச்சுப் போட்டுவிட்டனர் என்று கூறுவோரும் உண்டு. அதை எல்லாம் ஆய்வாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வளவு சிறப்புகள் பெற்றத் திருமலை மன்னனின் முன்னோர்களின் ஆட்சி காலத்தில் ஒருநாள்....
திரும்பிப்பார்க்கிறேன் - 4
அப்போதைய மன்னரும் மந்திரியும் நகர் வலம் வருகிறார்கள். தற்போது நகராக இருக்குமிடம் அப்போது காடாக இருந்ததாம். முன்பு பனந்தோப்பாக மண் மேடிட்டு இருந்த இடம் தற்போது தொழில் நகராக அமைந்து இருக்கும் இடம் அப்போது அரண்மனையாக இருந்ததாம். மண்மாரி பொழிந்ததால் அரண்மனை சதிலமாகி மண்ணுக்குள் புதையுண்டது என்கிறார்கள். தற்போது தொழிற்சாலைக்கு அஸ்திவாரம் தோண்டும் போது பழைய கட்டிடங்களின் இடிபாடுகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
வனப்பகுதிகள் ஒரு பெரியவர் சந்தியாவந்தனம் செய்து கொண்டு இருந்தார். மந்திரி குதிரையை விட்டு இறங்கிப் பெரியவர் காலில் விழகிறார். அவரும் ஆசி கூறுகிறார். மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.
என் மந்திரி ஒரு பராரியின் காலில் வீழ்வதா என்று கோபிக்கிறார். மந்திரி பதறி இடை மறிக்கிறார். அவர் பராரி அல்ல. முக்காலமும் உணர்ந்த ஞானி. எனது குலகுரு. காசி வாசி மெய்கண்டார் என்று பெயர் தீர்த்தயாத்திரை வந்து இருக்கிறார் என்று கூறுகிறார்.
அப்போதும் மன்னனின் இடக்குப் போகவில்லை. அப்படி உண்மையில் ஞானியாக இருந்தால் இந்த ஐய்யனார் கோவில் மண் குதிரையை புல் திங்கச் சொல் என்கிறார். ஞானி அமைதியாக சிரிக்கிறார். ஒரு கை தண்ணீரைத் தெளித்தும் பிரம்பால் தட்டி ஒரு கை புல் கொடுக்கிறார். மண்குதிரை புல் தின்றது. மன்னன் பதறித் துடித்து 'வள்ளலே' என்னை மன்னியுங்கள் என்று காலில் வீழ்கிறான்.
அது முதல் "வள்ளல்" என்ற பட்டம் எங்கள் குடும்பத்திற்கு அடைமொழியாக அமைந்தது. தங்களுக்கு என்ன வேண்டும் கட்டளையிடுங்கள் என்கிறான் மன்னன். நான் பூசிக்க ஒரு பிள்ளையார் கோவிலும் அதற்கு வேதனம் செய்ய ஆண்டுக்குப் பன்னிரண்டு வராகனும் அளிப்பாய் என்கிறார். ஒரு வராகன் என்பது மூன்று ரூபாய்.
மேலும் ஞானி எதிர்காலம் பற்றிக் கூறுகிறார். எனது வாரிசு 21 தலைமுறை ஒற்றை ஆண்வாரிசாகத் தொடரும். 22 தலைமுறையாக இரண்டு ஆண்வாரிசும் ஒரு பெண்ணும். இரு ஆண்வாரிசுக்கும் ஒற்றைப் பெண் பிறக்கும். அந்த இரண்டு பெண்களுக்கும் குழந்தை பிறக்காது. எனவே எனது 23 வாரிசுக்குப் பின்னர் உன் நிபந்தத்தை வாங்க ஆள் இருக்காது. 23 தலைமுறை வரையே உனது நிபந்தம் உபயோகம் ஆகும் என்கிறார்.
இது பற்றிய ஆவணங்கள் தஞ்சை "சரஸ்வதி மகாலில்" இருப்பதாக என் தந்தை கருணநிதி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். இப்படி நிபந்தம் மன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்தது. வாரிசுகளும் தொடர்ந்தனர். பிள்ளையார் கோவிலும் சிறப்புற அமைந்து பூஜைகளும் இனிதே நடந்தன. இதற்குள் இப்பகுதி பிரஞ்சுக்காரர்கள் வசம் ஆக, அவர்களும் மன்னனின் அத்தனைக் கொடைகளையும் தொடர்ந்தனர்.
அது முதல் பிரஞ்சு அரசு ஆண்டுதோறும் 36 ரூபாய் அளித்து வந்தது. அது மட்டுமல்ல. ஜடாயுபுரீஸ்வரர் சிவன் கோவில் மூலமாக திருக்கார்த்திகை அன்று சொர்க்கப்பனை தொறுத்தப் பனைமட்டையும் அறுப்பி வைக்கப்பட்டது. சிவன் கோவிலின் உப கோவிலாகப் பிள்ளையார் கோவில் பராமரிக்கப்பட்டது. இது 22 வாரிசாக இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது இருவருக்கும் பிரித்து வழங்கப்பட்டது. தலா 18 ரூபாய் என்று அது அல்லாமல் இறையிலியாக மன்னன். 7 வேலி நஞ்சை 3 வேலி புஞ்சை அளித்தான். அதை 22 வது வாரிசுகள் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டனர்.
இது பற்றிய ஆவணங்கள் காரைக்கால் கவர்னர் மகாலில் இருந்து. 50 ஆண்டுகளுக்குமுன்னே கோவிலில் இருந்த பிள்ளையார் களவு போனது. பூஜை இல்லாதபோது நிபந்தம் ஏன் என்று எனது தந்தையார் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார்கள். அதுமுதல் அது நிறுத்தப்பட்டது. இந்த மதமைப் பணத்திற்கு பிரஞ்சில் 'மாந்தர்' பணம் என்று கூறுவார்கள்.
இப்போது உங்களுக்கு இரண்டு சந்தேகம் ஏற்பட்டு இருக்கும். 23 தலைமுறை பற்றி முன்கூட்டியே கூற முடியுமா என்பது முதல் கேள்வி. 23 தலை முறையுடன் சந்ததி அழியும் என்றால் 25வது தலைமுறையான நான் இந்த வரலாற்றை எப்படி எழுத முடியும் என்பது இரண்டாவது கேள்வி. இதன் விரிவான விளக்கம் அடுத்தவாரம்..
திரும்பிப்பார்க்கிறேன் - 5
இப்படி மெய்கண்டாரால் 23 தலைமுறை பற்றிக் கூற முடியுமா என்று நினைக்கலாம். அதாவது ஒருதலை முறை என்பது 30 ஆண்டுகள் என்று கூறுவார்கள். அப்படிப் பார்த்தால் கிட்டத்தட்ட 700 ஆண்டுகள், கழித்து தன் பரம்பரை வாரிசு இன்றி அழியும். என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் அவர்..
ஐரோப்பிய நாட்டில் "நாஸ்டர்டாம்" என்பவர் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். தற்போது உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்று கூறியிருக்கிறார். அதன்படி 90% நடந்தது என்று விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டு இருக்கின்றனர். 10% விழுக்காடு தவறு எப்படி நடக்கிறது. அப்போது எல்லாம் காகிதம் நடைமுறையில் இல்லை. மரப்பட்டை. ஓலை தோல் போன்றவற்றிலேயே எழுதி வைத்தார்கள். அதைப் பிரதி எடுக்கும் போது ஏற்பட்டத் தவறுகளே இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம். இது பற்றி விளக்க ஒரு சுவையான கதை.
சமுத்திர நீர் உப்புக்கரிக்கும் என்று கூறி அதைப் பிரதி எடுக்கும்படி சீடனிடம் கூறுகிறார் குரு. அந்த சீடன் 'ச'வுக்கும் 'மு'வுக்கும் சற்று இடைவெளி அதிகமாக விட்டு விடுகிறான். அடுத்த மாணவன் அதைப் பிரதி எடுக்க வருகிறான். "ச" வை விட்டு விட்டு முத்திர நீர் உப்புக் கரிக்கும் என்று எழுதுகிறான். அடுத்தவன் அதைப் பிரதி எடுக்கிறான். முத்திர என்றால் எதுவும் பொருள் இல்லையே. எனவே மூத்திர நீர் உப்புக் கரிக்கும் என்று எழுதுகிறான். மறுநாள் மூத்திர நீர் உப்புக் கரிக்கும் என மாணவர்கள் கோரஸ் பாட குருவுக்கு அதிர்ச்சி. இது போன்ற சில தவறுகள் நடப்பது இயற்கையே. சிலருக்கு முக்காலமும் உணரும் ஆற்றல் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்று அமரர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் தனது "மனம் - பிரார்த்தனை - மந்திரம்" என்ற நூலில் எளிமையாக விளக்கி இருக்கிறார்.
அமெரிக்காவில் "எட்கார் கேசி" என்று ஒரு போட்டோ கிராபர். சற்றே திக்குவாய். அவரை "ஹீப்னாடிஸ்" செய்து தொண்டையைச் சரி செய்கிறார் அவரது பல் டாக்டர். மீண்டும் அதே பிரச்சனை. மீண்டும் ஹீப்னாடிஸ் செய்ய எட்கார் கேசியேப் பேச ஆரம்பித்தார். தொண்டையில் இந்த இடத்தில் இன்ன கோளாறு என்று அவரே கூற அதன்படி சரிசெய்யக்குரல் நிரந்தரமாகச் சரியானது.
இவரை வைத்துப் பல வியாதிகளைப்பற்றியும், அதைக் குணப்படுத்தும் முறைகள் பற்றியும் பல் டாக்டர் அறிந்து அதன்படி சரி செய்தார். பலரும் நம்ப மறுத்தனர். பல்வித சோதனைகளுக்கு ஆட்படுத்தினர். கிட்டதட்ட 30 ஆண்டுகள் இந்தப் பணியைச் செய்தார் எட்கார் கேசி.
இது எப்படி சாத்தியமாகிறது தங்களுக்கு என்று அவரிடமே ஹீப்னாடிஸ் முறையில் கேட்டனர். ஆகாயப் பேரேடு என்று பதில் கூறினார். அதாவது கடந்தகாலம் - நிகழ்காலம் - எதிர்காலம் பற்றிய செய்திகள் அனைத்தும் ஆகாயப் பேரேட்டில் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. இதைப்பற்றித் தெரிந்தவர்கள் திரிகாலமும் துல்லியமாக உணர்ந்து கூறினார்கள். அவர்களே (விஞ்)ஞானிகள் என்று அழைக்கப்பட்டனர்.
அதாவது வான் வழியே ரேடியோ அலைகள் ஒலிபரப்பு ஆகின்றன இருந்தாலும் அதை நேரடியாக நம்மால் கேட்க முடிவதில்லை. அதை ரேடியோ வழியே சரியான முறையில் ஸ்டேஷனை ட்யூன் செய்தால் மட்டுமே ஒலி கேட்கிறது. சக்தி வாய்ந்த ரேடியா மூலம் மட்டுமே அகில உலக செய்திகளைக் கேட்க முடிகிறது.
அது போன்று ஆகாயப் பேரேட்டில் முன்னரே இருக்கும் செய்திகளை சக்தி வாய்ந்த ரேடியோவாக அமையும் ஞானிகள் முன் கூட்டியே கண்டோ - கேட்டோ - அல்லது உணர்ந்தோ கூறி வந்தனர். இந்த வழியிலேயே எமது மூதாதையர் மெய்கண்டாரும் - மேலைநாட்டு. "நாஸ்ட்டர்டாமும்", அமெரிக்க எட்கார் கேசியும் எதிர்காலம் பற்றிக் கூறி வந்தனர்.
இதற்கு மொழியோ - லிபியோ தேவை இல்லை போலும். ஏதோ அதிர்வுகள் மூலமே இந்த பரிமாற்றம் நடந்து இருக்க வேண்டும். இது என் அநுமானம் மட்டுமே. ஆய்வாளர் தாம் இதுபற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
திரும்பிப்பார்க்கிறேன் -6
உலகில் புதியது என்று எதுவும் இல்லை. எல்லாமே உலகம் உண்டான போதே உள்ளவைகள் தான். அது நமது கண்களுக்குத் தெரிய வரும் போது கண்டு பிடிப்பு என்று கொண்டாடுகிறோம். அணுவைப்பற்றித் தற்போது பெரிதாகப் பேசப்படுகிறது. ஹீரோஹிமா - நாதசாகிக்குப் பின்னரே அதன் ஆற்றல் தெரியவந்தது. அதன் விளைவுகளும் தெரியவந்தது.
ஆனால் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அணுவைப் பிளந்து ஆழ்கடலைப் புகட்டி என்று திருக்குறளைப் புகழ்ந்து அணுவைப் பிளக்கவும் அப்போதே தெரிந்து வைத்திருந்தனர் போலும்.
இதிகாசக் கதைகளில் பல விஞ்ஞான சம்பவங்கள் ஒளிந்து இருக்கின்றன ராமன் தனது பலத்தை சுக்ரிவனிடம் நிருபிக்க கணை தொடுக்கிறான். மிகத் தொலைவில்
உள்ள ஏழு மரங்களைத் துளைத்து மீண்டும் ராமனிடமே கணை வந்தது என்றது ராமாயணம். இதை தற்போதைய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைக்கு நிகரானது என்றே கொள்ளலாம்.
அடுத்து ராவணனிடம் யுத்தம் செய்யும் போது இந்திரஜித் ஏவியகணையால் ராமனுடைய சேனைகள் அனைத்தும் மயங்கி இறக்கும் நிலைக்குச் செல்ல அனுமன் கொணர்ந்த சஞ்சீவி மூலிகையால் அனைவரும் எழுந்தனர் என்கிறது ராமாயணம் - இதை போபால் விஷவாயுக்கசிவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அக்னி ஹோத்ரம் செய்தவர் வீட்டில் மட்டும் விஷவாயுத்தாக்கம் இல்லை என்பதும் செய்தி. அக்னி ஹோத்ரத்தையும் அனுமன் கொணர்ந்த சஞ்சீவி மூலிகையையும் ஒப்பிட்டுப்பாருங்கள் - ராவணன் புஷ்பக விமானத்தில் சீதையைத் தூக்கிக் கொண்டு வான்வழியே பறந்தான். அதுதான் இன்றை ஜெட்விமானங்களுக்கு முன்னோடி எனலாம்.
நளனுக்கு ஒரு ஆற்றல் உண்டு. சூரியனிடம் பெற்ற மந்திரத்தால் அடுப்பு மூட்டாமல் அதிவிரையில் சமைக்கும் ஆற்றல் பெற்றவன் நளன். அதைத் தற்போதைய சோலார் அடுப்புடன் ஒப்பிடலாமா?
இவை கற்பனைகள் என்று ஒதுக்கினாலும். எப்படி சூரியனிடம் பெற்ற மந்திரத்தால் என்று எப்படிக் கூறி வைத்தார்கள். சந்திரனிடம் அல்லது சிவனிடம் பெற்றவரம் என்று ஏன் கூறவில்லை? அந்த காலத்திலேயே இந்த கால விஞ்ஞான உண்மைகள் அனைத்தும் நம்மவர் அறிந்து வைத்து இருந்தனர். தற்போது போல் ஊடகங்கள் இல்லாமையால் இது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பின்றி ஆகிவிட்டது. மேலும் தற்போது போல் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அக்காலத்தில் வியாபாரம் ஆக்கவில்லை. எனவே அவற்றைக் கற்பனை என்று கூறுகிறோம்.
கலாம் அவர்கள் கூறியது போல அவர்களின் கனவுகள். கற்பனைகள் இன்று நனவாகியும் இருக்கலாம். எது எப்படியோ நம்மவர் அந்தக்காலம் தொட்டு இந்தக் காலம் வரை அறிவு ஜீவிகள் என்பது மட்டும் உண்மை.
இன்னும் எளிமையாகக் கூறுவது என்றால் தற்போது ஊடகங்களில் படிக்கிறோம் பத்தாம் நூற்றாண்டு சிலை கண்டு பிடிக்கப்பட்டது. ஏழாம்நூற்றாண்டு கல்வெட்டிக் கண்டுபிடிக்கப்பட்டது என்று. ஆனால் அவை ஏற்கனவே இருந்தவைதான். அதுபோல உலகம் உருவான போது ஆகாயப் பேரேட்டில் பதிவான உண்மைகளைத் தனது சித்தத்தால் (மனதால்) உணர்ந்து கூறியவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அது போன்ற ஒரு சித்தரே மெய்கண்டார்.
மன்னர் மெய்கண்டார் கேட்டுக் கொண்டபடி ஒரு பிள்ளையார் கோவில் கட்டித் தருகிறார். பிரகாரத்தில் ஒரு பிள்ளையார். கருவறையில் மூஷிக வாசனத்துடன் ஒருபிள்ளையார். சாந்து வைத்துக் கட்டிய செங்கற்றளி. நந்தவனம் பக்கத்திலேயே வீடு, அத்துடன் இனாம்சாசனமாக அளித்த 7 வேலி நஞ்சை நவே புஞ்சை என மெய்கண்டார் பரம்பரை கோவிலை பூஜித்து மகிழ்கிறது. அது போக வீட்டிலேயே ஆலயத்திற்கு ஆன அனைத்து தெய்வங்களும் மினிசைசில் அமைத்து வழிபடுகிறார்கள். மருதப்பர் என்ற லிங்கத்திருமேனி அம்மன் - நடராஜர் - முருகன் வள்ளி தேவானை பல்வேறு பிள்ளையார்கள் - ஸ்படிகலிங்கம் - என அனைத்துத் திருமேனிகளும் கந்த சஷ்டியின் போது ஆறு நாட்களும் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகன் வீதியுலா - மேளதாளம் - தேவார இன்னிசை எனத் தொடர்கிறது வழிபாடு. இவ்வாறு 21 தலைமுறைத் தழைக்கிறது. மெய்கண்டாருக்கு செப்புத் திருமேனியும் அமைகிறது. இரண்டடி உயரம். ஒரு கரத்தில் ஓலைச்சுவடி. மறுகரம் உபதேசிக்கும் பாணியில். காதுகள் நீண்டு தோள் தொட்டபடி அழகியதிருமேனி. அமைந்த காலம் தெரியவில்லை.
திரும்பிப்பார்க்கிறேன்- 7
மூத்தவருக்குப் பழைய வீட்டை விட்டுக் கொடுத்து இளையவர் சட்டநாததேசிகர் புதுவீடு கட்டுகிறார். அந்தக் கால பர்மா தேக்கில் தூண்களும், உத்தரங்களுடன் கூடிய மச்சுவீடு. சத்திரம் போல் மிகப் பரந்து விரிந்தவீடு. மாட்டுத்தொழுவமும் ஒரு வேய்ந்த அற்புதவீடு. பக்கவாட்டில் தண்ணீர் பந்தல். அந்தப் பழைய தூண்களும் உத்தரங்களும் இன்றும் எனது தந்தை புதிதாகக் கட்டிய வீட்டில் புது மெருகோடு இருக்கின்றது கிட்டதட்ட 175 ஆண்டுகளைக் கடந்து. அண்ணனுக்கு மணமுடித்து ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. தங்கையை சிதம்பரத்தில் மணமுடித்து வைக்கிறார்.
இதற்கிடையே சட்டநாத தேசிகருக்கும் மணமாகிறது. முதல் மனைவி அடிக்கடி பிறந்தகம் சென்று விடுவார். குழந்தைகளும் பிறந்து பிறந்து இறக்க மனமுடைகிறார் சட்டநாத தேசிகர். நல்ல படிப்பாளி. கல்வி கேள்விகளில் தேர்ந்தவர். அந்த காலத்திலேயே அவருக்குப் புத்தகப் புழு என்று பெயர். ஜோதிடர் ஊர்ப்பிரமுகர், ஊர்நாட்டாண்மை என பல பொறுப்புகள் அமையப் பெற்ற இவருக்குப் பொறுப்பற்ற மனைவி அமைந்தது இவரது துர்ப்பாக்கியமே.
ஊரும் உறவும் இவரை மறுமணம் செய்ய வற்புறுத்துகின்றனர். ஆனால் அந்த காலத்திலேயே பிரஞ்சுக்காரர் ஆட்சியில் இருதாரமணம் தடை செய்யப்பட்ட ஒன்று. ஆண்டது அந்நியர் ஆனாலும் பிரஞ்சுக்காரர் ஆட்சியில் பல நன்மைகளும் கிட்டின என்பது மறுக்க முடியாத உண்மை. அதாவது இருதாரதடை சட்டம் மூலமாக மணமுடிக்கும் முன்னே கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம். மணம் முடிந்துவிட்டால் கருணை காரணமாகக் கைது செய்வதில்லை. இரண்டாவது மனைவிக்கும் மக்களுக்கும் பிதுர் ராஜ்ஜித சொத்துரிமை இல்லை.
மேலும் அன்றே பிரஞ்சு ஆட்சியில் இலவசக்கல்வி. இலவச மதிய உணவு. கூட்டுசாம்பார் ரசம் மோருடன், சனியும், புதனும் கறிக் குழம்பு சைவம் சாப்பிடுபவர்களுக்குத் தனியே ரசம். கட்டாயமாக எல்லோருக்கும் பால் என பல சலுகைகள். இன்றைய குடும்பப் பென்ஷன் அன்றே அமுலில் இருந்தது. திருமணப்பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கே குழந்தைகளுக்குத் தனி அலவன்ஸ் என நலத்திட்டங்கள். இன்றைய லிட்டர் கிலோ போன்ற அளவைகள் பிரஞ்சு அளவைகளே. நான் படித்த காலத்தில் இந்த அளவிலே தான் பாடம் நடத்தப்பட்டது.
