சிறுகதை-1
அம்மாவும் புளியம்பழமும்
புளியங்குடி.... கண்டக்டர் குரலுக்கும் விசிலுக்கும் கட்டுப்பட்டு சடன் பிரேக்கிட்டது பேருந்து. இறங்கியது நான் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு முன்னே பார்த்த நிலையிலேயே ஊர். ஒற்றைடீக் கடை. அதே காலுடைந்த பெஞ்ச். செங்கல் முட்டுக்கட்டை. கூடுதலாக ஒரு டெலிபோன் பூத்துடன் கூடிய ஜெராக்ஸ்கடை.
கூப்பிடுதொலைவில் நான் பிறந்த வளர்ந்த கீழவீதி. நாலே வீதிகள். ஊருக்கு வெளியே ஆறு. ஆற்றங்கரை படித்துறை அருகே அரசும் வேம்பும் அதன் அடியில் பிள்ளையார் சின்னஞ்சிறு சிவன் கோவில் எதிரே நடுநிலப்பள்ளி காளியம்மன் கோவில், என சினிமாவில் வரும் கிராமமாக என் ஊர். வழி எங்கும் புளியமரங்கள் வயது ஏறிய மரங்கள் இருமருங்கு மரங்களும் பின்னிப் பிணைந்து எது எந்த மரத்தின் கிளைகள் என்று அனுமானிக்க இயலாது குடை பிடிக்கும் மரங்கள் முதியவரின் துருத்திய எலும்புகள் என புடைத்து நிற்கும் முண்டு முடிச்சுகள். முதியவனை சுருங்கிய தோல் போன்று செதில் செதிலாக உதிரத் துடிக்கும் பட்டைகள். எதிரேபாதை நீள என் நினைவுகளும் பின் நோக்கி நீண்டது.
அப்பா சிறு விவசாயி. கூலி வேலைக்கும் போவார். அம்மா ஆடுமாடு தோட்டம் என உழைக்கும் கடும் உழைப்பாளி. இருவரும் ஆதர்ச தம்பதிகள். ஒரேமகன் நான் சரளமாக ஓடிய வாழ்வில் ஏற்பட்ட சறுக்கல்!
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிந்த சமயம் ஹார்ட் அட்டாக்கிறுல் அப்பா நிம்மதியாய்ப் போய்ச் சேர நிலைகுலைந்தது குடும்பம். சட்டென சுதாரித்தவள் அம்மா தான். மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற எனது அனைத்துப் படிப்பு செலவையும் ஒரு தொண்டு நிறுவனம் ஏற்க கல்லூரியில் கோல்டு மெடல். கேம்பஸ் இண்டர்வியூவில் சென்னையில் ஐந்து இலக்கத்தில் வேலை. அம்மா வழக்கம் போல் ஆடு மாடு விவசாயம் என்று பிஸி. கிராமத்தை விட்டு வர மறுத்து விட்டாள்.
நான் தங்கி இருந்த இடத்தருகை ஒரு தங்கத்தேர். பெயர் மீராதேவி. மணந்தால் மீராதேவி இல்லையேல் மரணதேவி என்று ஆனேன். பெண்வீட்டில பூரண சம்மதம். பிக்கல் பிடுங்கல் இல்லாத அரசு ஊழிய மாப்பிள்ளை கசக்கவா செய்யும். அம்மாவிடம் ஜாதகத்தையும் போட்டோவையும் தந்தேன். நல்ல பொருத்தம்னு பெண்வீட்ல சொன்னாங்க நான்முன் மொழிய, வழிமொழிந்தாள் அம்மா. மறுக்கவோ தடுக்கவோ முடியாதவைகளை வழிமொழிவதே வாழ்வியல் நெறி என்று உணர்ந்தவள்னா அம்மா. என் விருப்பத்தை என் முகத்திலும் குரலிலும் உடல் மொழியிலும் உணர்ந்த கிரேட் அம்மா!
அப்புறம் என்ன ஜாம் ஜாம் என்று கல்யாணம்! தனிக்குடித்தனம். இருந்த சொற்ப நிலத்தையும் விற்று மருமகளுக்கு நகையும் பட்டுமாக இழைத்த அம்மா, மீண்டும் கிராத்திற்கேசென்ற அம்மா. மருமகள் உண்டானதும் காப்பு பட்டுப்புடவை என்று கிராண்டாக சீர் செய்த அம்மா பேறுகாலத்திற்கு மீரா பிறந்தகம் செல்ல இலவச இணைப்பாக நானும் கூடவே சென்றேன். மெல்ல மெல்ல அவர்களின் ஆடம்பரமும், படோடாபமும் என்னையும் தொற்றிக் கொள்ள மெல்ல மெல்ல எனக்குள் மாற்றம் மூன்றாம் மாதம் வீட்டுக்கு அழைத்து வந்த அம்மா பேரனுக்கு தங்க அரைஞானும் காப்பும்போட்டு அழகு பார்த்த அம்மா மருமகளை ஒரு வேலை கூட செய்ய விடாது பொத்திப் பாதுகாத்த அம்மா. தனது கணவனே பேரனாகப் பிறந்து இருப்பதாக நம்பிய அம்மா அப்புறம் அடிக்கடி வர ஆரம்பித்தாள்.
மீராமெல்ல மெல்ல சுயருபம் காட்ட ஆரம்பித்தாள். மகன் கோகுலுக்கு மூன்றாவது பிறந்த நாள். அம்மாவும் வந்து இருந்தாள். மாமனார் வீட்டிலிருந்து அனைவரும் ஆஜர். அம்மா எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து உபசரித்தாள். ஒரு துரும்பை கூட எடுத்துப்போடாது உட்கார்ந்து சாப்பிட்டனர் அனைவரும். தவறுதலாகக் குழந்தை கீழே போட்டிருந்த பொம்மையில் கால் இடறி அம்மா சரிய நிச்சலனமாக டிவி பார்த்தபடி அமர்ந்து இருந்த மீரா. "பொம்மை உடைஞ்சுட்டு" என்று மாமியார் கூற எனக்குள் ஒரு வெறிபார்த்து வரக் கூடாதா இப்ப என்ன கொள்ளை போவுதுன்னு ஓடிவர்ற, பிறந்தநாளுக்கு வாங்கிய 300 ரூபா பொம்மை போயிட்டுது என்று குமுற...
"நான் வேணும்னா உடைச்சேன் வரவர எனக்குக் கண்ணு சரியாத்தெரியல ஆபரேஷன் பண்ணனும் பொறந்த நாள் முடிஞ்சதும் பண்ணலாம்னு நீதானே சொன்னே மறந்துட்டியா" என்றாள் அம்மா, மழையில் நனைந்து நடுங்கும் கோழிக் குஞ்சாக, ஒடுங்கிய குரலில்.
பிலுபிலுன்னு பிடித்துக் கொண்டாள் மீரா. "இதோபாருங்க உங்ககிட்டக் காசு கொட்டிக் கிடந்தால் ஆப்ரேஷன் பண்ணுங்க ஆனா உங்கம்மாவை இரண்டுமாசம் வச்சு பார்க்க என்னால் முடியாது நான் இப்பவே எங்க அம்மாவீட்டுக்குக் கிளம்பிடுவேன்னு" உறும, "இப்ப ஆப்ரேஷன் பண்ணிக்கிட்டு என்ன கலெக்டருக்குப் படிக்கப் போறியா? வயசானா அறிவு கிடையாது. கிராமத்துல விழுந்து கிடக்காம இங்க வந்து என் மானத்தை வாங்குற" நான் வார்த்தையால் வறுக்க மெளனமாக அம்மாவெளியேறி இரண்டு வருஷம் ஆச்சு. நானும் போய்ப் பார்க்கல.
அம்மாவின் முகம் அடிமனதில் அவ்வப்போது எட்டிப்பார்த்தாலும் அதை அழித்து எழுதும் இளம் மனைவியின் அருகாமையும் மகனின்மழலையும், சென்றவாரம் பாத்ரூமில் வழுக்கி விழுந்த மீராவுக்கு எலும்புமுறிவு. இரண்டுமாதம் பெட்ரெஸ்ட் இருக்க வேண்டும் என்று டாக்டர் கூறிவிட்டார். ஒரு வாரம் மருத்துவமனைவாசம் நேற்று தான் டிஸ்சார்ச் மாமியாரும் மைத்துனன் மனைவியும் "அம்மாவை அழைச்சுகிட்டு வந்து பார்த்துக்குங்க" என்று ஒதுங்க அம்மாவை அழைக்க வெட்கமில்லாமல் செல்லும் நான். இதோ வீடுவந்து விட்டது.
தூக்கு வாளியுடன் வருவோரும் போவோரும். என்ன நடக்குது விரைகிறேன். வாசல் திண்ணையில் சத்தமாக எரியும் பம்ப்ஸ்டவ் பக்கத்தில் எவர்சில்வர் அருகில் மாவு வாளியில் சட்னி மலையில் அம்பாரமாகக் குவிந்த புளியம்பழம் "வாங்கதம்பி" இட்லியை ஹாட்பேக்கில் அடுக்கியபடியே அழைப்பது சரவணன் அம்மா அல்ல...
"உட்காருங்க தம்பி அம்மா வெளியில் போயிருக்காங்க. சாப்பிடுங்க தம்பி" கைகழுவி அமர்கிறேன் மல்லிகைப்பூவாய் இட்டிலி மணக்க மணக்க சட்டினி, கூடவே பொடி கெட்டித்தயிர், வாஞ்சையுடன் பரிமாறுகிறார் இடையே வியாபாரத்தையும் கவனித்தபடி கூறுகிறார். "மருமளுக்கு என்னைப் புடிக்கல அதனால தோட்டத்து வீட்டுல இட்லிக்கடை போட்டுகிட்டு இருந்தேன்.
அதுவும் மருமகளுக்குப் பொறுக்கல. அந்த இடத்தையும் விற்று விட்டாள். வாங்கியவர் காலி பண்ணச் சொல்லும் போதுதான் நம்ம அம்மாவைக் கண்சிகிச்சை முகாம்ல சந்திச்சேன். அம்மாவுக்கு உடனே ஆபரேஷன் செய்யனும்னு சொல்லிட்டாங்க. எனக்கு ஆறுமாசம் பொறுத்து செய்யலாம்னு சொன்னாங்க. அம்மாவுக்கு உதவியா நான், அப்புறம் எனக்கு உதவியா அம்மா.
அப்புறம் எங்களைப் போல வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டவர் போல் எல்லாரையும் அம்மாதான் ஒண்ணு சேர்த்தாங்க. பஞ்சாயத்து போர்டை சேர்ந்த புளியமரம் தென்னைமரம் குத்தகை. புளி, தேங்காய் எண்ணெய், கீற்று வியாபாரம் அப்புறம் அவுங்க அவுங்களுக்கு முடிஞ்ச வரைக்கும் முடிஞ்சபோது செய்யலாம் ஓ.ஏ.பி பணம் வருது. நூறு நாள் வேலைக்கும் போறோம் எல்லாப் பணத்தையும் சேர்த்து கறவை மாடு, ஆடு வாங்கி இருக்கோம். தங்கறதுக்கு பஞ்சாயத்து இடத்தில் கட்டடம் கட்டி இருக்கோம். காலையில் இட்டலி டீ, மதியம் ஒருகுழம்பு கூட்டு. இரவு மதியசாதமே. சந்தோசமாகூட்டுக் குடும்பமா இருக்கோம். வீட்லயாரும் பேசக் கூட ஆளில்லாம தவிச்சவங்களுக்கு இப்ப பேச்சு துணைக்கு ஆள், வேளாவேளைக்கு சாப்பாடு. கதியத்த எங்களுக்கு நல்ல கதி ஏற்படுத்தியது அம்மாதான்.
கலக்டருகூட இதபாத்து ஆச்சரியப்பட்டாங்க. தன்னால இயன்ற உதவி எல்லாம் செய்யுறேன்னு சொல்லி இருக்காங்க. அக்கம் பக்கம் இருந்து வந்து பாத்துட்டுப் போறாங்க அவுங்க ஊர்லேயும் இதைப்போல முதியோர் சங்கம் ஆரம்பிக்க அம்மாகிட்ட யோசனை கேட்க வர்றாங்க" மூச்சு விடாமல் சொல்லி முடித்தார். திகைப்புடன் சாப்பிட்டு முடித்தேன்.
இதோ கேட்டில் நுழைவது அம்ம்ம்மா...
சிவப்புப் புடவை, வெள்ளை ரவிக்கை காதில் சிவப்புக்கல் தோடு கழுத்தில் எளிய பவழமாலை "வாப்பா"... சூரியனின் கதிர்கள் மூக்குக்கண்ணாடியில் பட்டுத் தெறிக்க ஒளிப்பிழம்பாய் ஜொலிக்கும் அம்மாவின் முகம். அந்தமுகத்தில் தெரிவது வைராக்கியமா? வானப் பிரஸ்தமா? தடுமாறுகிறேன். திகைத்த என் அருகே அமர்கிறாள் கண்ணாடியைக் கழற்றி முகத்தை ஒற்றிய படியே "மீரா பேரப்புள்ள எல்லாரும் சௌக்கியமா?
அம்மாவின் குரலில் பழைய உயிர்ப்பு இல்லையோ? அல்லது எனக்குதான் நினைப்பு பிழைப்பை கெடுக்கிறதோ? "என்னப்பா என்னவோ வாட்டமா இருக்கியே என்ன விஷயம்"
"ஒண்ணுமில்ல பஸ்சுலவந்த அசதி".
"அப்போசித்த நாழிபடுத்துத்தூங்கு" கால்கள் பின்னக் கயிற்றுக்கட்டிலில் சரிகிறேன்.
கயிறு உறுத்தாது நான்காக மடித்த விரித்தப் பழைய நூல் புடவை அம்மாவின் வாசத்தைப் பறை சாற்றியபடியே, அம்மாவைப் போல தளர்ந்து துவண்ட தலையணை கண்கள் கசிய அப்படியே உறங்கிப் போனேன். கம்மென்ற மொச்சைக் கொட்டைக் குழம்பின் மணம் நாசியைத் துளைக்கத் திடுக்கிட்டுக் கண்விழித்தேன் மணி என்று "குளிக்கிறியாப்பா..."
"இல்ல காலையில் குளிச்சுட்டுதான் புறப்பட்டேன்".
"அப்போசாப்பிடு. உனக்குப் பிடித்த முருங்கைக் கீரை பொரியலும், மொச்சைக் கொட்டைகாரக் குழம்பும் கூடவே சுட்ட அப்பளமும்". ரேஷன் அரிசி சாதத்துக்கும் இத்தனை சுவையா? மணமா? வருடக் கணக்கில் செத்துப் போன நாக்கு வெட்கமில்லாமல் சப்பு கொட்டி சுவைக்க புரை ஏறுகிறது. மெல்லத்தலையில் தட்டிய அம்மா "மீரா நினைக்கறாப் போல இருக்கு" நிராயாசையுடன் சிரிக்கிறாள். குழம்பை மீண்டும் ஊற்றி இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை மேலே ஊற்றுகிறாள் காணாததைக் கண்டதை போல் நான் அள்ளி விழுங்குவதை கண்கள் பனிக்கப்பார்க்கிறாள். அம்மாவின் கைமணம் யாருக்கும் வராது. சுவைத்து சாப்பிடுகிறேன். கை கழுவுகிறேன்..
"அம்மா நான் போயிட்டுவர்றேன் அடுத்தவாரம் பேரனை அழைச்சுகிட்டு வர்றேன்" கேட்டவளின் கண்களில் மின்னலாய் ஒரு ஒளி மௌனிக்கிறாள்.
அம்மாவின் நியாயமான ஆசைகளைப் பயப்படாமல் நிறைவேற்றனும். பொறுப்பைத்தட்டிக் கழிக்காமல் மீராவை நான் கவனிச்சுப்பேன். அம்மாவுக்குப் பிறகும் இந்த தொண்டை நானே தொடர்வேன். அதுதான் நானே அம்மாவுக்குப் செய்யும் பிராயச்சித்தம். எல்லா அம்மாக்களும் வழியனுப்ப புறப்படுகிறேன். அம்மாவின் நினைவாக ஒரு புளியம்பழத்தைத் கைப்பையில் சுமந்தபடி.
சிறுகதை-2
கனவுகளே
கரையோரம் ஓங்கி உயர்ந்து நிற்கும் அரசமரம். பக்கத்தில் வேப்பமரம். அடியில் எண்ணெய்ப்பசை காணாத பிள்ளையார். அவர் காலடியில் காய்ந்து சருகான செம்பருத்திப் பூக்கள், முதிர் கன்னிகள் தங்களது கல்யாணக் கனவு நிறைவேறப் பிள்ளையாருக்குத் தந்த கையூட்டு, அவர்களைப் போலவே வாடி வதங்கி பொலிவிழந்து கிடந்தது.
பரந்து விரிந்த மணற்பரப்பு. ஒரு ஓரமாக ஒடுங்கி ஓடும் தண்ணீர். அதில் குதித்துக் கும்மாளமிடும் அம்மணச் சிறுவர்கள். ஒரு காலத்தில் நானும் அப்படிக்கும்மாளமிட்டவன் தானே? கடவுள் கஞ்சத்தனம் மிகுந்தவன். கவலை அறியாத இளம் பருவத்தைக் கொஞ்சமாகவும், எதிர்காலக் கவலையில் உழலும் பருவத்தை அதிகமாகவும் வைத்தக் கொடுங்கோலன்.
பொட்டென்று தலையில் விழுந்து தெறித்த அரசம் பழம் என் கனவுகளைக் கலைத்தது. எதிர்க் கரையில் அம்பாரமாகக் குவிந்து கிடக்கும் ஈரமாக ஆற்றுமணல். எவ்வளவு உயரம்! திடீரென அந்த மணற்குன்றுகள் சரியத் தொடங்கின அவன் கனவைப் போல. இப்படிச் சரியும் மணல் சிமெண்ட்டுடன் கலந்து விட்டால் எவ்வளவு உறுதிப்படுகிறது. எப்படி திடமானக் கட்டிடமாக எழுந்து நிற்கிறது. திடமாக எழுந்து நிற்கத் திடமான ஊன்று கோல் தேவை போலும். அந்த ஆண்டவன் தான் நமக்கு ஊன்றுகோலாய் அமையும் துணை என்பாள் அம்மா,
டொடடொட.... டிராக்டரின் உறுமல். டிரைவர் சீட்டில் பால்ய நண்பன் குமார் பத்தாவதுடன் படிப்பை முடித்து டிரைவராக வேலை செய்கிறான். பிழைக்கத் தெரிந்தவன்.
"ஏய்பாலு! என்ன ஆத்தங்கரையில் அந்தி நேரத்தில் தனியாக ஏதேனும் காதல் விவகாரமா"?
குறும்பாய் கேட்டபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தான். "என்ன கிண்டலா?" உடைந்தேன்.
"ப்ளீஸ் கோபிச்சுக்காதேடா, உன்னை ரிலாக்ஸ் பண்ணத்தான் கேட்டேன். கண்ணைத் திறந்து கொண்டு கனவு கண்டு கொண்டு இருக்கும் உன்னை உற்சாகப்படுத்தத் தான் அப்படிக் கேட்டேன். மன்னிச்சுக்கோடா!," ஆதரவாகக் கரங்களைப் பற்றினான்.
"கனவுகாணவில்லைடா, ஏதாவது வேலைக்கு உடனே போகணும். எத்தனை நாட்கள் தான் அம்மாவின் உழைப்பில் உட்கார்ந்து சாப்பிடுவது? அப்பா உட்டுட்டு ஓடிப்போன நாளில் இருந்து அம்மா படும் கஷ்டம் கொஞ்சமா? நஞ்சமா?
நாலு ஆட்டையும் இரண்டு எருமையையும் வைத்துக் கொண்டு இந்த அளவுக்கு என்னை வளர்த்து ஆளாக்கி என் ஆசைப்படி டிப்ளமாவில் படிக்க வைச்சு படிப்பு முடிஞ்ச அஞ்சு வருஷம் ஆச்சு. வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது. அப்பப்ப ஒயரிங் வேலைக்குப் போறேன். அது அப்ளிகேஷனுக்கேச் சரியாய்ப் போய்விடுகிறது.
மாடுகளும் கிழடுதட்டி மரப்படி ஆகிவிட்டது. அம்மாவும் கிழடுதட்டி மரத்துப் போய் விட்டாள். இருந்தாலும் இருவருக்கும் வயிறுமரத்துப் போகமாட்டேங்குதே". என்றேன் தொண்டை அடைக்க.
"சீச்சீ கவலைப்படாதே நல்லதே நடக்கும்.
ஐந்து வருஷத்துக்கு முந்தி பாரதிராஜா படம் பார்த்தோமே; அப்போ என்ன சொன்ன மறந்துட்டியா? அதுல நாயகனும் நாயகியும்.
தென் மேற்குப் பருவக்காற்று
தேனிப்பக்கம் சிலுசிலுன்னு வீசுது
என்று பாடியபடியே ஹீரோ ஹோண்டாவில் போவது போல போகனும் அம்மாவைப் பின்னால் வச்சுகிட்டு போகனும்னு, அந்தக் கனவை நனவாக்க வேண்டாமா? தைரியமா இரு. நேரம் வரும்".
"இப்பத்தான் புத்தி வரும் நேரம் வந்திருக்கு. ஹோண்டா வேண்டாம். ஏன் சைக்கிள் கூட வேண்டாம். ஆனா வயித்துக்கு சோறு வேணும்டா. இந்த மண் ஏத்துறவேல கிடைச்சாகக் கூட போதும். என்னையும் சேத்து விடு டா", என்று கெஞ்சிய என்னைக் கண்கலங்க வெறித்தான் குமார்.
ஏதோ முடிவுக்கு வந்தவனாகச் "சரிடா நாளைக்குக் காலைல எட்டுமணிக்கு இங்க வந்துடு. ஒருலோடு மண் ஏற்றி விட்டால் முன்னூறு ரூபாய் சம்பளம். எல்லோரும் சமமாப் பிரிச்சுக்கனும். உன்னையும் சேத்து விடுறேன். நம்ம பள்ளிக் கூடத்திக்குத்தான் மண் அடிக்கிறேன். புதுசாயாரோகட்டிடம் கட்டித் தரப் போறாங்களாம். இன்னைக்கு அதுக்கு அடிக்கல் நாட்டுறாங்க. விழா ஏற்பாடு ஜரூரா நடந்துகிட்டு இருக்கு. அப்ப நான் வரட்டுமா இன்னும் ரெண்டு ட்ரிப் அடிக்கணும் நாளைக்கு சந்திப்போம்".
விடை கொடுத்து வீட்டுக்குத் திரும்பினேன். வரும் வழியில் லைப்ரரி, ஆசைவெட்கம் அறியாது என்பது சரிதான். பத்திரிகையில் வாண்டட் காலம் பார்ப்போம் இன்று மட்டும்.
முதல் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி பற்றிய செய்திகள் போட்டோவுடன் கனவுகாணுங்கள். முயற்சி செய்யுங்கள். தொழில் கல்வி பயிலுங்கள். தொழில் தொடங்குங்கள். 2020ல் இந்தியாவை வல்லரசு ஆக்குங்கள். என்ற தலைப்புகளுடன். வெறுப்புடன் பத்திரிகையை வீசி எறிந்து விட்டு வீட்டை நோக்கி நடந்தேன். கண்ட கனவு போதாதா, இன்னும், கனவு முணுமுணுத்தபடியே நடக்க ஆரம்பித்தேன்.
இருட்ட ஆரம்பித்துவிட்டது. வழியிலேயே பள்ளிக்கூடம். ஜேஜேன்னு கூட்டம். மின் விளக்கில் ஒளிர்ந்தது பள்ளிக்கூடம். குமார் கூறியது நினைக்கு வந்தது.
"ஒளிமயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது"
டி.எம். சௌந்தரராஜன் கம்பீரமாக கனவு கண்டு கொண்டிருந்தார் இசைத்தட்டில்.
விர்ரென்று ஓசையின்றி தவழ்ந்து வந்தது அம்பாசிடர். சீருடையில் டிரைவர் பவ்யமாகக் காரைத்திறந்து விட மிடுக்காக் கதர் உடையில் இறங்கி வருபவர் தான் அந்தத் தொழில் அதிபர் போலும். பருத்தி உடையிலும் பணக்காரமிடுக்கு நன்றாகவே தெரிந்தது. பணக்காரன் வீட்டு பிள்ளையும், பால் மாட்டின் கன்றும் பார்த்தாலே தெரியும் என்று ஓயாமல் கூறும் அம்மாவின் பொன்மொழி நினைவுக்கு வந்தது.
டி.எம்.எஸ் இசைத்தட்டில் தொடர்ந்தார்
"இந்த உலகம் பாடும் பாடல் ஓசை' என்காதில் விழவில்லை. பவர்கட் ஒரே இருள்.
தொழிலதிபர் ஏற்றிவைத்த குத்து விளக்கின் ஒளியில் தலைமையாசிரியரும் அவர் பரிவாரங்களும் தவிப்புடன் கைகளைப் பிசைவது நன்றாகவே தெரிந்தது. எதிரே இரண்டு வெளிச்சப் புள்ளிகள் குமாரின் டிராக்டர் தான். கை அசைத்து அவனை நிறுத்தி டிராக்டர் பேட்டரியில் இணைப்புக் கொடுத்து மேடைக்கு ஒளியூட்டினேன். டி.எம்.எஸ் தொடர்ந்தார் இசைத்தட்டில்
"நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார்
வாழ்க வாழ்க என்று பூ மழை தூவுகிறார்"
வான் மழைக்கே இங்க வழியில்ல. இதுலபூ மழை, யார்காதுல பூ என்று முணகியபடியே நின்றேன். மீண்டும் கரண்ட்வர டிராக்டரை விடுவித்து வீடுதிரும்பி படிக்கையில் பொத்தென்று விழந்தேன்.