சட்டம் இடம் கொடுக்காவிட்டாலும் இவருக்குத் திருமணம் செய்து வைக்க ஊரும். உறவும் முனைப்பாக செயல்பட்டது. திருமணம் நடக்க ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இது எப்படியோ கசிந்து முதல் மனைவியை எட்ட அவர் அந்தக் காலத்திலேயே சட்டத்தின் உதவியை நாடினார். கணவனுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணீயச் கிந்தனாவாதி இவர்! விளைவு? சட்டநாத தேசிகர் திருமணத்திற்கு முதல் வாரம் முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். முதல் மனைவி வகையறா எப்பூடி என்று கொக்கரித்தபடி கெத்தாக ஊரில் வளைய வர சட்டை நாத தேசிகரும் நண்பர்களும் உறவினர்களும் இதை முன்னதாகவே எதிர்பார்த்து அதற்கும் தயார் நிலையிலேயே இருந்தனர்.
இதை எப்படி சமாளித்தனர் என்பதை அடுத்தவாரம் காண்போம்.
திரும்பிப்பார்க்கிறேன் -8
பிரஞ்சுப் பகுதியில் இரண்டாவது திருமணம் நடத்த சட்டம் இடம் கொடுக்காது. எனவே ஆங்கில ஆட்சிப் பகுதியில் இரண்டாவது மணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் மாலை வரை அமைதி காக்கின்றனர்.
மாலை மயங்கி இரவு வந்தது. வீட்டுப் பெண்கள் அனைவரும் குளத்தங்கரைக்குப் புறப்படுகின்றனர். அப்போது வயதுப் பெண்கள் விடியற்காலை அல்லது முன்னிரவு வேளைகளில்தான் இயற்கை உபாதைக்காக வெளியே வருவார்கள். அந்தக் காலத்தில் கழிப்பறை வசதி கிடையாது.
பெண்கள் நடுவே மணமகனும் பெண் வேஷத்தில். கட்டுக்குடுமியும் காதுக்கடுக்கனும் ப்ளஸ் பாயிண்டாக அமைய தலை நிறையப் பூச்சூடி கை நிறை வளையல்களும் கழுத்து நிறைய நகைகளுமாய் வெளியேறுகிறார். கரண்ட் வசதியற்ற "ஹரிக்கேன்" லைட் வெளிச்சத்தில் இது சுலபமாகிறது.
பெண்களிடம் பெருமதிப்பு கொண்ட பிரஞ்சுக்காரர்கள் சற்றுத் தள்ளி நின்றே கண்காணிக்கிறார்கள். எத்தனை பெண்கள் வெளியேறுகிறார்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் கார் - ரயில் போன்ற வசதிகள் இல்லை. மாட்டுவண்டியும் குதிரை வண்டியுமே போக்குவரத்து சாதனங்கள். குதிரை வண்டிகளுக்குத் திரை உண்டு. வெளியேறிய மாப்பிள்ளை மறைவில் தயாராக நின்ற குதிரை வண்டியில் ஏறி தப்பிக்கிறார். ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த ஒரு பெண்மணி மாப்பிள்ளை இடத்தை நிறைவு செய்து வீடு திரும்புகின்றனர். எண்ணிக்கை சரி பார்த்து திருப்தி அடைகின்றனர் காவலர்கள்.
குதிரை வண்டியில் ஏறிய மாப்பிள்ளை ஒரே வண்டியில் பயணிக்காமல் மாறி மாறிப் பயணிக்கிறார் தற்போதைய சினிமாக் கதாநாயகன் மாதிரி. உரிய நேரத்தில் மணம் முடித்துக் காலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் வீடுவர போலீசும் முதல் மனைவியும் அவருடைய உறவினரும் 'ஙே'ன்னு விழிக்க ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி விருந்து தடபுடலாக நடக்கிறது. காவலரும் இருந்து விருந்து சாப்பிட்டு சென்றனர். இப்படி நடந்த கல்யாணம் மூலம் பல குழந்தைகள் பிறந்தும் எதுவும் தங்கவில்லை. ஏழு குழந்தைகள் அல்பாயுளில் மறைய, முதல் மனைவி நிரந்தரமாக விலக, அவருக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டது.
தண்ணீர்ப் பந்தல் - மோர்ப்பந்தல் ஆனது. காளமேகத்திற்குக் கிடைத்த மோர் அல்ல! வெண்ணெய் எடுக்காத மோர். கந்தசஷ்டிவிரதம் இருந்து வீட்டில் ஆராதனை செய்து முருகனை ஆட்டுக்கடா வாகனத்தில் பல்லக்கில் ஆறு நாட்களும் எழுந்தருளச் செய்து கற்ற வித்தைகள் அனைத்தையும் செய்து பார்த்தும் வாரிசு நிலைக்கவில்லை.
மெய்கண்டார் கூற்றுப்படி அண்ணனுக்காவது ஒரு பெண் மகவு பிறந்துவிட்டது தனக்கு அதற்கும் வழியில்லையே என்று ஏங்கித் தளர்ந்தார் சட்டநாத தேசிகர். ராமேஸ்வரம் சென்று வந்தால் வாரிசு கிடைக்கும் என்று நம்பி ராமேஸ்வரம் புறப்படுகிறார் மனைவியுடன். கூடவே தங்கை தங்கையின் கணவர் கந்தசாமிதேசிகர், தங்கையின் ஏழு வயது மகன் சண்முகம் அனைவருமாகத் தலயாத்திரைப் புறப்படுகின்றனர். கூண்டு வண்டியில் போய் வர ஆறு மாதம் பிடிக்கும்.
அவல் சத்துமாவு அம்மி. ஆட்டுகல் சகிதம் புறப்படுகின்றனர். இரவில் பயணம் பகலில் ஓய்வு. அங்கங்க உள்ளதலங்களைத் தரிசித்துப் புனித நீராடி ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஓர் ஊரில் இளைப்பாறுகின்றனர். பெரியவர்கள் கண் அயர சிறுவன் சண்முகத்திற்குப் பொழுது போகவில்லை. தங்கி இருந்த வீட்டில் இளம் எருமைக்கன்று அவன் கண்களை உறுத்த அவிழ்த்து விட்டு வைக்கோற் போரைச் சுற்றி சுற்றி விரட்டி அடித்து விளையாடுகிறான். நல்ல உச்சி வெயில். இளம் கன்றால் ஓட இயலவில்லை. நாக்கு தள்ளி இறந்து விடுகிறது. அப்புறம் என்ன பஞ்சாயத்து நடக்கிறது அபராதம் கட்டிப் புறப்படுகின்றனர். இது ஒரு அபசகுனமாகப் படுகிறது. இருப்பினும் விதிவிட்ட வழி என்று ராமேஸ்வரம் சென்று நீராடி வீடு திரும்புகின்றனர். எட்டாவது முறையாகக் கருத்தருக்கிறார் மனைவி. அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்க பெண் குழந்தை பிறக்கிறது. சேது என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். மகிழ்ச்சி நிலைக்காமல் பேரிடிதாக்குகிறது.
திரும்பிப்பார்க்கிறேன் - 9
பிரசவித்த ஏழாம் நாள் மனைவிக்குப் பக்கவாதம் தாக்குகிறது. ஒரு கை கால் விளங்கவில்லை பிறந்த குழந்தைக்குப் பால் கூட கொடுக்க இயலாதநிலை குழந்தை பிறந்ததற்கு மகிழ்வதா, மனைவியின் நிலைக்கு வருந்துவதா என்ற நிலை. பசும்பால் குழந்தைக்கு சேரவில்லை. அதே சமயம் வீட்டு வேலைக்காரிக்கும் குழந்தை பிறக்க அவரே பால் புகட்டுகிறார். தங்கை குடும்பத்தை வீட்டோடு வரும்மாறு அழைக்கிறார். அவர்களும் சிதம்பரத்தை விட்டு திருமலைராயன் பட்டினம் வருகின்றனர். கூடவே அவரது குலதெய்வமும் குடிபெயர்கிறார்.
ஆம் சிதம்பரம் எல்லையில் இருக்கும் ஐயனார் கோவிலில் உள்ள பரமனார் சித்தர் பீடமே அவர்களது குலதெய்வம். இவரை பக்கத்துத் தோட்டத்தில் பிடி மண் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்கின்றனர். பின்னாளில் ஒரு சலவைத் தொழிளாளி ஒரு தனியிடத்தில் குடியேறுகிறார். அவர் கந்தசாமி தேசிகரிடம் தனக்குத் துணையாரும் இல்லை என்று புலம்ப பரமனாரை அவரது இல்லம் அருகே பிரதிஷ்டை செய்து அவர் துணி துவைக்க ஒரு குட்டையும் வெட்டுவிக்கிறார் சட்டநாத தேசிகர். அந்த இடத்தில் இன்றும் பரமன் குட்டையும் பரமனாளார் கோவிலும் உள்ளது. அந்த குட்டை அந்தக்காலம் முதல் இந்தக் காலம் வரை பண்ணைக்குட்டையாகவும் பயன்படுகிறது.
குளிக்க இறங்கும் போது தண்ணீர் குறைவாக இருக்கும் குளித்துக் கரை ஏறுவதற்குள் தண்ணீர் அலைபோதும் அதே போல் தண்ணீர் தறும்பத் தறும்ப இருக்கிறது என்று ஆசையாக நீந்தும் போது கரை ஏறுவதற்குள் தண்ணீர் வடிந்துவிடும் அதிசயம். அந்தக் கோவிலும் குட்டையும் அதைத் சார்ந்த தென்னந்தோப்பும் அந்த சலவைத் தொழிலாளிக்கு மானியம் வழங்கி விட்டார் சட்டநாத தேசிகர். அந்த இடம் சுற்றிலும் அவருடைய நிலங்கள். நடுவே களத்து மேடாக அமைந்த இடம் அது. இன்று மருவிபெரமன் குட்டை என்று வழங்கப்படுகிறது.
காலம் செல்லச் செல்ல மனைவி சற்றே நடமாட ஆரம்பிக்கிறார். சேதுவிற்கு ஏழு வயது ஆகும் போது பதினைந்து வயது தங்கை மகள் சண்முகத்தை மணமுடித்து வைக்கிறார். 14 வயதில் பருவமடைந்த சேது 10 ஆண்டுகள் தாம்பத்யம் கண்டும் குழந்தைப் பேறு இல்லை.
தண்ணீர்ப்பந்தலும் கந்த ஷச்ஷி விழாவும் தொடர்கிறது. அண்ணன் மகளுக்கும் மகவு இல்லை அவர்கள் தன் கொழுந்தன் மகனைத் தத்து எடுத்து வளர்க்கின்றனர். தன் மகளுக்கும் மகவு இல்லை எனவே மெய்கண்டார் கூற்று பலிக்கிறது என்ற விரக்தியுடன் சட்டநாத தேசிகர், அவர் மனைவி தங்கை, தங்கை கணவர் அனைவரும் இறைவனடி சேர்கின்றனர். இந்த கட்டத்தில் மெய்கண்டாரால் சொல்லப்பட்ட விதியைத் தன் மதியால் வெல்ல முடிவு எடுக்கிறார் சேது ஆச்சி! அது என்ன முடிவு?
திரும்பிப்பார்க்கிறேன் - 10
சேது தனது கணவருக்கு இரண்டாவது மணம் முடிக்க முடிவு எடுக்கிறார். யார் தடுத்தும் கேட்கவில்லை. 24 வயது சேது ஆச்சி கணவருக்குப் பெண் பார்க்க ஆரம்பிக்கிறார். அத்துடன் தனக்கு வியாதி இல்லறத்திற்குத் தான் லாயக்கில்லை என வக்கீல் மூலம் இரண்டாவது மணத்திற்கு அரசிடம் அனுமதியும் பெறுகிறார். தனது சொத்து முழுவதும் தனக்குப் பிறகு இரண்டாவது மனைவிக்கும் அவரது வாரிசுக்குமே என்று உயிலும் எழுதுகிறார் அந்தப் புதுமைப் பெண்.
தூரத்து உறவான 12 வயது ராசம்மாவை 32 வயது கணவருக்கு மணமுடித்து வைக்கிறார் சேது ஆச்சி. தனது 18 வது வயதில் கருவுறுகிறார் ராசம்மா. வீடே ஆனந்த வெள்ளத்தில் ஆழ வெகு விமரிசையாக வளைகாப்பு சீமந்தம் நடைபெறுகிறார்.
ஆனால் ஆண் குழந்தை இறந்தே பிறக்கிறது. வீட்டை சோகம் சூழ்கிறது. ஏற்கனவே சண்முக தேசிகர் அந்தக்க பண்ணையார்களுக்கே உண்டான அனைத்துக் கல்யாண குணங்களும் அமையப் பெற்றவர்.
அந்தக் கால தஞ்சை மாவட்டப் பண்ணையார்களின் வாழ்க்கை முறை பற்றி தி.ஜானகிராமன் தனது "மோகமுள்" நாவலில் அற்புதமாக விளக்கி இருப்பார். அது போலவே எனது தாத்தாவும் வாழ்ந்த எல்லா சொத்துக்களையும் இழக்கிறார். இதற்குள் ராசம்மா இரண்டாவது முறையாகக் கருவுறுகிறார். அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. கடவுளின் கருணையால் பிறந்த மகவுக்குக் கருணாநிதி என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். கும்பத்தில் மெல்ல மெல்ல வறுமை அடி எடுத்து வைக்கிறது. ஏழு மாநிலமும் குடி இருந்த வீடும் பக்கத்துத் தென்னந்தோப்பும் மட்டுமே மிச்சம்.
தாத்தா சண்முக தேசிகர் மனஉளைச்சளுக்கு ஆளாகிறார். வாரிசு இல்லையென எல்லா சொத்துக்களையும் வாரி வழங்கிவிட்டேன். வந்த வாரிசுக்கு வறுமையைத்தான் வழங்கும் அவலம் என புலம்ப ஆரம்பித்தார். குற்ற உணர்வால் தவிக்கிறார்.
குற்ற உணர்வு அவருக்குத் தாள முடியாத மன அழுத்தத்தைத் தந்தது. வீட்டுக்குள்ளேயே முடங்குகிறார். மகனைப் பார்த்துப் பார்த்து நான் குற்றவாளி என்று புலம்புகிறார்.
மாதவி வீடு செல்ல காசு இல்லை என்று உளைச்சலோ என்று இருமனைவிகளும் தவிக்கின்றனர். தாங்கள் சிறு வாருசேர்த்த பணத்தைத் தருகின்றனர். அது கண்டு மேலும் நிலைகுலைகிறார் சண்முக தேசிகர்.
மெல்ல மெல்ல மன நோயாளி ஆகிறார். காத்து -கருப்பு - இழிப்பு மிதிப்பு - செய்வினை என்று பலபரிகாரங்கள். பலன்தான் பூஜ்யம். அடுத்து ஜோதிடரை நாடுகின்றனர்.
திரும்பிப்பார்க்கிறேன் - 11
அந்த காலத்தில் மனவியாதி பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலம். எனவே அடுத்தகட்டமாக ஜோதிடரை நாடுகின்றனர். திருவிடை மருதூர் கோவிலை ஒரு மண்டலம் சுற்றினால் பலன் கிடைக்கும் என்று ஜோதிடர் கூற இரு மனைவிகளும்,குழந்தையுடன் கணவரை அழைத்துக் கொண்டு திருவிடை மருதூர் வரு கின்றனர். கோவில் சுற்றுகின்றனர் அரை மண்டலம் சுற்றியதுமே சற்றுதெளிவு வர மனைவிகளுக்கு சற்றே நிம்மதி.
அந்த நிம்மதி நிலைக்கவில்லை, ஊரெங்கும் காலரா.ஒரே இரவில் தாத்தா சண்முக தேசிகர் இறக்க அந்த காலசட்டபடி உடனடியாக அவரை திருவிடை மருதூரிலேயே அடக்கம் செய்து எல்லாவற்றையும்(ரவிக்கை உட்பட) இழந்து இரு பெண்களும் குழந்தை கருணா நிதியுடன் ஊர் வந்து சேர்கின்றனர்.
எதிர் காலம் அச்சுறுத்துகிறது.ராசம்மாவிற்கு வயது 24, சேதுவின் வயது 36, குழந்தைக்கு வயது 3 1/2. காகித ஒடம் கடலலைமீது போவது போல் மூவரும் போகின்றனர். மாடுகறவையும்,அப்பளம்,இடுவதுமாக கடுமையாக உழைக்கிறார்கள். வீட்டில் இரண்டு பேரை துனைக்குக் குடிவைத்து அப்பப்பா அவர்கள் பட்டபாடு. திண்னைப்பள்ளியில் மகனை எட்டாவது வரை படிக்கவைது ஜந்து மா நிலம் வாங்க அசுரசாதனை படைக்கின்றனர் இருவரும்.
அந்த காலத்தில் உயர் கல்விக்கு காரைக்கால் செல்ல வேண்டும். பஸ்,ரயில் வசதி கிடையாது நடந்தே போக வேண்டும்.எனவேதான் உள்ளுர் திண்னைப் பள்ளியில் படிப்பு, எங்களது குடும்பத் தொழில் வைதீகம், மற்றும் ஆலய ஒதுவார் பனி.இது இரண்டையும் பயில காரைக்காலில் உள்ள முத்தையாதேசிகர் வீட்டில் குருகுல வாசம் செய்ய 13 வயது மகனை அனுப்பி வைக்கின்றனர். சேது ஆச்சியின் தாய் வழி உறவு அவர்.எனவே அவர் வீட்டில் குருகுலவாசம் இரண்டு ஆண்டுகளில் எல்லா பயிற்சிகலும் இனிதே முடிந்தது.
அப்போது காந்திஜியின் தலைமையில் சுதந்திரப் போரட்டம் சூடுபிடித்த நேரம். இளைஞர் கருணா நிதி காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொள்கிறார். கைராட்டையில் நூல் நூற்பு இயக்கம். நண்பர்களுடன் வீட்டிலேயே கதர் இயக்கம் கண்டார். மேலும் கர் நாடக சங்கீதப் பயிற்சி, என பல புதுமைகளில் நாட்டம் கொண்டவர் அவர். அந்தகாலத்தில் "பாரத தேவி" இதழ் நடத்திய நூற்பு போட்டியில், இதழ் ஆசிரியர் முதல் பரிசு வாங்கியவர் என் தந்தை கருணானிதி தேசிகர் அவர்கள் மகன் சுதந்திர வேள்வியில் அதிதீவிரமாக ஈடுபட்டு விடுவானோ என்ற பயம் தாய் மார்களுக்கு எனவே மகனுக்குக் கால் கட்டுப் போட தீர்மானிக்கின்றனர்.
17வயது மகனுக்கு பெண் பார்க்க ஆரம்பிக்கின்றனர். அந்த காலத்தில் இளம் வயது மனம் சர்வசாதாரணம். பெண்பார்க்கும் படலம் ஆரம்பம் ஆகிறது வைத்தீஸ்வரன் கோவில் சோமசுந்தர தேசிகர் இளைய மகள் ராஜத்தை(13வயது) நிச்சயம் செய்கின்றனர்.இந்த சமையத்தில் என் தாய் ராஜம் அவர்களின் பிறந்த இடம் பற்றி சில செய்திகள் சொல்ல வேண்டியது அவசியம்.
திரும்பிப்பார்க்கிறேன் - 12
தாத்தாவின் பூர்வீகம், திருவாரூரை அடுத்த அடியக்க மங்கலம். தந்தை இளம் வயதிலேயே இறந்து விடுகிறார்.தாயும் தம்பியும் உண்டு,சிவப்புக் கல் வியாபாரம்.பின்னர் வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு வீதீயில் விடு வாங்கி குடியேறினர், தற்போது அந்த இடம் திருமண மண்டபாக இருக்கிறது. இளம் வயதில் சோம சுந்தர தேசிகர் முரடர்,கோபக்காரர். ஊர்வம்புகள் அத்துபடி.தாயார் கண்டிக்க கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். காசியில் ஒரு மடத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார்.காசி வாசம் அவரை அறிஞராகவும் சிறந்த நிர்வாகியாகவும் ஆக்குகிறது.
முரட்டுத்தனமும்,கோபமும் போயே போச்சு.இதற்கிடையே தம்பிக்குத் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. தம்பியும்,அவர் மனைவியும் அடுத்தடுது பிளேக் நோய்க்குப் பலியாகத்தாய் தவிக்கிறார். எப்படியோ செய்தி அறிந்த சோம சுந்தர தேசிகர் ஊர் வந்து சேர்கிறார். தாயாரின் வற்புறுத்தலுக்கு இனங்க அதே ஊரைச் சேர்ந்த உறவுப் பெண் 15வயது சீதாலட்சுமியை மணக்கிறார் தனது முப்பதாவது வயதில்.
சீதாலட்சுமி வந்த நேரம் லட்சுமிதேவியே வந்து குடியேறிவிட்டாள் வீட்டில் நகரத்தார் மடங்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் அதிகம் உண்டு.தாத்தா பல மடங்கலுக்கு நிர்வாகி ஆகிறார். காசியில் பெற்ற பயிற்சி கை கொடுக்க மிகசிறந்த நிர்வாகி என்று பெயர் எடுக்கிறார். நல்ல வருமானம், அத்துடன் மூன்று பெண்களும் இரண்டு பிள்ளைகளும் பிறக்கின்றனர். போனது போக இரண்டு பெண்களும் ஒரு பையனும் மிச்சம், மூத்த பெண் கங்காபவானி, இரண்டாவது பெண் எனது தாயார் ராஜம், அடுத்து எனது ஒரே மாமா பாலசுப்பிரமணியம்.. குழந்தைகளுக்கு நல்ல நீதி போதனைக் கதைகளை ஊட்டி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கச் செய்கிறார்.அந்தகாலத்திலேயே எனது பெரியம்மாவும் என் தாயும் ஆறாம் வகுப்பு வரையில் படிக்க செய்த புதுமை வாதி என் தாத்தா.
திரும்பிப்பார்க்கிறேன் - 13
மகிழ்ச்சியான குடும்பத்தில் விதி விளையடுகிறது வியாதி ரூபத்தில்,குடும்பம் நிலை குலைகிறது. தாத்தாவை சர்க்கரை நோய் தாக்குகிறது.அந்த கலத்தில் அந்த வியதிக் கெல்லாம் மருந்து அதிகம் கிடையாது.தனது கடமைகளை அவசர அவசரமாக நிறைவு செய்ய முற்படுகிறார்,மூத்த பெண்ணுக்கு வீட்டோடு மாப்பிள்ளைப் பார்த்து மணம் முடிக்கிறார். 13 வயதில் வந்த மாப்பிள்ளை ராமலிங்க தேசிகர் மாப்பிள்ளையாக இல்லை, வீட்டுக்கு மூத்த மகன் ஆகிறார்.
மாமனாரிடம் இருந்து மடத்து நிர்வாகங்களை கற்கிறார்,தானே நிர்வகிக்கிறார், சாதுக்கள் மடம் நகரத்தார் மடம் -குரு பூஜை மடம்-வெள்ளிக்கிழமை மடம்-செவ்வாய்கிழமை மடம் என பல மடங்கள். பல தானதர்மங்கள், வீட்டிலேயே அப்பர் சுவாமிகளுக்கு குரு பூஜை என ஜே ஜே என்று விழாக்கோலம் பூனும் வீடு, அத்தனையும் லாவகமாக கையாள்கிறார் ரமலிங்க தேசிகர். முதலில் ஆண்குழந்தை பிறந்து மரிக்கிறது.
இளைய மகளுக்கும் மணம் முடிக்க விழைகிறார் தாத்தா, முதல் சம்மந்தி மூலமாகத் திருமலைராயன் பட்டிணத்துக் கருணா நிதி தேசிகரைப் பெண்பார்க்க அழைப்பு விடுக்கிறார்.அவசர அவசரமாக கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் பைசல் செய்கிறார், இரு மகள்களுக்கும் தலா 10 மா நிலம் 40 பவுன் நகை என்று சீர் செய்து வைக்கிறார், அம்மாவை பெண் பார்க்க வரும் அன்று தாத்தா இறந்து விடுகிறார். கருணா நிதிக்கேப் பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார், எனது தாய்க்கு அப்போது வயது 13. தந்தையின் அறிவுரைகளையும் நீதி போதனைகளையும் கேட்டு வளர்ந்தவர். தந்தையைப் போலவே கருப்பு நிறம் சற்றே உயரம் கம்மி, சுருள்முடி ஆனால் ராஜம் என்றபெயருக்கு ஏற்ப ராஜகளை கொண்டவர். தந்தை அந்தக் கால தியாகராஜ பாகவதரின் அச்சு அசல்,குரல் வளம் உட்பட நிகு நிகு வென்று கலரும் உயரமுமாக,கதர் உடையும், கண்ணாடியுமாக கனகம்பீர உருவம்.
திருமணம் இனிதே நடந்தேறியது, பெரியப்பாதான் முன் நின்று திருமணம் நடத்தி வைத்தார்கள் பாட்டி 36 வயதில் வீட்டோடு முடங்கினார், சமையலும் வேலையும் படு சுறு சுறுப்பு, சுறு சுறுப்புக்கு எனது மானசீக குரு தாய் வழி பாட்டி சீதாலட்சுமியே ஆவார்கள், ஒயத உழைப்பாளி,அம்மாவின் 15 வது வயதில் அண்ணன் சட்டை நாதன் பிறக்கிறார், நான்கு ஆண்டு கழித்து நான் அடுத்து, ஏழு ஆண்டு கழித்து என் முதல் தங்கை வசந்தா பிறக்கக் குடும்பம் பெருகுகிறது.
திரும்பிப்பார்க்கிறேன் - 14
எனது முதல் தங்கை வசந்தா பிறந்த நேரம் எனது பாட்டி ஜோதிடம் பார்க்கிறார். மகன் பிள்ளை குட்டிக் காரன் ஆகிவிட்டான் வதீகக் காரியங்கலுக்கு சென்று நேரம் கெட்ட நேரத்தில் குளித்து சாப்பிடுவது ஒத்து வரவில்லை கடுமையான ஆஸ்த்துமா தாக்குகிறது,வேறு என்ன தொழில் செய்யலாம் என்று கஞ்சனூர் ஜோதிடர் எனும் குடும்ப ஜோதிடரை அழைத்துக் கேட்கிறார்.
உங்களைத் தேடி ஒரு தொழில் தானாகவே வரும் அதை ஏற்று நடத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்கிறார்.அப்போது தாத்தா காலத்தில் தண்ணிர் பந்தலாக இருந்த கட்டிடத்தில் ஒரு செட்டியார் தம்பதி குடி இருந்தனர், வாடகை 2 ரூபாய்,குழந்தைகள் இல்லை, நானும் அண்ணனும் அவர்கள் வீட்டிலேயே டேரா. ஏதோ பிரச்சனை காரணமக ஊரை விட்டுச் செல்லும் நிலை,அப்போது எல்லாம் பிரஞ்சுப் பகுதியில் ஏதும் பிரச்சனை என்றால் ஆங்கிலேயர் பகுதிக்கு சென்று விடுவர், அது போல் ஆங்கிலேயர் பகுதியில் பிரச்சனை என்றால் பிரஞ்சு பகுதிக்கு குடியேறுவது வழக்கம், அப்படி பட்ட நிலையில் தான் பாரதியும் அரவிந்தரும் புதுவையில் குடியேறினர்.
செட்டியார் அவர்கள் எனது பாட்டியிடம் வந்து கூறினார்ள், இரவே வீட்டை விட்டு வெளியேரனும், நான் புத்தக ஏஜண்டாக இருக்கிறேன், 18 புத்தகங்கலுக்கு 500 ரூபாய் அட்வான்ஸ் செலுத்தி இருக்கிறேன்,அதை நீங்கள் தந்து விட்டால் உங்கள் பெயருக்கு ஏஜென்சியை மாற்றி தருகிறேன், உங்களுக்கு வேண்டாம் என்றால் இன்னொரு நபருக்குக் கொடுத்து விடுவேன் என்கிறார்.
ஜோதிடர் கூறிய வீடு தேடி வரும் தொழில் இதுதான் என்று மகிழ்ந்த எனது பாட்டியும் பணத்தை எப்படியோ புரட்டி ஏஜன்சியை மகனுக்கு வாங்கி தருகிறார் 60 ஆண்டுகளுக்கு முன்னே 500 ரூபாய் புரட்டுவது என்பது தற்போது 5 லட்சம் புரட்டு வதற்கு சமம், தொழில் வீடு தேடி வந்து விட்டது, அடுத்து பழைய இரும்புக் கடையில் 5 ரூபாய் கொடுத்து காப்பிக்கொட்டை அரைக்கும் கை மிஷின் ஒன்று வாங்கி வந்தார் எனது தந்தை, அதை வைத்து வீட்டிலேயே காப்பிக் கொட்டை அரைத்து விற்பனை செய்ய வியாபாரம் சூடு பிடித்தது.அடுத்து கடைதெருவில் ஒரு கடை பிடித்து ஒரு ஷாப் ஆரம்பித்தார்கள்.வசந்த நிலையம் என்ற பெயரில்.வசந்தம் காப்பி, வசந்த நிலையம் என்று எல்லாம் என் தங்கை பிறந்த நேரம் வாழ்வில் வசந்தம் வந்தது என்று அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.நல்ல வியாபாரம்,நல்ல செல்வாக்கு. எட்டாம் வகுப்புடன் நான் இடை நிருத்தம் செய்யப்பட்டேன் பெண்கள் வெளியே வர அனுமதிக்காத காலக்கட்டம் அது,குறிப்பாக எங்கள் குடும்பங்களில் வாசல் தெளிக்கக்கூட வயது வந்த பெண்களுக்கு அனுமதி இல்லை.
தந்தை புத்தக முகவர் ஆனதால் 7 வயது முதல் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்து விடுவேன்! புரிந்ததோ புரியவில்லையோ படித்து முடித்து விடுவேன்!! சில புத்தகங்கள் சென்சாருக்கு உட்பட்டது தரமாட்டார்கள் அந்த புத்தகங்கள் புரட்ட முடியாத படி பிண் பண்ணி இருக்கும் பத்திரிகை தர்மம் அனுஷ்டிக்கப்பட்ட காலம் அது. எனவே எனது 15 வ்யதுகுள் க்ல்கியும்,அகிலனும், சாண்டில்யனும்,லட்சுமியும்,தொ.மு.பாஸ்கரத்தொண்டைமானும்,ராஜம் கிருஷ்ணனும்,ஜெயகாந்தனும், அத்துபடி, ஆனார்கள்.அப்போது அவசர அவசரமாக மேய்ந்த வற்றைத்தான் இப்போது சாவகாசமாக அசை போடுகிறேன். அத்தோடு எனது தந்தை ராமனுக்கு சபரிகடித்தப்பழம் தந்தது போல் தான் சுவைத்தப் புத்தகங்களை எங்களைப்படிக்க சொல்வார்கள் அது பற்றி குடும்ப உறுப்பினருடன் விவாதம் செய்வார்,இந்த வழியில் காந்திஜியின் சத்யசோதனை, மு.வ.அவர்களின் படைப்புகள், தமிழ் வாணணின் தன்னம்பிக்கை நூல்கள் ராமாயணம். மகாபாரதம் எல்லாம் எனது 15 வயதுக்குள் படிக்கும் வாய்ப்பை எனக்குத்தந்தவர் எனது தந்தையே, தந்தை யோடு கல்வி போம் என்ற வழக்குக்கு உதாரணபுருஷர் எந்து தந்தை எனவே பள்ளிக்கல்வி போனதே தவிர இலக்கிய கல்வியில் எந்ததடங்களும் இன்றி தொடர்ந்தேன்!! வளர்ந்தேன்
திரும்பிப்பார்க்கிறேன் - 15
அடுத்து வீடுகட்ட வேண்டும் என்று பாட்டியும் அம்மாவும் நச்சரித்தார்கள், ஒற்றை வீட்டில் கரண்ட் இல்லாமல் வசிப்பது மிகவும் கஷ்டமான காரியம்தான். அத்தோடு அப்போது திருட்டு பயமும் அதிகம் இரு முறை திருடனும் வந்து விட்டான், ஒரு முறை ஒடு பிரித்து திருடன் இறங்க முற்படும் போது தந்தை விழித்து விட்டார், எனவே ஒடி விட்டான். மருமுறை திருடவந்தவன் வாசற்கதவின் பித்தளை கைப்பிடியையும், பிள்ளையார் கோவில் கலசத்தையும் திருடிசென்று விட்டான், அப்பா வீடு கட்ட சம்மதிக்கவில்லை, ரிப்பேர் செய்து லைட் போட்டு விட்டால் போதுமானது என்றார். ஆனால்,பாட்டியும், அம்மாவும் அடுத்து எனக்குத் திருமணம் செய்யனும்,அதற்குள் புது வீடு கட்டனும் என்று நச்சரிக்க மனை போடப்பட்டது. வீடு கட்டி முடியும்போது 5 மா நிலம் 50 பவுன் நகை காலி, அடுத்து எனது திருமணம் . இதற்குள் பெரியப்பா திடீரென காலமாக அம்மாவின் நிலத்தைப் பார்க்க ஆள் இல்லை என்பதால் அதை விற்கும் நிலை. அதை விற்று எனது திருமணம் நடந்தது அப்போது எனக்கு வயது 16,
நிலம் குறைந்ததால் வருமானம் இழப்பு,அடுத்துக் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்பட குடும்பம் தடுமாற ஆரம்பித்தது. தடுமாறும் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் மகனாக அண்ணன் அமையாதது துரதிருஷ்டமே, கடை,நியூஸ் ஏஜன்சி,காப்பித்தூள் வியாபாரம்,வீட்டிலேயே ஆரம்பிக்கப்பட்ட விறகு கடை அத்தனையும் காலி,இடையில் அண்ணனுக்குத் திருமணம் அண்ணி ஆசிரியை பழைய வீட்டின் மனைகள் விற்க்கப்பட்டு முதல் தங்கை வசந்தாவின் திருமணம் நடைபெற்றது. இதற்குள் குடும்பப் பிள்ளையார் களவு போனார்.பின்னர் திரும்பக் கிடைக் கப்பட்டுத் தண்ணீர் பந்தலில் தங்கவைக்கப்பட்டார்.. அடுத்து கருவறைப் பிள்ளையாரும் களவு போனார் அகபடவே இல்லை.அது முதல் கோவில் ஆடு மாடுகளின் சரணலயம் ஆயிற்று. இதற்கிடையில் எனது பெரியபாட்டி தண்ணீர் பந்தலில் குடியேறிய பிள்ளையாருக்கு விளக்கேற்றும் போது எதிர் பாராத விதமாகப் புடவையில் தீப்பற்றி புண்ணாகிப் படுத்த படுக்கை ஆனார்.ஆச்சாரம் கரணமாக மருத்துவமனை செல்ல மாட்டேன் ஊசி போட்டுக் கொள்ள மாட்டேன் என்றுபிடிவாதம் பிடித்து புண் கடுமையாகி ஆறீக் குணம் ஆக ஒரண்டு ஆனது. கவனிக்க செல்லம் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டார், பாட்டிக்குத் தாய்ப்பால் ஊட்டியவரின் பேரன் மனைவி அவர். அப்போது பாட்டி இறைவனிடம் வேண்டுவார்கள், தீக்காயம் குணமான பின்னரே நான் சாக வேண்டும் தீக்காயத்துடன் இறந்தால் அதுர் மரணம் எனவே மோட்சம் கிடைக்காது என்பார்கள்.
எங்கலுக்கு எரிச்சலாக இருக்கும்.வைத்தியமும் செய்துகொள்ளாமல் தீக்காயத்துடன் போரடும் இவர் சாகக் கூடாது என்று வேண்டிகொள்கிறாரே என்ற கோபம் அனைவருக்கும். இதற்குள் நிதி நிலை மிகவும் மோசமானது. எல்லாம் ஒவ்வொன்றாகக் கரைய எஞ்சி நின்றது குடியிருந்த வீடும் பக்கத்தில் சிறிது மனையும் 3 மா நிலமும் மட்டுமே இதற்கிடையே நேரடி வாரிசு இல்லாதவர் உடைமைகளை அவருக்கு பிறகு யாருக்கும் விற்கவோ வாங்கவோ முடியாது என்று சட்டம் கூற வீட்டை என் தாயார் பெயருக்கு மாற்ற ஏற்பாடு ஆனது அடுத்து நிலத்தையும் விற்கும் நிலை இதற்குள் பாட்டி புண் ஆறி கோல் ஊண்றி நடக்க ஆரம்பித்து விட்டார். 1967 பத்திரப்பதிவு வீட்டிலேயே நடந்தேறியது.
அன்று இரவு.............
திரும்பிப்பார்க்கிறேன்-16
இரவு நங்கு சாப்பிட்டு உறங்கிய சேது ஆச்சி நள்ளிரவில் அனைவரையும் எழுப்புகிறார் நெஞ்சு வலிக்கிறது எனது பெட்டியை எடுத்துவா என்கிறார் பரபரப்பாக.பெட்டி வருகிறது சிறுவாட்டுப் பணம் ரூ.340 ஜ மகனிடம் கொடுத்து இறுதிப் பயண செலவுக்கு வைத்துக் கொள் என்கிறார் யாருக்கும் எதுவும் புரியவில்லை.
"புண்ணியா உண்டைக்கேப்
போது கின்றேன் பூம்புகலூர்
மேவிய புண்ணியனே"
என்று அப்பர் இறை ஜோதியில் கலக்கும் போது பாடிய பாடலைப் பாடிய படியே சரிகிறார். அவர் உயிர்ப் பறவை மெய் கண்டாரை தேடிச் சென்று விட்டது.
ஆம் அவர் கூறியபடியே 23வது தலைமுறை வாரிசு இன்று மறைந்து விட்டது, கூடவே எல்லா வித சொத்து சுகமும் மறைந்து விட்ட்து பிள்ளையார் கோவில் பிள்ளையார் உட்பட மறைந்து விட்டன. 12 ஆண்டுகள் ஒடுகின்றன. கடைசி தங்கை மைதிலி திருமணத்திற்கு நிற்கிறாள். இதற்கிடையே எனது மகளுக்கு 17 வயது ஆகிறது. அந்த ஆண்டு பொங்கல் வரிசை வக்க எனது தந்தை வருகிறார். என் நாக்கில் சனி அமர்கிறது.
இதற்கிடையே தந்தை ஜோதிட வித்தகர் ஆகிவிட்டார். குடும்பம் சற்றே தலைதூக்க ஆரம்பித்தது. அப்ப பேத்திக்கு எப்போது கல்யாணம் ஆகும் எப்படிபட்ட மாப்பிள்ளை அமையும் என்று நான் கேட்க சாப்பிட்டுக் கொண்டு இருந்த தந்தை துனுக்குற்று அதிர்கிறார். பேத்திக்கு திருமணம் பேசும் நேரம் வந்து விட்டது மகளுக்கு இன்னும் மணம்முடிக்கவில்லையே என்ற அதிர்ச்சி அவரை உறையவைக்கிறது, ஏற்கனவே அந்த உலைச்சலோடுதான் என்னைப் பார்க்க வந்திருக்கிறார். அது பின்னரே தெரியவந்தது. அப்பாவுக்கு ஒரே புகலிடம் என் வீடுதான் நான் அப்படி கேட்டு இருக்கக் கூடாது என்பது அப்புரம் தான்என் மர மண்டைக்கு ஏறியது.
காலையில் வந்து மாலையில் கிளம்பி விடுவார் அப்பாஅதுவும் பொசுக்கென்று கிளம்புவதுதான் எப்போதும் வழக்கம் , புறப்பட்டு விட்டால் ஜந்து நிமிடம் கூட தயங்காதவர் அன்று புறப்படும் போது தயங்கி தயங்கி ,மயங்கி மயங்கி நின்று புறப்பட்டார்கள். அதுவே எனக்கு பெரிய உறுத்தலாக இருந்தது.
இதற்குள் தை பிறந்தது .மகளுக்கு எப்போது திருமணம் ஆகும், ஊருக்கே ஜோதிடம் கூறும் நிங்கள் வீட்டுக்கு சொல்ல வேண்டாமா என்று அம்மா வறுத்து எடுக்க ஜாதகம் பார்த்த அப்பா எதுவும் சொல்ல மறுத்து ஜாதகத்தை சுவாமி பாதத்தில் வைத்து விட்டார்கள் எப்படி பட்ட மாப்பிள்ளை அமையும் என்று அம்மா துளைத்து எடுக்க திருமணத்தின் போது அம்மாவோ அப்பாவோ ஒருவர் தான் இருப்பார் என்று கூற மாப்பிள்ளைக்கு தான் அப்படி ஒருவர் தான் இருப்பார் என்று அம்மா எண்ணிக் கொள்ள, ஹார்ட் அட்டாகில் பொக்கென்று போய்ச் சேர்கிறார் அப்பா தனது 56 வது வயதில் நிராதரவான நிலையில் அம்மா, தங்கை பாட்டி , மூவரும்...
திரும்பிப்பார்க்கிறேன்-17
தலைவன் இல்லாத கப்பலாய் தள்ளாடுகிறது குடும்பம். கையிருப்பு எல்லாம் கரைய வீட்டை விற்க வேண்டிய கட்டாயம். இதற்குள் தங்கைக்கு மாப்பிள்ளை அமைய திருமணம் நடக்கிறது, வீடு விற்கப்பட்டு கடங்கள் பைசல் செய்யப்பட்டு பிரித்து உதறிய நெல்லிக்காய் முட்டையாய் குடும்பம் சிதறுகிறது.
குடும்பம் மட்டும் சிதறவில்லை மெய்க்கண்டாரின் இரண்டடி உருவச்சிலையும் அவரது வம்சம் பூஜித்த அனைத்து சுவாமி விக்ரகங்கலும் சிதறி மறைகின்றன. ஒரு ஆலயத்தில் எத்தனை சன்னதிகள் உண்டோ அத்தனை விக்ரகங்கள் 700ஆண்டுகள் பழமை வாய்ந்தவை அனைத்தும் சென்றைடம் தெரியவில்லை மெய் கண்டார் கூற்றுப்படி விக்ரகங்களும் அவரை தேடி சென்றனவோ? கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டதில்லை என்ற கூற்று இதற்கு பொருந்தும்!.