சாப்பிட அழைத்த அம்மாவிடம் பசியில்லை என்று கூறி விட்டத்தையே வெறித்தேன். நல்ல வேளை சொந்த வீடு. இல்லையேல் வீட்டுவாடகையே கழுத்தை இறுக்கும். எப்போது உறக்கம் என்னைத் தழுவியதோ தெரியவில்லை.
சூரிய ஒளி சுள்ளென்று அடிக்க வாரிசுருட்டி எழுந்து குளித்து அம்மா தந்த பழய சோற்றை உண்டு வேலைக்குக் கிளம்பினேன். மண் சுமக்கத்தான்.
"அம்மா கொஞ்சம் வெளியில போயிட்டு வர்றேன்". படியிறங்கினேன்.
ஜிவ்வென்று புத்தம்புதிய ஹோண்டோ வாசலை வழிமறிக்க அதில் வந்த இளைஞன் "இங்க பாலுங்கறது..."இழுத்தான்.
"நாந்தான்".
"ஐயா இத உங்ககிட்ட கொடுத்து வரச்சொன்னார்" கடிதத்தை நீட்டினான்.
"உட்காருங்க", காலு டைந்து கட்டுப்போட்ட ஸ்டூலை எடுத்துப் போட
"பரவாயில்லை நான் வெயிட்பண்றேன்" என்று ஸ்டைலாக ஹோண்டாவில் சாய்ந்து தலைவார ஆரம்பித்தான்.
"யார் இந்த ஐயா"
பள்ளிக் கூடத்தில் கண்ட வி.ஐ.பியின் முகவரி. அவசரமாகக் கடிதத்தை மேய்ந்தேன். அழகாகடைப் அடிக்கப்பட்டக்கடிதம். "டியர் யங்மேன்!
உங்கள் திறனை நேற்றுப் பள்ளி விழாவில் கண்டேன். உங்களைப் பற்றிய முழு விபரமும் தலைமை ஆசிரியர் மூலம் அறிந்தேன். உங்களுடைய சமயோசிதமும். சுறுசுறுப்பும் - தொழில் முனைவும் - திறனும் எனது நிறுவனத்திற்குத் தேவை. இணைவீர்களா?
சம்பளம் ஆறு ஆயிரம் மற்றும் இதரபடிகள். தங்குவதற்கு சகல வசதிகளும் கூடிய குவாட்டர்ஸ். அலுவலகம் வர ஹீரோ ஹோண்டா வசதி. விருப்பம் இருப்பின் உடன் வரவும்" கீழே முத்து முத்தாக நிர்வாகியின் கையொப்பம்.
கலாம் உனக்கு ஒரு சலாம் என்று உள்ளுக்குள் கூவியபடியே அம்மாவிடம் ஓடி விபரம் கூறினேன். வேறு உடைக்கு மாறி அந்த இளைஞனின் ஹீரோ ஹோண்டாவில் தொற்றினேன். போகும் வழியில் குமாரிடம் கூற வேண்டும், வேலை கிடைத்த விபரத்தை,
ஹோண்டா விரைய எனது கனவுகளும் விரைந்தது. அந்த ஆண்டு ஹோண்டாவின் பின்னே மனைவி, அதற்கு அடுத்த ஆண்டு அவள் மடியில் மழலை... என கனவுகள் தொடர்ந்தது. என்ன! நீங்களும் கனவு ரெடிதானே?
சிறுகதை-3
கட்டில்!
பல் துலக்கி முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்து குங்குமம் வைத்த கமலம் அதிர்ந்தாள். ஒரு காதில் கம்மலைக் காணோம். அரைப்பவுனில் புஷ்பராக கம்மல். ராசியான கம்மல் ஒற்றைக் கம்மலின் விலையே பத்தாயிரம் இருக்கும். இரவு படுக்கும் போது கூட நன்கு திருகிவிட்டுத்தான் படுத்தாள். பாத்ரூம் கூட போகவில்லை. ஹாலில் சோபாவில்தான் படுத்து இருந்தாள். அப்படியானால் ஹாலில்தான் விழுந்து இருக்க வேண்டும். ஹாலுக்கு விரைந்தாள். அதற்குள் வேலைக்கார பெண் ராதா ஹாலைப் பெருக்கித் துடைத்துக் கொல்லைப்புறத்தில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.
சோபாவில் கம்மல் இல்லை. மகனையும், மருமகளையும் கேட்டாள். நன்றாக தேடிப்பாருங்கள் என்று அவர்களும் பதட்டத்துடன் வீட்டில் ஒரு இடம் கூட விடாமல் அங்குலம், அங்குலமாக தேடிவிட்டனர். எங்கும் கம்மல் இல்லை. 'இந்த வேலைக்கார குட்டிதான் எடுத்து இருக்கணும். நேற்று அவ அம்மாவுக்கு உடம்புக்கு முடியல.ஏதோ ஆபரேஷன் பண்ணனும்னு அழுதுகிட்டு இருந்தா' என்றவளை இடைமறித் தான் கமலத்தின் மகன்.
'அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதம்மா. இங்கதான் விழுந்திருக்கும். நல்லா தேடிப் பாருங்க' என்றான்.
'உங்க ஆபிஸ் ஸ்வீப்பரோட பொண்ணு. நல்லா படிப்பா. இப்ப லீவுல இருக்கிறா. நம்மோட சம்பளம் அவ படிப்பு செலவுக்கு ஆகும்னு நீதான் வேலைல சேர்த்த. அவ, அவ வேலையை காட்டிட்டா. இப்ப நான் என் வேலையை காட்டறேன், என்று ஆவேசத்துடன் விளக்கு மாற்றை எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் போனாள் கமலம்.
மகனும், மருமகளும் தடுக்க தடுக்க ஆவேசத்துடன் கொல்லைப்புறம் சென்றவள் அங்கு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை ஓங்கி உதைத்தாள்.
'எங்கடி கம்மல்?'
'எந்தக் கம்மல்மா?'
"நீ இப்படியெல்லாம் கேட்டா சரிபட மாட்டா. இதோ இப்பவே போலீசுக்கு போன் பண்றேன்' என்றபடி முந்தானையை உதறி திரும்ப 'சிலீங்' என்ற சப்தத்துடன் கம்மல் முந்தானை மடிப்பிலிருந்து கீழே விழுந்தது.
கூனிக் குறுகினாள் கமலம்.
அதுவரை அழுதுகொண்டிருந்த அந்த சிறுமி, நிமிர்ந்து எழுந்தாள்.
'இனிமே வேலைக்கு வரமாட்டேம்மா' என்று நிமிர்வுடன் சொல்லிவிட்டு யாருடைய அழைப்பையும் பொருட்படுத்தாமல் வெளியேறினாள்.
சிறுகதை-4
மரவல்லி மரம்
வசுமதி ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற கதை
'இன்னும் ஒரு ஆ...வாங்கிக்க கண்ணு.'
'வேண்டாம்' என்று இடமும் வலமுமாகத் தலையை பலமாக ஆட்டினாள் குழந்தை. 'இப்ப காக்கா வந்து ஆ... வாங்கிக்குமாம், என்று சரசு கண்ணை மூடிக்கொள்ளப் பூஞ்சிட்டாய் வாய் திறக்கும் குழந்தை. உதட்டோரம் வழியும் சாதத்தை சரசுவின் தோளில் உரசித் துடைக்கும் குழந்தை. மேனி சிலிர்க்கிறது. மதியம் சாதத்தை மோர் விட்டுக் குழையப் பிசைந்து இரண்டு சொட்டு வற்றல் குழம்பு கலந்த கலவை. அப்படி இப்படி போக்குக் காட்டி சாதம் ஊட்டிவிட்டாள்.
கோடையின் புழுக்கம் உள்ளே உட்கார முடியவில்லை. மங்களூர் ஓட்டின் தாக்கம். மதியம் தகித்த வெய்யிலை உள் வாங்கி இரவில் மெல்லமெல்ல வெளியிடும் வெளிப்பாடு. ஓர் இலை கூட அசையவில்லை.
பனியில் நனைந்த ரோஜாவாய் குழந்தையின் முகத்தில் வியர்வைத் துளிகள். முந்தானையால் மெல்ல ஒற்றி எடுக்கிறாள். மடியிலேயே குழந்தை உறங்கி விட்டாள். நாளையைப் பற்றிய கவலை இல்லாத நிம்மதியான உறக்கம். சாதம் ஊட்டிய கை காய்ந்துவிட்டது. உள்ளே போய்விட்டால் குழந்தை புழுக்கம் தாங்கமாட்டாள். அவசியம் என் செல்லக்குட்டிக்கு ஃபேன் வாங்கணும். எண்ணியபடியே குழந்தையைக் கீழே கிடத்தினாள்.
மரத்துப் போன கால்களை மாற்றிப் போட்டு அமர்ந்து வானத்தையே வெறித்தாள். கோடைகால வானம் நிர்மலமாக, துடைத்து விட்ட மொசைக் தரையாக... இடையிடையே வாரிச் சுருட்டிக்கொண்டு விரையும் வெண்மேகங்கள், எந்தக் கோட்டையைப் பிடிக்க இந்த ஓட்டம். இலக்கில்லாமல் விரையும் மேகங்கள். எத்தனை எத்தனை உருவங்கள். யானை, மாடு, தேர், மலை பற்பல உருவெடுக்கும் மேகங்கள். பின்னர் பழைய உருவங்கள் சிதைந்து புதிய வடிவெடுக்கும் மேகங்கள். ஒரு துணுக்கில் இருந்து பிரிந்து இன்னொரு துணுக்கில் இணையும் அதிசயம். அவள் வாழ்வைப் போல.
குப்பென்று ஒரு வாசம். மல்லிகையா? இல்லை முல்லையா? இல்லை இரண்டும் கலந்த கலவையா? அனுமானிக்க முடியாத அற்புத வாசம். மெல்லமெல்லத் தவழ்ந்து வந்து நெஞ்சை நிறைக்கும் வாசம். எங்கிருந்து இந்த மணம்? கண்கள் அலை பாய்ந்தது, தெருவிளக்கின் வெளிச்சத்தில். ஆங்... கண்டுபிடிச்சுட்டேன்.. மனதில் உற்சாகத்துள்ளல்.
முதல் முதலாய்ப்பூத்துக் குலுங்கும் மரமல்லிகை. வெள்ளை நிற சீரியல் பல்புகளைச் செண்டாய்ச் கட்டியது போல கொத்தாய் தொங்கும் பூங்கொத்து. கையகலக் கொத்து. சற்றே நெகிழ்ந்த மொட்டில் இருந்து கசியும் மணம். அவள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே மெல்ல மெல்ல இதழ்விரிந்துச் சிரிக்கும் அதிசயம். கண்ணைச் சுருக்கி கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கிறாள் சரசு. கிளையெங்கும் மொட்டுகள் நன்கு படர்ந்த கிளையில் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடும் மொட்டுகள். இதை இத்தனை நாட்கள் கவனிக்கவே இல்லையே. அதிசயிக்கிறாள்.
இந்த மரமல்லிகைக்கு ஒரு தனிச் சிறப்பு. விதைபோட வேண்டாம். கிளை ஊன்ற வேண்டாம். வேரில் தலை நீட்டும் குருத்துகள் தானாகவே தளதளவென வளர்ந்து பூத்துக் குலுங்கும் அதிசயம். இந்தமரம் மூணாவது வீட்டு மரத்தின் வேரில் முளைத்த மரம். அடுத்த வீட்டில் புகுந்து என் வீட்டில் தலை நீட்டி இரண்டு வருடம் ஆகி இருக்குமா? கண்களை மூடித் தூணில் சரிந்தாள். கை அனிச்சையாய் மடியில் இருக்கும் லட்சுமியைத் தட்டிக்கொடுக்க மனது பத்து ஆண்டுகளுக்கு முன்னே பாய்ந்து ஓடி நின்றது.
அப்பா பிரபல கொத்தனார். சின்ன வயதிலேயே அம்மா போய்ச் சேர்த்துவிட அப்பா மறுமணம் செய்து கொள்ளவில்லை. மகளுக்காகவே வாழ்ந்த அப்பா. சரசு ஒரே மகள். பேரழகி இல்லைவிட்டாலும் அவலட்சணமும் இல்லை. மாநிறம். மாறாத புன்னகை. அளவான உடல்வாகு. வீட்டுக் காரியங்களைச் சுத்தமாகச் செய்யும் சுறுசுறுப்பு. தாயில்லாப் பெண்ணை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று ஏங்கி நின்ற அப்பாவுக்கு, உடன் வேலை செய்யும் சரவணனை மிகவும் பிடித்துப்போய் விட்டது. சரசுவுக்கும் தான். வாட்டசாட்டமான உருவம். சிரிக்கச் சிரிக்கப் பேசும் சாதுர்யம். சரசுவுக்கு உலகே தன் காலடியில் என்று நெஞ்சு கொள்ளாத பெருமை. சொல்லிக் கொள்வது போல் உறவு ஏதும் இல்லை என்றதால் சரவணன் வீட்டோடு மாப்பிள்ளை ஆனான்.
அப்பாவுக்கு கழுத்தில் தலைநிற்காத பெருமை, தன்னைப் போலவே மருமகனும் கொத்தனார், அத்தோ வீட்டோடு மாப்பிள்ளை, எனவே மகள் பிரிவு இல்லை என்று போவோர் வருவோரிடம் பீற்றிக்கொள்வார். அத்துடன் மகள் மூன்ரு மாத கர்ப்பம் என்றதும் ஆகாசத்துக்கும் பூமிக்குமாகத் துள்ளக் குதித்த அப்பா. அந்தப் பூரிப்புடனே படுத்தவர், எழுந்திருக்காமல் தூக்கத்திலேயே மரணித்த அப்பா. ஒருவாறாக ஜீரணித்துத் தெளிந்தவளுக்குப் பேரிடி. சரவணன் கூட வேலை செய்யும் பெண்ணுடன் சகவாசம் வைத்திருப்பது தெரிந்தது. கேட்டவளுக்கு அடி உதை. அத்தோடு வீட்டைத் தன் பேரில் எழுதிக்கொடு பேங்கில் லோன்போட்டு மாடி வீடு கட்டப்போகிறேன், என்று அவளை நெருக்க ஆரம்பித்தான். அதற்கும் சரி என்று தலை ஆட்டிவைத்தாள்.
பின்னர் தான் உண்மை தெரிந்தது. இடத்தை யாருக்கோ விலைபேசி அட்வான்ஸ் வாங்கி சின்ன வீட்டுக்குச் செலவு செய்து இருப்பது. கையெழுத்து போட மறுத்தவளை அடித்து ஓங்கி வயிற்றில் உதைந்து தாலியையும் பறித்துச் சென்றவன் தான். அந்த உதையில் கரு கலைய உறைந்து உடைந்து நின்றவளுக்கு ஒரே ஆதரவு, புதிதாக எதிர் வீட்டுக்குக் குடிவந்த பேங்க்காரங்க வீட்டு விஜயா அம்மா.
சிண்டும் சிமிழுமாக மூன்று குழந்தைகள். ஆபீஸ் செல்லும் கணவன். ஙை,ஙை என்று அழும் கைக்குழந்தையுடன் திண்டாடிய விஜயாம்மா. கருவும் கலைந்து கணவனும் பிரிந்த சரசு; இருவரையும் இணைத்த இறைவனின் கருணை. சரசுவுக்குப் புதியதோர் உலகம் தெரிய ஆரம்பித்தது. அவர் வீட்டில் ஒருத்தி ஆனாள். புதியவர்கள் வந்தால் உறவா? என்று கேட்கும்படி ஒன்றிவிட்டாள். குழந்தைகளைக் கவனித்து, துணி துவைத்து, பாத்திரம் தேய்த்து கடைக்குப் போய் வந்து அனைத்தும் சரசு தான். மூன்று வேளை சாப்பாடு, பண்டிகைக்குப் புதுப்புடவை, அவ்வப்போது பழம் புடவை வேறு என்ன வேண்டும். எனவே சம்பளம் இருநூறு ரூபாயை வாங்குவதே இல்லை.
ஒண்டிக்கட்டை. ஒண்டிக்கொள்ளச் சொந்தக்குடிசை. எனவே செலவுக்கு என்ன வேலை. அப்படியே அவள் பெயரில் வங்கியில் போட்டு வைத்தார்கள். பத்தாண்டுகள் ஓடிவிட்டன.
குழந்தைகள் பெரியவர்கள் ஆகி டவுனுக்குப் போய் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வேலைகள் வெகுவாகக் குறைந்தன. விஜயாம்மாவுக்குப் பேச்சுத்துணையாக சினேகிதியாக நின்றவளின் மனதில் எதுவோ நிரடல். ஒரு வெறுமை. ஐந்தாம் வகுப்பு படித்த அவளுக்கு அம்மா வீட்டில் வாங்கும் புத்தகம் எல்லாம் அத்துபடி. படித்ததை அம்மாவுடன் அசைபோடுவது இருவருக்குமே பேரானந்தம்.
இதற்குள் சரவணன் பழையவளை விட்டு விலகி புதியவள் ஒருத்தியுடன் வாழ்வதாகக் கேள்வி. கணவனை இழந்த கைக்குழந்தைக்காரியாம். விஜயாம்மாதான் சொன்னார்.
'பக்கத்து டவுனல தான் உன் புருஷன் குடித்தனம் நடத்துறானாம். ஐயா நேத்துப் பார்த்தாராம். போய் என்னன்னு கேளுடி. பள்ளிக் கூடம் புதுசாக் கட்டுறாங்கயில்ல, அங்கதான் வேலை செய்யுறானாம். இப்படி எத்தனை நாளைக்குத் தனி மரமாவே நிப்ப. உனக்குன்னு ஒரு குழந்தை குடும்பம்னு பிடிப்பு வேணாமா?'
கோபமாக வெடித்தார் விஜயாம்மா.
அவசரமாக இடைமறித்தாள் சரசு.
'வேணாம்மா. முன்ன என்ன பாவம் செஞ்சேனோ இந்த மனுஷன் வாச்சு இருக்கார். கொடுமைக்கார புருஷனா ஆனாலும் ஒரு விதவைக்கு வாழ்வு தந்து இருக்கார். அதைக் கெடுக்க விரும்பலைம்மா. அன்னிக்குப் படிச்சோமே பாரதிதாசன் கவிதைகள். வேரில் பழுத்த பலா ஒண்ணு கோரிக்கையற்றுக் கிடக்குதுன்னு.அந்தப் பலாவைக் கோரி பெற்றுக்கிட்டார் அவர். அதை தட்டிப்பறித்து நான் வாழவிரும்பல.'
படபடவென்று கைதட்டல். பேங்க் ஐயாதான்.
'சூப்பர்மா அசத்திட்ட, இருந்தாலும் உனக்கு கடைசி காலத்துல வயசான காலத்துல ஆதரவு? பொருளாதாரம் இல்லைன்னா ரொம்ப கஷ்டம். அதனால் பேங்க்ல இருக்கும் உன் சம்பளம் பணத்துல ஒரு கறவைமாடு வாங்கு. நாங்களே பாலை வாங்கிக்கிறோம். அக்கம் பக்கத்துல வாடிக்கை புடிச்சுத் தாரேன். அதோட எங்க பேங்க இருக்கும் சைக்கிள் ஷெட்டை ஓட்டுக்கட்டடமாக மாத்தப் போறாங்க. பழைய ஓட்டுக் கூரையை காண்ட்ராக்ட் காரரிடம் சொல்லி குறைஞ்ச விலையில் உனக்கு வாங்கித்தரேன். கூரையை ஓடா மாத்திடலாம். பணம் பத்தலனா பேங்ல லோன் போட்டுத்தர்றேன். மாட்டை இன்ஷீர் பண்ணித்தர்றேன். என்ன சரியா?'
தலையாட்டினாள்.
கனவு போல இருக்கிறது. கூரை வீடு ஓட்டு வீடாச்சு. ஒரு மாடு இரண்டு மாடு ஆச்சு. கடனும் அடைச்சாச்சு. மெதுவாக நிம்மதிப் பெருமூச்சு விடலானாள். அந்த நிம்மதியும் கலைந்தது.
அன்று தான் இந்த மரமல்லிக் கன்றை அடையாளம் கண்டாள் சரசு. விஜயாம்மா தான் கூறினார். மூணாவது வீட்டு மரத்தில் கிளைத்த வேரில் இருந்து வெடித்த குருத்து இது என்று. சீமக் கருவேல முட்களை வெட்டிச் செடியின் சுற்றிலும் நட்டுவைத்தாள். ஒரு செம்பு தண்ணீரும் ஊற்றி நிமிரும் போது.
'இங்க சரசுங்கறது?'
கேள்வியுடன் வந்தவர் போலீஸ்கார். 'நான் தாங்க!' என்று கூறுவதற்குள் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.
'வேறு ஒருத்தரும் இல்லையா?'
அவர் கேட்கும் போதே அவளுக்குக் குலை நடுங்கியது. ஓடிப்போய் பேங்க் ஐயாவை அழைத்துவந்தாள்.
விஷயம் இதுதான். குடித்து விட்டுப் பெண்டாட்டியை அடித்திருக்கிறான் சரவணன். அம்மிக் கல்லில் தலைமோதி அங்கேயே மண்டையைப் போட்டுவிட்டாள் மகராசி. லாக்கப்பில் சரவணன். விலாசம் தேடி சேதி சொல்ல வந்திருக்கும் காக்கி. பேங்க் ஐயாவுடன் ஓடினாள் சரசு. லாக்கப்பில் கைகட்டி குத்திட்டு விட்டத்தை வெறித்தபடியே, சரவணன். கண்களில் வழியும் கண்ணீர் துடைக்கவும் தோன்றாத பரப்பிரம்மமாய்.
'தூக்கோ ஆயுளோ உறுதி. கேஸ் வலுவா இருக்கு!' இன்ஸ்பெக்டர் கூற விக்கித்து நின்றாள் சரசு. சரவணனிடம் எந்தவிதச் சலனமும் இல்லை, இவளைக் கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை.
'அப்புறம் அந்தக் குழந்தையை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்து விடுகிறோம்.'
இன்ஸ்பெக்டர் கூறிக்கொண்டே போகத் திடுக்கிட்டாள் சரசு. பெண் போலீஸ் தந்த பாலை பாட்டிலில் உறிஞ்சியபடியே திகில் உறைந்த விழிகளுடன் அம்மா அம்மா என்று அரற்றும் பிஞ்சு. கலைந்த தலை. கண்ணும் மூக்கும் வழிந்து காய்ந்த முகத்திலும் ஒரு களை. அந்த வண்டுக் கண்கள் அவளிடம் ஏதோ கூறுவது போல் ஒரு பிரமை. வராந்தாவிலேயே உட்கார்ந்து கிடந்தாள் சரசு. அனாதை ஆரமத்திலிருந்து உரியவர்கள் வர ஒப்படைத்தார்கள் குழந்தையை. போக மறுத்து அடம் பிடித்து அழுது புரண்டாள் குழந்தை. அம்மா அம்மா என்று அரற்றும் பிஞ்சு. சரசுவின் நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பிரவாகம் ஊற்றாகப் பீறிட்டது. சட்டென பேங்க் ஐயாவிடம் தன் கோரிக்கையை வைத்தாள். இது சாத்திரத்தால முடியாததை, சத்தியமா நான் இதைச் சாதித்துக் காட்டுறேன் ஐயா, நீங்க தான் ஏற்பாடு செய்யணும் என்று கண்ணீருடன் கை குவித்தாள். அந்தப் பிஞ்சு தன் அழுகையை மறந்து இவளையே கண்கொட்டாமல் கவனித்தது.
ஆச்சு யார் யாரிடமோ பேசினார் பேங்க் ஐயா. முறைப்படி சட்டப்படி குழந்தை சரசுவிடம் தத்து கொடுக்கப்பட்டது. மௌனமாகக் கைகுவித்தான் சரவணன். குழந்தையை ஐயா அம்மா இருவர் காலடியிலும் கிடத்தி தானும் விழுந்தவளைத் தாங்கிப்பிடித்தாள் விஜயா அம்மா. ஆதரவாகத் தோளில் சாய்ந்தாள். மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் சரசுவின் காலிடுக்கில் குழந்தை ஒடுங்கி நின்றாள்.
'சரசு! நீ சாதாரணப் பெண் அல்ல தெய்வம். வசதி படைச்சவங்களுக்குத் தோணாத தைரியம் உனக்கு வாய்ச்சிருக்கு. புள்ளையை நல்லாப் படிக்க வைச்சு ஆளாக்கு'.
'பேர் என்ன கண்ணு?' என்று கேட்க லட்சுமி என்றது மழலையில். பகபகவென சரித்தாள் சரசு.
'என்னடி சிரிப்பு உனக்கு இந்த நிலைமையிலும்?'
தொண்டையடைக்கக் கேட்டார் விஜயா அம்மா.
'இல்ம்மா படிக்காத என் பெயர் சரசு. அப்பன் ஆத்தா இல்லாத அடுத்த வேளை பாலுக்கு வழியில்லாத இவள் பெயர் லட்சுமி. அதான் சிரிப்புவந்துட்டு'.