விதியை மதியால் வெல்ல முயன்றார் சேது பாட்டி . சேது பாட்டியுடன் அனைத்து சொத்துக்கலும் கைமறா கூடுதலாக 15 ஆண்டுகள் 25 வது தலைமுறை அந்த வீட்டில் வசித்தது மட்டுமே கண்ட பலன். சேது பாட்டியின் பெரியப்பா வளர்ப்பு மகங்களின் வம்சத்தில் ஒருவர் மட்டும் திருச்செங்காட்டாங்குடியில் வாழ்கிறார். அவர்கள் வழி சொத்து சுகங்களையும் வளர்ப்பு மகன் காலி செய்து விட்டுஅனாதைப்பிணமாக இறந்தார் அவரை அடக்கம் செய்தது எனது தந்தையே.. இவ்வளவு பாரம்பரியமிக்க அந்த குடும்பம் திருமலைராயன் பட்டினத்தில் வாழ்ந்ததற்கான வரலாற்று சுவடுகள் அனைத்தும் மறைய அந்தக் குடும்பமே மறக்கப்பட்ட நிலை.
எனக்கு மணமாகி 50 ஆண்டுகலுக்கு மேல் ஆகிவிட்டது தந்தை மறைந்து வீடு விற்கப்பட்டு 32 ஆண்டுகள் ஒடிவிட்டன. 32 ஆண்டுகளாக திருமலைராயன் பட்டினம் தொடர்பு அற்ற நிலையில் சென்ற ஆண்டு எனக்குள் ஒரு ஆசை. நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தை காண வேண்டும் என்ற ஆவல். அதற்கு முன் அந்த சாலை வழியே பயணித்தால் கூட பழைய வீட்டை பார்க்கும் போது எனக்குள், பெரும் சோகம், அதை தவிர்க்கவே அந்த வழியே பயணிப்பதையே தவிர்த்து விட்டேன். அன்று ஏனோ எனக்குள் ஒரு உத்வேகம்.
25 த்லைமுறை வாழ்ந்த இடத்தைக் கண்டேன் கசிந்தேன். பிள்ளையார் கோவிலையும் கண்டேன் கருவறையை விட உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்கள். இருப்பினும் எந்த சேதமும் இல்லாமல் தாக்குப் பிடிக்கும் கரு வறை ஆண்டவன் இல்லாத வெற்று ஆலயம். கிட்டதட்ட 600 ஆண்டுகள் கடந்தும் சிதையாது வரலாற்று சாட்சியாக விளங்கும் ஆலயம் செங்கல்லும் சாந்தும் வத்துக் கட்டிய ஆலயம் ஆலய வாயிற்படி வரை அடுக்குமாடிக் கட்டிடம், ஆலயம் செல்லும் பாதை, தோட்டம் ,தண்ணீர்ப் பந்தல் இருந்த இடம் எல்லாம் கட்டிடமாக உருமாறி நிற்கும் அவலம்.
அந்தக் காலத்தில் திருமலைராயன் பட்டினத்தில் தண்ணீர்ப் பஞ்சம் குளங்களே குடி நீர் தேவையை பூர்த்தி செய்தன, குளம் வற்றிய பின் ஊற்று தோண்டுவார்கள் அப்போதுஅரசு பொதுக்கிணறு கட்டும் திட்டம் கொண்டு வந்தது எங்கள் தெருவிற்கு ஒரு கிணறு சாங்ஷன் ஆனது ஆனால் பொது இடம் இல்லாததால் வேறு இடம் மாறும் நிலை.
அப்போது எனது தந்தை சொந்தப்பட்டா இடத்தை அரசுக்கு வழங்கினார்கள்.பிரமாண்டமான கிணறு வெட்டப்பட்டது, அதுவும் இன்று பாழ்ப்பட்டு நிற்கிறது. அப்பாவின் கொடைக்கு சாட்சியாக!....
திரும்பிப்பார்க்கிறேன்-18
எதற்கும் ஆட்சி-ஆவணம்,அயலார்தம் காட்சி என முன்று சான்றுகள் வேண்டும் என்பார்கள்,எனது வரலாற்றுக்கு ஆட்சியாக இன்று யாரும் அங்கு வசிக்கவில்லை, அடுத்து ஆவணங்கள்: மன்னன் தந்த மானியம் பற்றித் தஞ்சை சரஸ்வதி மகாலில் ஆவணங்கள் இருக்கின்றன என்று எனது தந்தையார் கூறி இருக்கிறார்கள், தற்போது இருக்கிறதா இல்லையாஎன்று தெரியவில்லை.அடுத்து ஆலய வழிபாட்டிற்காக மன்னன் தந்த மானியம் அது பிரஞ்சு ஆட்சியிலும் தொடர்ந்தது, புதுவை சுதந்திரம் பெற்ற பின்னும் தொடர்ந்தது.
பிள்ளையார் காணாமல் போனதும் ஆண்டவனே களவு போய்விட்டார் எனவே பூஜை இல்லை,அதனால் மானியம் இனி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டார்கள் தந்தை அந்த ஆவணங்கலும் தற்போது இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை.
அத்துடன் இவை எல்லாவற்றுக்கும் சாட்சியான மெய்கண்டாரின் திருமேனியும்-அவர் வழித்தோன்றல்கள் பூசித்த அத்தனை செப்புத்திருமேனிகலும், குடும்பம் சிதறியபோது மறைந்துவிட்டன, 600 ஆண்டுகலுக்கு மேல் பழமை வாய்ந்த விக்கிரகங்கள்.
களவுபோன பிள்ளையாரில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு தண்ணீர் பந்தலில் வைக்கப் பட்டார், பின்னர் அருகில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் அப்பா வைத்துவிட்டார்கள். அருகிலேயே நடன காளி கோவில். இரண்டு கோவிலுமே நலிவடைந்த நிலையில் அப்போது இருந்தன பிள்ளையார் போன நேரம் போலும் தற்போது புதிய கட்டிடம் திருவிழா என்று புத்துயிர்ப்புடன் திகழ்கிறது அங்கும் தற்போது அந்தப் பிள்ளையார் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதினால்
நாலும் ஒரு கனவோ? - (பாரதி)
என்ற மருட்சியுடன் யோசித்தேன்!... இந்த அவலங்களைக் கண்டு திரும்பும் போது எனது காதுகளில் பாடு மகளிரின் பாடல் வரிகள் ஒலித்தன.
"அற்றை திங்கள்
அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம்
எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத்திங்கள்
இவ்வெண்ணிலவில்
எம் குன்றும் பிறர் கொண்டார்-யாம்
எந்தையுமிலமே."
இன்று எந்தையும் அவர் முந்தையரும் வாழ்ந்த வரலாற்றுஸ் சுவடுகள் இல்லையே என்ற ஏக்கத்துடன் ஊர்திரும்பினேன்......
திரும்பிப்பார்க்கிறேன்-19
63 நாயன் மார்களில் ஒருவர் பூசலார். இவர் திரு நின்ற ஊரில் வாழ்ந்தவர், சித்தத்தை சிவன் பால் வைத்தவர், ஏழை, இவருக்கு இறைவனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று ஆசை. எனவே மனதாலே ஒரு கோயில் கட்ட ஆரம்பித்தார், உணர்வு பூர்வமாக ஒன்றி ஒரு ஆலயம் கட்ட எவ்வளவு மெனக்கட வேண்டுமோ அத்தனை ஆண்டுகள் மனதாலே மெனக்கட்டு ஆலயம் கட்டி முடிக்கிறார், குடமுழக்குக்கு நாலும் பார்க்கிறார்.
அப்போது இராஜ சிம்ம பல்லவன் காஞ்சியிலே ஒரு கோயில் கட்டுகிறான் அது தற்போது தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அவனும் பூசலார் தேர்ந்த நாளையே தேர்வு செய்கிறான் இறைவன் அவன் கனவில் தோன்றி அன்று எனது பூசலார் ஆலய குடமுழக்கை ஏற்க இருக்கிறேன், உனது குடமுழக்கை வேறு தினத்திற்கு மாற்றி வை என்று கூறுகிறான், அரசன் மிரண்டு போகிறான்.
பூசலாரைத் தேடி வருகிறான், கோவில் பற்றிக் கேட்கிறான் தான் மனசுக்குள் கட்டிய கோவில் என்று அவர் கூற அவர் தாள் பணிகிறான் பூசலார் அசந்து போகிறார் அவர் மனதில் எப்படி உருவாக்கினாரோ அச்சு அசலாக அதே நீள அகலத்தில் அதே சிற்ப சித்திர விசித்திரத்தில் அமைந்த அற்புத கோவில் மேலும் திரு நின்ற ஊரிலேயே ஒரு ஆலயம் எழுப்பிதருகிறான் மன்னன், பூசலாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இது சாத்தியமா என்பது நம்மில் பலருடைய கேள்வி... சாத்தியமே என்று உளவியல் வல்லு நர்கள் கூறுகிறார்கள்!! நம் ஆழ் மனதில் உணர்ச்சி பூர்வமாக எண்ணப்படும் எண்ணங்கள் வலிமையானவை அது எப்படியோயார் மூலமாக தொடர்பு கொண்டு நமது கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது என்று ஆய்வின் மூலமாக ஆணித்தனமாகக் கூறுகின்றனர்.
என் ஆழ்மனதிலும் ஒரு ஆசை!!
எனது மூதாதையர் வழிப்பட்ட பிள்ளையார் கோவில் சீரமைக்கப் பட வேண்டும், வழிபாடு நடக்க வேண்டும் ,மெய்கண்டாரின் வரலாறு வருங்கால சந்ததிகலுக்கு அதன் மூலம் உணர்த்தப்பட வேண்டும் என்பதே அந்த ஆசை. எனது ஆசையும் நிறைவேறும் தானே? எனது ஆசையுடன் நேயர்களின் கூட்டுப் பிராத்தனையும் சேர்ந்தால் கூடுதல் பலன் கிட்டும் தானே?..
" காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்தது எல்லாம் காண்பண்றோ"'
என்ற பாரதியின் வரிகளை நினைவு கூர்ந்து திரும்பிப் பார்க்கிறேன் முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்....
திரும்பிப்பார்க்கிறேன்-20
என்னுரை.
இந்த வரலாறு செவி வழியாக எனது பாட்டிகள் முலம் எனது 10 வயதில் கேட்டது, விளையாட்டாகக் கதையாக கேட்ட வரலாறு இது கொஞ்சம் விபரம் தெரிந்து இது பற்றி விபரமாக கேட்காஆரம்பித்ததும் எனது தாயார் சில விஷயங்களை சென்சார் செய்து கூற வேண்டுமென அறிவுறுத்தினார்கள். சென்சார் செய்து கூற எனது பாட்டிகள் திணற "கண்டினியூ" விட்டுப் போயிற்று, நடுவுல சில பக்கங்களைக் கானோம்!!
பிற்பாடு பத்து வயதில் கேட்டது வயது ஏறியபின் ஊகித்து சந்தேகம் கேட்டுத் தெளிந்து ஊர்ஜிதம் செய்து கொண்டது என்ற வகையிலேயே வரலாறு எனக்கு வசப்பட்டது, பத்து வயதில் கேட்ட தகவல்களை ஆழ் மனதில் ஊறப்போட்டு அவ்வப்போது அசை போட்டு இந்த தொடரை எழுதினேன், வருடத்தில் ஏதாவது மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் வரலாற்றில் எந்தவித மாற்றமும் கிடையாது, அடுக்கு மாடி கட்டிடத்திற்குபின்னே அமைதியாக மறைந்து நிற்கும் பிள்ளையார் கோவிலே இதற்கு அசைக்க முடியாத சாட்சி.
நல்லவர்க்கு எல்லாம் சாட்சிகள் இரண்டு
1.மனசாட்சி
அதன் படியே இந்தத் தொடரை எழுதினேன்
2.தெய்வத்தின் சாட்சி
அந்த தெய்வம் சாட்சி கூறி இந்த வரலாற்றுக்குப் புது வடிவம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இதனை நிறைவு செய்கிறேன்...!
பேரறிஞர் அண்ணாப் பற்றி ஒரு செய்தி:
அவருக்கு நோய் முற்றியபிறகு அமெரிக்காவில் அறுவைசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் ,மறு நாள் அறுவை சிகிச்சை ஒரு நாள் சிகிச்சையை ஒத்திவைக்கலாம என்று அண்ணாகேட்கிறார் இது போன்ற விஷயங்களில் தான் உங்களுக்கு நம்பிக்கை இல்லையே பின் எப்படி என்று டாக்டர் கேட்கிறார்.
அண்ணா கூறுகிறார் இன்று புதிதாக ஒரு புத்தகம் படிக்கிறேன், நாளை படித்து முடித்து விடுவேன். அதன் பின் அறுவை சிகிச்சை வைத்து கொண்டால் படித்துமுடித்த திருப்தியுடன் "ரிசல்ட்" எதிர் மறையானாலும் ஏற்றுக் கொள்வேன்..
அது போன்றே என் நிலையும்!!
தொடர் முடியும் முன்னே நான் முடிந்து விட்டால் என்ன செய்வது என்ற கலக்கம் எனவே தொடரை சுருக்கமாக எழுதினேன்.. இன்று எனது வயது 68 கடந்த 60 ஆண்டுகளில் நான் வாழ்ந்த வாழ்க்கையில் கண்டு கேட்டு சந்தித்த சம்பவங்களையும் , சம்பந்தப்பட்ட "கேரக்டர்"கள்பற்றியும் சிறிது அவகாசத்திற்க்குப் பின் திரும்பிப் பார்க்கிறேன் இரண்டாம் பாகத்தில் எழுதுவேண்.
அதுவரை வணக்கம் கூறி விடை பெறும் உங்கள் மாங்குடி பாலா..
எல்லோருடைய வாழ்விலும் ஒரு திருப்பு முனை உண்டு. அது திருமணம், படிப்பு, வேலை, அயல்நாடு. அயலூர் வாசம். நட்பு என பல்வேறு பரிணாமங்களில் அமையும். இவைதான் திருப்புமுனைகளா?
இவை நமது வாழ்வை திசை திருப்பிவிட்ட முனைகள் என்று மட்டுமே கொள்ளலாம். அதாவது மற்றவர்களால் மற்றைய நிகழ்வுகளால் நமது வாழ்வில் ஏற்பட்டத் திருப்பங்கள். அப்படியானால் உண்மையான திருப்புமுனை என்றால் என்ன?
நமது கடந்தகால வாழ்க்கையை ஆர அமர அசைபோட்டு வந்த பாதையை வாஞ்சையோடு திரும்பிக் பார்க்கிறோமே அதுதான் உண்மையான திருப்புமுனை! அதில் கடந்தகால களிப்பு - கசப்பு இரண்டுமே கலந்து கட்டி வந்து விழும். கசப்பை எப்படி எதிர் கொண்டோம், களிப்பை எப்படி பகிர்ந்து கொண்டோம் என்பதை நம் மனத்தராசில் மறுபடியும் துல்லியமாக எடைபோடுவது தான் உண்மையான திருப்புமுனை!
அப்போது தான் நாம் கடந்து வந்த பாதை ராஜபாட்டையா இல்லை கல்லும் முள்ளும் கலந்த கரடு முரடான பாதையா என்பது முழுமையாகத் தெரியவரும்.
வந்த பாதை ராஜபாட்டை எனில் பாதை அமைத்துத் தந்தவருக்கு நன்றி கூறிவும் கரடு முரடான பாதை எனில் அதைக் கடந்தது எப்படி என பிற்கால சந்ததிகளுக்கு வரலாறு கூறவும் முடியும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தாலும் இப்படிப்பட்டத் திருப்புமுனையே நமது வாழ்வின் பதிவுகளாக அமையும்.
ஒருமுறை மகாத்மா காந்திஜி அவர்களை வெளி நாட்டு நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். நீங்கள் மக்களுக்குக் கூறும் செய்தி அது போன்ற மகாத்மாக்களின் வாழ்க்கையையே செய்தியாக வரலாறு கூறும்.
நம் போன்ற சாதாரண ஆத்மாக்களின் வாழ்க்கையே செய்தியாக அமையாவிடுட்டாலும், வாழ்க்கையில் நாம் சந்தித்த விஷயங்களை நடுநிலையும் பகிரும் போது ஒரு ஆத்ம திருப்தி ஏற்படும் என்பதில் அட்டி எல்லை. ஏனெனில் மலரும் நினைவுகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது.
அது போன்று எனது மலரும் நினைவுகளை திரும்பிப்பார்க்கிறேன் பேர்வழி என்று மீண்டும் ஒருமுறை அது போன்று வாழ்ந்து பார்க்கும் முயற்சியே இந்தத் தொடர். அப்படிப் பார்க்கும் போது கல்லும் கனியான அற்புதம். முள்ளும் மலரான அதிசயம். இது காலம் செய்த அற்புதம்மட்டுமா இல்லை, நம்முள் வேகம் மறைந்து விவேகம் மலர்வதின் விளைவா?
இது போன்று திரும்பிப் பார்த்ததின் விளைவுகளே "ஆர்.கே.நாராயணன்" அவர்களின் "மால்குடிடேஸ்", சுஜாதா அவர்களின் ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்" போன்ற காலத்தை வென்ற படைப்புகள்.
அவர்களை மானசீகக் குருவாக மனதார ஏற்று இந்த "ஏகலைவி" தொடுக்கும் எழுத்துக் கணைகளே இந்தத் தொடர். நான் கடந்த வந்த பாதையைக் கைபிடித்து அழைத்துச் சென்று உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.
எல்லோரும் தன்னைப் பற்றிக் கூறும் போது தகப்பன் - பாட்டன். பூட்டன் என மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுவது உண்டு. திவசம் போன்ற சடங்குகளிலும் மூன்று தலைமுறை பற்றிக் கூறுவது உண்டு.
அப்படி மூன்று தலைமுறையோடு அறிமுகம் ஆவது அல்ல என் வரலாறு. என் வரலாறு இருபத்து ஐந்து தலைமுறை வரலாறு உள்ளடக்கியது என்ன நம்பமுடிய வில்லையா? தொடர்ந்து படியுங்கள் பின்னர் நம்புவீர்கர்கள்!
திரும்பிப்பார்க்கிறேன் - 2
நான் பிறந்தது புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த திருமலைராயன் பட்டினத்தில் டி.ஆர் பட்டினம் என்று சுருக்கி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் சின்னஞ்சிறுநகரம். சின்னஞ்சிறு நகரமாக இருந்தாலும் பெண்மை பெரிய வரலாறு உண்டு. தற்போது தொழில் நகரமாகவும் கல்விக்கேந்திரமாகவும் விளங்குகிறது.
இதிகாசகாலம் தொட்டு சோழ மன்னர்வரை சாறுவ திருமலைமன்னன் முதல் பிரஞ்சு ஆட்சிவரை இந்நகரின் பெருமை சொல்லிமாளாதது. நூற்றி எட்டுக் குளங்களும் நூற்றி எட்டு கோவில்களும் அமைந்த ஊர்-இஸ்லாமிய-கிருத்துவ வழிபாட்டுத் தலங்களும் உண்டு. மாசிமகம்-சூரசம்ஹாரம்-ஆயிரம் காளி அம்மன் விழா என ஏகப்பட்ட விழாக்கள்.
அத்துடன் எல்லையோர இராமமான போலகத்தில் அமைந்து இருக்கும் நங்கையாமடம் என்ற சித்தர் பீடம். சங்கீத விற்பன்னர் "பாபநாரம் சிவன்" அவர்கள் பிறந்தது போலகத்தில் தான். நாகப்பட்டினம் சூடாமணி விஹாரத்தின் கட்டுப்பாட்டில் அமைந்த ஊர் இது புதலம் என்ற பெயர் மருவி. போலகம் என்று ஆயிற்று.
ராமாயண காலத்தில் ராவணனிடம் சண்டையிட்டு மரணகாயமுற்ற ஜடாயு ராமன் வரும் வரை அவளிடம் ராவணன் சீதையைத் தூக்கி சென்ற விபரம் கூறும் வரை தனக்கு மரணம் வரக் கூடாது என்று சிவனிடம் வேண்டுகிறான். தன் சிறகுகள் வீழ்ந்த இடத்தில் தீர்த்தம் அமைத்து வழிபடுகிறான். இறைவனும் ராமன் வரும் வரை ஜடாயுவின் ஆயுளை நீட்டிக்கிறான். இந்த வரலாறு மாசிம காற்சவமாக இன்றும் நடக்கும் தலம் இது ஜடாயு குண்டத்தில் இன்றும் சாம்பல் விளைகிறது இதுபற்றி 'தஞ்சைத்தரணியில் என்ற எனது நூலில் "ஆயுளைநீட்டிக்கும் அண்ணல்" என்ற கட்டுரையில் விபரமாக எழுதி இருக்கிறேன்.
அடுத்து ராஜேந்திர சோழனின் பிரதம படைத்தளபதி "ராஜவேல்" பிறந்த ஊர் இது. மாம்பழப் போட்டியில் அண்ணனிடம் தோற்ற ஆறுமுகன்தாய் தந்தையரிடம் கோபித்துப் பழனியில் குடியேறுகிறான். பெற்றோரிடம் கோபித்தப்பாவம் நீங்க இங்கு லிங்கம் அமைத்து வழிபடிகிறான். ராஜவேல் ஆலயம் அமைக்க பூமியை அகழ இந்த லிங்கம் வெளிப்பட அவரையே மூலவராக வைத்து ஆலயல் அமைக்கிறான்.
அந்த ராஜ கோழிச்வரம் என்ற ஆலயமே தற்போது அபிராமி அம்மன் கோவில் என்று வழங்கப்படுகிறது.