'இப்பவாவது சரின்னு சொல்லு. கணவனால் கைவிடப்பட்டவள்ன்னு உனக்கு அரசு உதவித்தொகைக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?
என்ற பேங்க் ஐயாவை அவசரமாக இடைமறித்தாள் சரசு.
'வேண்டாம்யா. புருஷனே தாலிய அறுத்துக்கிட்டு உறவையும் அறுத்துக்கிட்டுப் போனவர்தானே. அவரைக் காட்டிப் பென்ஷன் எதுக்குய்யா? உடம்புலயும் மனசுலயும் தெம்பு இருக்கு. அதோட இந்தப் பிஞ்சு பொக்கிஷமாக் கிடைச்சிருக்கு. இது போறும்யா. என் புருஷனாலதான் இந்தப் பிஞ்சு பெத்தவளை இழந்து நிர்க்கதியா நிக்குது. என்புருஷன் செஞ்ச பாவத்துக்கு இது கூட நான் செய்யலன்னா நானும் என் புருஷன் மாதிரி ஒரு மிருகம் தான். அப்புறம் என் புருஷனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? கூடப் பொறந்த பொறப்பா நீங்களும் அம்மாவும்!
பேசிக் கொண்டே போனவளை கண்ணீர்கசிய ஏறிட்டனர்பேங்க் ஐயாவும் அம்மாவும்.
'ஐயா வந்து... வந்து ஒரு உதவி. உங்களை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா சொல்லுங்க? அதனாலதான் திரும்பத் திரும்ப உங்களையே உதவி கேட்குறேன்.'
தொண்டையடைக்கக் கேவினாள்.
சொல்லும்மா என்ன செய்யணும். உன் அளவு எங்களுக்குப் பரந்த மனசு இல்லாட்டாலும், உனக்கு உதவியாக நிற்க நாங்கதான் குடுத்து வைச்சிருக்கணும். எதா இருந்தாலும் தைரியமாகக் கேளு ஊக்கப்படுத்தினார்.
'ஐயா உங்க பேங்கில கூட்டிப் பெருக்குற ஆயா பிள்ளை ஊட்டோட அடுத்தமாசம் பட்டணத்துக்குப் போவுதாம். அந்த வேலையை எனக்கு...
இழுத்தவளை இடைமறித்தார் ஐயா.
'சரி. உனக்குத் தான் அந்தவேலை'.
'அப்புறம் உங்க பேங்ல ஒரு இருவது பேர் வேலை பாக்கிறாங்கல்ல, ஆமாம். அவுங்க எல்லாம் ரெண்டு வேளையும் டீயும், வடையும் சாப்புடுவாங்கல்ல? அதை நானே செஞ்சு குடுக்குறேன்யா. சாப்புட்டுப் பார்க்கட்டும். புடிச்சா வாங்கிகிடட்டும். கட்டாயமில்லையா...'
என்றாள் கைகளைப் பிசைந்தவாறே.
'கட்டாயம் வாங்குவாங்க, உன் கைமணம்தான் எனக்குத் தெரியுமே? எனக்குக் கூட இது தோணலபாரு. சரசுகிட்ட சரஸ்வதியே குடியேறி ஐடியாகக் குடுக்கிறான்னு நினைக்கிறேன்'
விஜயாம்மா கூற உனக்கு கூட ஐடியா தோணுதே என்று ஐயா கிண்டலடிக்க. சரசு இப்ப செம பிசி.
கறவை மாடு கவனித்து இரண்டு வேளையும் சுடச்சுட டீயும் பஜ்ஜியும் வடையும் போண்டாவுமாக அசத்துகிறாள். அதைச் சாப்பிடுவதற்காகவே யாரும் லீவு போடுவதில்லை என்று ஐயா சொல்வார். வசூல் பணத்தை ஐயாவே லட்சுமியின் பெயரில் பேங்கில் போட்டு விடுவார். கூட்டிப் பெருக்கும் சம்பளம் ஐயா வீட்டு சம்பளம் இரண்டையும் சேர்த்து அம்மாவே மொத்தமா மளிகைச் சாமான் வாங்கித்தர பம்பரமாய்ச் சூழலும் சரசு, நித்தியப்படி வண்டி ஓடுவது வழக்கம் போல் ஐயாவீட்டு சாப்பாட்டில். குழந்தைக்குத் துணி எடுப்பது அம்மாவேதான். அவருடைய சொந்தச் செலவில்.
டாண்டாண் என எதிர்வீட்டுக் கடிகாரம் பத்துமுறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பத்து மணி ஆச்சா? காலையில் நிறையவேலை இருக்கு, என் செல்லத்தைப் பள்ளியில் சேர்க்கணும் பக்கத்துத் தெரு மில் தொழிலாளிகள் பத்துபேருக்கு மதியம் சாம்பார்சாதம் தயிர்சாதம் செய்து தரணும்; இது புது வாடிக்கை. என் புள்ளய கலெக்டருக்குப் படிக்க வைக்கணும், அதற்கு இப்பவே நிறைய உழைக்கணும். கணிசமாக் காசு சேர்க்கணும்.... வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மலடாய் நின்ற வெண்மேகங்கள் கருக்கொண்டு கருமேகமாய்ச் சூழ பளீரென மின்னல் வெட்டியது. கொட்டும் முரசாய் இடி.
சத்தம் கேட்டு நடுங்கும் லட்சுமியை மார்போடு அணைத்து உள்ளேசென்று பாய்விரித்துக் கிடத்தினாள். சாப்பிடத் தோன்றாது கை அலம்பி லட்சுமியின் அருகே படுத்தாள்.
பனியில் நனைந்த ரோஜாவாய் சில்லிட்ட பட்டுப்பாதங்களைக் கண்ணில் ஒற்றிகொண்டாள். அவள் களைப்புப் பறந்தது. சின்னத் தூறலாய் ஆரம்பித்த மழைச் சாரலோடு மரமல்லியின் மணம் வீட்டுக்குள்ளேயும் ஜன்னல் வழிவந்து நாசியில் நுழைந்து இதயத்தை நிறைத்தது.
உறங்கும் லட்சுமியை மார்போடு அணைத்துக் கொண்டாள் சரசு. இரண்டு அனாதைகளை இணைத்து உறவுப்பாலம் அமைத்த இறைவனுக்கு நன்றி கூறி நிம்மதியாய்க் கண் மூடினாள். மரமல்லிகையின் மணமும் நித்ராதேவியும் ஒரு சேரத் தழவினர் சரசுவை.
சிறுகதை-5
தாயும் ஆன நான்
ஸ்டெதஸ்கோப்பை மேஜை மீது கழற்றி வீசி கோட்டைக் கூடக் கழற்றாது இருக்கையில் சரிகிறேன்; எனக்கான ஓய்வறையில். ஏ.சி. குளிரிலும் துளிர்க்கும் வியர்வை. தலை விண்... விண் எனத் தெறித்தது. நகரின் பிரபல மருத்துவமனையில் வயிற்றுப் பகுதி சிறப்பு நிபுணன் நான். கல்லீரல், பித்தப்பை மருத்துவத்தில் சிறந்த கைராசிக்காரன் என்று பெயர். நோயாளிகளுடன் ஒன்றிப் பேசிப் பாதி நோயை பேசியே குறைப்பவன் என்று பாராட்டப் படுபவன். எந்த சீரியஸ் கேசிலும் நிலைகுலையாது செயல்படுபவன். என்று புகழப்படுபவன். அப்படிப் பட்ட எனக்கு ஏன் இந்த தடுமாற்றம்?
நோயாளி என் அப்பா என்பதாலா? வருங்கால மனைவியான டாக்டர் ஜெயந்தியிடம் கூட எரிந்து விழ வைத்தது எது? ரத்த பாசமா? கிழித்த நாராகக் கிடந்த அப்பாவைக் கண்ட ஆற்றாமையா?
அப்பா... அப்பப்பா!
அவருக்கு மகனாகப் பிறக்க நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். நல்ல பொறுப்பான பதவி வகித்து ஓய்வு பெற்றவர். கை நிறைய பென்ஷன் ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு. ஆறடி உயரம். உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு. வயது 65. ஆனாலும் 50க்குள் மதிக்கத் தோன்றும் கம்பீரம். வகிடு எடுக்காமல் மேல் நோக்கி வாரப்பட்ட முடி. நரைமுடியிலும் கம்பீர மிடுக்கு. அகன்ற நெற்றியில் பட்டையாகக் குழைத்துப் பூசப்பட்ட விபூதி, நடுவே சந்தனமும் குங்குமமும், தீட்சண்யமான கண்களின் மீது கருப்பு ப்ரேமிட்ட கண்ணாடி, கதர் ஜிப்பா, வேட்டி, உட்கழுத்தில் ஒற்றை ருத்திராட்சம். ஓம் என்ற டாலருடன் கூடிய ஸ்படிகமணி மாலை என்று யாரையும் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் தோற்றம். அவர் பூசி இருக்கும் அத்தரும் ஜவ்வாதும் கலந்த தெய்வீக மணம். அவர் இருக்கும் இடத்தையே தெய்வ சன்னதியாய் நினைக்கத் தோன்றும் தெய்வீக அலை அவரைச் சுற்றிலும் பரவும் அதிசயம்.
நல்ல ஆன்மீகப் பேச்சாளர். கணீரென்ற குரல், அவர் பேச்சை வீடியோவில் பார்த்து ரசிக்கும்போது எனக்குள் ஒரு பரவசம். முதல் நாள் பேச்சு பற்றி மறுநாள் காலை டிபன் நேரத்தில் அலசும் பாங்கு.
ஆனால் இது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாத அம்மா. மௌனமாகப் பரிமாறி ஒதுங்கி நிற்கும் அம்மா. அம்மாவுக்கென்றே தனி கைமணம். அவள் வைத்த சிதம்பரம் கொத்சுவில் இட்லியைத் தோய்த்து விழுங்கியபடியே, அப்பாவின் 'சிதம்பர ரகசியம்' சொற்பொழிவு பற்றி அலசும்போது ஏற்படும் பரவசம். அதற்கு ஈடு இணை ஏது? அது ஒரு சுவையான ஜீகல்பந்தி.
நேற்றுகூட எங்கோ சொற்பொழிவு என்று சென்றவர்தான். நள்ளிரவு வரை வீடு வரவில்லை. எனக்கு நைட் டூட்டி. காலையில் வீடு திரும்பும்போது வலியில் துடிக்கும் அப்பா, சென்ற வாரம்தான் எல்லா டெஸ்ட்டும் எடுத்தேன். எல்லாமே நார்மல். இந்த வலி வந்தது எப்படி? உடனே மருத்துவமனையில் சேர்த்து மீண்டும் ஸ்கேன் எக்ஸ்ரே என அனைத்தும் செய்தாகிவிட்டது. ஒன்றும் பிடிபடவில்லை. வலி மட்டும் நிற்காமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தது. ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டு இருந்தாள் ஜெயந்தி. தூக்க மருந்தின் உபயத்தில் கண்மூடிக் கிடந்த அப்பா.
'மோகன், எதற்கும் ப்ளட் டெஸ்ட் செய்து விடவா?' என்று கேட்ட ஜெயந்தியிடம் எரிந்து விழுந்தேன். 'போனவாரம் தானே டெஸ்ட் செஞ்சோம். மறந்துட்டியா?' என்றூ உறுமி விட்டு வந்து விழுந்தவன் தான். என்ன ஆயிற்று எனக்கு?
காபி குடித்தால் தேவலாம் போல இருந்தது. அம்மா அனுப்பி இருந்த காபியை பிளாஸ்கில் இருந்து கப்பில் சரித்தேன். மெல்ல உறிஞ்சியபடியே கிறங்கினேன். 'பீபர்க்' காப்பிக் கொட்டையைத் தானே வறுத்துக் கை மிஷினில் அவ்வப்போது அரைத்து விட்டுப் பாலில் அம்மா தரும் பில்டர் காபிக்கு நிகர் ஏது? அம்மாவின் இந்தக் காபிக்காகவே மொய்க்கும் என் நண்பர்கள். காபி குடித்ததும் தலைவலி போயே போச்சு!
ஏன் அம்மா ஒரு போன் கூடப் பண்ணல. அப்பா எப்படி இருக்கார்னு கேட்கல இருந்தாலும் அம்மாவுக்கு அழுத்தம் ஜாஸ்த்தி. காலையில் டாக்டரான எனக்கே பதற்றம் அப்பா போடும் சத்தத்தைக் கேட்டு. அம்மா மட்டும் அலட்டிக் கொள்ளாமல் பழம், பிஸ்கட், ஹார்லிக்ஸ், வெந்நீர், டவர் என்று பேக் செய்து கொண்டு இருந்தாள் மௌனமாக. பாவம் அம்மா தனிமா இருப்பா. ஏற்கெனவே 'பிரஷர்' அதிகம். பயப்படாதேன்னு தைரியம் சொல்லணும். மாருதியில் ஏறி விரைகிறேன். கார் வழுக்கிக் கொண்டு முன்னே விரைய கூடவே அம்மா பற்றிய நினைவுகளும்.
அதிகம் படிக்காத அம்மா. அதனால்தான் அப்பாவின் அருமை பெருமை தெரியவிலையோ? பொக்கிஷமா அமைஞ்ச புருஷனை போற்றனும் தெரியலியோ? அப்படி ஓன்றும் ரசனையற்றவளும் இல்லை. பசுவுக்கு கூட கங்கா, காவேரின்னு பெயர் சூட்டி மகிழும் அம்மா. பெரும்பொழுதை மாடு, கன்று தோட்டம் என்று கழிக்கும் அம்மா, விதவிதமாய்க் காய்கறி, பூச்செடி என்று பிசியாய் உழைக்கும் அம்மா, அந்தக்கால புமைப் பித்தன் முதல் இந்தக்கால மேலாண்மை பொன்னுசாமி வரை அலசும் அம்மா. இசை பற்றித் தெரியாத போதும், மைசூர் சௌடய்யா, மாண்டலின் சீனிவாஸ், புல்லாங்குழல் மாலி, பிச்சுணி வீணை கதிரி கோபால்நாத் சாக்ஸபோன், திருவெண்காடு சுப்பிரமணியப்பிள்ளையின் மகுடி என்று தேடிப்பிடித்து ரசிக்கும் அம்மா, சுப்பிரமணியப் பிள்ளையின் நாதஸ்வத்தை மகுடியில் கேட்டு கேட்டு உருகும் அம்மா, அப்பாவை விட்டு மட்டும் சற்றே விலகி... வயதுக்கு வந்த பிள்ளை இருப்பதாலா? பத்தாம் வகுப்பில் இருந்தே ஹாஸ்டல் வாசம். இந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் வீட்டு வாசம். என்ன ஆச்சு இந்த அம்மாவுக்கு இனிமேல் கவனமாய் இருக்க வேண்டும். வீடு வந்து விட்டது. கதிரி கோபால்நாத் மென்மையாக உள்ளிருந்து இழைத்து வேளியே வழிந்து கொண்டு இருந்தார். அதைக் கேட்டபடியே சோபாவில் சரிந்து கிடந்த அம்மா, காலடிச் சத்தம் கேட்டு சட்டென்று எழுகிறாள். என் பார்வையைத் தவிர்க்க நினைத்த அவள் கண்ணில் ஈரமா? அனுமானிக்க முடியவிலை. இருப்பா ஜீஸ் கொண்டு வரேன். விரைகிறாள்.
செல்போன் கிணுகிணுக்கிறது. ஜெயந்திதான். 'சாரிப்பா... உன்னை கேட்காமலே அப்பாவுக்கு ப்ளட் டெஸ்ட் செஞ்சுட்டேன். வந்து, வந்து... 'சொல்லித் தொலை' உறுமுகிறேன்.
'ப்ளட்டில் அதிக ஆல்கஹால். அதனால்தான் கல்லீரல் பாதிப்பு வலி. அதோட பால்வினைத் தொற்றும் இருக்கு. போனவார டெஸ்ட்டில் இல்லை...
நாள் விக்கித்தேன். இது நிஜமா? அப்பாவா இப்படி? முகத்தை மூடிக் கேவுகிறேன். மெத்தென என் தோளில் பதிந்த அம்மாவின் கைகள்.
'என் மருமக சமத்து டாக்டர். என் புள்ளதான் மக்கு டாக்டர்' என்று சிரித்தபடியே என் தலையில் செல்லமாகக் குட்டிய அம்மா. எப்படி அம்மாவால் ஈஸியாக எடுத்துக் கொள்ள முடிகிறது? முன்னமே தெரியுமா எல்லாம்? அதனாலதான் விலகி நின்றாளா? இல்லை விலக்கி வைக்கப்பட்டாளா? அம்மா யூ ஆர் கிரேட்
'அம்மா.. அம்மா' என்று அரற்றுகிறேன்.
'ஆமாம், நான்தான் உன் அம்மா. இதுல என்ன சந்தேக' சிரிக்க முயன்று தோற்ற அம்மா. சட்டென பத்து வயது கூடியது போல தளர்வு.
நீ என் அம்மா இல்லை!
உதடு துடித்த அதிர்கிறாள். மெல்ல அவள் காதில் கிசுகிசுக்கிறேன். 'இனிமே நீ எனக்கு அம்மா இல்ல! நான்தான் இனிமே உனக்கு அம்மா!'
சிறுகதை-6
ஒரு மரணத்தின் கதை
அமரர் டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை
கனத்த அமைதி.
இரும்புத்திரை போர்த்தியது போன்ற அமைதி. வருவோரும், போவரும் ஜே, ஜேன்னு கூட்டம். இருவராக, நால்வராகக் கும்மலாக என்று பிரித்து நின்று பேசும் கூட்டம். தங்கள் ஆதங்கம் அனைத்தையும் பேசிப் பேசியேத் தீர்க்கும் கூட்டம். இதமான முல்லை மலர் வாசம். கூடவே சந்தன ஊதுவத்தியின் மணம், நேற்று அம்மா தகதகவென்று தேய்த்து வைத்தக் குத்துவிளக்கு; அம்மாவைப் போலவே முத்துப் போல் சுடர் விட்டு எரிகிறது மூலையில் என் வயிறு எரிகிறது.
குளு குளு பிரீசரில் அம்மா. இத்தனை நாட்கள் உள்ளுக்குள் வெந்து புழங்கிய அம்மாவுக்கு இதமான ஒத்தடமோ இந்தக் குளுமை. வாய் விட்டு அழாமல் மவுனிகிறேன். வெளியே லேசான தூறல். வானமும் அழுகிறதோ அம்மாவுக்காக?
யாரோ தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.
காதைத் தீட்டிக் கொல்கிறேன். "என்னவோ ஒரேடியா நிலையா நின்னா, இப்ப பொசுக் குன்று போயிட்டா. போறச்ச என்னத்த வாரிக் கட்டிக்கிட்டுப் போனா. மணி மணியா ரெண்டு பெத்தா. அதுகளோடு இருந்து பேரன், பேத்தின்னு கொஞ்சி அனுபவிக்கக் குடுத்து வச்சிருக்கணும்...ம்ம்...முதல்ல யார் பார்த்தது?"
"நான்தான்...எதிர் வீட்டு லட்சுமி அக்கா."
"நேத்து சாயங்காலம் நாலு மணி இருக்கும். நான் பால் கொண்டாந்தேன். பூ கட்டிக்கிட்டு இருந்தாங்க, எனக்குக் கூட குத்தாங்க. அந்தப் பூ அப்படியே தலையில இருக்கு அதுக்குள்ள... தொண்டையைச் செறுமிக் கொண்டு தொடர்கிறாள் அக்கா. கடைசி ஊட்டுக்குப் பால் குடுத்துட்டு அம்மாக்கிட்ட லோட்டா வாங்க வந்தேன், பூ மேலேயே படுத்துக்கிட்டு இருந்தாங்க... நான் குடுத்துட்டுப் போன பாலை பூனைக் குடிச்சிக்கிட்டு இருக்கு. நான் பதறிப் போய் அம்மா, அம்மான்னு கூப்பிட்டேன். பதிலே இல்லை. அக்கம் பக்கத்துல சொல்லி டாக்டரை கூப்பிட்டு வந்தோம். அரைமணி நேரம் ஆச்சுன்னுட்டார் என்று நாற்பது இரண்டாவது முறையாக புலம்பினாள் லட்சுமி அக்கா. அக்காவின் குரலில் அம்மாவின் இழப்பன் தாக்கத்தை விட, தான் தான் முதலில் பார்த்து என்ற பரபரப்பு..."
"சரி புருஷன் எப்ப வந்தார்?"
"ராத்திரி பத்து மணிக்கு. போன இடம் தெரிஞ்சாத் தானே சேதி சொல்லலாம் பொண்டாட்டி கிட்டயே எங்க போறேன்னு சொல்லமாட்டார். எப்ப வருவேன்னும் சொல்ல மாட்டார். அப்படி ஒரு குணம். பாவம், அது தான் வேளா வேளைக்கு ஆக்கி வைச்சுக்கிட்டுக் காத்து இருக்கும்." பக்கத்து வீட்டு செண்பகாவின் புலம்பல்.
"புருஷன் வரும் முன்னரே தெரிஞ்ச வரைக்கும் அவுங்க உறவுக்காரங்க எல்லாருக்கும் தகவல் சொல்லிட்டேன். முப்பது வருஷமாத் தாயா புள்ளையா பழக்கம், அதனால அவங்க உறவுக்காரங்க விலாசம் தெரியும். புள்ள அமெரிக்காவுல இருந்து வந்துக்கிட்டு இருக்கு. நாளைக்கு முதல் திருமண நாள். அதுக்காக கிளம்பினது நல்லதாப் போச்சு. அம்மா நெஞ்சு நல்லா வெந்துடும்." பக்கத்து வீட்டுக்காரர் யாரிடமோ சொல்லிக் கொண்டே போனார்.
அது சரி இந்தம்மா புருஷன் யாரு?
"வாசல்ல கால் மேலக் கால் போட்டுக்கிட்டு கல்லுளி மங்கன் மாதிரி உட்கார்ந்து இருக்காறே அவுரு தான் .சென்ட் வாசம் ஆளைத் தூக்குதே அவரா?" என்றபடி பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"இருக்கும் போதே நல்ல அமுக்குணி புருஷனப் பக்தி வாயத் திறக்கமாட்டா. உல வாய மூடலாம். ஊர் வாயை மூட முடியுமா? இவளுக்குப் புருஷனக் கையிலப் போட்டுக்குத் தெரியல...
"ஆம்புள்ளன்னா அப்படி, இப்படி இருப்பான் தான். அதுக்காக மூஞ்சியைத் தூக்கி வைச்சிக்கிட்டா. இப்படி உங்களுக்குள்ள நல்ல ஒத்துமை இல்லாமப் போச்சுதே... பேசாம என் பொண்ணையும் கட்டிக்கண்ணு சொன்னேன். கேட்டானா? இவ சம்மதிக்கமாட்டான்னு பயந்தான். போன மாசம் தான் எம்பொண்ணைக் கட்டிக்குடுத்தேன். போனது தான் போனா ரெண்டு மாசம் முன்னாடி போயிருக்கக்கூடாது..."
போறச்சயும் அமுக்குனியா அனாதை மாதிரிப் பொசுக்குன்னு போயிட்டா. நான் தான் இனிமே தம்பியப் பாத்துக்கணும் என்று இனிமே இங்கேயே தங்கப் போறேன் என்று மறைமுகமாய் கூறிக் கொண்டிருந்தாள் பெரிய அத்தை."
"ஆ...ன்னா ஊ...ன்னா புருஷன் கிட்டக் கோவிச்சுக்கிட்டு பையத் தூக்கிட்டு, இங்க வந்து டேரா போடும் அத்தை. போகும் போது அரிசி, பருப்பு, பணம், துணிமணி என்று தேத்திக்கிட்டுப் போகும் அத்தை, எவ்வளவு சுலபமா அம்மாவைப் பக்தி விமர்சிக்கிறா... அனாதை மாதிரி செத்துக் கிடந்தாள்ன்னு, நான் இருப்பது கண்ணு தெரியலியா?"
அடுத்து சித்தப்பா...
"ம்...என்னமோப் போய் சேந்துட்டாங்க... தான் என்னவோ நிரந்தம் மாதிரியும், எல்லாத்தையும் விடாது அனுபவிக்கப் போறது மாதிரியும் ஓடி ஓடி சேத்து வைச்சாங்க... இப்ப என்ன ஆச்சு? எல்லாம் செல்லரிச்சுப் போச்சு,"என்று பெரிய அத்தையிடம் நன்கு விசிறி விட்டு அண்ணனைப் பார்க்கப் போனார்.
"என்ன குறை வச்சேண்டா உன் அண்ணிக்கு? சம்பாரிச்ச அத்தனையும் குடும்பத்துக்கே கொட்டி அழுதேன். கடங்காரி கொஞ்ச நாளா அடிக்கடி நெஞ்சு வலின்னு சொல்லிக்கிட்டு இருந்தா. டாக்டர் கிட்டக் காட்டினதும், 'ஹார்ட் அட்டாக்' பெட்டுல சேர்க்கணும், ஓய்வா இருக்கணும், கடுமையா வேலை செய்யக்கூடாது, அதிர்ச்சி கூடாதுன்னார்..."
"காசு கறக்க டாக்டர் அப்படித்தான் சொல்வார்... அதுக்காக பெட்ல சேர்த்தா யார் பார்க்கறது. எனக்கு யார் சமைச்சுப் போடறது. அதுக்கெல்லாம் என்னால ஆட முடியாது வேலையைப் பாருண்னேன். வேலைக்குக் கூட ஆள் வச்சேன். ஆறு மாசம் ஆனதும் வேணாம்முன்னுட்டா. அவளும் நின்னுட்டா..."
அவளாகவா நின்னாள்?
அப்பாவின் வாரிசு வேலைக்காரியின் வயிற்றில் வளர ஆரம்பிச்சதும், அக்கம் பக்கம் புகைய ஆரம்பிச்சது. அவசரமாக அவளை அசலூருக்குக் கூட்டிப் போய் சுத்தம் பண்ணி வேற ஒருத்தனுக்குக் கட்டி வச்சது அப்பா தானே?
அதில் இருந்து தான் அம்மா ஒதுங்க ஆரம்பித்தாள். ஒடுங்கவும் ஆரம்பித்தாள். அப்பா, சித்தாப்பாவிடம் தொடர்கிறார்...
"நேத்து கூட என்னவோ உடம்பு முடியலன்னு சொல்லிக்கிட்டு, ஒரு ரசத்தை வைச்சு சாதம் போட்டா... இந்த சோத்த எவன் தின்பான்னு விசிறி அடிச்சுட்டு டவுனுக்குக் கிளம்பினேன். ராத்திரிக்காவது அடையும், அவியலும் செஞ்சுவை ஒண்ணும் ஆயிடாதுன்னு சொல்லிட்டுப் போனேன்."
"என் குணம் அறிஞ்சு, அடைக்கு அரைச்சு வச்சுட்டு அவியலுக்கு நறுக்கி வச்சு இருக்கா... நல்ல பசியோடு வந்தேன். அடையத் திங்க விடாம செத்து வச்சு இருக்கா பழிக்காரி. அம்மா போனதை விட அடை தின்னாதது தான் அவருக்குப் பெரிசாப்பட்டது. திட்டம் போட்டே இப்படிப் பொசுக்குன்னு போய் என்னைப் பழி ஆளாக்கிட்டா... நமக்குன்னு ஒரு கவுரவம் இருக்குல்ல. அதைக் காப்பாத்தணும். இதுவரைக்கும் யார் வீட்டிலும் நடக்காத வகையில் காரியத்தைச் செய்யணும்... என்று மூக்கைச் சிந்தியபடியே உறுமினார்."
தேவார கோஷ்டி, அதிர்வேட்டு, மதியத்துக்கு வடை பாயசத்தோடு சாப்பாடு, ஒண்ணுலயும் குறை வைக்கக் கூடாது என்று சத்தமாக உறுமியபடியே கட்டளையிட்டார். பத்தாயிரம் ரூபாய் தூக்கிப் போட்டார் சித்தாப்பாவிடம். மவுனமாக லிஸ்ட் போட ஆரம்பித்தார் சித்தப்பா.
"அக்கா, நீங்க இவ்வளவு சீக்கிரமாப் போயிட்டீங்களே... உள்ளே சிரித்து, வெளியே அழும் ஜானகி அக்கா. அப்பாவின் நண்பருடைய மனைவி. அம்மா ஊரில் இல்லாத நாட்கள் இருவருக்கும் திருநாளே. அதற்காகவே அம்மாவை அடிக்கடி ஊருக்குத் துரத்தும் அப்பா. நாள் கிழமைக்கு, ஊருக்கு போனாலும் தான் மட்டும் தங்கி விடுவார். நாலு நாள் கழிச்சு வா, உடனே வந்து நிக்காதே என்று மறைமுக மிரட்டல். மீறி வந்து விட்டால் அடி, உதை."
"இந்தக் கூத்து எல்லாம் அண்ணனுக்குத் தெரியாது. அவன் அப்பாவி. ஜானகி அக்காவை தன் பெண்ணைப் போலவே நேசித்தாள் அம்மா. பார்த்துப் பார்த்து காஃபியும், டிபனும் கொடுப்பாள். தனக்குப் பெண் இல்லாத குறையை, அவளை அலங்கரித்து நிறைவேற்றிக் கொள்வாள். அவள் குழந்தைகளையும், தன் பேரக் குழந்தைகள் மாதிரிக் கொஞ்சி மகிழ்வாள். அவள் ஜானகி அக்காவிடம் எந்த சந்தேகமும் கொள்ளவில்லை."
"தான் அழகு, அறிவு ஜீவி, கை நிறைய சம்பளம், பெரிய பதவி என்ற அகங்காரம் அப்பாவுக்கு. அம்மாவைத் தனக்கு சரியான. இணை இல்லை என்ற இறுமாப்புடனே விமர்சிப்பார். வளர்ந்த பிள்ளைகளுக்கு முன்னே, எடுத்து எறிந்து பேசும் அலட்சியம். தன் அழகுக்கும், அறிவுக்கும், பதவிக்கும் அத்தனைப் பெண்களுமே தன் காலடியில் என்ற மமதை அவருள்."
இந்த விஷயத்தில் அவர் ஒரு சமதர்மவாதி. சாதி, இனம், உறவு என்ற பேதமில்லாமல் அவரது லீலைகளில் ஒரு சமத்துவம். அம்மாவை தன் மனைவியாகத் தன்னில் ஒரு பாதியாக என்றுமே நினைத்தது இல்லை. கொத்தடிமை என்ற நினைப்பு. எங்கும் எப்போதும் தனக்கே முதலிடம், தனக்குப் பின் தான் பிள்ளைகள் கூட என்ற இறுமாப்பு. சுருக்காக கூறினால், மணி அடித்தால் ஓடி வரும் பியூன் நிலையே அம்மாவுக்கு. அது போல் அழைப்பு மணியும் வீட்டில் உண்டு. யாராவது வந்தால் மணியடிப்பார் காரணமே இல்லாமல். அம்மா ஓடி வந்து, ஏன்? என்று கேட்க வேண்டும். அம்மாவுக்கு வந்தவர்கள் எதிரிலேயே காரணமே இல்லாமல் அர்ச்சனை செய்து அனுப்புவார்."
"அத்தனையும் விழுங்கிக் கொண்டாள் அம்மா. எங்களுக்கும், அப்பாவுக்கும் எந்தவித குறையும் வைக்கவில்லை. அண்ணன் ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். திருமணமும் ஆகிவிட்டது. நாளை அவனுக்கு முதல் 'கல்யாண நாள்' அதற்காகத் தான் இன்று வருவதாக நேற்றே போன் செய்து விட்டான்."
போன் மணி அடிக்கிறது. அண்ணாகத் தான் இருக்க வேண்டும்.
"அம்மா, உனக்காக சமையல் செஞ்சுக்கிட்டு இருக்காங்க, மதிய சாப்பாட்டுக்கு வந்து விடு என்று சித்தப்பா கூறுவது காதில் விழுகிறது. எனக்குத் தொண்டை அடைக்கிறது. அண்ணன் இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கப் போறான். மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்கிறேன்."
"எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எதுவுமே நடக்காத மாதிரி வளைய வரும் அம்மா அதிர்ச்சியில் உறைந்த அந்த நாள்... பக்கத்துத் தெருவில் ஒரு விசேஷம் என்று சென்ற அம்மா திரும்பி வரும் போது... ஜானகி அக்காவும், அப்பாவும்... ஜானகியுமா இப்படி? அம்மா உறைந்து போனாள். அதற்காக இருவருமே அலட்டிக் கொள்ளவில்லை. எதுவுமே நடக்காத மாதிரி இருவரும் இருந்தனர்."
"அதன் பிறகு ஜானகி அக்கா வீட்டுக்கு வருவது இல்லை. இரண்டு பேரும் பக்கத்து டவுனுக்குச் சென்று தேர் திருவிழா, சினிமா என்று ஜோடியாக சுற்றுவார்கள். இது அக்கம், பக்கத்தில் கசிந்து, நக்கலாகப் பேசிப் பார்வையால் துளைக்கும் போது உடைந்து போன அம்மா உறைந்தும் போய் விட்டாள். இத்தனைக்கும் ஜானகி அக்கா தூரத்து உறவும் கூட. அவள் புருஷனும் எதுவும் கண்டு கொள்வதில்லை. காசு வந்தால் போதும் என்ற நினைப்பா? அல்லது அம்மாவைப் போல் தன் இரண்டு குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகக் கண்டும், காணாதது போல் இருக்கிறாரா? ஆண்டவனுக்கே வெளிச்சம்."
"வர வர அம்மா மவுனியாகி விட்டாள். ஒற்றைச் சொல்லிலே பதில் கூறும் திறன் அவளுக்கு மட்டுமே எப்படிச் சாத்தியமாகிறது. அடிக்கடி என்னிடம் புலம்புவாள். உன்னுடன் வந்து விடுகிறேன் என்று அவள் அரற்றும் போது மவுனகாக வெறிப்பேன். எனக்கும் ஆசை தான். அப்புறம் அண்ணனின் நிலை. இது அம்மாவுக்கும் புரியும். உன்
அண்ணனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு உன்னுடன் வந்து விடுகிறேன். இனிமேலும் உன் அப்பாவின் அட்டூழியத்தைப் பொறுக்கும் சக்தியில்லை என்று புலம்புவாள்."
எதிர்வீட்டு அக்கா நேற்று பால் கொடுக்க வரும் போதே அம்மாவுக்குக் கடுமையான நெஞ்சு வலி. பல்லைக் கடித்துக் கொண்டு எதுவுமே காட்டிக் கொள்ளாமல் அவளைப் போக்குக் காட்டி அனுப்பி விட்டாள் அம்மா. வலின்னு சொன்னா டாக்டரைக் கூப்பிட்டுப் பிழைக்க வச்சுட்டா என்ன செய்வது என்ற பயம் அவளுக்கு. நீ பார்த்துக்கிட்டு சும்மா இருந்தியான்னு கேட்கிறீங்களா?"
"அம்மா ஒரு முடிவு எடுத்தால் எடுத்தது தான். அதை யாராலும் மாற்ற முடியாது. திட்டவட்டமாகத் துல்லியமாக வியூகம் அமைப்பாள். நாளைக்கு அண்ணன் வந்ததும் அவன் கையால் போய்ச் சேரணும் என்று ஆசை. புருஷன் கையாலப் போய்ச் சேரக் கூடாது என்பது அவளுடைய இறுதி ஆசை".
"அண்ணன் வந்ததும், அவனைக் கேட்கணும். வெளிநாடு போவாதேன்னு அம்மா சொன்னாளேக் கேட்டியாண்ணு கதறணும். நீ இருந்தா இப்படி அம்மா அம்போன்னு போவாளான்னு அவன் சட்டையப் புடிச்சு உலுக்கணும்னு நினைக்கிறேன். இதோ அண்ணன் வந்து விட்டான் அண்ணியுடன். அவனால இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை"..
இரண்டு பிள்ளையப் பெத்தும் அம்மா இப்படி அம்போன்னு போயிட்டாங்களே என்று என் மீது சாய்ந்து அழுகிறான். நான் வழக்கம் போல் மவுனிக்கிறேன்.
"பாவம் அந்தம்மா மூத்த புள்ளையும் அமெரிக்கா போயிட்டு, சின்ன புள்ளையும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி விஷக் காய்ச்சலில் செத்துப் போயிட்டு, தம்பி போட்டோவைக் கட்டிப் புடிச்சுக்கிட்டு அழுவதே அது தான் பெரியபுள்ள. யாரோ விளக்குகிறார்கள்."
"ம்... அந்தம்மா சின்ன புள்ளக்கிட்டப் போயிடணும்னு அடிக்கடி புலம்பும். நேத்து நல்லா நடமாடின மவராசி இதோ புறப்பட்டு விட்டாள். குரல்கள் கிசுகிசுக்கின்றன. ஒரே கூக்குரல்".
அம்மா புறப்பட்டு விட்டா பூவும், பொட்டுமாய், மாலையும், கழுத்துமாய். என்னிருப்பிடம் தேடி இதோ வந்து கொண்டு இருக்கிறாள். அம்மா... அம்மா... குரல் எழும்பாமல் விசிக்கிறேன்...
சிறுகதை-7
நிஜங்கள்
அம்மா இருந்தாலும் சுத்த மோசம் ராதா. 'எத வச்சு சொல்ற கீதா?' 'பின்னே என்ன? சித்தி மாங்கு மாங்குன்னு அப்பா காரியம் எல்லாம் பார்த்துகிட்டா. எவ்வளவு அழுகை; அம்மா ஜடம் மாதிரி இருந்தா, அழக்கூட இல்லை. வந்தவளுக்குத் துக்கம் கொடுப்பதில் இருந்து நமக்கு அடிக்கடி காபி - ஜீஸ் கொடுப்பது வரை அவதான் பார்த்துக்கிட்டா. வைதீக காரியம் எதுவும் வைக்காம எவ்வளவு நேர்த்தியா செஞ்சா'.
'இந்த அம்மா என்னன்னா சித்தி முகத்தைப் பார்க்காமல் பேசுறதும், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்றதும் நல்லாவா இருக்கு? என் பிரண்சுகளே சொன்னாங்க, உங்க சித்தி மாதிரி கிடைக்கக் குடுத்து வச்சு இருக்கணும் என்று. இத்தனைக்கும் நாம பிறந்தபோது அவதான் இங்கேயே அப்பா வேலை பார்த்தக் கல்லூரியில் படிச்சுக்கிட்டு நம்மைக் கவனிச்சுக்கிட்டாளாம். பாட்டி சொல்லி இருக்காங்க. பாட்டி, தாத்தா கூடவும் அம்மா அதிகம் பழக மாட்டா'
'அப்பா கிட்ட மட்டும் அம்மா சௌஜன்யமா இருந்தாளா என்ன? சித்திகிட்ட பேசுற மாதிரிதான் முகத்தைப் பார்க்காமல் பேசுறது. முத்து உதிர்ந்திடுமோ என்ற நினைப்பு. உண்டு - இல்லைன்னு தலையத் தலைய ஆட்டுகிறது. பாவம் அப்பா. எவ்வளவு துடிப்பானவர். கலகலப்பாப் பேசுறவர். அவருக்குன்னு இந்த தொட்டாச் சிணுங்கி அம்மா வாய்த்தது எப்படி?'
'இப்படிப்பட்ட அம்மாவை மத்தவங்க முன்னாடி விட்டுக் குடுக்காம என் சாரதா போல வருமான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அப்பா. அம்மாவோட டார்ச்சர் தாங்காமத் தான் அம்பது வயசிலேயே ஹார்ட் அட்டாக்குல போய்ச் சேர்ந்துட்டாரோ? சித்தி வீட்டுக்குப் போகும்போது நல்லாத்தானே அப்பா போனாங்க. வந்ததும் நெஞ்சை வலிக்குதுன்னு சொன்னாங்க. டாக்டர் வருவதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு. அப்போகூட அம்மா மௌனமாக வெறித்தபடி தானே இருந்தாள். பதறவில்லை, கதறவில்லை ஏன்?
,ஆமாம், இந்த அம்மாவுக்கு என்ன ஆச்சு? எப்போதும் தையல்மிஷினைக் கட்டிக் கொண்டு அழறா. நமக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இது நடக்குது. 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' சுஹாசினி மாதிரி இது நடக்குது. இவ தைச்சுதான் இங்க விடியப் போவுதா? அப்பா இருக்கும் போதும் தைச்சா, இப்ப அப்பா போய் ஒரு மாசம் கூட ஆகல, மறுபடியும் தைக்க ஆரம்பிச்சிட்டா இரவு பூரா இடுப்புவலி, முழங்கால் வலின்னு முனகல். பகல்ல தையல் தேவையா? அப்பா இருக்கும் போதும் நல்ல சம்பளம். அப்பா போனதும் பென்ஷன் வருது. சொந்த வீடு. அடுத்த வருஷம் நம்மப் படிப்பு முடிஞ்சிடும். கேம்பஸ் இண்டர்வியூல கட்டாயம் ஜெயிச்சிடுவோம். அப்புறம் என்ன கவலை அம்மாவுக்கு? சித்தி வந்து இருக்கா, அவளை வச்சுகிட்டு இதுக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டணும். அம்மாவ இப்படியே விடக்கூடாது. இரட்டையர்களான ராதாவும், கீதாவும் மாறி மாறிப் பேசி ஒரு முடிவுடன் மொட்டை மாடியில் அம்மாவைக் காணச் சென்றார்கள். சித்தியின் கேவல் தங்கள் பெயர் அடிபடவே தயங்கி நின்றனர் படிக்கப்படிலேயே.
'அக்கா நான் செஞ்சது தப்புதான். சிறுவயசுல அத்தானிடம் மயங்கி, அவரும் அதற்கு இணங்கித் திருமணத்திற்குப் பின்னும் எங்கள் உறவு தொடர்ந்தது. என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்தது வசதியாய்ப் போச்சு. உன் வீட்டில் தங்கிப் படித்த போதே தொடங்கிய உறவு. நீ நம்ம பெற்றோரிடம் முறையிட்டாய். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. கையாலாகாத அப்பாவுக்கு அத்தான் மூலம் வரும் வரும்படி கண்ணை மறைத்தது. அப்புறம் எனக்குக் கல்யாணம் ஆச்சு. நீ எதுவும் என்னைக் கேட்டுக்கல. பிறந்த வீட்டையும் மறந்துட்ட. அப்பா, அம்மா இறந்தபோது கூட நீ இப்படித்தான் மௌனமாக இருந்தாய்.
இருந்தாலும், எங்க உறவு தொடர்ந்தது. ஆனா அத்தான் மட்டும் புலம்புவார். நீ மனசலவுள அவரை விட்டு விலகிட்டேன்னு. எங்க தப்ப நான் நியாயப்படுத்தல. சாவுற அன்று கூட என் வீட்டுக்கு வந்துட்டுத் தான் போனாரு. அப்பகூட உன்னைப் பத்திதான் சொல்லிகிட்டு இருந்தாரு. நீ சண்டை போட்டாக்கூட தேவலாம். இப்படி மௌனம் சாதிச்சே என்னைக் கொல்லாமக் கொல்றா. செத்துப் போயிடலாமான்னு கூடத் தோணுது. எம் பெண்ணுகளுக்காகத்தான் அந்த முடிவுக்குப் போகலைன்னு புலம்புனாரு. இப்ப ஒரேயடியாப் போயிட்டாரு. என்னை மன்னிச்சிடுன்னு கேட்கக்கூட எனக்கு அருகதை இல்ல. இருந்தாலும் நீ மௌனம் சாதிப்பது எனக்கு பயமா இருக்கு. உனக்காக இல்லாவிட்டாலும் உன் பெண்களுக்காக உன்னை மாத்திக்க உனக்குத் துரோகம் செஞ்சதாலதான் எனக்கு வயிறு திறக்கவே இல்லை என்று நினைக்கிறேன். சித்தி விஜயா சொல்ல சொல்ல அதிர்ந்தனர் இருவரும்.
சாரதா பேச ஆரம்பித்தாள்.
அறிஞ்சோ, அறியாமலோ அவரோடு வாழ்ந்து இரட்டைப் பொட்டைப் புள்ளைங்களைப் பெற்று விட்டேன். அதுக என்ன பாவம் பண்ணிச்சு? அதுகளுக்கு நல்ல வாழ்வு அமைச்சிக் குடுக்குற வரைக்கும் நான் சாக மாட்டேன். உங்க விபரம் தெரிஞ்சதும் அவர் நிழல் பட்டால்கூட கூசிக் குறுகி விடுவேன். நானே சோரம் போனதுபோல் எனக்குள் ஒரு தகிப்பு. பெத்தவங்க, கட்டினவர், கூடப் பிறந்தவர் யாருமே எனக்குன்னு ஒரு மனம் இருக்கு, அதுல எவ்வளவு ரணம் இருக்குன்னு நினைக்கல. அவுங்க அவுங்க சுயநலத்தோடவே வாழ்ந்தீங்க. இப்போ அந்த நினைவுகளில் இருந்து ஒருவகையில் விடுதலை உணர்வு. எனவே எனக்குள் துக்கம் இல்லை. குழந்தைகள் எதிரே இரட்டை வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிம்மதி.
கொண்டவன் சரியா இருந்தா கூரை ஏறிக் கோழி புடிக்கலாம்னு பழமொழி. எனக்கு அந்த பாக்கியம் இல்லை. நீ ஆட்டி வச்சபடி ஆடினாரு. வெளியில இரண்டு பேருமே நல்லா வேஷம் கட்டுவீங்க. ஆகாத பெண்டாட்டி கைபட்டாக் குற்றம் கால் பட்டாக் குற்றம்னு இது வரை வாழ்ந்துட்டேன். அந்த ஆகாத கணவரின் வருமானத்தில் வாழ விரும்பாமல்தான் தையல் வேலை செய்கிறேன். அதில் வரும் வருமானம்தான் எனக்கு வெகுமானம். உங்க ஊழலைத் தெரிஞ்சுக்கிட்டா என் பெண்கள் தாங்க மாட்டார்கள். அவர்தான் போயிட்டாருல்ல. இனிமே உனக்கு இங்கு என்ன வேலை? இதுவரைக்கும் சுமங்கிலி என்ற பெயரில் வாழ்ந்தேன். அதுதான் எனக்குப் புருஷனால் கிடைச்ச சுகம். இனிமே அதுவும் இல்லை. உனக்கு எந்த இழப்பும் இல்ல. மீறி என் பெண்களோட உறவைத் தொடர்ந்தால் மௌனமாக இருந்த நான் வாய் திறக்க ஆரம்பித்து விடுவேன். பிறகு நாறிப் போயிடுவ, ஜாக்கிரதை' என்றாள் கறாராக.
அழுத கண்களுடன் சித்தி வெளியேற கண்மூடி அமர்ந்து இருந்த சாரதாவின் தோளைப் பற்றினர் ராதாவும், கீதாவும். திடுக்கிட்டவளின் காதில் அம்மா 'யூ ஆர் கிரேட்' என்று இருவரும் ஒருமித்த குரலில் கூற உடைந்து அழ ஆரம்பித்தாள் சாரதா!
சிறுகதை-8
தகப்பன்சாமி
பொழுது போகவில்லை!
மேஜை இழுப்பறையைக் குடைந்தேன். அது அலிபாபா குகை. என்ன இருக்கு என்பதே வெளியே தெரியாது. அலாவுதீனின் அற்புத விளக்கு போல எல்லாமே அதற்குள் கிடைக்கும்! அதை ஒழிக்க ஆரம்பித்தால் பொழுது போவதே தெரியாது. அவ்வளவு புதையல்கள். தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதைபொருள் பொக்கிஷங்கள். விவசாய வேலைகள் முடிந்து விட்டன். வேலை எதுவும் இல்லை. அதனால்தான் இந்த வெட்டி வேலை.
விவசாய வரவு செலவு கணக்கு, கடன் பத்திரங்கள், விவசாயக் கருவிகளின் விலைப் பட்டியல், உரமூட்டைகள் ரசீது, டிராக்டர் எல்.ஐ.சி. ரசீது, பழைய புகைப்பட ஆல்பங்கள் என திரெளபதி வஸ்திராபரணமாய் நீளும் பட்டியல். வேர்த்து வழிந்து களைத்து விட்டேன்.
கையில் அகப்பட்ட பழைய வார ஏட்டுடன் ஈசிசேரில் சாய்ந்தேன். கவிப் பேரரசு வைரமுத்துவின் கட்டுரை. தன் மகன் பற்றிய வரிகள்! பெட்டிச் செய்தியாக என் மகனிடம் மட்டுமே தோற்க விரும்புகிறேன்! எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள். மகனிடம் தோற்பது எவ்வளவு சுகம். பிரகலாதனிடம் தோற்ற இரண்யன், மகனிடம் பாடம் கேட்ட சிவன் என இந்தத் தோல்வி காலம் காலமாகத் தொடரும் தொடர்கதை தானே!
கைகள் வார இதழைப் புரட்ட சிந்தனை இதயத்தைப் புரட்ட நினைவுகள் சிறகடித்துப் பறந்தன. தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே மகன் விவேக். நஞ்சையும், புஞ்சையும் நாலு தலைமுறைக்குக் குந்தித் தின்றாலும் குறையாத செல்வம். புள்ள படிச்சு ஒண்ணும் ஆகப் போறது இல்லை. கல்யாணப் பத்திரிகையில் பின்னால் போட்டுக் கொள்ள ஒரு டிகிரி படிண்ணேன். அந்தப் பயபுள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படிப்பேன்னான். சரி தொலையட்டும் என்று தலையாட்டினேன். அப்படி தலையாட்டினது தப்பாய்ப் போச்சு.
படிச்சு முடிச்சதும் கம்ப்யூட்டர் சம்பந்தமான தொழில் நடத்தணும். கோடி கோடியா சம்பாதிக்கனும்னு ஒத்தைக் கால்ல நின்னான். சிபாரிசு அம்மாக்காரி மேலிடத்து சிபாரிசை மீற முடியுமா? மீறினால் உள்நாட்டுக் கலவரம் வெடிக்குமே. பய அரசியல்வாதி ஆக வேண்டியவன். நல்லாவே கூட்டணி அமைக்கிறான். என் எதிர்ப்புகளை அம்மா என்ற பிரம்மாஸ்திரம் மூலமாக மண்ணைக் கவ்வச் செய்யும் மகாபுத்திசாலி.