திருக்கடவூர் அபிராமிக்கும் இந்த அபிராமிக்கும் தொல் தொடர்பு உண்டு. திருக்கடையூர் அர்ச்சகருக்கு பெயர் அம்பிகா தாசபட்டர். இவருக்கு சியாமளாதாசன் என்ற மகன் பிறக்கிறான். திடீரென அம்மை நோயால் இவனுக்குப் பார்வை பறிபோகிறது. பட்டர் அழுதுபுலம்ப பர்வதராஜபுரம் என்னும் திருமலைராயன் பட்டிணத்திலும் நானே உள்ளேன். அங்கு சென்று சிவதீர்த்தத்தில் நீராடி என்னை வழிபடு வழிபிறக்கும் என்று அருளுகிறாள்.
அப்போது திருமலைராயன் பட்டினத்து அபிராமி அம்மன் கோவில் சிவாச்சாரியாருக்கு வயது முதிர்ந்து விட்டது. திருமணவயதில் கௌரி என்ற பெண் வேறு இருந்தாள். இவர் தனது முதுமை நிலையையும் பெண் திருமணம் பற்றியும் அம்மனிடம் முறையிடுகிறாள். அவர் கனவிலும் அம்மன் அருளுகிறாள்.
திருக்கடவூரிலிருந்து சியாமளாதாசன் என்னை வழிபடவருவான். அவனே உன் மகளை மணப்பான். உனக்குப் பின் அவனே எனக்கு பூஜைபுரிவான் என்கிறாள். அது போலவே சியாமளாதாசன் வந்து இழந்த பார்வையை பெற்று கௌரியை மணம் முடித்து அம்மனை வழிபடுகிறாள். இத்தனை சிறப்புகள் வாய்ந்த இவ்வூர் முத்துக்குளிப்புக்கும் பேர் பெற்றது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னே திருமலைராஜன் என்ற தெலுங்கு மன்னன் இங்கு நல்லாட்சி செய்து வருகிறான். இவன் வெட்டுவித்த துணை ஆறே திருமலைராஜன் ஆறு என்று வழங்கப்படுகிறது. காவிரிக்குக் கல்லணை கட்டியவன் கருதாலன். தன் நகருக்கு தனி ஆறு கண்டு பாசனம் செழிக்க வழி வகுத்தவன் திருமலை மன்னன்.
இவன் தாய் மொழி தெலுங்கு ஆனாலும் தமிழ்மீது தனிப்பற்று இவளுக்கு. "ஆத்மதுரகவி தலைமையில் 64 புலவர்கள் இவன் அரசவையை அலங்கரித்தனர். இவர்களுக்கு தம் புலமை மீது மிகவும் கர்வம் உண்டு தங்களுக்கு நிகர் யாரும் கிடையாது என்று தருக்கித் திரிந்தனர்.
முத்து வாங்கவும் அரசவையில் தன் கவித்திறனை அரங்கேற்றுவும் திருமலைராயன் பட்டினம் வருகிறார். கவி காளமேகம். நகருக்கு நுழையும் போதே காளமேகம் கவிமழை பொழிகிறது. அதுவும் மோர் மழையாகப் பொழிகிறது.
திரும்பிப்பார்க்கிறேன் - 3
ஊருக்குள் நுழையும் போது பசியும் தாகமும் கவிஞரை வாட்டுகிறது. கையில் இருந்தது ஒரு சல்லிக் காசு மட்டுமே. அதை வைத்து எப்படிப் பசி ஆறுவது? எனவே எதிரே வந்த மோர் விற்கும் பெண்மணியிடம் மோர் கேட்கிறார். ஒரு குவளை மோர் ஒரு சல்லிக்காசு என்று அவள் கூற காசைக் கொடுத்து மோர் வாங்குகிறார். மோரில் தண்ணீர் விடாமல், தண்ணீரில் மோர் விட்ட மோர் அது. வாங்கிக் கடகடவென்று குடிக்கிறார் - மடமடவென்று கவிதை பொழிகிறார்.
"கார் என்று பேர்படைத்தாய்க கனத் தூறும் போது
நீரென்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வந்த பின்
திருமலைராயன் பட்டினத்து ஆய்ச்சியர் கை வந்த பின்
மோர் என்று பேர் படைத்தாயே முப்பேரும் பெற்றாயே"
இந்த மோரைத் தண்ணீர் என்றே விளிக்கிறார். நீ ஆகாயத்தில் இருக்கும் போது மேகம் என்று பெயர் பூமிக்கு வந்தபின் நீர் என்று பெயர் பெற்றாய் நீ
திருமலைராயன் பட்டினத்து மோர்விற்கும் பெண்ணிடம் நீ வந்த பின் மோர் என்று பெயர் சூட்டப்பட்டாய்.
இப்படி மூன்று பெயர் பெற்ற உன் சிறப்புதான் என்னே! எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்பதுதானே நியதி! அது போல் நீர் அதிகம் கலந்த மோரால் நமக்குச் சுவையான பாடல் கிட்டியது!
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவைக்களப்புலவர் அதி மதுரகவியின் அடிப்பொடிகளுக்கு ஒரு சந்தேகம். இவர் சிறந்த அறிஞரோ என்று ஒரு சோதனை நடத்தத் திட்டமிடுகின்றனர். அவரைத் தொடர்கின்றனர்.
நடந்து களைத்த அவர் ஒரு மளிகைக் கடை அருகே நிழலுக்கு ஒதுங்குகிறார். அப்போது ஒரு சிறுவன் இரண்டு சல்லிக்காசுக்கு மேகம் - பசு - ரத்தினக்கல் வேண்டும் என்று கேட்கிறான். கடைக்காரர் இது சாத்தியமா என்று சிறுவனை விரட்டி அடிக்கிறார்.
நமது கவிஞர் காராமணி கொடுத்து அனுப்புங்கள் என்கிறார். கடைக்காரர் விழிக்க கவிஞர் விளக்குகிறார். கார் என்றால் மழை. ஆ என்றால் பசு, மணி என்றால் ரத்தினம் என்று விளக்க அடிவருடிகளுக்கு அடிவயிற்றில் கிலி. ஓடிப்போய் அதுமதுரகவியிடம் பற்ற வைக்கிறார்கள்.
பின்னர் அரசவைக்கு காளமேகம் வருகிறார். அனைத்துக் கவிஞர்களும் அலட்சியப் படுத்தி அரி கண்டம் பாடமுடியுமா என்று கேட்க யமகண்டமே பாடுகிறேன் என்று பாடி கவிஞர்களின் செருக்கு அடக்குகிறார். மன்னனின் அபிமானத்தையும் பெறுகிறார். கவிஞர்கள் மனதில் பழிவாங்கும் எண்ணம் மறையவில்லை. மன்னனிடம் ஏதோ கோள் மூட்டுகின்றனர். ஆராயாமல் காளமேகத்தைக் கோபிக்கிறான். அவர் சினந்து சபிக்கிறார். மண்மாரி பொழிந்து நகர் அழிய வேண்டும் என்று திட்டித் தீர்க்கிறார். அவர் திட்டிய இடம் திட்டச் சேரி என்று வழங்கப்படுகிறது.
"செய்யாத செய்த திருமலைராயன் வரையில்
அய்யாவரனே அரை நொடியில் வெய்யதழற்
கண்மாரியான் மதனைக் கட்டழித்தாற் போற்றீயோர்
மண்மாரி யாலழிய வாட்டு".
என்று பாடிய இடம் வாழாமங்கலம் என்று வழங்கப்பட்டது. பின்னர் அரசி வந்து மன்னிப்பு கேட்க வாழ்த்திய இடம் வாழ்மங்கலம் என்று வழங்கப்பட்டது என்பது செவி வழிச் செய்திகள்.
இதற்குச் சான்றாக நகரின் பல பகுதிகளில் இன்றும் புதையப் புதையமணல். அரண்மனை இருந்த இடம் பனந்தோப்பாக மாறி, தற்போது தொழில் நகராக மாறி வருகிறது. கடல் கொண்டதால் மண் மூடிட்டது. அதற்கும் காளமேகத்தின் பாடலுக்கும் பிற்காலத்தில் முடிச்சுப் போட்டுவிட்டனர் என்று கூறுவோரும் உண்டு. அதை எல்லாம் ஆய்வாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வளவு சிறப்புகள் பெற்றத் திருமலை மன்னனின் முன்னோர்களின் ஆட்சி காலத்தில் ஒருநாள்....
திரும்பிப்பார்க்கிறேன் - 4
அப்போதைய மன்னரும் மந்திரியும் நகர் வலம் வருகிறார்கள். தற்போது நகராக இருக்குமிடம் அப்போது காடாக இருந்ததாம். முன்பு பனந்தோப்பாக மண் மேடிட்டு இருந்த இடம் தற்போது தொழில் நகராக அமைந்து இருக்கும் இடம் அப்போது அரண்மனையாக இருந்ததாம். மண்மாரி பொழிந்ததால் அரண்மனை சதிலமாகி மண்ணுக்குள் புதையுண்டது என்கிறார்கள். தற்போது தொழிற்சாலைக்கு அஸ்திவாரம் தோண்டும் போது பழைய கட்டிடங்களின் இடிபாடுகள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
வனப்பகுதிகள் ஒரு பெரியவர் சந்தியாவந்தனம் செய்து கொண்டு இருந்தார். மந்திரி குதிரையை விட்டு இறங்கிப் பெரியவர் காலில் விழகிறார். அவரும் ஆசி கூறுகிறார். மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.
என் மந்திரி ஒரு பராரியின் காலில் வீழ்வதா என்று கோபிக்கிறார். மந்திரி பதறி இடை மறிக்கிறார். அவர் பராரி அல்ல. முக்காலமும் உணர்ந்த ஞானி. எனது குலகுரு. காசி வாசி மெய்கண்டார் என்று பெயர் தீர்த்தயாத்திரை வந்து இருக்கிறார் என்று கூறுகிறார்.
அப்போதும் மன்னனின் இடக்குப் போகவில்லை. அப்படி உண்மையில் ஞானியாக இருந்தால் இந்த ஐய்யனார் கோவில் மண் குதிரையை புல் திங்கச் சொல் என்கிறார். ஞானி அமைதியாக சிரிக்கிறார். ஒரு கை தண்ணீரைத் தெளித்தும் பிரம்பால் தட்டி ஒரு கை புல் கொடுக்கிறார். மண்குதிரை புல் தின்றது. மன்னன் பதறித் துடித்து 'வள்ளலே' என்னை மன்னியுங்கள் என்று காலில் வீழ்கிறான்.
அது முதல் "வள்ளல்" என்ற பட்டம் எங்கள் குடும்பத்திற்கு அடைமொழியாக அமைந்தது. தங்களுக்கு என்ன வேண்டும் கட்டளையிடுங்கள் என்கிறான் மன்னன். நான் பூசிக்க ஒரு பிள்ளையார் கோவிலும் அதற்கு வேதனம் செய்ய ஆண்டுக்குப் பன்னிரண்டு வராகனும் அளிப்பாய் என்கிறார். ஒரு வராகன் என்பது மூன்று ரூபாய்.
மேலும் ஞானி எதிர்காலம் பற்றிக் கூறுகிறார். எனது வாரிசு 21 தலைமுறை ஒற்றை ஆண்வாரிசாகத் தொடரும். 22 தலைமுறையாக இரண்டு ஆண்வாரிசும் ஒரு பெண்ணும். இரு ஆண்வாரிசுக்கும் ஒற்றைப் பெண் பிறக்கும். அந்த இரண்டு பெண்களுக்கும் குழந்தை பிறக்காது. எனவே எனது 23 வாரிசுக்குப் பின்னர் உன் நிபந்தத்தை வாங்க ஆள் இருக்காது. 23 தலைமுறை வரையே உனது நிபந்தம் உபயோகம் ஆகும் என்கிறார்.
இது பற்றிய ஆவணங்கள் தஞ்சை "சரஸ்வதி மகாலில்" இருப்பதாக என் தந்தை கருணநிதி தேசிகர் அவர்கள் கூறுவார்கள். இப்படி நிபந்தம் மன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்தது. வாரிசுகளும் தொடர்ந்தனர். பிள்ளையார் கோவிலும் சிறப்புற அமைந்து பூஜைகளும் இனிதே நடந்தன. இதற்குள் இப்பகுதி பிரஞ்சுக்காரர்கள் வசம் ஆக, அவர்களும் மன்னனின் அத்தனைக் கொடைகளையும் தொடர்ந்தனர்.
அது முதல் பிரஞ்சு அரசு ஆண்டுதோறும் 36 ரூபாய் அளித்து வந்தது. அது மட்டுமல்ல. ஜடாயுபுரீஸ்வரர் சிவன் கோவில் மூலமாக திருக்கார்த்திகை அன்று சொர்க்கப்பனை தொறுத்தப் பனைமட்டையும் அறுப்பி வைக்கப்பட்டது. சிவன் கோவிலின் உப கோவிலாகப் பிள்ளையார் கோவில் பராமரிக்கப்பட்டது. இது 22 வாரிசாக இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது இருவருக்கும் பிரித்து வழங்கப்பட்டது. தலா 18 ரூபாய் என்று அது அல்லாமல் இறையிலியாக மன்னன். 7 வேலி நஞ்சை 3 வேலி புஞ்சை அளித்தான். அதை 22 வது வாரிசுகள் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டனர்.
இது பற்றிய ஆவணங்கள் காரைக்கால் கவர்னர் மகாலில் இருந்து. 50 ஆண்டுகளுக்குமுன்னே கோவிலில் இருந்த பிள்ளையார் களவு போனது. பூஜை இல்லாதபோது நிபந்தம் ஏன் என்று எனது தந்தையார் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டார்கள். அதுமுதல் அது நிறுத்தப்பட்டது. இந்த மதமைப் பணத்திற்கு பிரஞ்சில் 'மாந்தர்' பணம் என்று கூறுவார்கள்.
இப்போது உங்களுக்கு இரண்டு சந்தேகம் ஏற்பட்டு இருக்கும். 23 தலைமுறை பற்றி முன்கூட்டியே கூற முடியுமா என்பது முதல் கேள்வி. 23 தலை முறையுடன் சந்ததி அழியும் என்றால் 25வது தலைமுறையான நான் இந்த வரலாற்றை எப்படி எழுத முடியும் என்பது இரண்டாவது கேள்வி. இதன் விரிவான விளக்கம் அடுத்தவாரம்..
திரும்பிப்பார்க்கிறேன் - 5
இப்படி மெய்கண்டாரால் 23 தலைமுறை பற்றிக் கூற முடியுமா என்று நினைக்கலாம். அதாவது ஒருதலை முறை என்பது 30 ஆண்டுகள் என்று கூறுவார்கள். அப்படிப் பார்த்தால் கிட்டத்தட்ட 700 ஆண்டுகள், கழித்து தன் பரம்பரை வாரிசு இன்றி அழியும். என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் அவர்..
ஐரோப்பிய நாட்டில் "நாஸ்டர்டாம்" என்பவர் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். தற்போது உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்று கூறியிருக்கிறார். அதன்படி 90% நடந்தது என்று விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டு இருக்கின்றனர். 10% விழுக்காடு தவறு எப்படி நடக்கிறது. அப்போது எல்லாம் காகிதம் நடைமுறையில் இல்லை. மரப்பட்டை. ஓலை தோல் போன்றவற்றிலேயே எழுதி வைத்தார்கள். அதைப் பிரதி எடுக்கும் போது ஏற்பட்டத் தவறுகளே இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம். இது பற்றி விளக்க ஒரு சுவையான கதை.
சமுத்திர நீர் உப்புக்கரிக்கும் என்று கூறி அதைப் பிரதி எடுக்கும்படி சீடனிடம் கூறுகிறார் குரு. அந்த சீடன் 'ச'வுக்கும் 'மு'வுக்கும் சற்று இடைவெளி அதிகமாக விட்டு விடுகிறான். அடுத்த மாணவன் அதைப் பிரதி எடுக்க வருகிறான். "ச" வை விட்டு விட்டு முத்திர நீர் உப்புக் கரிக்கும் என்று எழுதுகிறான். அடுத்தவன் அதைப் பிரதி எடுக்கிறான். முத்திர என்றால் எதுவும் பொருள் இல்லையே. எனவே மூத்திர நீர் உப்புக் கரிக்கும் என்று எழுதுகிறான். மறுநாள் மூத்திர நீர் உப்புக் கரிக்கும் என மாணவர்கள் கோரஸ் பாட குருவுக்கு அதிர்ச்சி. இது போன்ற சில தவறுகள் நடப்பது இயற்கையே. சிலருக்கு முக்காலமும் உணரும் ஆற்றல் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்று அமரர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் தனது "மனம் - பிரார்த்தனை - மந்திரம்" என்ற நூலில் எளிமையாக விளக்கி இருக்கிறார்.
அமெரிக்காவில் "எட்கார் கேசி" என்று ஒரு போட்டோ கிராபர். சற்றே திக்குவாய். அவரை "ஹீப்னாடிஸ்" செய்து தொண்டையைச் சரி செய்கிறார் அவரது பல் டாக்டர். மீண்டும் அதே பிரச்சனை. மீண்டும் ஹீப்னாடிஸ் செய்ய எட்கார் கேசியேப் பேச ஆரம்பித்தார். தொண்டையில் இந்த இடத்தில் இன்ன கோளாறு என்று அவரே கூற அதன்படி சரிசெய்யக்குரல் நிரந்தரமாகச் சரியானது.
இவரை வைத்துப் பல வியாதிகளைப்பற்றியும், அதைக் குணப்படுத்தும் முறைகள் பற்றியும் பல் டாக்டர் அறிந்து அதன்படி சரி செய்தார். பலரும் நம்ப மறுத்தனர். பல்வித சோதனைகளுக்கு ஆட்படுத்தினர். கிட்டதட்ட 30 ஆண்டுகள் இந்தப் பணியைச் செய்தார் எட்கார் கேசி.
இது எப்படி சாத்தியமாகிறது தங்களுக்கு என்று அவரிடமே ஹீப்னாடிஸ் முறையில் கேட்டனர். ஆகாயப் பேரேடு என்று பதில் கூறினார். அதாவது கடந்தகாலம் - நிகழ்காலம் - எதிர்காலம் பற்றிய செய்திகள் அனைத்தும் ஆகாயப் பேரேட்டில் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. இதைப்பற்றித் தெரிந்தவர்கள் திரிகாலமும் துல்லியமாக உணர்ந்து கூறினார்கள். அவர்களே (விஞ்)ஞானிகள் என்று அழைக்கப்பட்டனர்.
அதாவது வான் வழியே ரேடியோ அலைகள் ஒலிபரப்பு ஆகின்றன இருந்தாலும் அதை நேரடியாக நம்மால் கேட்க முடிவதில்லை. அதை ரேடியோ வழியே சரியான முறையில் ஸ்டேஷனை ட்யூன் செய்தால் மட்டுமே ஒலி கேட்கிறது. சக்தி வாய்ந்த ரேடியா மூலம் மட்டுமே அகில உலக செய்திகளைக் கேட்க முடிகிறது.
அது போன்று ஆகாயப் பேரேட்டில் முன்னரே இருக்கும் செய்திகளை சக்தி வாய்ந்த ரேடியோவாக அமையும் ஞானிகள் முன் கூட்டியே கண்டோ - கேட்டோ - அல்லது உணர்ந்தோ கூறி வந்தனர். இந்த வழியிலேயே எமது மூதாதையர் மெய்கண்டாரும் - மேலைநாட்டு. "நாஸ்ட்டர்டாமும்", அமெரிக்க எட்கார் கேசியும் எதிர்காலம் பற்றிக் கூறி வந்தனர்.
இதற்கு மொழியோ - லிபியோ தேவை இல்லை போலும். ஏதோ அதிர்வுகள் மூலமே இந்த பரிமாற்றம் நடந்து இருக்க வேண்டும். இது என் அநுமானம் மட்டுமே. ஆய்வாளர் தாம் இதுபற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.
திரும்பிப்பார்க்கிறேன் -6
உலகில் புதியது என்று எதுவும் இல்லை. எல்லாமே உலகம் உண்டான போதே உள்ளவைகள் தான். அது நமது கண்களுக்குத் தெரிய வரும் போது கண்டு பிடிப்பு என்று கொண்டாடுகிறோம். அணுவைப்பற்றித் தற்போது பெரிதாகப் பேசப்படுகிறது. ஹீரோஹிமா - நாதசாகிக்குப் பின்னரே அதன் ஆற்றல் தெரியவந்தது. அதன் விளைவுகளும் தெரியவந்தது.
ஆனால் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அணுவைப் பிளந்து ஆழ்கடலைப் புகட்டி என்று திருக்குறளைப் புகழ்ந்து அணுவைப் பிளக்கவும் அப்போதே தெரிந்து வைத்திருந்தனர் போலும்.
இதிகாசக் கதைகளில் பல விஞ்ஞான சம்பவங்கள் ஒளிந்து இருக்கின்றன ராமன் தனது பலத்தை சுக்ரிவனிடம் நிருபிக்க கணை தொடுக்கிறான். மிகத் தொலைவில்
உள்ள ஏழு மரங்களைத் துளைத்து மீண்டும் ராமனிடமே கணை வந்தது என்றது ராமாயணம். இதை தற்போதைய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைக்கு நிகரானது என்றே கொள்ளலாம்.