இந்தப் பனிப்போர் ஒருநாள் வளைகுடாப் போராக வெடித்தது. அந்தநாள் நன்றாக நினைவில் இருக்கிறது. எனக்குப் பிடித்த உருளைக்கிழங்கு கறியைம், உருண்டைக் குழம்பையும் ஒருபிடி பிடித்து ஓய்வாக அமர்ந்து இருந்த நேரம் பயபுள்ள மெதுவாக ஆரம்பித்தான். 'அப்பா நான் கம்ப்யூட்டரில் மேலே படிக்கணும். தனியாத் தொழில் தொடங்கணும். அதுக்கு அமெரிக்காப் போகணும். இதுக்கு தான் உருண்டைக் குழம்பும், உருளைக்கிழங்குமா? எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. இரண்டு நாளா அம்மாவும், புள்ளையும் குசுகுசுன்னு பேசிகிட்டு குறுகுறுன்னு முழிக்கும் போதே தெரியும். பய ஏதோ குழி பறிக்கப் பிளான் பண்ணுறான்னு. எதுக்கு இருக்குறத உட்டுட்டுப் பறக்கிறத பிடிக்கப் போற. நல்ல மாடுன்னா உள்ளூரிலேயே விலை போகும்' என்று சீறிய என்னை அடக்கினான்.
'ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் பேசவிடுங்க. பரம்பரை பரம்பரையா நீங்க விவசாயம் பார்க்கிறீங்க. பண்ணையாராவே இருக்கீங்க. உங்ககிட்ட வேலை பார்க்கிறவங்களும் அப்படியே இருக்காங்க. வருஷாவருஷம் தண்ணீர்ப் பிரச்சனை இயற்கை உற்பாதம்னு ஏகப்பட்ட சிக்கல். விவசாயம் வேணும்தான். அதுலயும் புதுமை செய்யணும். அதுக்கான பயிற்சி மேற்கொள்ளனும்னு யோசிச்சு இருக்கீங்களா? எனக்கு விவசாயம் தெரியாது. தெரிஞ்சது கம்ப்யூட்டர் மட்டும்தான். அந்தத் துறையில் முத்திரை பதிக்கணும் 'பில்கேட்ஸ்' மாதிரி. விவசாயத்துக்கும் கம்ப்யூட்டர் உபயோகம் செய்யலாம். என்ன உரம், என்ன மருந்து என்று கேட்டுத் தெளியலாம். என்ன விலை என்று வீட்டில் இருந்தபடியே பேசி முடிக்கலாம்.
எனக்குள் ஒரு பொறி அதை என் கண்களில் படித்து விட்டான் அந்தப் பயபுள்ள. ஆனாலும் என் ஈகோ முற்றிலும் அகலவில்லை. 'முடிச்சிட்டியா, இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா' என்றேன் நக்கலாக. 'இதுக்கெல்லாம் முடிவு கிடையாது அப்பா! நீங்க போதும்கிறது எனக்குப் போதல. எனக்குப் போதும்கிறது நாளை என் மகனுக்குப் போதாது. மாறுதல் என்பது மட்டும்தானே உலகில் மாறாத உண்மை. நாடு என்ன செஞ்சது என்பதை விட நாட்டுக்காக நாம என்ன செஞ்சோம்கிறது தான் முக்கியம். தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு விவேகானந்தன் என்று பேர் வச்சுட்டீங்க. அந்தப் பெயரை நான் காப்பாற்ற வேண்டாமா?'
'சின்ன வயசில் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையான்னு கேட்பீங்க. அம்மா பிள்ளைன்னு வாய் தவறி சொன்னாலும் தாங்க மாட்டீங்க அத்தனை பாசம் என்மீது. மேலதான் கடமுடான்னு சத்தம். அடிமனதில் சில்லென்ற பாச ஊற்று. அதை சுவைத்தவன் நான். கத்துகிறதுக் காகத்தான் நான் அமெரிக்காப்போறேன். கற்றதை நம்ம மண்ணில்தான் களம் இறக்குவேன்'. மளுக்கென கண்களில் முட்டிய நீரை அடக்க முடியாது தோற்றேன்.
'என் பிரிவைத் தாங்க முடியாதுன்னுதான் இப்படி அழுகுணி ஆட்டம் ஆடுறீங்க!' இலக்கு பார்த்து அவன் எய்த வார்த்தைகள் - என்னால் மறுக்க இயலவில்லை. இருந்தாலும் முழுவதும் இறங்கி வர என் வறட்டு கௌரவம் இடம் தரவில்லை.
'இதோ பாருடா விவேக் என்ன விட்டா நீ பாட்டுக்குப் பேசி கிட்டே இருக்கே. உன் இஷ்டத்திற்கு எல்லாம் ஆட முடியாது. சிவனேன்னு அப்பாவுக்கு ஒத்தாசையா வீட்டோடே கிட' என்ற என்னவளின் நடிப்பை நிஜம் என்று எண்ணி ஏமாந்தேன். அவள் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்கா விட்டால் என் தலை வெடித்து விடும். அப்படி ஒரு குணம் எனக்கு.
'இரண்டு வருஷம் தானே, போயிட்டு வாடா ராஜா. அவ கிடக்கிறா' என்ற போது தாயும், பிள்ளையும் 'சக்ஸஸ்' என்று கண் ஜாடையில் பேசிக் கொண்டதை உணராத மடையன், என் வாயாலேயே என்னை வீழ்த்தி மகனை அமெரிக்கா அனுப்பிய ராட்சஸி அவள் என்பதை அவள் வாயாலேயே கேட்டபோது எனக்கு எவ்வளவு அதிர்ச்சி. ராட்சசி என்று பல்லைக் கடித்தேன்.
அழகான ராட்சஸி என்று கை கொட்டி சிரிக்கும் விவேகம். சே எல்லாம் பிரமைதான். மகன் அடுத்த வாரம் வரப்போவதை ஒலி பரப்பத்தான் கோயிலுக்குப் போறேன் என்று போயிருக்கிறாள்; சிரித்து சிரித்தே என்னைச் சிறையிலிட்ட ராட்சஸி.
விமான நிலையத்தில் கடைசி நிமிடத்தில் என் காதருகே கிசு கிசுத்த வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வர எனக்குள் புன்னகை. அப்பா! உங்க பிள்ளை ஒருநாளும் அமெரிக்க மாப்பிள்ளை ஆகமாட்டான். இது உறுதி என்றவனை ஏறிட என்னுள் வெட்கம். மனசை எந்தக் கம்ப்யூட்டர்ல படிக்கிறான் இந்தப் பயபுள்ள. அவன் மூச்சுக் காற்றின் கதகதப்பும் அரும்பு மீசையின் குறுகுறுப்பும் இப்போதும் என் காதிலும், கழுத்திலும் என் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் பெருமிதமாக.
என் நாடி பிடித்து துல்லியமாகக் கூறும் மகனைக் கர்வமாகப் பார்க்கிறேன். இந்த மேதையின் தகப்பன் இவன் என்று நாளை ஊர் சொல்லும். நான்தான் என் பாச வலையைச் சற்றே இறுக்கி விட்டேனோ? முதல் முதலாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறேன். மகன் வந்ததும் டவுனில் இருக்கும் இடத்துல ஒரு ஐ.டி. சென்டர் ஆரம்பிக்கச் சொல்லணும். என் பண்ணையாட்களின் வாரிசுகளுக்கு அதுல வாய்ப்பு தரணும். நிறைய வேலை இருக்கு. என் புள்ள எனக்கு மட்டும் மகனல்ல. இந்த நாட்டுக்கே சிறந்த குடிமகனா சிறக்கணும்.
குப்பெனன்ற மல்லிகைப்பூ வாசம். வந்துட்டா மகராசி. நான் இவ்வளவு நேரம் புலம்புனத எல்லாம் அவகிட்ட சொல்லிடாதீங்க. என்னைக் கிண்டலடிச்சே கொன்னுடுவா? புள்ளயும் தானுமா கூட்டணி அமைச்சு என்னைக் கோழி அமுக்குவது போல ஒரே அமுக்கா அமுக்கியதை உங்ககிட்டேயும் சொல்லி மானத்தை வாங்குவா! ப்ளீஸ் சொல்லாதீங்க! மகன் கிட்டத் தோற்கலாம்; மனைவி கிட்டத் தோற்கலாமா? ஹி, ஹி, ஹி!
சிறுகதை-9
ஜடம்
கிறீச்... கிறீச்...
எண்ணெய் காணாத ஊஞ்சல் சங்கிலி ஈனஸ்வரத்தில் முனகியது. மெல்ல ஆடிய ஊஞ்சல் சங்கிலியில் தலை சாய்த்து அமர்ந்து இருந்த சாரதா ஊஞ்சல் கொக்கிகளையே வெறித்தாள். இரண்டு கொக்கிகளிலும் பிணைக்கப்பட்ட நான்கு சங்கிலிகள். ஊஞ்சலோடு இணைக்கப்பட்ட விலங்குகளாக. எவ்வளவு நேரம் ஆடினாலும், எத்தனை வேகத்தில் ஆடினாலும் கூடத்தை விட்டு நகராத ஊஞ்சல். அந்தக்காலத் தேக்குப் பலகை. நான்கு புறமும் பித்தளைப் பூண்களும், குமிழ்களும் தங்கம் போல் தகதகக்கும் ஊஞ்சல். மெல்ல அசை போட்டாள்.
இந்த ஊஞ்சல் போலவே குடும்பம், குழந்தைகள், கடமை, சமூகம் என்று நான்கு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுத் தாலி என்ற தளையில் மாட்டப்பட்டதுதான் என் வாழ்வும். குடும்பத்தை விட்டு நகராத வாழ்க்கை ஓட்டம். புது மணப்பெண்ணாகக் கணவனுடன் ஊஞ்சலில் அமர்ந்த போது எத்தனை பரவசம். அப்போது வயது பதினெட்டு.
அந்தக்கால காதல் மன்னன் போல உருவம், சொந்த வீடு, ஒரே பிள்ளை, அரசு உத்தியோகம், யாரையும் வசியப்படுத்தும் பேச்சுத்திறன், தாயினும் மேலான மாமியார். தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்ற கர்வம் அவளுள்.
அவள் அதிர்ஷ்டசாலி இல்லை, துரதிருஷ்டசாலி என்பதை மணமான ஐந்து ஆண்டுகளிலேயே உணர்ந்ததும் அதிர்ச்சி. அதற்குள் கையிலும், வயிற்றிலுமாக இரண்டு பிள்ளைகள். சரவணன் தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் காதல் மன்னன் என்பதை அறிந்தது இரண்டாவது பிள்ளையை சுமக்கும் போதுதான். உறவு, உடன் பணியாற்றுபவள் என்று ஏராளமான பெண்களுடன் சகவாசம், குடும்ப செலவுக்கு பாதிப்பணம், மீதிப் பணம் அவனுடைய லீலைகளுக்கு. பிறந்த வீட்டில் ஓரளவு கொடுத்துத் தாங்கியதுடன் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்து ஆளாக்கியும் விட்டனர். சமூக அந்தஸ்திற்காக மட்டுமே மனைவி குழந்தைகள். மற்றபடி அவர்கள் கொத்தடிமைகள் என்ற எதேச்சதிகார மனப்பான்மை அவனுள்.
எல்லாவற்றையும் மௌனமாக ஜீரணித்துத் கொண்டாள் குழந்தைகளுக்காக. மாமியாரும் போய்ச்சேர சரவணனுக்கு மிகவும் குளிர் விட்டுப் போயிற்று. கணவனது லீலைகளை அவள் காதுபடவே விமரிசிக்கும் உறவுகள், நட்புகள். அதற்கு பயந்தே வீட்டோடு முடங்க ஆரம்பித்தாள் சாரதா. இது எதற்காகவும் கவலைப்படாத சரவணன். ஒன்று விட்ட அத்தை பெண் சங்கரியுடன் அடிக்கும் கொட்டம். அப்பப்பா!
அவள் புருஷனுக்கு வெளிநாட்டில் வேலை. அது இருவருக்குமே வசதியாக போய் விட்டது. அவளைத் தேடி இவர் போவதும், இவரைத் தேடி அவள் வருவதும், நாள் கணக்கில் டேரா போட்டு சினிமா, பூங்கா, ஹோட்டல் என்று ஊர் சுற்றுவது. வக்கணையாக சாரதாவை ஆக்கிப் போடச் சொல்லி நொட்டை சொல்லிக் கொண்டே சாப்பிடுவது, கண்டித்த சாரதாவை 'இஷ்டம் இருந்தால் இரு இல்லாவிட்டால் என் பிள்ளைகளை என்னிடம் விட்டு விட்டு, ஒப்பன் வீட்டுக்கு ஓடு' என்ற பிரம்மாஸ்திரம் மூலம் மிரட்ட மௌனியாகி விட்டாள்.
ஆச்சு, ஆண்டுகள் ரெக்கைக் கட்டிக் கொண்டு ஓட, பிள்ளைகள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக சிங்கப்பூர் குடியுரிமை பெற்று கை நிறையச் சம்பாதிக்க, பெற்றோரும் ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சேர தனி மரமானாள் சாரதா. இதற்குள் சங்கரியின் ஒரே மகள் வேலை பார்த்த இடத்திலேயே காதல், ஊதல் என்று திசை மாறி விலக சங்கரி காட்டில் அடைமழை.
பெரியவனுக்குத் திருமணம் ஆகி ஒரு குழந்தை. சின்னவனுக்குப் போன வாரம் திருமணம். ஒரு வாரமாக விருந்து, வைபவம் எல்லாம் முடிந்து பெண்ணும், பிள்ளையும் நேற்று சென்னைக்கு மறுவீடு சென்று விட்டனர். அங்கிருந்த படியே சிங்கப்பூர் செல்கிறார்கள். இரண்டு பிள்ளைகளுக்கும் உத்யோகம், திருமணம் என்று எல்லாக் கடமைகளையும் கௌரவமாகச் செய்து முடித்தாகிவிட்டது. இனிமேல்...
நேற்று விருந்து முடிந்து அனைவரும் ஊர் சென்றபின் மிஞ்சியவள் சங்கரி மட்டுமே. கூடத்தில் அட்டகாசமாக சரவணனுடன் அரட்டைக் கச்சேரி. பக்க மேளமாக நொறுக்குத் தீனி, வெற்றிலை, பாக்கு. சாரதா சாமான்களை ஒழித்துப் போட்டு அடுப்பங்கரையைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
ஆரம்பித்தது சங்கரிதான். 'ஏன் அத்தான் உனக்கு அடுத்த மாசம் அறுபது வயது முடியப் போவுதே, மணிவிழாவை திருக்கடையூரில் வை. அதுதான் விசேஷம்' என முன்மொழிய, வழி மொழிந்தார் சரவணன். 'சாரதா கிட்ட சொல்லிட்டியா' என்று அவளே நக்கலாகக் கேட்டுச் சிரித்தாள் அட்டகாசமாக.
'அந்த ஜடத்தை என்ன கேட்பது. தாலி கட்டக் கழுத்தை நீட்டுறது மட்டும் தான் அவள் வேலை, என்று அலட்சியமாக சரவணன் கூற, கைதட்டி வரவேற்றாள் சங்கரி. எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டே பாத்திரங்களை வேலைக்காரியிடம் ஒழித்துப் போட்டுக் கொண்டு இருந்தாள். வேலைக்காரியின் கண்களில் தெரிவது அனுதாபமா? இல்லை அலட்சியமா? அனுமானிக்க இயலாமல் தடுமாறினாள். எல்லோருமே புறப்பட்டும் சங்கரி மட்டும் தங்கி விட்டாள்.
காலையில் அவளை பஸ் ஏற்றி விடச் சென்றவர் ஒன்பது மணி தாண்டியும் வரவில்லை. திருமண வேலையின் களைப்பு,. சங்கரியின் எக்களிப்பு எல்லாம் சேர்ந்து உடலும், உள்ளமும் சோர்ந்தது. எப்படா தலையைச் சாய்க்கலாம் என்று தவிப்பு.
ட்ரிங்ங்ங்...
அழைப்பு மணியின் அசுர அலறல். அவர்தான் இப்படி அழுத்தமாக மணியை இயக்குவது, அதிகாரத் தோரணையுடன். கதவைத் திறந்தாள்.
'ஒன்பது மணிக்கே என்ன தூக்கம்? போனவன் அப்படியேவா போயிடுவேன்.'
அமிலமாக வந்து விழுந்த வார்த்தைகள். மௌனமாக டிபனை எடுத்து வைத்தாள்.
'எனக்கு ஒரு இழவும் வேண்டாம். நீயே கொட்டிக் கொள். நாளைக்கு திருக்கடையூர் போகணும். எட்டு மணிக்கேப் புறப்படணும். சாப்பாடு வேண்டாம். வெந்நீர் போட்டு வெச்சாப் போதும்' என்றார் உறுமலுடன்.
'எதுக்குத் திருக்கடையூர்?'
'என்ன நக்கலா? அறுபதாம் கல்யாணத்திற்கு அட்வான்ஸ் குடுக்கத்தான்?'
'யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?'
'ஏய் என்ன ஆச்சு உனக்கு? உனக்கும் எனக்கும் தான் கல்யாணம்' என்று குரலை உயர்த்தினார்.
'முதல் கல்யாணத்தின் அன்னியோன்னியத்தையும் புனிதத்தையும் புதுப்பிக்கத்தான் இரண்டாவதா அறுபதாம் கல்யாணம். அந்நியமாய் வாழற, இல்லறம் என்ற புனிதத்தைப் போற்றாது ஊருக்காக வாழற நமக்கு எதற்கு அறுபதாம் கல்யாணம்? உங்க சந்தோஷத்திற்காகவும் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கத்தானே இந்த ஏற்பாடு.
'பார்க்கப் போனால் என்னிலும் உங்களுக்கு மேலானவள் சங்கரிதான்! அவள் கழுத்துல தாலி கட்டுங்க. சந்தோஷமா நானே முன்னே நின்று எல்லா வேலையும் செய்யுறேன். அவளும் எத்தனை நாள்தான் துணைவியாவே இருப்பா? என்று அமைதியாக அதேசமயம் அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் சங்கரி.
கையை ஓங்கிப் பாய்ந்த சரவணன் மௌனியாய் உறைந்து நின்றார் ஜடமாக.
சிறுகதை-10
நேற்று - இன்று - நாளை
மதியம் மகள் வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே கோபாவேசமாய் இருந்தார் மூர்த்தி. கூண்டில் அடைபட்ட புலியாய் தன் அறையிலேயே அடைந்து கிடந்தார். அவ்வப்போது உறுமலாக வரும் சம்மந்தி வீட்டாரைப் பற்றி கமெண்ட்கள். இது எதையும் காதில் வாங்காதவளாக தன் போக்கில் தினசரி அலுவல்களைக் கவனிக்கும் வசுமதி. முப்பது வருட தாம்பத்தியத்தில் கணவரின் போக்கை நன்றாகவே அறிந்து அதற்கான நீக்குப் போக்கில் வாழப் பழகியவள் அவள்.
விஷயம் இதுதான். உள்ளூர் கோவில் கும்பாபிஷேகம். மகளைப் பார்த்து அழைத்து வர நேற்று மாயவரம் சென்றவர். சம்பந்தி தன்னை சரியாக வரவேற்க வில்லை. மருமகன் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. தன்னோடு மகளை அனுப்ப வில்லை. 'முடிந்தால் கும்பாபிஷேகத்திற்கு வருகிறோம்; அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. தனியே விட்டு வரமுடியாது' என்று தட்டிக் கழிக்கும் மாப்பிள்ளை என்று பொங்கிப் பொங்கி மாயும் மூர்த்தி. இரண்டே பெண்கள். முதல் மகள் வீட்டில்தான் இந்தக் கூத்து. இரண்டாவது பெண் திருச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள்.
வளைகாப்பு, சீமந்தம், பிரசவம் என்று ஆறுமாதம் சீராடிச் சென்றவள் தான் மகள் ராதா. மூன்று மாதம் ஓடிவிட்டது. வரவில்லை. கும்பாபிஷேகம் சாக்கில் மகளையும் பேத்தியையும் சீராட்டலாம் என்ற ஆசைக்குத் தடா.
மாப்பிள்ளை மோகன் நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் - மாமனாருக்கு பென்ஷனே ஐந்து இலக்கத்தில். சொந்தவீடு வண்டி வாகனம் என்று நல்ல வசதி - வீட்டோடு வேலைக்காரி - பண்டிகை - பிறந்தநாள் என்றால் பவுனும், பட்டுமாக அசத்தும் மாமியார் என ராணி மாதிரி இருக்கிறாள். ஆனால் என்ன பிறந்த வீட்டுக்கோ அவர்கள் சம்மந்தமான விசேஷங்களுக்கு வருவதோ, ராதாவை அனுப்புவதோ வேப்பங்காயாய் கசக்கும் அவர்களுக்கு.
எனவே இவர்களாலும் அவர்களுடன் ஒன்ற முடியாத நிலை. தாமரை இலைத் தண்ணீராய் ஒரு வேளைத் தங்கலுடன் முடியும் பயணம். 'வரட்டும் அந்தப் பயலை என்ன செய்கிறேன் பார்' என்று உறுமும் கணவரைப் பார்க்க வேடிக்கையாகவே இருந்தது வசுமதிக்கு. மருமகனை என்ன செய்யப் போகிறாராம். மகளைக் கொடுமைப்படுத்தினால் வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தில் கேஸ் போடலாம், அப்புறம் மகளை வாழாவெட்டியாக வீட்டோடு வைத்துக் கொள்ளலாம். என்ன ஆயிற்று இவருக்கு. ஆசையாக இருந்தால் அடிக்கடிப் போய் பார்த்து வருவதுதானே? மதியமும் சாப்பிடலை, விட்டத்தை வெறித்த படியே சாய்வு நாற்காலியில் தஞ்சம்.
மல்லிகைப்பூ இட்லியும், மணக்க மணக்கத் தக்காளிக் கொத்சுவும் வைத்து சாப்பிட அழைத்தாள். 'ஏய், உனக்கு ஏதாவது அறிவு இருக்கா?' வேணும்னா நீயேக் கொட்டிக்க' - இடியாய் வந்து விழுந்த வார்த்தைகள்.
'மதியமும் சாப்பிடல, இப்பவும் சாப்பிடலைன்னா பிரஷர் எகிறும்.' 'எகிறுனா எகிறட்டும்; செத்துத் தொலைக்கிறேன் அப்பவாவது பொண்ணை அந்தப் பய அனுப்புவானா? மாட்டானா?' சட்டென உடைந்தார். மௌனமாக இட்லியை வைத்து கொத்சுவை விட்டு அதன்மீது சிறிது நல்லெண்ணெய் விட்டு நீட்டினாள், கூடவே பொடியும். விருட்டென எழுந்து ஜன்னல் அருகே நின்றார்.
மௌனமாகத் தட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள் வசுமதி. ரெளத்திரமானார் மூர்த்தி. 'ஏண்டி நான் சொல்றது உன் மண்டையில ஏறலையா? நான் ஒருத்தன் இங்க புலம்பிகிட்டே இருக்கேன், நீ பாட்டுல முழுங்கற. சொல்லிகிட்டு இருக்குற நான் என்னக் கேணப்பயலா?' உறுமினார்.
மௌனமாக மூன்றாவது இட்லிக்கு முன்னேறினாள் வசுமதி. 'சம்மந்தி வீட்டார்னா, மாப்பிள்ளைன்னா அப்படித்தான் இருப்பாங்க. பெண்ணைக் கட்டிக் குடுத்ததோட நம்மக் கடமை முடிஞ்சிட்டு; அவ பேர்ல நமக்கு எந்த உரிமையும் இல்ல இல்லியா?' சவுக்கடி விழுந்தது போலத் துடித்துத் திரும்பினார். 'ஏய்... ஏய் நீ என்ன சொல்ல வர்ற...'
'முப்பது வருஷத்துக்கு முன்னாடி நீங்க சொன்னதைத்தான் சொல்றேன். நமக்காவது ரெண்டு பெண். நான் ஒரே பெண். என்னைப் பிறந்த வீட்டுக்கு நிம்மதியா போகவிட்டு இருக்கீங்களா? பிரசவத்திற்குக் கூட அனுப்பமாட்டீங்க. ஆனா செலவு பூரா அவங்களே செய்யணும். நாள் கிழமைக்கு ஒரு துணிமணி உண்டா? அதுவும் பொறந்த வீட்லதான். அதோட அந்த நகை, இந்தப் பாத்திரம், பட்டுப் புடவைன்னு லிஸ்ட் நீளும். ஐநூறு ரூபாய் சம்பளம், தனியார்ன்னு பொய் சொல்லி இருநூறு ரூபாய் சம்பாத்தியம் வாங்கினிங்க. உங்க அப்பாவும் ஜவுளிக்கடையில் கணக்குப் பிள்ளை. சொந்த வீடு கூட கிடையாது. வாடகை வீடு. என் நகை நட்டை வைச்சு உங்க இரண்டு தங்கச்சியையும் கட்டிக் கொடுத்து ரெண்டு தம்பிகளையும் படிக்க வைச்சீங்க. அவுங்க கை உசந்ததும் உங்களைக் கை கழுவி விட்டு ஒதுங்கிட்டாங்க.'
'ஏதோ எனக்குத் தெரிஞ்ச தையல் தொழிலை விஸ்தாரமாச் செய்ததால் இத்தனையும் சாத்தியம் ஆச்சு. அதுக்கும் எங்க அப்பாதான் ஏற்பாடு செய்தார். நாலு மிஷின் வாங்கிக் கொடுத்து தனது பிரண் ரெடிமேட் கடையில் ஆர்டர் பிடிச்சுக் கொடுத்து என்ன பாடுபட்டு இருக்கார். இப்ப நாலு ஆள் போட்டு தைக்கிறேன். வீடு வாசல் வண்டின்னு ஆச்சு நீங்களும் தத்திகுத்தி ஏதோ அரசு வேலைக்குப் போய் ரிடையரும் ஆயாச்சு. இவ்வளவு செஞ்ச என் பிறந்த வீட்டாரை என்னைக்காவது மதிச்சு ஒரு வாய் சோறு நிம்மதியாய் போட்டு இருக்கிங்களா? வருஷந்தோறும் சண்டை வம்பு. இன்னைக்குப் பொண்ணை கும்பாபிஷேகத்திற்கு அனுப்ப வில்லைன்னு இந்தக் குதி குதிக்கிறீங்களே. என் ஒரே தம்பி கல்யாணத்துக்கு என்னை சந்தோஷமாய்ப் போக விட்டீங்களா? அரசில்வாதி மாதிரி 'ஹார்ட் அட்டாக் என்று நாடகமாடி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி அந்த நேரத்துக்கு மூணாவது மனுஷன் மாதிரி தலையக் காண்பிச்சு சீரை மட்டும் வாங்கிக் கிட்டு உடனே வந்துட்டோம். காரணம் உங்க அண்ணன் மகளைக் கட்டிக்கலைன்னு கோபம்.'
'நானும் தெரியாமத்தான் கேக்கறேன். வாய்க்கு வாய் எங்கப் பிறந்த வீட்டைக் குத்தம் சொல்ற நீங்க உங்க வீட்டுப் பொண்ணை மட்டும் காட்டணும்னு எதிர் பார்க்குறது என்ன நியாயம். என்னாலக் கவலைப்பட்டு அவமானப்பட்டு எங்க அம்மா ஹார்ட் அட்டாக்ல பொசுக்குன்னு போயிட்டாங்க. தம்பியும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டான். அதெல்லாம் கிடக்கட்டும். அப்பாவுக்கு சீரியஸ்ன்னு தந்தி வந்தபோது என்ன செஞ்சீங்க. மறுநாள் ஆடி அமாவாசை சமைச்சு வச்சுட்டுப் போன்னீங்க. நான் போய் சேர்வதற்குள் அப்பா போய் சேர்ந்து விட்டார். இப்ப என்னவோ என் சாவுக்குப் பொண்ணு வருமான்னு புலம்புறீங்க' என்றபடி நான்காவது இட்லிக்கு முன்னேறினாள்.
'ஏய் என்ன வாய் நீளுது. எப்பவோ நடந்ததை எல்லாம் இப்போ இழுக்கற. அப்ப ஏதோ குடும்ப சூழல் அப்படி ஆச்சு. அதே குடும்ப சூழல்தான் இப்ப சம்மந்தி வீட்டுக்கும்'. 'என்ன சம்மந்தி வீட்டுக்கு வக்காலத்தா, இல்லை பொண்ணைப் பெத்தவங்களுக்கு வக்காலத்து' என்றபடி ஐந்தாவது இட்லிக்கு முன்னேறினாள். 'எப்படி உனக்கு சாப்பாடு இறங்குது. நீ பொண்ணைப் பெத்தவளான்னு சந்தேகமா இருக்கு.' 'வேணும்னா புள்ளய மாத்திட்டாங்கன்னு என் பொறந்த ஊட்ல சண்டை போட்டுப் பாருங்களேன். இப்ப குத்தம் குறை சொல்ல யாரும் இல்லை. அதனாலதான் சம்மந்தி வீட்ல பாயுறீங்க. மத்தவங்களைக் குறை சொல்லும்போது உங்களப் பத்தியும் யோசிங்க' என்றபடியே இட்லி மீது பொடியைத் தூவி எண்ணெயில் முழுக்காட்டி தோய்த்து விழுங்க ஆரம்பித்தாள்.
கடன்காரி, பொடி வைத்துப் பேசுவதில் மட்டுமில்ல. இட்லிப் பொடி செய்வதிலும் கெட்டிக்காரி. எள் சேர்த்த பொடி. பொட்டுக்கடலை பொடி, தேங்காய் சேர்த்த பொடின்னு விதவிதமா செய்வதில் கில்லாடி. இப்ப தேங்காய் சேர்த்தப் பொடி வாசனை அள்ளுது. இன்னொரு முறை சாப்பிடச் சொன்னால் சாப்பிடலாம். மெல்ல இறங்கி சுதியுடன் 'அப்ப என்ன என்னதான் செய்யச் சொல்ற?'
'இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? நீங்க என்னைப் பெத்தவங்கள ஆட்டி வச்சீங்க. இப்ப உங்களை உங்க மருமவன் ஆட்டி வைக்கிறார். நாளை அவர் மருமகன் ஆட்டி வைப்பார்! இது தொடர்கதை.'
'யாராவது திருந்தினாத்தான் இது சிறுகதை ஆகும். இல்லைன்னா இது மெகா தொடர் தான்' என்றபடி உணவோடுதன் உணர்வுகளையும் சேர்த்து விழுங்கும் வசுமதியைப் பார்த்து முதன்முறையாகத் தலை குனிந்தார் மூர்த்தி. 'என்ன ஒண்ணு நீங்க இன்று உங்க பெண்ணுக்கு அழறீங்க. நேற்று நான் எனக்காக அழுதேன். இன்று மகளுக்காக அழுகிறேன். நாளை பேத்திக்காகவும் அழுவேன்' என்றவளை ஏறிடத் திராணியின்றி தானே இட்லியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார் கண்கள் கசிய.
சிறுகதை-11
கண்ணுக்குத் தெரியாத கை
பால்கனியில் நின்று லைட்டரை உயிர்ப்பித்தான் சரவணன். விலை உயர்ந்த பில்டர் சிகரெட் மெல்லப் புகைய ஆரம்பித்தது. புகையை நெஞ்சு நிறைய நிரப்பி மெல்ல வெளியேற்றினான். மனம் பரபரப்பு அடங்கி சற்றே லேசானது. அப்படி ஒன்றும் செயின் ஸ்மோக்கர் அல்ல அவன். பரபரப்பாக மனம் படபடக்கும்போது ஆசுவாசம் அடைய அவ்வப்போது சிகரெட். அதுதான் அவனுடைய சீக்ரெட்! கண்மூடி ஆழ்ந்து சுவாசித்தான். நெஞ்சில் பரவசம்.
எப்போது ஏழாம் தேதி வரும் என்று எதிர்பார்ப்பு. வழக்கமாக சிகரெட் புகைத்தால் படபடப்பு அடங்கும். ஆனால் இன்று கூடியது. மெல்ல சிரித்துக் கொண்டான். சிகரெட்டிற்குக் கூட என் மனஓட்டம் தெரிகிறது.
புகைவளையம் மேலே எழும்ப எழும்ப, அவன் அடிமனது ஆசைகளும் கூடவே மேலெழுந்தது. மெல்லக் கண்களை மூடிக் கொண்டான்.
நிஷா!
என்ன ஒரு ஸ்வீட் நேம்! ஆறு மாதம் ஆகிவிட்டது. அவள் அலுவலில் சேர்ந்து. 'கேம்பஸ்' இண்டர்வியூ மூலம் தேர்வானவள் படுசுட்டி, கெட்டிக்காரி. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவள். அலுவலகத்தில் அனைவருமே அவளிடம் தனி மரியாதையுடன் நடந்து கொண்டனர். அவள் மேல் ஒரு கண் சரவணனுக்கு. அவன் நினைத்தப் பெண்களை சுவைக்காமல் விட்டதில்லை. அவன் விரித்த வலையில் சிக்காத மான்களே இல்லை எனலாம். அப்படி ஒரு முகராசி அவனுக்கு. வயது நாற்பதை எட்டி விட்டாலும், தோற்றம் முப்பதிலேயே. ஜிம் - யோகா என்று பாடிவை நன்கு மெயின்டென்ஸ் செய்பவன். நல்ல ஊதியம். அளவான குழந்தைகள். அதிகம் கேள்வி கேட்காத மனைவி. அப்புறம் என்ன சரவணன் காட்டில் 'அடாத மழைடா, அடைமழைடா' தான்.
இளம் வயதிலேயே மேனேஜராக பிரமோஷன்; தன் அதிகாரம், அழகு, பணம் அத்தனையும் பயன்படுத்தித் தனக்குப் பிடித்தவளை வளைத்து ருசிக்கும் ஜெகஜாலம்! இது ஆபீசில் அரசல் புரசலாகத் தெரிந்தாலும் யாருக்கும் வெளியே சொல்லும் தைரியம் இல்லை; காரணம் மேலிடத்தில் அவனுக்கு இருந்த செல்வாக்கு, மற்றும் சொல்வாக்கு. ஆண்டுக்கு ஆண்டு அதிக டன் ஓவர் காட்டும் திறமை அனைவருடைய வாயையும் கட்டிப் போட்டு இருந்தது.
அவனுடைய மிடுக்கையும், நுனிநாக்கு ஆங்கிலத்தையும், தாராள செலவுகளையும் கண்டு தானே வலிய வந்து விழும் பெண்களைத்தான் இதுவரை சுவைத்து இருக்கிறான். இவர்களுள் விதிவிலக்கு நிஷா. அவனுடைய சாதுர்யமான காய் நகர்த்தலைத் தனது சாதுர்யத்தால் கண்டு கொள்ளாதது போலவே நடக்கும் நிஷா. இவள் மரக்கட்டையா? அல்லது மண்டைக்கனமா? தெரியாமல் துவண்டான்.
பின்னர் ரகசிய விசாரணை மூலம் அவள் பின்புலம் அறிந்ததும் லேசான நிம்மதி.
அல்பாயுஸில் போய்ச் சேர்ந்த அப்பா, நாலு வீட்டில பத்துப் பாத்திரம் தேய்த்துக் குழந்தைகளை கௌரவமாக ஆளாக்கிய அம்மா, ப்ளஸ் டூ படிக்கும் தம்பி, பத்தாவது படிக்கும் தங்கை. புறநகர் பகுதியில் ஒண்டுக் குடித்தனம். கார்ப்ப ரேஷன் ஸ்கூலில் மாநிலத்தில் இரண்டாவது ரேங்க் வாங்கிய நிஷா, ஸ்காலர்ஷிப் மூலம் கல்லூரிப் படிப்பு. அங்கும் மெடல். அப்புறம் என்ன? கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தற்போது சரவணனுக்குப் பர்சனல் செகரட்டரி.
எது நடந்தாலும் ஏன் என்று கேள்வி கேட்க நாதியில்லாத நிலைமை. எனவே தைரியமாக தனது அசுத்த காயை நகர்த்தினான்.
ஆம்!
அடுத்த வாரம் பெங்களூரில் நடக்கும் போர்டு மீட்டிங்கிற்கு நிஷாவையும் அழைத்துச் செல்வது. அதை அவள் மறுக்க முடியாது. அங்கு வைத்தே அவளை வீழ்த்துவது. மினிடம் ஒரு மோதிரம், சுடிதார். மேக்ஸிமம் பட்டுப் புடவை, ஒரு நெக்லஸ் வேலை முடிந்தது. அப்புறம் என்ன, ஊலலல்லாலாதான். அவளிடமும் சொல்லி விட்டான். ரயில் டிக்கட்டும் ரிசர்வ் செய்தாகி விட்டது. ஆனந்த வெள்ளத்தில் மிதந்தபடி அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
ஆடிவெள்ளி. நிரம்பி வழியும் துர்க்கையம்மன் சன்னிதி. நீர் வழியும் விழிகளுடன் நிஷா. தாயே மகிசாசுரனை சம்ஹாரம் செய்த நீ, இந்த மேனேஜர் அசுரனிடம் இருந்து என்னைக் காப்பாற்று. கணகணவென்று மணியோசை. கற்பூர ஆரத்தியில் அன்னையின் மந்தகாசப் புன்னகை. குங்குமம் வாங்கி சற்றே நிம்மதியுடன் புறப்பட்டாள் நிஷா.
சாலை விளக்குகள் ஒளிர திடுக்கிட்டு எழுந்தான். ஓ மைகாட். மணி ஏழு ஆகப் போகிறது. புறப்பட்டான். தனது சிவப்பு மாருதியில் ஏறிப் பறந்தான். வீடே நிசப்தமாக இருந்தது. வாசலில் வரவேற்கும் பவானி எங்கே? ஹாரன் சத்தம் கேட்டதும் ஓடிவந்து கேட்டைத் திறக்கும் நந்தினிக் குட்டியையும் காணோம். உள்ளே விரைந்தான்.
ஹாலில் பேயறைந்த கோலத்தில் பவானி. அழுது வீங்கிய முகத்துடன் நந்தினிக் குட்டி. அரண்டு போய் நிற்கும் மகன் ராகுல். என்ன நடக்குது, திகைத்தான்.
'என்னங்க, இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா? நம்ம புள்ளை படிக்கும் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் வந்து... வந்து...'
'சொல்லித் தொலைடி.
'நம்ம புள்ளையத் தொடக் கூடாத இடத்துல எல்லாம் தொடறாராம். நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் உனக்கு மட்டும். வராட்டிப் பெயில் போட்டுடுவேன்னு சொல்றாராம். யார் கிட்டயும் சொன்னா டி.சி. குடுத்துடுவேன், ரெட் மார்க் கோடன்னு மிரட்டுராராம். ஏங்க இப்படி வேலியே பயிரை மேயலாமா?' தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
பூமியே காலடியில் நழுவுவதாக உணர்ந்தான் சரவணன். சாரி நிஷா. என்று முனகியபடியே ரயில் டிக்கட்டைக் கிழித்து எறிந்தான். 'நந்து குட்டி அப்பா இருக்கேன் பயப்படாதே, உன்னை வேறு ஸ்கூலில் சேர்த்து விடுகிறேன். உங்க கரஸ்பாண்ட் என் பிரண்ட், என்றான் ஆதரவுடன். எதுவோ அவனுக்கு விளங்கியது.
எதிர்ச் சுவற்றில் படபடக்கும் காலண்டரில் மகிஷாசுரமர்த்தினி புன்முறுவலுடன்.
சிறுகதை-12
காக்கும் கரங்கள்
ட்ட்ரிங்ங்ங்......
போன் ஒலித்தது. எடுத்தேன். அவர் தான். 'ஏய் சரசு, சாயங்காலம் நாலு மணிக்கே வந்து விடுவேன். நம்ம சரவணன் சார் மகளுக்குக் குழந்தை பிறந்து இருக்கு; பார்க்கப் போகணும். ரெடியாய் இரு' வைத்து விட்டார்.
சரவணன் கணவருடன் பணி புரிபவர். அதையும் தாண்டி இரண்டு குடும்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு. முதலில் பக்கத்துப் பக்கத்துப் போர்ஷனில்தான் குடி இருந்தோம். பார்ப்பவர்கள் உறவா என்று அதிசயிப்பார்கள்.
இரண்டு பிள்ளைகளும் வயிற்றில் இருக்கும் போது மசக்கையில் தவித்த போது சரவணன் மனைவிதான் பெற்ற பெண் போலப் பார்த்துக் கொண்டார். அப்புறம் சொந்த வீடு கட்டி நாங்கள் இங்கு வர சற்றே தொடர்பு குறைவு. இருந்தாலும் அடிக்கடி போனிலும் நாள் கிழமையின் போது நேரிலுமாக எங்கள் உறவு தொடர்ந்தே வருகிறது. நேற்று கூட இந்த வாரம் குழந்தை பிறந்துவிடும் என்று டாக்டர் சொன்னதாகக் கூறினர்.
சட்டென இட்லி வார்த்துப் பொடியும், காரச்சட்னியும் செய்து சிறிது இடியாப்பமும் செய்து பேக் பண்ணி முகம் கழுவி, வேறு சேலைக்கு மாறவும் அவர் வரவும் சரியாக இருந்தது. காபி கொடுத்து கதவைப் பூட்டி பில்லியனில் தொற்றிக் கொண்டேன். குழந்தைகள் லீவுக்குக் கிராமம் சென்று இருந்தனர். எனவே சாவகாசமாக வரலம். குழந்தைகள் இல்லாமல் போரடித்த எனக்கு இந்த பயணம் மாற்றாக அமைந்தது.
இதோ ஹாஸ்பிடல் வந்து விட்டது. வாசலிலேயே சரவணன் வாயெல்லாம் பல்லாக, தாத்தா ஆன பரவசம். மாடியில் 10ம் நம்பர் பெட்டில் அவர் மகள் பாமா. பக்கத்தில் ரோஜாக் குவியலாகப் பெண் குழந்தை. அள்ளி எடுத்து என் கைகளில் தந்தார் சரவணனின் மனைவி லட்சுமி அக்கா. குழந்தையைக் கொஞ்சி குடும்பக் கதை பேசி புறப்பட்டோம். டிபன்பாக்ஸ் நாளை வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி விடை பெற்றோம். கீழே வந்து வண்டியை ஸ்டார் செய்ய எத்தனை உதை வாங்கியும் உறுமாமல் மௌனமாக நின்றது வண்டி. சரி, பக்கத்து மெக்கானிக் ஷாப்பில் சரிசெய்து கொண்டு வருகிறேன். நீ உள்ளே போய் உக்கார்' என்று வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்று விட்டார்.
விதியே என்று திரும்பவும் வரவேற்பு அறையில் வந்து அமர்ந்தேன். நகரின் மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனை அது. ஸ்கேன், எக்ஸ்ரே, குடும்பநல அறுவை, மகப்பேறு இல்லாதவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை, ரத்தம், நீர் டெஸ்ட் என அனைத்து வசதிகளும் தன்னுள்ளே அடக்கி நீண்டு நிமிர்ந்து விரிந்து பரந்த மருத்துவமனை.
வண்ணமயமான தோட்டம். வரிசை வரிசையாக நின்ற நான்கு மூன்று இரண்டு சக்கர வாகனங்கள். பார்த்துப் பார்த்து சொர்க்கபுரியாக அமைக்கப்பட்ட வரவேற்பு அறையில் அமர்ந்தபடி கண்களைச் சுழல விட்டேன். இளவரசி போன்ற மிடுக்குடன் கண்ணாடித் தடுப்புக்குப் பின்னே ரிஷப்ஷனிஸ்ட். கம்ப்யூட்டர், நான்கு வண்ணங்களில் தொலைபேசி, அடுக்கடுக்காகப் பைல்கள்.
வெள்ளுடை தேவதைகள் பரபரப்பாக உலவ, காத்திருப்போர் எப்போது டாக்டர் வருவார் என்று எதிர்பார்ப்புடன், மீண்டும் கண்களைச் சுழல விட்டேன். கழுத்தை இறுக்கும் டையும், காலை இறுக்கும் பூட்சுமாக மருந்துக் கம்பெனி பிரதிநிதிகள். வாட்சை அடிக்கடி திருப்பிப் பார்த்தபடியே தவிப்புடன்.
சற்று தள்ளி கலர் கலராய் வளையலும், வெட்கச் சிரிப்புமாய்த் தலைச்சன் பிள்ளைக்காரி, பக்கத்தில் நெருக்கமும், பூரிப்புமாய் இளம் கணவன், நல்ல ஜோடிப் பொருத்தம்.
அடுத்து வேர்த்து விறுவிறுத்த முகத்துடன் உதடு கடித்து வலியை விழுங்கி இப்பவோ, அப்பவோ என்று அட்மிஷனுக்குக் காத்திருக்கும் நடுத்தர வயது பெண் தோளில் முதல் குழந்தையைச் சாய்த்துக் கவுண்டரில் விபரம் கூறிக் கொண்டு இருப்பவன் தான் கணவன் போலும்.
அப்புறம் தடுப்பூசி, மாதாந்திர டெஸ்ட் என்று நீண்ட வரிசை சற்று தள்ளிக் கலங்கிய கண்களும் சற்றே மேடிட்ட வயிறுமாக ஒரு பெண் பக்கத்தில் இருப்பது மாமியாரும் புருஷனும் என்பதைப் பேச்சிலிருந்தே ஊகிக்க முடிந்தது. ஏனோ அந்தப் பெண்ணைப் பார்த்ததும் என்னுள் ஒரு நெகிழ்வு. நெருங்கி விசாரித்தேன். முதலில் பெண். இப்போது இரண்டாவது ஆறு மாதம். நேற்று ஸ்கேன் எடுத்தோம், இன்று ரிசல்ட் என்று நறுக்குத் தெறித்தது போல் மாமியார்க்காரிக் கூறினாள்.
சற்றே சலசலப்பு. டாக்டரின் வருகை. கடவுளைக் கண்டது போல் ஒரு பரசவம் காத்திருந்தோர் முகத்தில். இவரும் ஒருவிதத்தில் காக்கும் கடவுள் தானே. சந்தன நிறம், புடவையும் அதே கலரில் ஜாக்கெட்டும், நவரத்ன டாலர் சங்கிலியுமாக டாக்டர் முன்னே வர தலைவனைத் தொடரும் தொண்டர்களாக சீரான இடைவெளியில் நடைபோடும் பணிப்பெண்கள். காக்கும் கடவுளைக் காக்கும் துவாரபாலகிகளாக இரு பெண்களும் அறைவாசலிலேயே நிற்க, டாக்டர் உள்ளே சென்று அமர்ந்தார். க்யூ மெல்ல நகர ஆரம்பித்தது.
ஏழாம் நம்பர் டோக்கன் யார்? நர்ஸ் வினவ, அந்தப் பெண்ணும், கணவனும் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தனர். இறுகிய முகத்துடன் மாமியார்க்காரி. சற்றே நேரத்தில் அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக அந்த பெண் வர, புருஷனும், மாமியாக்காரியும் மௌனமாக அமர்ந்தனர். சற்றைக்கெல்லாம் நர்ஸ் அழைக்க ஆபரேஷன் தியேட்டருக்குச் சென்றாள் அந்த பெண்.
எனக்கு ஒருவாறாகப் புரிய ஆரம்பித்தது. ஸ்கேனில் இரண்டாவதும் பெண் என்றதும் அழிக்க ஏற்பாடு. அடப்பாவிகளா! முன்னாலே எங்கே போச்சு அறிவு? என்னுள் புலம்பல். பார்த்தா படிச்சவங்க போலத் தெரியுது. என்ன படிச்சு என்ன பிரயோஜனம்?
கம்சனைப் போல டாக்டரம்மா, ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைய ஒடுங்கிய குரலில் அந்தப் பெண்ணின் அலறல் வெளியே கசிந்தது. கூடவே என் கண்களும். சக்கர வியூகத்தில் புகுந்து வெளிவர முடியாது மாண்ட அபிமன்யுவின் கதியா அந்தக் குழந்தைக்கு? காக்கும் கடவுளான டாக்டருக்கு அழிக்க என்ன உரிமை இருக்கிறது. எல்லாம் காசு படுத்தும் பாடு. ஸ்கேன் அறையின் வெளியே இருந்த போர்டையே வெறித்தேன்.
ஆணா? பெண்ணா? என்று கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்ற வாசகம் என்னைப் பார்த்துக் கைகொட்டி சிரித்தது. ஒரே தலைவலி. காபி சாப்பிட்டால் தேவலாம். நல்லவேளை அதோ அவர் வந்து விட்டார். பக்கத்து ஓட்டலுக்குச் சென்றோம்.
ஏய், என்னாச்சு, ஆஸ்பத்திரி வாசனை ஒத்துக் கொள்ளவில்லையா? என்றவரிடம் மௌனமாக தலையாட்டி டிகாஷன் தூக்கலாய் சர்க்கரை கம்மியாய் இரண்டு காபி என்று சொல்லிவிட்டு இருக்கையில் கண்மூடி சரிந்தேன். மூடிய கண்களுள் ஆஸ்பிடல் சம்பவங்களின் அலைக்கழிப்பு.
'என்னம்மா, மருமவளுக்கு எப்படி இருக்கு?' 'நல்லா இருக்கா' அந்த மாமியார்க்காரியின் பதில். எனக்குப் பின்புறம் இருந்து வந்த குரல்கள் தொடர்ந்தன. எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. தலைக்குள் சிவமணியின் டிரம்ஸ் அலறல்!
'ஏதோ இந்த மட்டும் முன்னாடியே ஸ்கேன் பண்ணுனதால நல்லதாப் போச்சு. பெத்துக்கிட்டு அவதிப்படறத விட இதுமேல்தான். ஆனாலும் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுதும்மா நல்லாவே மாமியார்க்காரி நடித்தாள்!
'என்னம்மா நீ ஊருக்குப் புத்திச் சொல்றவங்க. நீங்களே இப்படி உடைஞ்ச போகலாமா? அப்புறம் அந்தப் பெண்ணுக்கு யார் ஆறுதல் சொல்றது'
'அந்தப் பொண்ணுதான் இந்த முடிவுக்கே வந்தது. நான் கூட வேண்டாம்னு தான் சொன்னேன். நல்லாத்தான் ப்ளேட்டைத் திருப்புறா, கெட்டிக்காரிதான். அந்தப் பொண்ணு இவகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிது. மகன்காரனும் சரியான அம்மாக் கோண்டு போ,. பல்லைக் கடித்தபடியே காப்பியை ஆற்றினேன். மேலும் பேச்சு தொடர்ந்தது.