அடுத்து ராவணனிடம் யுத்தம் செய்யும் போது இந்திரஜித் ஏவியகணையால் ராமனுடைய சேனைகள் அனைத்தும் மயங்கி இறக்கும் நிலைக்குச் செல்ல அனுமன் கொணர்ந்த சஞ்சீவி மூலிகையால் அனைவரும் எழுந்தனர் என்கிறது ராமாயணம் - இதை போபால் விஷவாயுக்கசிவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அக்னி ஹோத்ரம் செய்தவர் வீட்டில் மட்டும் விஷவாயுத்தாக்கம் இல்லை என்பதும் செய்தி. அக்னி ஹோத்ரத்தையும் அனுமன் கொணர்ந்த சஞ்சீவி மூலிகையையும் ஒப்பிட்டுப்பாருங்கள் - ராவணன் புஷ்பக விமானத்தில் சீதையைத் தூக்கிக் கொண்டு வான்வழியே பறந்தான். அதுதான் இன்றை ஜெட்விமானங்களுக்கு முன்னோடி எனலாம்.
நளனுக்கு ஒரு ஆற்றல் உண்டு. சூரியனிடம் பெற்ற மந்திரத்தால் அடுப்பு மூட்டாமல் அதிவிரையில் சமைக்கும் ஆற்றல் பெற்றவன் நளன். அதைத் தற்போதைய சோலார் அடுப்புடன் ஒப்பிடலாமா?
இவை கற்பனைகள் என்று ஒதுக்கினாலும். எப்படி சூரியனிடம் பெற்ற மந்திரத்தால் என்று எப்படிக் கூறி வைத்தார்கள். சந்திரனிடம் அல்லது சிவனிடம் பெற்றவரம் என்று ஏன் கூறவில்லை? அந்த காலத்திலேயே இந்த கால விஞ்ஞான உண்மைகள் அனைத்தும் நம்மவர் அறிந்து வைத்து இருந்தனர். தற்போது போல் ஊடகங்கள் இல்லாமையால் இது எல்லோருக்கும் தெரிய வாய்ப்பின்றி ஆகிவிட்டது. மேலும் தற்போது போல் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அக்காலத்தில் வியாபாரம் ஆக்கவில்லை. எனவே அவற்றைக் கற்பனை என்று கூறுகிறோம்.
கலாம் அவர்கள் கூறியது போல அவர்களின் கனவுகள். கற்பனைகள் இன்று நனவாகியும் இருக்கலாம். எது எப்படியோ நம்மவர் அந்தக்காலம் தொட்டு இந்தக் காலம் வரை அறிவு ஜீவிகள் என்பது மட்டும் உண்மை.
இன்னும் எளிமையாகக் கூறுவது என்றால் தற்போது ஊடகங்களில் படிக்கிறோம் பத்தாம் நூற்றாண்டு சிலை கண்டு பிடிக்கப்பட்டது. ஏழாம்நூற்றாண்டு கல்வெட்டிக் கண்டுபிடிக்கப்பட்டது என்று. ஆனால் அவை ஏற்கனவே இருந்தவைதான். அதுபோல உலகம் உருவான போது ஆகாயப் பேரேட்டில் பதிவான உண்மைகளைத் தனது சித்தத்தால் (மனதால்) உணர்ந்து கூறியவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அது போன்ற ஒரு சித்தரே மெய்கண்டார்.
மன்னர் மெய்கண்டார் கேட்டுக் கொண்டபடி ஒரு பிள்ளையார் கோவில் கட்டித் தருகிறார். பிரகாரத்தில் ஒரு பிள்ளையார். கருவறையில் மூஷிக வாசனத்துடன் ஒருபிள்ளையார். சாந்து வைத்துக் கட்டிய செங்கற்றளி. நந்தவனம் பக்கத்திலேயே வீடு, அத்துடன் இனாம்சாசனமாக அளித்த 7 வேலி நஞ்சை நவே புஞ்சை என மெய்கண்டார் பரம்பரை கோவிலை பூஜித்து மகிழ்கிறது. அது போக வீட்டிலேயே ஆலயத்திற்கு ஆன அனைத்து தெய்வங்களும் மினிசைசில் அமைத்து வழிபடுகிறார்கள். மருதப்பர் என்ற லிங்கத்திருமேனி அம்மன் - நடராஜர் - முருகன் வள்ளி தேவானை பல்வேறு பிள்ளையார்கள் - ஸ்படிகலிங்கம் - என அனைத்துத் திருமேனிகளும் கந்த சஷ்டியின் போது ஆறு நாட்களும் ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகன் வீதியுலா - மேளதாளம் - தேவார இன்னிசை எனத் தொடர்கிறது வழிபாடு. இவ்வாறு 21 தலைமுறைத் தழைக்கிறது. மெய்கண்டாருக்கு செப்புத் திருமேனியும் அமைகிறது. இரண்டடி உயரம். ஒரு கரத்தில் ஓலைச்சுவடி. மறுகரம் உபதேசிக்கும் பாணியில். காதுகள் நீண்டு தோள் தொட்டபடி அழகியதிருமேனி. அமைந்த காலம் தெரியவில்லை.
திரும்பிப்பார்க்கிறேன்- 7
மூத்தவருக்குப் பழைய வீட்டை விட்டுக் கொடுத்து இளையவர் சட்டநாததேசிகர் புதுவீடு கட்டுகிறார். அந்தக் கால பர்மா தேக்கில் தூண்களும், உத்தரங்களுடன் கூடிய மச்சுவீடு. சத்திரம் போல் மிகப் பரந்து விரிந்தவீடு. மாட்டுத்தொழுவமும் ஒரு வேய்ந்த அற்புதவீடு. பக்கவாட்டில் தண்ணீர் பந்தல். அந்தப் பழைய தூண்களும் உத்தரங்களும் இன்றும் எனது தந்தை புதிதாகக் கட்டிய வீட்டில் புது மெருகோடு இருக்கின்றது கிட்டதட்ட 175 ஆண்டுகளைக் கடந்து. அண்ணனுக்கு மணமுடித்து ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. தங்கையை சிதம்பரத்தில் மணமுடித்து வைக்கிறார்.
இதற்கிடையே சட்டநாத தேசிகருக்கும் மணமாகிறது. முதல் மனைவி அடிக்கடி பிறந்தகம் சென்று விடுவார். குழந்தைகளும் பிறந்து பிறந்து இறக்க மனமுடைகிறார் சட்டநாத தேசிகர். நல்ல படிப்பாளி. கல்வி கேள்விகளில் தேர்ந்தவர். அந்த காலத்திலேயே அவருக்குப் புத்தகப் புழு என்று பெயர். ஜோதிடர் ஊர்ப்பிரமுகர், ஊர்நாட்டாண்மை என பல பொறுப்புகள் அமையப் பெற்ற இவருக்குப் பொறுப்பற்ற மனைவி அமைந்தது இவரது துர்ப்பாக்கியமே.
ஊரும் உறவும் இவரை மறுமணம் செய்ய வற்புறுத்துகின்றனர். ஆனால் அந்த காலத்திலேயே பிரஞ்சுக்காரர் ஆட்சியில் இருதாரமணம் தடை செய்யப்பட்ட ஒன்று. ஆண்டது அந்நியர் ஆனாலும் பிரஞ்சுக்காரர் ஆட்சியில் பல நன்மைகளும் கிட்டின என்பது மறுக்க முடியாத உண்மை. அதாவது இருதாரதடை சட்டம் மூலமாக மணமுடிக்கும் முன்னே கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம். மணம் முடிந்துவிட்டால் கருணை காரணமாகக் கைது செய்வதில்லை. இரண்டாவது மனைவிக்கும் மக்களுக்கும் பிதுர் ராஜ்ஜித சொத்துரிமை இல்லை.
மேலும் அன்றே பிரஞ்சு ஆட்சியில் இலவசக்கல்வி. இலவச மதிய உணவு. கூட்டுசாம்பார் ரசம் மோருடன், சனியும், புதனும் கறிக் குழம்பு சைவம் சாப்பிடுபவர்களுக்குத் தனியே ரசம். கட்டாயமாக எல்லோருக்கும் பால் என பல சலுகைகள். இன்றைய குடும்பப் பென்ஷன் அன்றே அமுலில் இருந்தது. திருமணப்பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டது. அரசு ஊழியர்களுக்கே குழந்தைகளுக்குத் தனி அலவன்ஸ் என நலத்திட்டங்கள். இன்றைய லிட்டர் கிலோ போன்ற அளவைகள் பிரஞ்சு அளவைகளே. நான் படித்த காலத்தில் இந்த அளவிலே தான் பாடம் நடத்தப்பட்டது.
சட்டம் இடம் கொடுக்காவிட்டாலும் இவருக்குத் திருமணம் செய்து வைக்க ஊரும். உறவும் முனைப்பாக செயல்பட்டது. திருமணம் நடக்க ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இது எப்படியோ கசிந்து முதல் மனைவியை எட்ட அவர் அந்தக் காலத்திலேயே சட்டத்தின் உதவியை நாடினார். கணவனுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணீயச் கிந்தனாவாதி இவர்! விளைவு? சட்டநாத தேசிகர் திருமணத்திற்கு முதல் வாரம் முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். முதல் மனைவி வகையறா எப்பூடி என்று கொக்கரித்தபடி கெத்தாக ஊரில் வளைய வர சட்டை நாத தேசிகரும் நண்பர்களும் உறவினர்களும் இதை முன்னதாகவே எதிர்பார்த்து அதற்கும் தயார் நிலையிலேயே இருந்தனர்.
இதை எப்படி சமாளித்தனர் என்பதை அடுத்தவாரம் காண்போம்.
திரும்பிப்பார்க்கிறேன் -8
பிரஞ்சுப் பகுதியில் இரண்டாவது திருமணம் நடத்த சட்டம் இடம் கொடுக்காது. எனவே ஆங்கில ஆட்சிப் பகுதியில் இரண்டாவது மணம் நடக்க இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் மாலை வரை அமைதி காக்கின்றனர்.
மாலை மயங்கி இரவு வந்தது. வீட்டுப் பெண்கள் அனைவரும் குளத்தங்கரைக்குப் புறப்படுகின்றனர். அப்போது வயதுப் பெண்கள் விடியற்காலை அல்லது முன்னிரவு வேளைகளில்தான் இயற்கை உபாதைக்காக வெளியே வருவார்கள். அந்தக் காலத்தில் கழிப்பறை வசதி கிடையாது.
பெண்கள் நடுவே மணமகனும் பெண் வேஷத்தில். கட்டுக்குடுமியும் காதுக்கடுக்கனும் ப்ளஸ் பாயிண்டாக அமைய தலை நிறையப் பூச்சூடி கை நிறை வளையல்களும் கழுத்து நிறைய நகைகளுமாய் வெளியேறுகிறார். கரண்ட் வசதியற்ற "ஹரிக்கேன்" லைட் வெளிச்சத்தில் இது சுலபமாகிறது.
பெண்களிடம் பெருமதிப்பு கொண்ட பிரஞ்சுக்காரர்கள் சற்றுத் தள்ளி நின்றே கண்காணிக்கிறார்கள். எத்தனை பெண்கள் வெளியேறுகிறார்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் கார் - ரயில் போன்ற வசதிகள் இல்லை. மாட்டுவண்டியும் குதிரை வண்டியுமே போக்குவரத்து சாதனங்கள். குதிரை வண்டிகளுக்குத் திரை உண்டு. வெளியேறிய மாப்பிள்ளை மறைவில் தயாராக நின்ற குதிரை வண்டியில் ஏறி தப்பிக்கிறார். ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த ஒரு பெண்மணி மாப்பிள்ளை இடத்தை நிறைவு செய்து வீடு திரும்புகின்றனர். எண்ணிக்கை சரி பார்த்து திருப்தி அடைகின்றனர் காவலர்கள்.
குதிரை வண்டியில் ஏறிய மாப்பிள்ளை ஒரே வண்டியில் பயணிக்காமல் மாறி மாறிப் பயணிக்கிறார் தற்போதைய சினிமாக் கதாநாயகன் மாதிரி. உரிய நேரத்தில் மணம் முடித்துக் காலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் வீடுவர போலீசும் முதல் மனைவியும் அவருடைய உறவினரும் 'ஙே'ன்னு விழிக்க ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி விருந்து தடபுடலாக நடக்கிறது. காவலரும் இருந்து விருந்து சாப்பிட்டு சென்றனர். இப்படி நடந்த கல்யாணம் மூலம் பல குழந்தைகள் பிறந்தும் எதுவும் தங்கவில்லை. ஏழு குழந்தைகள் அல்பாயுளில் மறைய, முதல் மனைவி நிரந்தரமாக விலக, அவருக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டது.
தண்ணீர்ப் பந்தல் - மோர்ப்பந்தல் ஆனது. காளமேகத்திற்குக் கிடைத்த மோர் அல்ல! வெண்ணெய் எடுக்காத மோர். கந்தசஷ்டிவிரதம் இருந்து வீட்டில் ஆராதனை செய்து முருகனை ஆட்டுக்கடா வாகனத்தில் பல்லக்கில் ஆறு நாட்களும் எழுந்தருளச் செய்து கற்ற வித்தைகள் அனைத்தையும் செய்து பார்த்தும் வாரிசு நிலைக்கவில்லை.
மெய்கண்டார் கூற்றுப்படி அண்ணனுக்காவது ஒரு பெண் மகவு பிறந்துவிட்டது தனக்கு அதற்கும் வழியில்லையே என்று ஏங்கித் தளர்ந்தார் சட்டநாத தேசிகர். ராமேஸ்வரம் சென்று வந்தால் வாரிசு கிடைக்கும் என்று நம்பி ராமேஸ்வரம் புறப்படுகிறார் மனைவியுடன். கூடவே தங்கை தங்கையின் கணவர் கந்தசாமிதேசிகர், தங்கையின் ஏழு வயது மகன் சண்முகம் அனைவருமாகத் தலயாத்திரைப் புறப்படுகின்றனர். கூண்டு வண்டியில் போய் வர ஆறு மாதம் பிடிக்கும்.
அவல் சத்துமாவு அம்மி. ஆட்டுகல் சகிதம் புறப்படுகின்றனர். இரவில் பயணம் பகலில் ஓய்வு. அங்கங்க உள்ளதலங்களைத் தரிசித்துப் புனித நீராடி ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஓர் ஊரில் இளைப்பாறுகின்றனர். பெரியவர்கள் கண் அயர சிறுவன் சண்முகத்திற்குப் பொழுது போகவில்லை. தங்கி இருந்த வீட்டில் இளம் எருமைக்கன்று அவன் கண்களை உறுத்த அவிழ்த்து விட்டு வைக்கோற் போரைச் சுற்றி சுற்றி விரட்டி அடித்து விளையாடுகிறான். நல்ல உச்சி வெயில். இளம் கன்றால் ஓட இயலவில்லை. நாக்கு தள்ளி இறந்து விடுகிறது. அப்புறம் என்ன பஞ்சாயத்து நடக்கிறது அபராதம் கட்டிப் புறப்படுகின்றனர். இது ஒரு அபசகுனமாகப் படுகிறது. இருப்பினும் விதிவிட்ட வழி என்று ராமேஸ்வரம் சென்று நீராடி வீடு திரும்புகின்றனர். எட்டாவது முறையாகக் கருத்தருக்கிறார் மனைவி. அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்க பெண் குழந்தை பிறக்கிறது. சேது என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். மகிழ்ச்சி நிலைக்காமல் பேரிடிதாக்குகிறது.
திரும்பிப்பார்க்கிறேன் - 9
பிரசவித்த ஏழாம் நாள் மனைவிக்குப் பக்கவாதம் தாக்குகிறது. ஒரு கை கால் விளங்கவில்லை பிறந்த குழந்தைக்குப் பால் கூட கொடுக்க இயலாதநிலை குழந்தை பிறந்ததற்கு மகிழ்வதா, மனைவியின் நிலைக்கு வருந்துவதா என்ற நிலை. பசும்பால் குழந்தைக்கு சேரவில்லை. அதே சமயம் வீட்டு வேலைக்காரிக்கும் குழந்தை பிறக்க அவரே பால் புகட்டுகிறார். தங்கை குடும்பத்தை வீட்டோடு வரும்மாறு அழைக்கிறார். அவர்களும் சிதம்பரத்தை விட்டு திருமலைராயன் பட்டினம் வருகின்றனர். கூடவே அவரது குலதெய்வமும் குடிபெயர்கிறார்.
ஆம் சிதம்பரம் எல்லையில் இருக்கும் ஐயனார் கோவிலில் உள்ள பரமனார் சித்தர் பீடமே அவர்களது குலதெய்வம். இவரை பக்கத்துத் தோட்டத்தில் பிடி மண் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்கின்றனர். பின்னாளில் ஒரு சலவைத் தொழிளாளி ஒரு தனியிடத்தில் குடியேறுகிறார். அவர் கந்தசாமி தேசிகரிடம் தனக்குத் துணையாரும் இல்லை என்று புலம்ப பரமனாரை அவரது இல்லம் அருகே பிரதிஷ்டை செய்து அவர் துணி துவைக்க ஒரு குட்டையும் வெட்டுவிக்கிறார் சட்டநாத தேசிகர். அந்த இடத்தில் இன்றும் பரமன் குட்டையும் பரமனாளார் கோவிலும் உள்ளது. அந்த குட்டை அந்தக்காலம் முதல் இந்தக் காலம் வரை பண்ணைக்குட்டையாகவும் பயன்படுகிறது.
குளிக்க இறங்கும் போது தண்ணீர் குறைவாக இருக்கும் குளித்துக் கரை ஏறுவதற்குள் தண்ணீர் அலைபோதும் அதே போல் தண்ணீர் தறும்பத் தறும்ப இருக்கிறது என்று ஆசையாக நீந்தும் போது கரை ஏறுவதற்குள் தண்ணீர் வடிந்துவிடும் அதிசயம். அந்தக் கோவிலும் குட்டையும் அதைத் சார்ந்த தென்னந்தோப்பும் அந்த சலவைத் தொழிலாளிக்கு மானியம் வழங்கி விட்டார் சட்டநாத தேசிகர். அந்த இடம் சுற்றிலும் அவருடைய நிலங்கள். நடுவே களத்து மேடாக அமைந்த இடம் அது. இன்று மருவிபெரமன் குட்டை என்று வழங்கப்படுகிறது.
காலம் செல்லச் செல்ல மனைவி சற்றே நடமாட ஆரம்பிக்கிறார். சேதுவிற்கு ஏழு வயது ஆகும் போது பதினைந்து வயது தங்கை மகள் சண்முகத்தை மணமுடித்து வைக்கிறார். 14 வயதில் பருவமடைந்த சேது 10 ஆண்டுகள் தாம்பத்யம் கண்டும் குழந்தைப் பேறு இல்லை.
தண்ணீர்ப்பந்தலும் கந்த ஷச்ஷி விழாவும் தொடர்கிறது. அண்ணன் மகளுக்கும் மகவு இல்லை அவர்கள் தன் கொழுந்தன் மகனைத் தத்து எடுத்து வளர்க்கின்றனர். தன் மகளுக்கும் மகவு இல்லை எனவே மெய்கண்டார் கூற்று பலிக்கிறது என்ற விரக்தியுடன் சட்டநாத தேசிகர், அவர் மனைவி தங்கை, தங்கை கணவர் அனைவரும் இறைவனடி சேர்கின்றனர். இந்த கட்டத்தில் மெய்கண்டாரால் சொல்லப்பட்ட விதியைத் தன் மதியால் வெல்ல முடிவு எடுக்கிறார் சேது ஆச்சி! அது என்ன முடிவு?
திரும்பிப்பார்க்கிறேன் - 10
சேது தனது கணவருக்கு இரண்டாவது மணம் முடிக்க முடிவு எடுக்கிறார். யார் தடுத்தும் கேட்கவில்லை. 24 வயது சேது ஆச்சி கணவருக்குப் பெண் பார்க்க ஆரம்பிக்கிறார். அத்துடன் தனக்கு வியாதி இல்லறத்திற்குத் தான் லாயக்கில்லை என வக்கீல் மூலம் இரண்டாவது மணத்திற்கு அரசிடம் அனுமதியும் பெறுகிறார். தனது சொத்து முழுவதும் தனக்குப் பிறகு இரண்டாவது மனைவிக்கும் அவரது வாரிசுக்குமே என்று உயிலும் எழுதுகிறார் அந்தப் புதுமைப் பெண்.
தூரத்து உறவான 12 வயது ராசம்மாவை 32 வயது கணவருக்கு மணமுடித்து வைக்கிறார் சேது ஆச்சி. தனது 18 வது வயதில் கருவுறுகிறார் ராசம்மா. வீடே ஆனந்த வெள்ளத்தில் ஆழ வெகு விமரிசையாக வளைகாப்பு சீமந்தம் நடைபெறுகிறார்.
ஆனால் ஆண் குழந்தை இறந்தே பிறக்கிறது. வீட்டை சோகம் சூழ்கிறது. ஏற்கனவே சண்முக தேசிகர் அந்தக்க பண்ணையார்களுக்கே உண்டான அனைத்துக் கல்யாண குணங்களும் அமையப் பெற்றவர்.
அந்தக் கால தஞ்சை மாவட்டப் பண்ணையார்களின் வாழ்க்கை முறை பற்றி தி.ஜானகிராமன் தனது "மோகமுள்" நாவலில் அற்புதமாக விளக்கி இருப்பார். அது போலவே எனது தாத்தாவும் வாழ்ந்த எல்லா சொத்துக்களையும் இழக்கிறார். இதற்குள் ராசம்மா இரண்டாவது முறையாகக் கருவுறுகிறார். அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. கடவுளின் கருணையால் பிறந்த மகவுக்குக் கருணாநிதி என்று பெயர் சூட்டி மகிழ்கின்றனர். கும்பத்தில் மெல்ல மெல்ல வறுமை அடி எடுத்து வைக்கிறது. ஏழு மாநிலமும் குடி இருந்த வீடும் பக்கத்துத் தென்னந்தோப்பும் மட்டுமே மிச்சம்.
தாத்தா சண்முக தேசிகர் மனஉளைச்சளுக்கு ஆளாகிறார். வாரிசு இல்லையென எல்லா சொத்துக்களையும் வாரி வழங்கிவிட்டேன். வந்த வாரிசுக்கு வறுமையைத்தான் வழங்கும் அவலம் என புலம்ப ஆரம்பித்தார். குற்ற உணர்வால் தவிக்கிறார்.
குற்ற உணர்வு அவருக்குத் தாள முடியாத மன அழுத்தத்தைத் தந்தது. வீட்டுக்குள்ளேயே முடங்குகிறார். மகனைப் பார்த்துப் பார்த்து நான் குற்றவாளி என்று புலம்புகிறார்.
மாதவி வீடு செல்ல காசு இல்லை என்று உளைச்சலோ என்று இருமனைவிகளும் தவிக்கின்றனர். தாங்கள் சிறு வாருசேர்த்த பணத்தைத் தருகின்றனர். அது கண்டு மேலும் நிலைகுலைகிறார் சண்முக தேசிகர்.
மெல்ல மெல்ல மன நோயாளி ஆகிறார். காத்து -கருப்பு - இழிப்பு மிதிப்பு - செய்வினை என்று பலபரிகாரங்கள். பலன்தான் பூஜ்யம். அடுத்து ஜோதிடரை நாடுகின்றனர்.
திரும்பிப்பார்க்கிறேன் - 11
அந்த காலத்தில் மனவியாதி பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலம். எனவே அடுத்தகட்டமாக ஜோதிடரை நாடுகின்றனர். திருவிடை மருதூர் கோவிலை ஒரு மண்டலம் சுற்றினால் பலன் கிடைக்கும் என்று ஜோதிடர் கூற இரு மனைவிகளும்,குழந்தையுடன் கணவரை அழைத்துக் கொண்டு திருவிடை மருதூர் வரு கின்றனர். கோவில் சுற்றுகின்றனர் அரை மண்டலம் சுற்றியதுமே சற்றுதெளிவு வர மனைவிகளுக்கு சற்றே நிம்மதி.
அந்த நிம்மதி நிலைக்கவில்லை, ஊரெங்கும் காலரா.ஒரே இரவில் தாத்தா சண்முக தேசிகர் இறக்க அந்த காலசட்டபடி உடனடியாக அவரை திருவிடை மருதூரிலேயே அடக்கம் செய்து எல்லாவற்றையும்(ரவிக்கை உட்பட) இழந்து இரு பெண்களும் குழந்தை கருணா நிதியுடன் ஊர் வந்து சேர்கின்றனர்.
எதிர் காலம் அச்சுறுத்துகிறது.ராசம்மாவிற்கு வயது 24, சேதுவின் வயது 36, குழந்தைக்கு வயது 3 1/2. காகித ஒடம் கடலலைமீது போவது போல் மூவரும் போகின்றனர். மாடுகறவையும்,அப்பளம்,இடுவதுமாக கடுமையாக உழைக்கிறார்கள். வீட்டில் இரண்டு பேரை துனைக்குக் குடிவைத்து அப்பப்பா அவர்கள் பட்டபாடு. திண்னைப்பள்ளியில் மகனை எட்டாவது வரை படிக்கவைது ஜந்து மா நிலம் வாங்க அசுரசாதனை படைக்கின்றனர் இருவரும்.
அந்த காலத்தில் உயர் கல்விக்கு காரைக்கால் செல்ல வேண்டும். பஸ்,ரயில் வசதி கிடையாது நடந்தே போக வேண்டும்.எனவேதான் உள்ளுர் திண்னைப் பள்ளியில் படிப்பு, எங்களது குடும்பத் தொழில் வைதீகம், மற்றும் ஆலய ஒதுவார் பனி.இது இரண்டையும் பயில காரைக்காலில் உள்ள முத்தையாதேசிகர் வீட்டில் குருகுல வாசம் செய்ய 13 வயது மகனை அனுப்பி வைக்கின்றனர். சேது ஆச்சியின் தாய் வழி உறவு அவர்.எனவே அவர் வீட்டில் குருகுலவாசம் இரண்டு ஆண்டுகளில் எல்லா பயிற்சிகலும் இனிதே முடிந்தது.
அப்போது காந்திஜியின் தலைமையில் சுதந்திரப் போரட்டம் சூடுபிடித்த நேரம். இளைஞர் கருணா நிதி காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொள்கிறார். கைராட்டையில் நூல் நூற்பு இயக்கம். நண்பர்களுடன் வீட்டிலேயே கதர் இயக்கம் கண்டார். மேலும் கர் நாடக சங்கீதப் பயிற்சி, என பல புதுமைகளில் நாட்டம் கொண்டவர் அவர். அந்தகாலத்தில் "பாரத தேவி" இதழ் நடத்திய நூற்பு போட்டியில், இதழ் ஆசிரியர் முதல் பரிசு வாங்கியவர் என் தந்தை கருணானிதி தேசிகர் அவர்கள் மகன் சுதந்திர வேள்வியில் அதிதீவிரமாக ஈடுபட்டு விடுவானோ என்ற பயம் தாய் மார்களுக்கு எனவே மகனுக்குக் கால் கட்டுப் போட தீர்மானிக்கின்றனர்.
17வயது மகனுக்கு பெண் பார்க்க ஆரம்பிக்கின்றனர். அந்த காலத்தில் இளம் வயது மனம் சர்வசாதாரணம். பெண்பார்க்கும் படலம் ஆரம்பம் ஆகிறது வைத்தீஸ்வரன் கோவில் சோமசுந்தர தேசிகர் இளைய மகள் ராஜத்தை(13வயது) நிச்சயம் செய்கின்றனர்.இந்த சமையத்தில் என் தாய் ராஜம் அவர்களின் பிறந்த இடம் பற்றி சில செய்திகள் சொல்ல வேண்டியது அவசியம்.
திரும்பிப்பார்க்கிறேன் - 12
தாத்தாவின் பூர்வீகம், திருவாரூரை அடுத்த அடியக்க மங்கலம். தந்தை இளம் வயதிலேயே இறந்து விடுகிறார்.தாயும் தம்பியும் உண்டு,சிவப்புக் கல் வியாபாரம்.பின்னர் வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு வீதீயில் விடு வாங்கி குடியேறினர், தற்போது அந்த இடம் திருமண மண்டபாக இருக்கிறது. இளம் வயதில் சோம சுந்தர தேசிகர் முரடர்,கோபக்காரர். ஊர்வம்புகள் அத்துபடி.தாயார் கண்டிக்க கோவித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். காசியில் ஒரு மடத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார்.காசி வாசம் அவரை அறிஞராகவும் சிறந்த நிர்வாகியாகவும் ஆக்குகிறது.
முரட்டுத்தனமும்,கோபமும் போயே போச்சு.இதற்கிடையே தம்பிக்குத் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. தம்பியும்,அவர் மனைவியும் அடுத்தடுது பிளேக் நோய்க்குப் பலியாகத்தாய் தவிக்கிறார். எப்படியோ செய்தி அறிந்த சோம சுந்தர தேசிகர் ஊர் வந்து சேர்கிறார். தாயாரின் வற்புறுத்தலுக்கு இனங்க அதே ஊரைச் சேர்ந்த உறவுப் பெண் 15வயது சீதாலட்சுமியை மணக்கிறார் தனது முப்பதாவது வயதில்.
சீதாலட்சுமி வந்த நேரம் லட்சுமிதேவியே வந்து குடியேறிவிட்டாள் வீட்டில் நகரத்தார் மடங்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் அதிகம் உண்டு.தாத்தா பல மடங்கலுக்கு நிர்வாகி ஆகிறார். காசியில் பெற்ற பயிற்சி கை கொடுக்க மிகசிறந்த நிர்வாகி என்று பெயர் எடுக்கிறார். நல்ல வருமானம், அத்துடன் மூன்று பெண்களும் இரண்டு பிள்ளைகளும் பிறக்கின்றனர். போனது போக இரண்டு பெண்களும் ஒரு பையனும் மிச்சம், மூத்த பெண் கங்காபவானி, இரண்டாவது பெண் எனது தாயார் ராஜம், அடுத்து எனது ஒரே மாமா பாலசுப்பிரமணியம்.. குழந்தைகளுக்கு நல்ல நீதி போதனைக் கதைகளை ஊட்டி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கச் செய்கிறார்.அந்தகாலத்திலேயே எனது பெரியம்மாவும் என் தாயும் ஆறாம் வகுப்பு வரையில் படிக்க செய்த புதுமை வாதி என் தாத்தா.
திரும்பிப்பார்க்கிறேன் - 13
மகிழ்ச்சியான குடும்பத்தில் விதி விளையடுகிறது வியாதி ரூபத்தில்,குடும்பம் நிலை குலைகிறது. தாத்தாவை சர்க்கரை நோய் தாக்குகிறது.அந்த கலத்தில் அந்த வியதிக் கெல்லாம் மருந்து அதிகம் கிடையாது.தனது கடமைகளை அவசர அவசரமாக நிறைவு செய்ய முற்படுகிறார்,மூத்த பெண்ணுக்கு வீட்டோடு மாப்பிள்ளைப் பார்த்து மணம் முடிக்கிறார். 13 வயதில் வந்த மாப்பிள்ளை ராமலிங்க தேசிகர் மாப்பிள்ளையாக இல்லை, வீட்டுக்கு மூத்த மகன் ஆகிறார்.
மாமனாரிடம் இருந்து மடத்து நிர்வாகங்களை கற்கிறார்,தானே நிர்வகிக்கிறார், சாதுக்கள் மடம் நகரத்தார் மடம் -குரு பூஜை மடம்-வெள்ளிக்கிழமை மடம்-செவ்வாய்கிழமை மடம் என பல மடங்கள். பல தானதர்மங்கள், வீட்டிலேயே அப்பர் சுவாமிகளுக்கு குரு பூஜை என ஜே ஜே என்று விழாக்கோலம் பூனும் வீடு, அத்தனையும் லாவகமாக கையாள்கிறார் ரமலிங்க தேசிகர். முதலில் ஆண்குழந்தை பிறந்து மரிக்கிறது.
இளைய மகளுக்கும் மணம் முடிக்க விழைகிறார் தாத்தா, முதல் சம்மந்தி மூலமாகத் திருமலைராயன் பட்டிணத்துக் கருணா நிதி தேசிகரைப் பெண்பார்க்க அழைப்பு விடுக்கிறார்.அவசர அவசரமாக கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் பைசல் செய்கிறார், இரு மகள்களுக்கும் தலா 10 மா நிலம் 40 பவுன் நகை என்று சீர் செய்து வைக்கிறார், அம்மாவை பெண் பார்க்க வரும் அன்று தாத்தா இறந்து விடுகிறார். கருணா நிதிக்கேப் பெண்ணைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார், எனது தாய்க்கு அப்போது வயது 13. தந்தையின் அறிவுரைகளையும் நீதி போதனைகளையும் கேட்டு வளர்ந்தவர். தந்தையைப் போலவே கருப்பு நிறம் சற்றே உயரம் கம்மி, சுருள்முடி ஆனால் ராஜம் என்றபெயருக்கு ஏற்ப ராஜகளை கொண்டவர். தந்தை அந்தக் கால தியாகராஜ பாகவதரின் அச்சு அசல்,குரல் வளம் உட்பட நிகு நிகு வென்று கலரும் உயரமுமாக,கதர் உடையும், கண்ணாடியுமாக கனகம்பீர உருவம்.
திருமணம் இனிதே நடந்தேறியது, பெரியப்பாதான் முன் நின்று திருமணம் நடத்தி வைத்தார்கள் பாட்டி 36 வயதில் வீட்டோடு முடங்கினார், சமையலும் வேலையும் படு சுறு சுறுப்பு, சுறு சுறுப்புக்கு எனது மானசீக குரு தாய் வழி பாட்டி சீதாலட்சுமியே ஆவார்கள், ஒயத உழைப்பாளி,அம்மாவின் 15 வது வயதில் அண்ணன் சட்டை நாதன் பிறக்கிறார், நான்கு ஆண்டு கழித்து நான் அடுத்து, ஏழு ஆண்டு கழித்து என் முதல் தங்கை வசந்தா பிறக்கக் குடும்பம் பெருகுகிறது.
திரும்பிப்பார்க்கிறேன் - 14
எனது முதல் தங்கை வசந்தா பிறந்த நேரம் எனது பாட்டி ஜோதிடம் பார்க்கிறார். மகன் பிள்ளை குட்டிக் காரன் ஆகிவிட்டான் வதீகக் காரியங்கலுக்கு சென்று நேரம் கெட்ட நேரத்தில் குளித்து சாப்பிடுவது ஒத்து வரவில்லை கடுமையான ஆஸ்த்துமா தாக்குகிறது,வேறு என்ன தொழில் செய்யலாம் என்று கஞ்சனூர் ஜோதிடர் எனும் குடும்ப ஜோதிடரை அழைத்துக் கேட்கிறார்.
உங்களைத் தேடி ஒரு தொழில் தானாகவே வரும் அதை ஏற்று நடத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்கிறார்.அப்போது தாத்தா காலத்தில் தண்ணிர் பந்தலாக இருந்த கட்டிடத்தில் ஒரு செட்டியார் தம்பதி குடி இருந்தனர், வாடகை 2 ரூபாய்,குழந்தைகள் இல்லை, நானும் அண்ணனும் அவர்கள் வீட்டிலேயே டேரா. ஏதோ பிரச்சனை காரணமக ஊரை விட்டுச் செல்லும் நிலை,அப்போது எல்லாம் பிரஞ்சுப் பகுதியில் ஏதும் பிரச்சனை என்றால் ஆங்கிலேயர் பகுதிக்கு சென்று விடுவர், அது போல் ஆங்கிலேயர் பகுதியில் பிரச்சனை என்றால் பிரஞ்சு பகுதிக்கு குடியேறுவது வழக்கம், அப்படி பட்ட நிலையில் தான் பாரதியும் அரவிந்தரும் புதுவையில் குடியேறினர்.
செட்டியார் அவர்கள் எனது பாட்டியிடம் வந்து கூறினார்ள், இரவே வீட்டை விட்டு வெளியேரனும், நான் புத்தக ஏஜண்டாக இருக்கிறேன், 18 புத்தகங்கலுக்கு 500 ரூபாய் அட்வான்ஸ் செலுத்தி இருக்கிறேன்,அதை நீங்கள் தந்து விட்டால் உங்கள் பெயருக்கு ஏஜென்சியை மாற்றி தருகிறேன், உங்களுக்கு வேண்டாம் என்றால் இன்னொரு நபருக்குக் கொடுத்து விடுவேன் என்கிறார்.
ஜோதிடர் கூறிய வீடு தேடி வரும் தொழில் இதுதான் என்று மகிழ்ந்த எனது பாட்டியும் பணத்தை எப்படியோ புரட்டி ஏஜன்சியை மகனுக்கு வாங்கி தருகிறார் 60 ஆண்டுகளுக்கு முன்னே 500 ரூபாய் புரட்டுவது என்பது தற்போது 5 லட்சம் புரட்டு வதற்கு சமம், தொழில் வீடு தேடி வந்து விட்டது, அடுத்து பழைய இரும்புக் கடையில் 5 ரூபாய் கொடுத்து காப்பிக்கொட்டை அரைக்கும் கை மிஷின் ஒன்று வாங்கி வந்தார் எனது தந்தை, அதை வைத்து வீட்டிலேயே காப்பிக் கொட்டை அரைத்து விற்பனை செய்ய வியாபாரம் சூடு பிடித்தது.அடுத்து கடைதெருவில் ஒரு கடை பிடித்து ஒரு ஷாப் ஆரம்பித்தார்கள்.வசந்த நிலையம் என்ற பெயரில்.வசந்தம் காப்பி, வசந்த நிலையம் என்று எல்லாம் என் தங்கை பிறந்த நேரம் வாழ்வில் வசந்தம் வந்தது என்று அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.நல்ல வியாபாரம்,நல்ல செல்வாக்கு. எட்டாம் வகுப்புடன் நான் இடை நிருத்தம் செய்யப்பட்டேன் பெண்கள் வெளியே வர அனுமதிக்காத காலக்கட்டம் அது,குறிப்பாக எங்கள் குடும்பங்களில் வாசல் தெளிக்கக்கூட வயது வந்த பெண்களுக்கு அனுமதி இல்லை.
தந்தை புத்தக முகவர் ஆனதால் 7 வயது முதல் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்து விடுவேன்! புரிந்ததோ புரியவில்லையோ படித்து முடித்து விடுவேன்!! சில புத்தகங்கள் சென்சாருக்கு உட்பட்டது தரமாட்டார்கள் அந்த புத்தகங்கள் புரட்ட முடியாத படி பிண் பண்ணி இருக்கும் பத்திரிகை தர்மம் அனுஷ்டிக்கப்பட்ட காலம் அது. எனவே எனது 15 வ்யதுகுள் க்ல்கியும்,அகிலனும், சாண்டில்யனும்,லட்சுமியும்,தொ.மு.பாஸ்கரத்தொண்டைமானும்,ராஜம் கிருஷ்ணனும்,ஜெயகாந்தனும், அத்துபடி, ஆனார்கள்.அப்போது அவசர அவசரமாக மேய்ந்த வற்றைத்தான் இப்போது சாவகாசமாக அசை போடுகிறேன். அத்தோடு எனது தந்தை ராமனுக்கு சபரிகடித்தப்பழம் தந்தது போல் தான் சுவைத்தப் புத்தகங்களை எங்களைப்படிக்க சொல்வார்கள் அது பற்றி குடும்ப உறுப்பினருடன் விவாதம் செய்வார்,இந்த வழியில் காந்திஜியின் சத்யசோதனை, மு.வ.அவர்களின் படைப்புகள், தமிழ் வாணணின் தன்னம்பிக்கை நூல்கள் ராமாயணம். மகாபாரதம் எல்லாம் எனது 15 வயதுக்குள் படிக்கும் வாய்ப்பை எனக்குத்தந்தவர் எனது தந்தையே, தந்தை யோடு கல்வி போம் என்ற வழக்குக்கு உதாரணபுருஷர் எந்து தந்தை எனவே பள்ளிக்கல்வி போனதே தவிர இலக்கிய கல்வியில் எந்ததடங்களும் இன்றி தொடர்ந்தேன்!! வளர்ந்தேன்
திரும்பிப்பார்க்கிறேன் - 15
அடுத்து வீடுகட்ட வேண்டும் என்று பாட்டியும் அம்மாவும் நச்சரித்தார்கள், ஒற்றை வீட்டில் கரண்ட் இல்லாமல் வசிப்பது மிகவும் கஷ்டமான காரியம்தான். அத்தோடு அப்போது திருட்டு பயமும் அதிகம் இரு முறை திருடனும் வந்து விட்டான், ஒரு முறை ஒடு பிரித்து திருடன் இறங்க முற்படும் போது தந்தை விழித்து விட்டார், எனவே ஒடி விட்டான். மருமுறை திருடவந்தவன் வாசற்கதவின் பித்தளை கைப்பிடியையும், பிள்ளையார் கோவில் கலசத்தையும் திருடிசென்று விட்டான், அப்பா வீடு கட்ட சம்மதிக்கவில்லை, ரிப்பேர் செய்து லைட் போட்டு விட்டால் போதுமானது என்றார். ஆனால்,பாட்டியும், அம்மாவும் அடுத்து எனக்குத் திருமணம் செய்யனும்,அதற்குள் புது வீடு கட்டனும் என்று நச்சரிக்க மனை போடப்பட்டது. வீடு கட்டி முடியும்போது 5 மா நிலம் 50 பவுன் நகை காலி, அடுத்து எனது திருமணம் . இதற்குள் பெரியப்பா திடீரென காலமாக அம்மாவின் நிலத்தைப் பார்க்க ஆள் இல்லை என்பதால் அதை விற்கும் நிலை. அதை விற்று எனது திருமணம் நடந்தது அப்போது எனக்கு வயது 16,
நிலம் குறைந்ததால் வருமானம் இழப்பு,அடுத்துக் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏற்பட குடும்பம் தடுமாற ஆரம்பித்தது. தடுமாறும் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும் மகனாக அண்ணன் அமையாதது துரதிருஷ்டமே, கடை,நியூஸ் ஏஜன்சி,காப்பித்தூள் வியாபாரம்,வீட்டிலேயே ஆரம்பிக்கப்பட்ட விறகு கடை அத்தனையும் காலி,இடையில் அண்ணனுக்குத் திருமணம் அண்ணி ஆசிரியை பழைய வீட்டின் மனைகள் விற்க்கப்பட்டு முதல் தங்கை வசந்தாவின் திருமணம் நடைபெற்றது. இதற்குள் குடும்பப் பிள்ளையார் களவு போனார்.பின்னர் திரும்பக் கிடைக் கப்பட்டுத் தண்ணீர் பந்தலில் தங்கவைக்கப்பட்டார்.. அடுத்து கருவறைப் பிள்ளையாரும் களவு போனார் அகபடவே இல்லை.அது முதல் கோவில் ஆடு மாடுகளின் சரணலயம் ஆயிற்று. இதற்கிடையில் எனது பெரியபாட்டி தண்ணீர் பந்தலில் குடியேறிய பிள்ளையாருக்கு விளக்கேற்றும் போது எதிர் பாராத விதமாகப் புடவையில் தீப்பற்றி புண்ணாகிப் படுத்த படுக்கை ஆனார்.ஆச்சாரம் கரணமாக மருத்துவமனை செல்ல மாட்டேன் ஊசி போட்டுக் கொள்ள மாட்டேன் என்றுபிடிவாதம் பிடித்து புண் கடுமையாகி ஆறீக் குணம் ஆக ஒரண்டு ஆனது. கவனிக்க செல்லம் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டார், பாட்டிக்குத் தாய்ப்பால் ஊட்டியவரின் பேரன் மனைவி அவர். அப்போது பாட்டி இறைவனிடம் வேண்டுவார்கள், தீக்காயம் குணமான பின்னரே நான் சாக வேண்டும் தீக்காயத்துடன் இறந்தால் அதுர் மரணம் எனவே மோட்சம் கிடைக்காது என்பார்கள்.