'முதல் ஸ்கேனிலேயே டாக்டருக்குச் சந்தேகம். அதான் இரண்டாவது ஸ்கேன். புள்ளக்குச் சரியான மூளை வளர்ச்சி இல்லையாம். என் குழந்தைய அந்த நிலைமையில பார்க்க முடியாது. அப்படியே பெத்துக் கிட்டாலும் எனக்குப் பிறகு யார் கவனிப்பா' என்று பிடிவாதமாக இந்த முடிவுக்கு வந்துட்டா மருமவ. அவ சொல்றதும் நியாயம் தானேன்னு ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டோம். காந்திஜியே கருணைக் கொலை தப்பில்லன்னு சொல்லி இருக்காங்கன்னு டாக்டரும் சொன்னாங்க. அதான்'
எனக்குத் தலைசுற்றியது. நம்முடைய புத்தியை என்னன்னு சொல்றது. நல்லவேளை இப்பவாவது உண்மை தெரிஞ்சுது. அபாண்டமாக டாக்டரைப் பற்றி நினைச்சது எல்லாம் எவ்வளவு தப்பு. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்று இப்போதுதான் புரிகிறது. அல்லதை நீக்கி நல்லதைக் காக்கும் மகிஷாசுரமர்த்தினி டாக்டரம்மா மானசீகமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். 'என்ன ஆச்சு தலைவலி' என்றவரிடம் 'போயே போச்சு' என்றேன் உற்சாகமாய்.
'என்ன மாயம்! காபி சாப்பிட்டதும் எப்படி போச்சு' என்றவரிடம் 'வீட்டுக்கு வந்ததும் சொல்றேன். தலைவலி எப்படி வந்தது, எப்படி போச்சு' என்று கண்ணடித்து சிரித்தேன். என் உற்சாகம் வண்டிக்கும் தொற்றிக் கொள்ள 'தென்மேற்கு பருவக்காற்று சிலுசிலுவென்று வீசுது தேனிப்பக்கம்' என்று முனகியபடியே பில்லியனில் தொற்றிக் கொண்டேன். வண்டி வெண்ணையாய் வழுக்கிச் சென்றது.
சிறுகதை-13
உறவுகள்
சே... என்ன பிழைப்பு.
அலுத்துக் கொண்டாள் கீதா. நான் ரயிலில் ஏறிப் போனால் என் தரித்திரம் இஞ்சினில் ஏறி எனக்கு முன்னே போய் நிற்கிறது. அவள் தேடிவந்த தனியார் பள்ளி நிறுவனர் ஊரில் இல்லையாம். ஏதோ அவசர வேலையாம். அடுத்த வாரம் வரச்சொல் என்று கிளார்க்கிடம் கூறி சென்று விட்டாராம். அதுதான் கீதாவின் சலிப்புக்குக் காரணம். அவளுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை, வேதனை.
மனசுக்குள் குமைந்தபடி மீண்டும் பேருந்து நிலையம் வந்தாள். அவளுக்கான பஸ்ஸீக்கு இன்னும் அரை மணிநேரம் காத்திருக்க வேண்டும். கண்களை மூடியபடியே பேருந்து நிலைய இருக்கையில் சாய்ந்தாள். மூடிய கண்களின் உள்ளே அவளை அலைக்கழிக்கும் பழைய நினைவுகள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே முரளியைக் கைப்பிடித்து மண வாழ்வில் அடிஎடுத்து வைத்தாள். மாநிறம், ஆனாலும் 'ப்ருதிவிராஜ்' போன்ற எடுப்பான மிடுக்கான தோற்றம். சிரிக்கும் கண்கள், நல்ல படிப்பு நல்ல உத்தியோகம், ஒரே பிள்ளை, நல்ல வசதியான குடும்பம், அன்பான மாமியார், மாமனார், பக்கத்து ஊர். ஏற்கெனவே நல்ல அறிமுகம். வாழ்க்கை இனிமையாக ஓடியது. ஆனந்த வெள்ளத்தில் திளைத்தாள் கீதா. யார் கண்பட்டதோ முரளியின் நடவடிக்கைளில் மாற்றம். லீவு நாட்களிலும் வீடு தங்குவதில்லை. ஆபீசுக்கும் மட்டம் அடிக்க ஆரம்பித்தான். மெல்ல மெல்ல புரிந்தது காரணம். நண்பர்களின் சகவாசத்தில் குடிப் பழக்கம் ஆரம்பம். தட்டிக் கேட்ட கீதாவிடம் முதலில் சாரி சொன்னவன் பின்னர் எகிற ஆரம்பித்தான். ஒருநாள் நிலைமை ஓவராகப் போக எதிர்த்துக் கேட்டவளை ஓங்கி அறைந்து விட்டான், அதுவும் அண்ணன் ரவியின் முன்னிலையில். அப்புறம் என்ன, ரவியும், முரளியும் முட்டி மோத, பெரியவர்கள் ஏதும் புரியாமல் குழம்ப, அண்ணனுடன் பிறந்தகம் வந்து ஒருமாதம் ஓடிவிட்டது. அம்மாவும், அப்பாவும் சமாதானம் பேச முயல அண்ணன் ரவி மட்டும் கீதாவுக்கு சப்போட். 'கைநீட்டி அடித்த அந்தக் குடிகாரனுடன் குடித்தனம் நடத்த வேண்டாம், மரியாதையா டைவர்ஸ் குடுக்கணும் அந்தப்பய, இல்லாட்டி வரதட்சணை கொடுமை, மகளிர் வன்கொடுமை யின்னு கேஸ் போடுவேன்' என்று மிரட்ட கீதாவும் தலையை ஆட்டி வைத்தாள். மாமியார் மாமனார் 'கேஸ் போட வேண்டாம். குடும்பமானம் போய்விடும், என்று கெஞ்ச, 'அப்படியானால் அவனுக்குச் செய்த சீர் செனத்திகளைத் திருப்பித் தரணும். ஜீவனாம்சமாக டவுனை ஒட்டி இருக்கும் 10 ஏக்கர் நிலத்தைக் கொடுக்கணும்' என்று கண்டிஷன் போட வேறுவழியின்றி ஒத்துக் கொண்டனர் பெரியவர்கள். முரளி எத்தனையோ முறை நேரிலும், போனிலும் கெஞ்ச விரட்டி அடித்தான் ரவி. வாய் பேசாது மௌனித்தாள் கீதா.
நேற்றுதான் சொன்னான் அண்ணன். 'உன் நகையை எல்லாம் பாங்க் லாக்கரில் வைத்து விட்டேன். உனக்குப் பொழுது போகலைன்னா பக்கத்து ஊரில் என் நண்பன் தனியார் பள்ளி நடத்துகிறான். அதில் உனக்கு வேலை போட்டுத் தர்ரேன்னு சொல்லி இருக்கான். போய்ப்பார்' என்று கூற காலையில் கிளம்பி சென்ற போதுதான் அடுத்தவாரம் வரச் சொல்லித் தகவல்.
அண்ணனுக்குத்தான் என்மேல் எவ்வளவு பாசம். அவன் மிரட்டவில்லை என்றால் அந்தக் கிழங்கள் சொத்து குடுக்குமா? எனக்கு தான் வேலை கிடைக்குமா? இது புரியாமல் குட்டையைக் குழப்பும் அம்மாவும், அப்பாவும். 'எடுத்தோம் கவுத்தோம்னு இப்படி செய்யக் கூடாது. குடும்பம்னா அப்படி இப்படித் தான் இருக்கும். இப்ப நேரம், காலம் சரியில்லை. அதனாலதான் இந்தக் குழப்பம். மாப்பிள்ளை எவ்வளவு கெஞ்சுறார், இனிமே குடிக்க மாட்டேன்னு சத்யம் செய்யுறார். ஒருதடவை மறப்போம். மன்னிப்போம்'னு ஒரே அட்வைஸ். வேலை கிடைசுட்டா இந்த நச்சரிப்பில் இருந்து விடுதலைன்னு பார்த்தா இன்னும் ஒருவாரம் காத்து இருக்கணும். நானும் வேலைக்குப் போய் வாழ்ந்து காட்டணும். சம்பாதிக்கிற திமிர்லதானே கை நீளுது. கருவிக் கொண்டாள். அப்பாவும் அம்மாவும் கோயில் குளம்னு போய் இருக்காங்க. பொண்ணு புருஷனோட வாழணும்னு தலயாத்திரை; வர ஒருவாரம் ஆகும். எனவே புலம்பல் இருக்காது. நிம்மதியா டிவி பார்க்கலாம் என்று எண்ணியபடியே பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். கதவு சாத்தி இருந்தது; திறக்கப் போனவள் தன் பெயர் அடிபடவே தயங்கியபடியே திண்ணையில் அமர்ந்தாள். உள்ளே அண்ணியிடம் ரவி பேசிக் கொண்டு இருந்தான். 'ஏய் நாத்தனார் கிட்ட கொஞ்ச நாள் பாசமா நடிடி. அப்பத்தான் என் ஐடியா ஒர்க் அவுட் ஆகும்'.
'என்ன பெரிய ஐடியா, வாழற பொண்ணை வாழாவெட்டியா ஊட்ல வச்சு அழகு பாக்குறதா, புள்ள பூச்சிய மடியில கட்டிக்கிட்டது மாதிரி'
'ஏய், அவ புள்ள பூச்சி இல்லடி, பொன்முட்டை இடுற வாத்து. இன்னைக்கு அந்தப் பய முரளி சொத்துப் பத்திரத்தைக் கொண்டு வருவான். அதுக்குத் தான் அவளை அப்புறப்படுத்தினேன். நேர்ல புருஷனைப் பார்த்ததும் மனசு மாறிட்டான்னா. அதுக்குதான். அப்புறம் அவ நகைகளை லாக்கரில் வைக்கல. எல்லாத்தையும் வித்து எனக்கு இருந்த கடனையெல்லாம் அடைச்சுட்டேன். புருஷனோட போறேன்னா நகைகளைக் கொண்டான்னு கேட்பாளே. இந்தக் கிழங்களின் வாயை அடைக்க ஒரிஜினல் மாதிரி ஒரு செட் கவரிங்ல வாங்கி வச்சுட்டேன். அப்புறம் அவளுக்கு வர்ற நிலத்துக்கு ஒரு கோடி தர்றேன்னு ரியல் எஸ்டேட்காரன் சொல்லி இருக்கான். நம்ப சொத்துலேயும் பங்கு தர வேண்டாம். வேலைக்குப் போகச் சொன்னதற்குக் காரணம். கையை விட்டு சோறு போட வேண்டாம். அதோட ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்துட்டா நம்ம புள்ளை இரண்டையும் சைக்கிளில் அனுப்பி விடலாம். ஆட்டோ செலவு, ட்யூஷன் செலவு மிச்சம். அதோட வீட்டு வேலையிலும் ஒத்தாசையா இருப்பா. எனவே வர்ற மாசத்தில் இருந்து வேலைக்காரிய நிப்பாட்டப் போறேன். நல்ல வேளை புள்ளை எதுவும் பிறக்கல. எல்லா சொத்தும் நமக்குத்தான். நம்ம வீட்டுக் கிழங்கள் இரண்டும் வருவதற்குள் எல்லாத்தையும் செட்டில் செய்யணும். அதுகளுக்கு மூக்கு வேர்த்து விட்டால் முட்டுக்கட்டை போடுங்க. எப்படி நம்ம ஐடியா?'
'அதனாலே எல்லாமே கைக்கு வரும்வரை நாத்தனாரை உள்ளங்கையில் வைத்துத் தாங்கு. இப்ப அந்தப்பய முரளி வந்துடுவான். அத்தோட இந்தப் பையில் பாரின் சரக்கு இரண்டு பாட்டில் இருக்கு. பத்திரமா எடுத்து வை. இந்த சந்தோஷத்தைக் கொண்டாடணும். போன வாரமே அது என்னன்னு இந்தப் பசங்க துளைத்து எடுத்துட்டாங்க. அதுக கண்ல படாம மறைவா வை. இப்ப அந்தப்பய முரளி வந்துடுவான்' என்று ரவி கூறுவதைக் கேட்டதும் தலை சுற்றியது கீதாவுக்கு. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. வர்றது யாரு, முரளியேதான். வண்டி சத்தம் கேட்டதும் ரவி சட்டென வெளியில் வந்தான் கீதாவைக் கவனிக்கா மலேயே. ரவியிடம் முரளி நீட்டிய பத்திரத்தை இடைமறித்து வாங்கினாள் கீதா.' குடுத்தாச்சுல புறப்படு' என்று அதட்டியவனைக் கையமர்த்திய கீதா, பத்திரத்தை சுக்கல் சுக்கலாக கிழித்து எறிந்தாள்.'ஏய் என்ன பயித்தியமா' என்ற ரவியிடம், 'இல்ல இப்ப தெளிந்து விட்டது' என்றாள் நமட்டு சிரிப்புடன்.
சட்டென்று முரளியின் வண்டியில் தொற்றி ஏறியவள் 'நம்ம வீட்டுக்குப் போகலாம்' என்று அவன் காதில் கிசுகிசுத்தாள். 'ஏய், ஏய் எங்கேப் போறே, யாரைக் கேட்டுட்டு போறே' என்று பின்னேயே ஓடி வந்தவனிடம் கீதா கூறினாள். 'என் மகனை கேட்டுட்டுப் போறேன். இவ்வளவு கேவலமான மாமா வேண்டாம்னு சொல்றான். அதான்'.
சட்டென அவள் கைபற்றி 'தேங்க் காட்' என்று கண்ணீருடன் கூறிய முரளி வண்டியை ஸ்டார்ட் செய்தான். செய்வதறியாது முகம் வெளுத்துத் தலை குனிந்தான் ரவி.
சிறுகதை-14
புதிய பாதை
கனத்த மௌனம்!
இரண்டு மகன்கள், அவர்கள் மனைவிகள், குழந்தைகள், மைத்துனன் சிவா, அண்ணன் முருகையன் என வீடு நிறைய உறவுகள் இருந்தும் மௌனம். மெல்ல மச்சினன் சிவாதான் பேச்சை ஆரம்பித்தான்.
'அத்தான் நீங்க செய்யுறது உங்களுக்கே நியாமாப்படுதா?'
'என்ன பெரிய நியாயத்தைக் கண்டுட்ட' சீறினார் ஆறுமுகம்.
'அது இல்ல வந்து.. வந்து இந்த வயசுக்கு மேல இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சா ஊரு உலகம் என்ன சொல்லும்?'
'அவுங்களப் பத்தியும்தான் ஊரும் உலகமும் காறித் துப்பிச்சுது. அதுக்காக யாரும் முடிவை மாத்திக்கலிய. அதையெல்லாம் கேட்டியாநீ?'
'இல்ல.. அதுக சிறிசுகள் ஏதோத் தெரியாத்தனமா நடந்துகிட்டுதுங்க. இனிமே அப்படி விட்டேத்தியா நடக்கமாட்டாங்க'
'இப்ப வக்காலத்து வாங்க வர்றிய, அப்ப எங்க போச்சு உன் புத்தி.'
'அத்தான் நடந்தது நடத்ததா இருக்கட்டும். இனிமே நடக்கப் போறது நல்லதாவே இருக்கும்.'
'அதைத்தான் நானும் சொல்றேன். இனிமே நடக்கப் போவது நல்லாவே நடக்கும். அதுல எந்த மாற்றமும் இல்லை' உறுமினார் ஆறுமுகம்.
இதுவரை மாமாவை முன்னே களம் இறக்கிப் பின்னே பதுங்கி இருந்து கவனித்த மகன்கள் இருவரும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தனர்.
'கிழவனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கலன்னு காறித் துப்புறாங்க. வெளில தலைக்காட்ட முடியல.'
'அம்மா போன ரெண்டு வருஷமா அடுத்தத் தெருவுலதான இருக்கீங்க ரெண்டு பேரும். என்னை சோத்துக்கு ஆலாப் பறக்க விட்டுட்டு வாடகை வீட்டுக்கு மாறினீங்க. ஆபிஸ் கிட்ட இருக்கு, பள்ளிக்கூடம் கிட்ட இருக்குன்னு சாக்கு. அம்மா இருக்கும்போது இருந்த அதே ஆபிஸ், அதே பள்ளிக்கூடந்தானே. அப்போ அம்மா உங்க பெண்டாட்டிகளை உட்கார வச்சு விதம் விதமா ஆக்கிப் போட்டா. அவங்களும் ஒரு கையில டிவி. ரிமோட்டும், மறுகையில செல்போனுமாப் பொழுதைப் போக்கினாங்க. போதாக்குறைக்கு அவளைப் பத்தி போட்டுக் குடுப்பாங்க. நீங்களும் அதைக் கேட்டுக்கிட்டு ஆடினீங்க. பொறுத்தது போதும்னு பொசுக்குன்னு போய் சேர்ந்துட்டா, என்னை நட்டாத்துல விட்டுட்டு. விதம் விதமா கிழத்துக்கு ஆக்கிப் போட முடியாதுன்னு கிளம்பிட்டீங்க. உங்க அத்தனை பேரையும் உக்கார வச்சு அந்தக் கிழம்தானே விதம் விதமா ஆக்கிப் போட்டுச்சு? சோறு போட்டா பணம் குடுக்காமலாப் போயிடுவேன்?'
'ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கல முதியோர் இல்லத்துல சேரவும் இஷ்டம் இல்ல, நான் வளர்ந்து வாழ்ந்த இடத்துலேயே கடைசி காலத்தைக் கழிக்க ஆசைப்படுகிறேன். இது தப்பா?'
'நல்லா ஆசைப்படுங்க, யார் வேண்டாங்கறது. அதுக்கும், இப்ப நீங்க எடுத்து இருக்கற முடிவுக்கும் என்ன சம்பந்தம்?'
பாத்ரூம்ல வழுக்கி விழுந்து, படுத்த படுக்கையாக் கிடந்தப்போ கூட என்ன, ஏதுன்னு எட்டிப் பார்க்கல ஒருத்தரும். இப்ப ஒட்டு மொத்தமா வந்து இருக்கீங்க எல்லாரும். அடுத்த வீட்டு பார்வதிதான் என்னை கவனிச்சுக்கிட்டா. அவளும் என்னைப் போலத்தான், தனிக்கட்டை. புருஷன் போய்ச் சேர்ந்து 10 வருஷம் ஆச்சு. புள்ள குட்டியும் கிடையாது. அண்ணன் வீட்டுல தங்கிக்கிட்டு நாலுவூட்ல பத்துப் பாத்திரம் தேய்ச்சு வயிறு வளர்க்கிறா. அவ மனிதாபிமானத்தோட எனக்கு ஒத்தாசை செஞ்சத ஊதி ஊதிப் பெருசாக்கி அவளை அவமானப்படுத்திட்டீங்க. அவளுக்கும் அம்பது வயசாயிட்டுது. நாதியில்ல. அதனால நீங்க செஞ்ச அவமானத்தைத் தொடைக்கிறதுக்கு எனக்கு வேற வழி தெரில. அதனாலதான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். நாங்க ஒண்ணும் உடல் சுகத்துக்காக இந்த முடிவுக்க வரல. தம்பதிகள் என்ற போர்வையில் நண்பரகளாகத் தான் இருக்கப் போகிறோம். யார் என்ன சொன்னாலும் அதைப் பத்திக் கவலை இல்ல.
நீங்க பதட்டப்படுவது எதுக்குன்னு நல்லாவேத் தெரியும். சொத்துப் பார்வதிக்குத் போயிடுமேங்கிறது தானே உங்க பயம்?' அனைவரும் தர்மசங்கடத்தில் நெளிந்தனர். தொடர்ந்தார் ஆறுமுகம்.
'நேற்றே உயில் எழுதிட்டேன். நிலத்தை உங்க பேருக்கு எழுதி வச்சுட்டேன். இந்த வீடு எனக்கும், பார்வதிக்கும். பிறகு உங்களுக்கே. என் சேமிப்பு பணத்துல வரவட்டி அவ வயித்துக்குப் போதும். அவளுக்குப் பிறகு அந்தப் பணத்துக்கும் நீங்கதான் வாரிசு. பொறந்த கடமையை நீங்க ஒழுங்காச் செய்யலன்னாலும் பெத்தக் கடன ஒழுங்காச் செய்யாட்டி ஊருலகம் காறித் துப்புவாங்கல்ல, என்ன' என்று நிறுத்தினார்.
'என் மேல இருக்குற கோவத்துல பார்வதியை மெரட்டினிங்கன்னா எல்லா சொத்தும் அனாதை இல்லத்துக்குப் போயிடும் ஜாக்கிரதை. அதை தடுக்க எந்தக் கட்டாயப் பஞ்சாயத்துக்கும் அதிகாரம் இல்லை. எல்லாம் நானே சுயமா வாங்கியது' என்றவரை இடைமறித்தார் அண்ணன் முருகையன். 'ஆயிரம்தான் இருந்தாலும் நாளைக்குக் கொள்ளி போட்டுத் திவசம் திங்கள்னு செய்யப் போறது அவுங்கதானே?'
'அந்தச் சிரமமும் அவுங்களுக்கு வேணாம்னுதான் 'உடல்தானம்' செய்ய முடிவு செஞ்சு இருக்கோம் இரண்டு பேரும்' மிரண்டு போனார் முருகையன்.
அதுமட்டுமல்ல, ரெண்டு அனாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்து படிக்க வைக்கப் போறோம். பெத்த புள்ளங்கதான் என்னை அனாதையா உட்டுட்டீங்க. அதனால அனாதைப் புள்ளங்களப் பெத்தப் புள்ளங்களா வளர்க்க முடிவு எடுத்த இருக்கோம். அதுக்கெல்லாம் பணம் வேணும்ல, அதனால நான் ஜவுளிக்கடையில கணக்கு எழுதப் போறேன். பார்வதி பத்து பேருக்கு மெஸ் மாதிரி சமைச்சுக் கொடுக்கப் போறா. அதனால கிழவன் எப்ப நம்மகிட்ட வந்து ஒட்டி விடுவானோன்னு பயப்படாம இருங்க. ஆங், சொல்ல மறந்துட்டேன். நான் 'ரிஜிட்டிரார்' ஆபிஸ் போறேன். வருவதற்குள் உங்களுக்கு என்ன சாமான்கள் வேணுமோ அத்தனையும் எடுத்துக்கிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க. அப்புறம் அண்டாவைக் கொண்டா, குண்டானைக் கொண்டான்னு கட்டப் பஞ்சாயத்துக்கு வராதீங்க' கம்பீரமாகப் புறப்பட்டார் ஆறுமுகம். எதிர்வீட்டு எஃப்.எம்மில் கர்ஜித்துக் கொண்டு இருந்தார் டி.எம்.எஸ்.
"யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடாப் போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க"
சிறுகதை-14
ஒரு தாயின் கடிதம்
"என்னங்க பொண்ணு இப்படி சொல்லிவிட்டு போறா எனக்கு பயமா இருக்குங்க".
ஐந்து வருஷமாப் பயந்தது போதும். இனிமேலும் என்னால் பயப்படமுடியாது. முடிஞ்சா அனுசரிச்சுகிட்டு இருக்கட்டும்; இல்லாட்டி புள்ளைங்களோட வந்துடச் சொல்லு. நான் சோறு போடுறேன்.
"புள்ளைங்களைத் தரமாட்டேன்னு சொல்லிட்டா?"
புடிச்ச பீடை உட்டுதுன்னு கைய வீசிகிட்டு வரச்சொல்லு. ஆயுசுக்கும் சோறும் துணியும் நான் தர்றேன். தெளிவாச் சொல்லிப்புடு உன்பெண்ணுகிட்ட. நான் நாளைக் காலை முதல் பஸ்சுக்குப் புறப்படனும். திருச்சியில் மீட்டிங் வர இரண்டு நாளாகும். நல்லதா ரெண்டு செட் ட்ரெஸ் எடுத்து வை விடியற்காலையில் கிளம்பனும் சாப்பாட்டை எடுத்துவை." அதட்டலாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
பொங்கிக் கொண்டு வந்தது மீனாட்சிக்கு. "என்ன மனுஷன் இவர். ஒரே மகள் அப்படி நொந்து போய் அழுது புலம்பிகிட்டுப் போறா. இவர் கொஞ்சம் கூட அலட்டிக்கவே இல்லை. இந்த ஆண் பிள்ளைகளே இப்படித்தானா?"
அங்கே மகளைக் கடித்துக் குதறும் மருமகன். இங்கு மௌனமாகக் கழுத்தறுக்கும் இவர். மாசம் ஒரு முறை இவர் மீட்டிங்குன்னு போறது எதுக்காக? கூட வேலை பார்க்கும் லதாவோட கும்மாளம் போடத்தானே? அதையெல்லாம் கண்டும் காணாம இருப்பது நான் பெற்ற மக்களுக்காகத் தானே? ஒற்றைப் பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டு நாய்படாத பாடு. பிள்ளை இஞ்ஜீனியரிங் படிக்கிறான். ஹாஸ்டல் வாசம். அவன் கிளம்பி என்ன பாடுபடுத்தப் போறானோ?
சே என்ன வாழ்க்கை சுயமரியாதையை அடகு வைத்து ஊருக்காக வாழ்ந்து...ஹீம் என்னத்தக் கண்டேன் மௌனமாக ட்ரெஸ்சை அயர்ன் பண்ண ஆரம்பித்தாள்.
அயன் பாக்ஸ் மிதமான உஷ்ணத்துடன் துணியில் உலாவர, அவள் எண்ணங்கள் அதீத உஷ்ணத்துடன் நெஞ்சில் உலாவந்தது.