எங்கலுக்கு எரிச்சலாக இருக்கும்.வைத்தியமும் செய்துகொள்ளாமல் தீக்காயத்துடன் போரடும் இவர் சாகக் கூடாது என்று வேண்டிகொள்கிறாரே என்ற கோபம் அனைவருக்கும். இதற்குள் நிதி நிலை மிகவும் மோசமானது. எல்லாம் ஒவ்வொன்றாகக் கரைய எஞ்சி நின்றது குடியிருந்த வீடும் பக்கத்தில் சிறிது மனையும் 3 மா நிலமும் மட்டுமே இதற்கிடையே நேரடி வாரிசு இல்லாதவர் உடைமைகளை அவருக்கு பிறகு யாருக்கும் விற்கவோ வாங்கவோ முடியாது என்று சட்டம் கூற வீட்டை என் தாயார் பெயருக்கு மாற்ற ஏற்பாடு ஆனது அடுத்து நிலத்தையும் விற்கும் நிலை இதற்குள் பாட்டி புண் ஆறி கோல் ஊண்றி நடக்க ஆரம்பித்து விட்டார். 1967 பத்திரப்பதிவு வீட்டிலேயே நடந்தேறியது.
அன்று இரவு.............
திரும்பிப்பார்க்கிறேன்-16
இரவு நங்கு சாப்பிட்டு உறங்கிய சேது ஆச்சி நள்ளிரவில் அனைவரையும் எழுப்புகிறார் நெஞ்சு வலிக்கிறது எனது பெட்டியை எடுத்துவா என்கிறார் பரபரப்பாக.பெட்டி வருகிறது சிறுவாட்டுப் பணம் ரூ.340 ஜ மகனிடம் கொடுத்து இறுதிப் பயண செலவுக்கு வைத்துக் கொள் என்கிறார் யாருக்கும் எதுவும் புரியவில்லை.
"புண்ணியா உண்டைக்கேப்
போது கின்றேன் பூம்புகலூர்
மேவிய புண்ணியனே"
என்று அப்பர் இறை ஜோதியில் கலக்கும் போது பாடிய பாடலைப் பாடிய படியே சரிகிறார். அவர் உயிர்ப் பறவை மெய் கண்டாரை தேடிச் சென்று விட்டது.
ஆம் அவர் கூறியபடியே 23வது தலைமுறை வாரிசு இன்று மறைந்து விட்டது, கூடவே எல்லா வித சொத்து சுகமும் மறைந்து விட்ட்து பிள்ளையார் கோவில் பிள்ளையார் உட்பட மறைந்து விட்டன. 12 ஆண்டுகள் ஒடுகின்றன. கடைசி தங்கை மைதிலி திருமணத்திற்கு நிற்கிறாள். இதற்கிடையே எனது மகளுக்கு 17 வயது ஆகிறது. அந்த ஆண்டு பொங்கல் வரிசை வக்க எனது தந்தை வருகிறார். என் நாக்கில் சனி அமர்கிறது.
இதற்கிடையே தந்தை ஜோதிட வித்தகர் ஆகிவிட்டார். குடும்பம் சற்றே தலைதூக்க ஆரம்பித்தது. அப்ப பேத்திக்கு எப்போது கல்யாணம் ஆகும் எப்படிபட்ட மாப்பிள்ளை அமையும் என்று நான் கேட்க சாப்பிட்டுக் கொண்டு இருந்த தந்தை துனுக்குற்று அதிர்கிறார். பேத்திக்கு திருமணம் பேசும் நேரம் வந்து விட்டது மகளுக்கு இன்னும் மணம்முடிக்கவில்லையே என்ற அதிர்ச்சி அவரை உறையவைக்கிறது, ஏற்கனவே அந்த உலைச்சலோடுதான் என்னைப் பார்க்க வந்திருக்கிறார். அது பின்னரே தெரியவந்தது. அப்பாவுக்கு ஒரே புகலிடம் என் வீடுதான் நான் அப்படி கேட்டு இருக்கக் கூடாது என்பது அப்புரம் தான்என் மர மண்டைக்கு ஏறியது.
காலையில் வந்து மாலையில் கிளம்பி விடுவார் அப்பாஅதுவும் பொசுக்கென்று கிளம்புவதுதான் எப்போதும் வழக்கம் , புறப்பட்டு விட்டால் ஜந்து நிமிடம் கூட தயங்காதவர் அன்று புறப்படும் போது தயங்கி தயங்கி ,மயங்கி மயங்கி நின்று புறப்பட்டார்கள். அதுவே எனக்கு பெரிய உறுத்தலாக இருந்தது.
இதற்குள் தை பிறந்தது .மகளுக்கு எப்போது திருமணம் ஆகும், ஊருக்கே ஜோதிடம் கூறும் நிங்கள் வீட்டுக்கு சொல்ல வேண்டாமா என்று அம்மா வறுத்து எடுக்க ஜாதகம் பார்த்த அப்பா எதுவும் சொல்ல மறுத்து ஜாதகத்தை சுவாமி பாதத்தில் வைத்து விட்டார்கள் எப்படி பட்ட மாப்பிள்ளை அமையும் என்று அம்மா துளைத்து எடுக்க திருமணத்தின் போது அம்மாவோ அப்பாவோ ஒருவர் தான் இருப்பார் என்று கூற மாப்பிள்ளைக்கு தான் அப்படி ஒருவர் தான் இருப்பார் என்று அம்மா எண்ணிக் கொள்ள, ஹார்ட் அட்டாகில் பொக்கென்று போய்ச் சேர்கிறார் அப்பா தனது 56 வது வயதில் நிராதரவான நிலையில் அம்மா, தங்கை பாட்டி , மூவரும்...
திரும்பிப்பார்க்கிறேன்-17
தலைவன் இல்லாத கப்பலாய் தள்ளாடுகிறது குடும்பம். கையிருப்பு எல்லாம் கரைய வீட்டை விற்க வேண்டிய கட்டாயம். இதற்குள் தங்கைக்கு மாப்பிள்ளை அமைய திருமணம் நடக்கிறது, வீடு விற்கப்பட்டு கடங்கள் பைசல் செய்யப்பட்டு பிரித்து உதறிய நெல்லிக்காய் முட்டையாய் குடும்பம் சிதறுகிறது.
குடும்பம் மட்டும் சிதறவில்லை மெய்க்கண்டாரின் இரண்டடி உருவச்சிலையும் அவரது வம்சம் பூஜித்த அனைத்து சுவாமி விக்ரகங்கலும் சிதறி மறைகின்றன. ஒரு ஆலயத்தில் எத்தனை சன்னதிகள் உண்டோ அத்தனை விக்ரகங்கள் 700ஆண்டுகள் பழமை வாய்ந்தவை அனைத்தும் சென்றைடம் தெரியவில்லை மெய் கண்டார் கூற்றுப்படி விக்ரகங்களும் அவரை தேடி சென்றனவோ? கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டதில்லை என்ற கூற்று இதற்கு பொருந்தும்!.
விதியை மதியால் வெல்ல முயன்றார் சேது பாட்டி . சேது பாட்டியுடன் அனைத்து சொத்துக்கலும் கைமறா கூடுதலாக 15 ஆண்டுகள் 25 வது தலைமுறை அந்த வீட்டில் வசித்தது மட்டுமே கண்ட பலன். சேது பாட்டியின் பெரியப்பா வளர்ப்பு மகங்களின் வம்சத்தில் ஒருவர் மட்டும் திருச்செங்காட்டாங்குடியில் வாழ்கிறார். அவர்கள் வழி சொத்து சுகங்களையும் வளர்ப்பு மகன் காலி செய்து விட்டுஅனாதைப்பிணமாக இறந்தார் அவரை அடக்கம் செய்தது எனது தந்தையே.. இவ்வளவு பாரம்பரியமிக்க அந்த குடும்பம் திருமலைராயன் பட்டினத்தில் வாழ்ந்ததற்கான வரலாற்று சுவடுகள் அனைத்தும் மறைய அந்தக் குடும்பமே மறக்கப்பட்ட நிலை.
எனக்கு மணமாகி 50 ஆண்டுகலுக்கு மேல் ஆகிவிட்டது தந்தை மறைந்து வீடு விற்கப்பட்டு 32 ஆண்டுகள் ஒடிவிட்டன. 32 ஆண்டுகளாக திருமலைராயன் பட்டினம் தொடர்பு அற்ற நிலையில் சென்ற ஆண்டு எனக்குள் ஒரு ஆசை. நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தை காண வேண்டும் என்ற ஆவல். அதற்கு முன் அந்த சாலை வழியே பயணித்தால் கூட பழைய வீட்டை பார்க்கும் போது எனக்குள், பெரும் சோகம், அதை தவிர்க்கவே அந்த வழியே பயணிப்பதையே தவிர்த்து விட்டேன். அன்று ஏனோ எனக்குள் ஒரு உத்வேகம்.
25 த்லைமுறை வாழ்ந்த இடத்தைக் கண்டேன் கசிந்தேன். பிள்ளையார் கோவிலையும் கண்டேன் கருவறையை விட உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்கள். இருப்பினும் எந்த சேதமும் இல்லாமல் தாக்குப் பிடிக்கும் கரு வறை ஆண்டவன் இல்லாத வெற்று ஆலயம். கிட்டதட்ட 600 ஆண்டுகள் கடந்தும் சிதையாது வரலாற்று சாட்சியாக விளங்கும் ஆலயம் செங்கல்லும் சாந்தும் வத்துக் கட்டிய ஆலயம் ஆலய வாயிற்படி வரை அடுக்குமாடிக் கட்டிடம், ஆலயம் செல்லும் பாதை, தோட்டம் ,தண்ணீர்ப் பந்தல் இருந்த இடம் எல்லாம் கட்டிடமாக உருமாறி நிற்கும் அவலம்.
அந்தக் காலத்தில் திருமலைராயன் பட்டினத்தில் தண்ணீர்ப் பஞ்சம் குளங்களே குடி நீர் தேவையை பூர்த்தி செய்தன, குளம் வற்றிய பின் ஊற்று தோண்டுவார்கள் அப்போதுஅரசு பொதுக்கிணறு கட்டும் திட்டம் கொண்டு வந்தது எங்கள் தெருவிற்கு ஒரு கிணறு சாங்ஷன் ஆனது ஆனால் பொது இடம் இல்லாததால் வேறு இடம் மாறும் நிலை.
அப்போது எனது தந்தை சொந்தப்பட்டா இடத்தை அரசுக்கு வழங்கினார்கள்.பிரமாண்டமான கிணறு வெட்டப்பட்டது, அதுவும் இன்று பாழ்ப்பட்டு நிற்கிறது. அப்பாவின் கொடைக்கு சாட்சியாக!....
திரும்பிப்பார்க்கிறேன்-18
எதற்கும் ஆட்சி-ஆவணம்,அயலார்தம் காட்சி என முன்று சான்றுகள் வேண்டும் என்பார்கள்,எனது வரலாற்றுக்கு ஆட்சியாக இன்று யாரும் அங்கு வசிக்கவில்லை, அடுத்து ஆவணங்கள்: மன்னன் தந்த மானியம் பற்றித் தஞ்சை சரஸ்வதி மகாலில் ஆவணங்கள் இருக்கின்றன என்று எனது தந்தையார் கூறி இருக்கிறார்கள், தற்போது இருக்கிறதா இல்லையாஎன்று தெரியவில்லை.அடுத்து ஆலய வழிபாட்டிற்காக மன்னன் தந்த மானியம் அது பிரஞ்சு ஆட்சியிலும் தொடர்ந்தது, புதுவை சுதந்திரம் பெற்ற பின்னும் தொடர்ந்தது.
பிள்ளையார் காணாமல் போனதும் ஆண்டவனே களவு போய்விட்டார் எனவே பூஜை இல்லை,அதனால் மானியம் இனி வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து விட்டார்கள் தந்தை அந்த ஆவணங்கலும் தற்போது இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை.
அத்துடன் இவை எல்லாவற்றுக்கும் சாட்சியான மெய்கண்டாரின் திருமேனியும்-அவர் வழித்தோன்றல்கள் பூசித்த அத்தனை செப்புத்திருமேனிகலும், குடும்பம் சிதறியபோது மறைந்துவிட்டன, 600 ஆண்டுகலுக்கு மேல் பழமை வாய்ந்த விக்கிரகங்கள்.
களவுபோன பிள்ளையாரில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு தண்ணீர் பந்தலில் வைக்கப் பட்டார், பின்னர் அருகில் உள்ள சுப்பிரமணியர் ஆலயத்தில் அப்பா வைத்துவிட்டார்கள். அருகிலேயே நடன காளி கோவில். இரண்டு கோவிலுமே நலிவடைந்த நிலையில் அப்போது இருந்தன பிள்ளையார் போன நேரம் போலும் தற்போது புதிய கட்டிடம் திருவிழா என்று புத்துயிர்ப்புடன் திகழ்கிறது அங்கும் தற்போது அந்தப் பிள்ளையார் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதினால்
நாலும் ஒரு கனவோ? - (பாரதி)
என்ற மருட்சியுடன் யோசித்தேன்!... இந்த அவலங்களைக் கண்டு திரும்பும் போது எனது காதுகளில் பாடு மகளிரின் பாடல் வரிகள் ஒலித்தன.
"அற்றை திங்கள்
அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம்
எம் குன்றும் பிறர் கொளார்
இற்றைத்திங்கள்
இவ்வெண்ணிலவில்
எம் குன்றும் பிறர் கொண்டார்-யாம்
எந்தையுமிலமே."
இன்று எந்தையும் அவர் முந்தையரும் வாழ்ந்த வரலாற்றுஸ் சுவடுகள் இல்லையே என்ற ஏக்கத்துடன் ஊர்திரும்பினேன்......
திரும்பிப்பார்க்கிறேன்-19
63 நாயன் மார்களில் ஒருவர் பூசலார். இவர் திரு நின்ற ஊரில் வாழ்ந்தவர், சித்தத்தை சிவன் பால் வைத்தவர், ஏழை, இவருக்கு இறைவனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்று ஆசை. எனவே மனதாலே ஒரு கோயில் கட்ட ஆரம்பித்தார், உணர்வு பூர்வமாக ஒன்றி ஒரு ஆலயம் கட்ட எவ்வளவு மெனக்கட வேண்டுமோ அத்தனை ஆண்டுகள் மனதாலே மெனக்கட்டு ஆலயம் கட்டி முடிக்கிறார், குடமுழக்குக்கு நாலும் பார்க்கிறார்.
அப்போது இராஜ சிம்ம பல்லவன் காஞ்சியிலே ஒரு கோயில் கட்டுகிறான் அது தற்போது தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அவனும் பூசலார் தேர்ந்த நாளையே தேர்வு செய்கிறான் இறைவன் அவன் கனவில் தோன்றி அன்று எனது பூசலார் ஆலய குடமுழக்கை ஏற்க இருக்கிறேன், உனது குடமுழக்கை வேறு தினத்திற்கு மாற்றி வை என்று கூறுகிறான், அரசன் மிரண்டு போகிறான்.
பூசலாரைத் தேடி வருகிறான், கோவில் பற்றிக் கேட்கிறான் தான் மனசுக்குள் கட்டிய கோவில் என்று அவர் கூற அவர் தாள் பணிகிறான் பூசலார் அசந்து போகிறார் அவர் மனதில் எப்படி உருவாக்கினாரோ அச்சு அசலாக அதே நீள அகலத்தில் அதே சிற்ப சித்திர விசித்திரத்தில் அமைந்த அற்புத கோவில் மேலும் திரு நின்ற ஊரிலேயே ஒரு ஆலயம் எழுப்பிதருகிறான் மன்னன், பூசலாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இது சாத்தியமா என்பது நம்மில் பலருடைய கேள்வி... சாத்தியமே என்று உளவியல் வல்லு நர்கள் கூறுகிறார்கள்!! நம் ஆழ் மனதில் உணர்ச்சி பூர்வமாக எண்ணப்படும் எண்ணங்கள் வலிமையானவை அது எப்படியோயார் மூலமாக தொடர்பு கொண்டு நமது கோரிக்கைகளை நிறைவேற்றுகிறது என்று ஆய்வின் மூலமாக ஆணித்தனமாகக் கூறுகின்றனர்.
என் ஆழ்மனதிலும் ஒரு ஆசை!!
எனது மூதாதையர் வழிப்பட்ட பிள்ளையார் கோவில் சீரமைக்கப் பட வேண்டும், வழிபாடு நடக்க வேண்டும் ,மெய்கண்டாரின் வரலாறு வருங்கால சந்ததிகலுக்கு அதன் மூலம் உணர்த்தப்பட வேண்டும் என்பதே அந்த ஆசை. எனது ஆசையும் நிறைவேறும் தானே? எனது ஆசையுடன் நேயர்களின் கூட்டுப் பிராத்தனையும் சேர்ந்தால் கூடுதல் பலன் கிட்டும் தானே?..
" காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்தது எல்லாம் காண்பண்றோ"'
என்ற பாரதியின் வரிகளை நினைவு கூர்ந்து திரும்பிப் பார்க்கிறேன் முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்....
திரும்பிப்பார்க்கிறேன்-20
என்னுரை.
இந்த வரலாறு செவி வழியாக எனது பாட்டிகள் முலம் எனது 10 வயதில் கேட்டது, விளையாட்டாகக் கதையாக கேட்ட வரலாறு இது கொஞ்சம் விபரம் தெரிந்து இது பற்றி விபரமாக கேட்காஆரம்பித்ததும் எனது தாயார் சில விஷயங்களை சென்சார் செய்து கூற வேண்டுமென அறிவுறுத்தினார்கள். சென்சார் செய்து கூற எனது பாட்டிகள் திணற "கண்டினியூ" விட்டுப் போயிற்று, நடுவுல சில பக்கங்களைக் கானோம்!!
பிற்பாடு பத்து வயதில் கேட்டது வயது ஏறியபின் ஊகித்து சந்தேகம் கேட்டுத் தெளிந்து ஊர்ஜிதம் செய்து கொண்டது என்ற வகையிலேயே வரலாறு எனக்கு வசப்பட்டது, பத்து வயதில் கேட்ட தகவல்களை ஆழ் மனதில் ஊறப்போட்டு அவ்வப்போது அசை போட்டு இந்த தொடரை எழுதினேன், வருடத்தில் ஏதாவது மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் வரலாற்றில் எந்தவித மாற்றமும் கிடையாது, அடுக்கு மாடி கட்டிடத்திற்குபின்னே அமைதியாக மறைந்து நிற்கும் பிள்ளையார் கோவிலே இதற்கு அசைக்க முடியாத சாட்சி.
நல்லவர்க்கு எல்லாம் சாட்சிகள் இரண்டு
1.மனசாட்சி
அதன் படியே இந்தத் தொடரை எழுதினேன்
2.தெய்வத்தின் சாட்சி
அந்த தெய்வம் சாட்சி கூறி இந்த வரலாற்றுக்குப் புது வடிவம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் இதனை நிறைவு செய்கிறேன்...!
பேரறிஞர் அண்ணாப் பற்றி ஒரு செய்தி:
அவருக்கு நோய் முற்றியபிறகு அமெரிக்காவில் அறுவைசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் ,மறு நாள் அறுவை சிகிச்சை ஒரு நாள் சிகிச்சையை ஒத்திவைக்கலாம என்று அண்ணாகேட்கிறார் இது போன்ற விஷயங்களில் தான் உங்களுக்கு நம்பிக்கை இல்லையே பின் எப்படி என்று டாக்டர் கேட்கிறார்.
அண்ணா கூறுகிறார் இன்று புதிதாக ஒரு புத்தகம் படிக்கிறேன், நாளை படித்து முடித்து விடுவேன். அதன் பின் அறுவை சிகிச்சை வைத்து கொண்டால் படித்துமுடித்த திருப்தியுடன் "ரிசல்ட்" எதிர் மறையானாலும் ஏற்றுக் கொள்வேன்..
அது போன்றே என் நிலையும்!!
தொடர் முடியும் முன்னே நான் முடிந்து விட்டால் என்ன செய்வது என்ற கலக்கம் எனவே தொடரை சுருக்கமாக எழுதினேன்.. இன்று எனது வயது 68 கடந்த 60 ஆண்டுகளில் நான் வாழ்ந்த வாழ்க்கையில் கண்டு கேட்டு சந்தித்த சம்பவங்களையும் , சம்பந்தப்பட்ட "கேரக்டர்"கள்பற்றியும் சிறிது அவகாசத்திற்க்குப் பின் திரும்பிப் பார்க்கிறேன் இரண்டாம் பாகத்தில் எழுதுவேண்.
அதுவரை வணக்கம் கூறி விடை பெறும் உங்கள் மாங்குடி பாலா..