ஒரே மகளை பார்த்துப் பார்த்து தகுதிக்குமேல் செலவு செய்து திருமணம் செய்து கொடுத்து அடுத்த ஆண்டே இரட்டைக் குழந்தை பிறக்க வளைகாப்பு சீமந்தம் ஆஸ்பத்திரி அது இது என்று செலவுகள் கழுத்தை நெறிக்க முழி பிதுங்கி விட்டது.
இதற்குள் தனியாரில் வேலை பார்த்த மருமகன் சொந்த பிசினஸ் பண்றேன்னு போட்ட நகைகளைத் தொலைக்க, வறுமையின் நிறம் சிவப்பு என்பது நிதர்சனமாயிற்று. ஏற்கனவே அம்மாக் கோண்டான மாப்பிள்ளை. இரண்டு தங்கை தம்பி அம்மா அப்பா என வீடு நிறைய கூட்டம்.
ஒரே பெண் தானே அதைச் செஞ்சாஎன்ன இதைச் செஞ்சா என்னன்னு கேட்கிறாங்க என்று கோரிக்கையுடன் வரும் மகள். மகன் வரும் மகிழ்ச்சியை விட அவள் என்ன கேட்கப் போகிறாளோ என்ற திகில் எப்போதும் அடிவயிற்றில். ராசி இல்லாத மகளை எங்க தலையில் கட்டி விட்டாங்க. அதை ஈடு கட்டவே இந்த வசூல் வேட்டை என்ற வியாக்கியானம் வேறு.
யோசித்துப் பார்த்ததில் பொருளாதாரத்தின் பொருள் தான் தாரம் என்று உண்மை உரைக்க ஆரம்பித்தது அரைகுறையாய் விட்ட கம்ப்யூட்டர் படிப்பைத் தொடரச் செய்து வேலையும் கிடைத்து இரண்டு மாதசம்பளமும் வாங்கி விட்டாள் உஷா. இது எதையுமே கண்டு கொள்ளாத கணவன் நடேசன் சிறு சேமிப்பு முகவராக மீனாட்சி பணி புரிந்ததால் கணிசமான வருமானம் அதை வைத்தே உஷாவுக்கு வேண்டியதைச் செய்தாள் மீனாட்சி.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நிம்மதியாக உண்டு உறங்க ஆரம்பித்தாள் மீனாட்சி அந்தநிம்மதியில் இடி விழுந்தது இன்று உஷா கொண்டு வந்த செய்தியால். விஷயம் இதுதான்.
உஷாவின் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி வேலைக்குத் தேர்வானாள். வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்யூட்டர் ஆப்ரேட்டர் பணி. அங்குதான் வில்லங்கம் அரங்கேறி இருக்கிறது.
முறைப்படி தேர்வானவளுக்கு ஐம்பது ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கின்றனர் அங்கு இருந்த பழம் பெருச்சாளிகள். எங்களைக் கலக்காமலே மாப்பிள்ளை கடன் வாங்கி லஞ்சம் தந்து இருக்கிறார். மாதா மாதம் அவள் சம்பளத்தில் இருந்தே வட்டியுடன் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
உஷா வேலை பார்க்கும் அலுவலகம் அருகே ஒரு நகைக் கடை. அதில் நகை சீட்டு சேர வேண்டுமென கடை அதிபர் கோரிக்கை வைக்க அனைவரும் சீட்டில் சேர்ந்தனர். உஷாவையும் வற்புறுத்த மறுத்து இருக்கிறாள்.
அப்போது அவள் நாக்கில் ஏழரைச்சனி. வேலைக்கு கொடுத்த லஞ்சப் பணத்திற்குத் தவணை கட்டவே திணறுகிறேன் எனவே சீட்டில் சேரமுடியாது என்று கூறி இருக்கிறாள்.
இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வேலைக்கு லஞ்சம் என்று சில உண்மை விளம்பிப் பத்திரிகைகள் உரிக்க நேர்மையான மாவட்ட ஆட்சியருக்கு டென்ஷன் தவிக்கிறார் தன் வரம்புக்கு உட்பட்ட அலுவலகம் அத்தனையிலும் ரகசியமாகத் தகவல் சேகரிக்க ஏற்பாடுகள் செய்கிறார்.
அப்புறம் என்ன!
உஷா லஞ்சம் வழங்கியது மாவட்ட ஆட்சியருக்கு தகவல் பறக்கிறது. கூடவே பெருச்சாளிக்கும் தகவல் கசிகிறது. காட்டிக் கொடுக்காவிட்டால் சீட்டைக் கிழிப்பேன் என்று கலெக்டர் விரட்ட, காட்டிக் கொடுத்தால் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவோம். கலெக்டர் மூணுமாசத்தில் கிளம்பிடுவாரு. அப்புறம் எங்ககிட்டதான் குப்பை கொட்டணும், உனக்கு ரெட் மார்க்குடுத்து சஸ்பெண்ட் செய்து விடுவோம்னு பெருச்சாளிகள் மிரட்ட அரண்டு போன உஷா புருஷன்கிட்ட சொல்லியிருக்கிறாள்.
அவரும் லஞ்சம் வாங்கியவரிடம் எகிற உள்ளுர் ரவுடி மூலம் பதில் வந்தது. அவர் கிட்ட எசகு பிசகா நடந்து கிட்டா உங்க பெண்டாட்டி மானத்தை எப்படி வாங்குறதுன்னு எங்களுக்குத் தெரியும் என்று எச்சரிக்க. உடனே மருமகன் அவனைப் போட்டுத் தள்ளுவேன் என்று உதார்விட மறுபடியும் உஷா கண்ணீருடன் காலையில் ஆஜர்.
அதுக்குதான் இந்த மனுஷர் இப்படிப் பேசுறாரு பேரப்புள்ள எடுத்துட்டு பலானடூர் போறார். மகளுக்கு ஆயுசுக்கும் சோறு போடுவாராம் சுகத்தையாரு தர்றதாம். புரிஞ்சுதான் பேசுறாரா; இல்ல புரியாததுபோல நடிக்குறாரா? கண்ணீருடன் வேலை முடித்துப் படுக்கும் போது இரவு மணிபத்து
விடிஞ்சும் விடியாமலும் நடேசன் கிளம்பிவிட்டார். ஜீரம் அளவாய் கொதிக்கப் படுக்கையிலேயே கிடந்தாள். மாலைதான் எழுந்தாள் எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. பிரதோஷம் என்பது நினைவுக்கு வர அவசரம் அவசரமாகக் குளித்து குக்கரில் ஒருகை அரிசி வைத்து கோவிலுக்கு அவசரம் அவசரமாகப் புறப்பட்டாள்
கோவிலுக்குள் நுழையவும் அபிஷேகம் ஆரம்பம் ஆகவும் சரியாக இருந்தது. கண கணவென்று மணி ஒலிக்கப் பால் அபிஷேகம்."அப்பனே என் வயிற்றிலும் பால் வார்க்கனும், பெற்ற வயிற்றைக் குளிரவைக்கனும்" கண் மூடிப் பிரார்த்தித்துப் பிரசாதம் வாங்கித் திரும்பும் போது மனம் சற்றே லேசானது வழியில் ஆட்டோவில் ஏதோ அறிவிப்பு.
"நாளைக் காலை பத்து மணி அளவில் மாவட்ட ஆட்சியரின் குரை தீர்க்கும் நாள் முகாம். உள்ளுர் பள்ளிக்கூடத்தில். அவரவர்கள் குறைகளை மனுவாக எழுதித் தர வேண்டும். உடன் ஆவன செய்யப்படும் என்ற அறிவுப்பு கூடவே நோட்டீசும் விநியோகம்.
இரவு நெடு நேரம் ஆகியும் உறக்கம் வரவில்லை. சாப்பிடவும் தோன்றவில்லை. சாதத்தில் தண்ணீர் ஊற்றிவைத்துவிட்டுக் காப்பியும் பிரட்டும் சாப்பிட்டாள். ஒரு முடிவுடன் எழுந்து எழுத ஆரம்பித்தாள்.
வணக்கம்!
மதிப்புற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கட்கு எழுதுவது இது கடிதம் அல்ல. கருணை மனு.
பிரச்சனைக்குரிய வட்டாட்சியர் அலுவலக கம்யூட்டர் ஆப்ரேட்டர் உஷாவின் தாய் நான். மிகுந்த போராட்டகளுக்கிடையே தற்போதுதான் மகள் வாழ்வில் சற்றே வெளிச்சம். அதற்குள் இந்தலஞ்சப் பிரச்சனை.
இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் அவள் நிலை என் எதிரிக்குக் கூட வர்வேண்டாம். ஒரு புறம் உங்களுடைய கண்டிப்பு. மறுபுறம் அவர்களின் மிரட்டல். அவர்களை வெட்டிப் போடுவேன் என்று வெற்றுச் சவடால் அடிக்கும் மருமகன். வேலை போய் விட்டால் அந்த வீட்டில் எனக்கு வேலை இல்லை. எனவே இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை என்று புலம்பும் மகள். விட்டேத்தியான என் கணவர். மகளுக்காகவே வாழும் நான்.
அவளுக்கு எதுவும் ஆகிவிட்டால் என் மரணமும் திண்ணம். எங்கள் நால்வரின் உயிரும் உங்கள் கையில் எங்களுக்கு வாழ்வாசாவா என்பதைத் தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
சட்டப்படி முடிவெடுக்காமல் தர்மப்படி முடிவு எடுக்கும் படி.
மன்றாடும் ஒரு தாயின் தாய் மீனாட்சி.
என்று எழுதிமுடித்துக்கவரில் போட்டு வைத்துப் படுக்கையில் விழுந்தாள். எப்போது உறக்கம் வந்தது என்பது அவளுக்கே தெரியாது.
எழும் போது மணி எட்டு. பரபரவென்று எல்லாவேலையும் முடித்துக் குளித்து ஒருவாய்காபி குடித்து நேற்று தண்ணீர் ஊற்றிய சாதத்தை டப்பாவில் போட்டு மோரும் உப்பும் கூடவே ஒரு நாரத்தங்காய் ஊறுகாய்துண்டையும் போட்டு பாட்டிலில் தண்ணீர் பிரஷர் மாத்திரை சகிதம் புறப்பட்டாள் கடிதத்துடன். பள்ளிக்கூடத்தை அடையவும் சைரன் ஒலிக்க சரேலென கலெக்டரின் வாகனம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
டவாலி முன்னதாக இறங்கிக் கதவைத்திறந்து விட நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாகக் கலெக்டர். சம்பிரதாயமாக விழா துவங்க அவரவர் மனுக்களுடன் வரிசைகட்ட மீனாட்சியும் வரிசையில் இணைந்தாள்.
ஒவ்வொரு மனுவாக வாங்கிப் படித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆவன செய்யும்படி அறிவுறுத்தவரிசை நகர்ந்தது. மீனாட்சியும் கைகள் நடுங்க மனுவைக் கொடுத்து பதைப்புடன் ஏறிட்டாள்.
படித்து முடித்தவரின் கண்கள் அவளைத் தீர்க்கமாக ஊடுருவ கடிதத்தின் மீது பேப்பர் வெயிட்டை வைத்தார். கழுத்து நரம்பு புடைக்க முகம் சிவந்து குப்பென்று துளிர்த்த வியர்வையை கைக்குட்டையால் ஒற்றி ஒருமிடறு தண்ணீர் குடித்தவர் "நெக்ஸ்ட்" என்றார்.
தவிப்புடன் நகர்ந்தவளுக்குத் தலைசுற்றியது கலெக்டரின் பார்வைபடும் இடத்தில் அமர்ந்தாள். அடிக்கடி அவருடைய பார்வை மீனாட்சியின் பார்வையை சந்தித்து சடேரென்று வெட்டித் திரும்ப முள்ளின் மேல் அமர்ந்தது போல் தவித்தாள் மீனாட்சி. இதற்குள் மதிய உணவு இடைவேளை வர கூட்டம் கலைய ஆரம்பித்தது. தானும் கொண்டு வந்த பழைய சாதத்தை சாப்பிட பசி மயக்கமும், பிரஷர் மயக்கமும் கைகோர்க்க வேப்பமர முடிச்சில் சற்றேதலை சாய்த்தவள் "ஜனகணமன" என்று தேசியகீதம் ஒலிக்க வாரி சுருட்டி எழுந்தாள்.
கூட்டம் முடிந்துவிட்டது. தேசியகீதம் முடியும் முன்னே முண்டியடித்துக் கலைந்த கூட்டம். மேடையில் கலெக்டர் பரிவாரமும் உள்ளுர் பிரமுகர்களும் மட்டும். தனித்து நின்ற மீனாட்சி நிராசையுடன் நகர வேகமாக வந்த டவாலி அவளுடை கடிதத்தை அவளுடைய கைகளில் திணித்து விரைந்தார்.
அவளைக் கடந்த கலெக்டரின் பார்வையும் உடல்மொழியும் ஏதோ உணர்த்துவது போல் சட்டென கடிதத்தைப் பிரித்துப் பார்தவளுக்கு அதிர்ச்சி. கருணைமனு என்று முடித்த இடத்திற்குப் பக்கத்தில் பச்சை மசியில் முத்து முத்தாக "ஏற்கப்பட்டது" என்ற ஒற்றை வார்த்தை.
கையெடுத்துக் கும்பிட்டாள் கண்ணீருடன் தலையசைத்து அதைஏற்று சட்டென வண்டியில் ஏறியகலெக்டர் ஆயாசத்துடன் கண்களை மூடினார் வண்டி புறப்பட அவர் நினைவுகள் பதினைந்து ஆண்டுகள் முன்னே சென்றது.
அவர் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த நேரம் புகுந்த வீட்டாரின் டார்ச்சர் தாங்காது வயிற்றுப் பிள்ளையுடன் தீக் குளித்த அவர் அக்காவின் உருவம் நெஞ்சில் நிழலாடியது.
"அக்கா அன்று உன்னைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இன்று ஒரு தங்கையையும் இரு குழந்தைகளையும் காப்பாற்றி விட்டேன்" என்று உள்ளுக்குள் முனகிக் கொண்டவர் சட்டென சுதாரித்து அடுத்த வியூகம் அமைத்து பெருச்சாளிகளை வேட்டையாட முனைகிறார் கலெக்டர் புருஷோத்தமன்!
நிஜங்கள்
அம்மா இருந்தாலும் சுத்த மோசம் ராதா. 'எத வச்சு சொல்ற கீதா?' 'பின்னே என்ன? சித்தி மாங்கு மாங்குன்னு அப்பா காரியம் எல்லாம் பார்த்துகிட்டா. எவ்வளவு அழுகை; அம்மா ஜடம் மாதிரி இருந்தா, அழக்கூட இல்லை. வந்தவளுக்குத் துக்கம் கொடுப்பதில் இருந்து நமக்கு அடிக்கடி காபி - ஜீஸ் கொடுப்பது வரை அவதான் பார்த்துக்கிட்டா. வைதீக காரியம் எதுவும் வைக்காம எவ்வளவு நேர்த்தியா செஞ்சா'.
'இந்த அம்மா என்னன்னா சித்தி முகத்தைப் பார்க்காமல் பேசுறதும், ஒற்றை வார்த்தையில் பதில் சொல்றதும் நல்லாவா இருக்கு? என் பிரண்சுகளே சொன்னாங்க, உங்க சித்தி மாதிரி கிடைக்கக் குடுத்து வச்சு இருக்கணும் என்று. இத்தனைக்கும் நாம பிறந்தபோது அவதான் இங்கேயே அப்பா வேலை பார்த்தக் கல்லூரியில் படிச்சுக்கிட்டு நம்மைக் கவனிச்சுக்கிட்டாளாம். பாட்டி சொல்லி இருக்காங்க. பாட்டி, தாத்தா கூடவும் அம்மா அதிகம் பழக மாட்டா'
'அப்பா கிட்ட மட்டும் அம்மா சௌஜன்யமா இருந்தாளா என்ன? சித்திகிட்ட பேசுற மாதிரிதான் முகத்தைப் பார்க்காமல் பேசுறது. முத்து உதிர்ந்திடுமோ என்ற நினைப்பு. உண்டு - இல்லைன்னு தலையத் தலைய ஆட்டுகிறது. பாவம் அப்பா. எவ்வளவு துடிப்பானவர். கலகலப்பாப் பேசுறவர். அவருக்குன்னு இந்த தொட்டாச் சிணுங்கி அம்மா வாய்த்தது எப்படி?'
'இப்படிப்பட்ட அம்மாவை மத்தவங்க முன்னாடி விட்டுக் குடுக்காம என் சாரதா போல வருமான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அப்பா. அம்மாவோட டார்ச்சர் தாங்காமத் தான் அம்பது வயசிலேயே ஹார்ட் அட்டாக்குல போய்ச் சேர்ந்துட்டாரோ? சித்தி வீட்டுக்குப் போகும்போது நல்லாத்தானே அப்பா போனாங்க. வந்ததும் நெஞ்சை வலிக்குதுன்னு சொன்னாங்க. டாக்டர் வருவதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு. அப்போகூட அம்மா மௌனமாக வெறித்தபடி தானே இருந்தாள். பதறவில்லை, கதறவில்லை ஏன்?
,ஆமாம், இந்த அம்மாவுக்கு என்ன ஆச்சு? எப்போதும் தையல்மிஷினைக் கட்டிக் கொண்டு அழறா. நமக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இது நடக்குது. 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' சுஹாசினி மாதிரி இது நடக்குது. இவ தைச்சுதான் இங்க விடியப் போவுதா? அப்பா இருக்கும் போதும் தைச்சா, இப்ப அப்பா போய் ஒரு மாசம் கூட ஆகல, மறுபடியும் தைக்க ஆரம்பிச்சிட்டா இரவு பூரா இடுப்புவலி, முழங்கால் வலின்னு முனகல். பகல்ல தையல் தேவையா? அப்பா இருக்கும் போதும் நல்ல சம்பளம். அப்பா போனதும் பென்ஷன் வருது. சொந்த வீடு. அடுத்த வருஷம் நம்மப் படிப்பு முடிஞ்சிடும். கேம்பஸ் இண்டர்வியூல கட்டாயம் ஜெயிச்சிடுவோம். அப்புறம் என்ன கவலை அம்மாவுக்கு? சித்தி வந்து இருக்கா, அவளை வச்சுகிட்டு இதுக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டணும். அம்மாவ இப்படியே விடக்கூடாது. இரட்டையர்களான ராதாவும், கீதாவும் மாறி மாறிப் பேசி ஒரு முடிவுடன் மொட்டை மாடியில் அம்மாவைக் காணச் சென்றார்கள். சித்தியின் கேவல் தங்கள் பெயர் அடிபடவே தயங்கி நின்றனர் படிக்கப்படிலேயே.
'அக்கா நான் செஞ்சது தப்புதான். சிறுவயசுல அத்தானிடம் மயங்கி, அவரும் அதற்கு இணங்கித் திருமணத்திற்குப் பின்னும் எங்கள் உறவு தொடர்ந்தது. என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்தது வசதியாய்ப் போச்சு. உன் வீட்டில் தங்கிப் படித்த போதே தொடங்கிய உறவு. நீ நம்ம பெற்றோரிடம் முறையிட்டாய். அவர்கள் கண்டு கொள்ளவில்லை. கையாலாகாத அப்பாவுக்கு அத்தான் மூலம் வரும் வரும்படி கண்ணை மறைத்தது. அப்புறம் எனக்குக் கல்யாணம் ஆச்சு. நீ எதுவும் என்னைக் கேட்டுக்கல. பிறந்த வீட்டையும் மறந்துட்ட. அப்பா, அம்மா இறந்தபோது கூட நீ இப்படித்தான் மௌனமாக இருந்தாய்.
இருந்தாலும், எங்க உறவு தொடர்ந்தது. ஆனா அத்தான் மட்டும் புலம்புவார். நீ மனசலவுள அவரை விட்டு விலகிட்டேன்னு. எங்க தப்ப நான் நியாயப்படுத்தல. சாவுற அன்று கூட என் வீட்டுக்கு வந்துட்டுத் தான் போனாரு. அப்பகூட உன்னைப் பத்திதான் சொல்லிகிட்டு இருந்தாரு. நீ சண்டை போட்டாக்கூட தேவலாம். இப்படி மௌனம் சாதிச்சே என்னைக் கொல்லாமக் கொல்றா. செத்துப் போயிடலாமான்னு கூடத் தோணுது. எம் பெண்ணுகளுக்காகத்தான் அந்த முடிவுக்குப் போகலைன்னு புலம்புனாரு. இப்ப ஒரேயடியாப் போயிட்டாரு. என்னை மன்னிச்சிடுன்னு கேட்கக்கூட எனக்கு அருகதை இல்ல. இருந்தாலும் நீ மௌனம் சாதிப்பது எனக்கு பயமா இருக்கு. உனக்காக இல்லாவிட்டாலும் உன் பெண்களுக்காக உன்னை மாத்திக்க உனக்குத் துரோகம் செஞ்சதாலதான் எனக்கு வயிறு திறக்கவே இல்லை என்று நினைக்கிறேன். சித்தி விஜயா சொல்ல சொல்ல அதிர்ந்தனர் இருவரும்.
சாரதா பேச ஆரம்பித்தாள்.
அறிஞ்சோ, அறியாமலோ அவரோடு வாழ்ந்து இரட்டைப் பொட்டைப் புள்ளைங்களைப் பெற்று விட்டேன். அதுக என்ன பாவம் பண்ணிச்சு? அதுகளுக்கு நல்ல வாழ்வு அமைச்சிக் குடுக்குற வரைக்கும் நான் சாக மாட்டேன். உங்க விபரம் தெரிஞ்சதும் அவர் நிழல் பட்டால்கூட கூசிக் குறுகி விடுவேன். நானே சோரம் போனதுபோல் எனக்குள் ஒரு தகிப்பு. பெத்தவங்க, கட்டினவர், கூடப் பிறந்தவர் யாருமே எனக்குன்னு ஒரு மனம் இருக்கு, அதுல எவ்வளவு ரணம் இருக்குன்னு நினைக்கல. அவுங்க அவுங்க சுயநலத்தோடவே வாழ்ந்தீங்க. இப்போ அந்த நினைவுகளில் இருந்து ஒருவகையில் விடுதலை உணர்வு. எனவே எனக்குள் துக்கம் இல்லை. குழந்தைகள் எதிரே இரட்டை வேஷம் போட வேண்டிய அவசியம் இல்லை என்ற நிம்மதி.
கொண்டவன் சரியா இருந்தா கூரை ஏறிக் கோழி புடிக்கலாம்னு பழமொழி. எனக்கு அந்த பாக்கியம் இல்லை. நீ ஆட்டி வச்சபடி ஆடினாரு. வெளியில இரண்டு பேருமே நல்லா வேஷம் கட்டுவீங்க. ஆகாத பெண்டாட்டி கைபட்டாக் குற்றம் கால் பட்டாக் குற்றம்னு இது வரை வாழ்ந்துட்டேன். அந்த ஆகாத கணவரின் வருமானத்தில் வாழ விரும்பாமல்தான் தையல் வேலை செய்கிறேன். அதில் வரும் வருமானம்தான் எனக்கு வெகுமானம். உங்க ஊழலைத் தெரிஞ்சுக்கிட்டா என் பெண்கள் தாங்க மாட்டார்கள். அவர்தான் போயிட்டாருல்ல. இனிமே உனக்கு இங்கு என்ன வேலை? இதுவரைக்கும் சுமங்கிலி என்ற பெயரில் வாழ்ந்தேன். அதுதான் எனக்குப் புருஷனால் கிடைச்ச சுகம். இனிமே அதுவும் இல்லை. உனக்கு எந்த இழப்பும் இல்ல. மீறி என் பெண்களோட உறவைத் தொடர்ந்தால் மௌனமாக இருந்த நான் வாய் திறக்க ஆரம்பித்து விடுவேன். பிறகு நாறிப் போயிடுவ, ஜாக்கிரதை' என்றாள் கறாராக.
அழுத கண்களுடன் சித்தி வெளியேற கண்மூடி அமர்ந்து இருந்த சாரதாவின் தோளைப் பற்றினர் ராதாவும், கீதாவும். திடுக்கிட்டவளின் காதில் அம்மா 'யூ ஆர் கிரேட்' என்று இருவரும் ஒருமித்த குரலில் கூற உடைந்து அழ ஆரம்பித்தாள் சாரதா!
சிறுகதை-8
தகப்பன்சாமி
பொழுது போகவில்லை!
மேஜை இழுப்பறையைக் குடைந்தேன். அது அலிபாபா குகை. என்ன இருக்கு என்பதே வெளியே தெரியாது. அலாவுதீனின் அற்புத விளக்கு போல எல்லாமே அதற்குள் கிடைக்கும்! அதை ஒழிக்க ஆரம்பித்தால் பொழுது போவதே தெரியாது. அவ்வளவு புதையல்கள். தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதைபொருள் பொக்கிஷங்கள். விவசாய வேலைகள் முடிந்து விட்டன். வேலை எதுவும் இல்லை. அதனால்தான் இந்த வெட்டி வேலை.
விவசாய வரவு செலவு கணக்கு, கடன் பத்திரங்கள், விவசாயக் கருவிகளின் விலைப் பட்டியல், உரமூட்டைகள் ரசீது, டிராக்டர் எல்.ஐ.சி. ரசீது, பழைய புகைப்பட ஆல்பங்கள் என திரெளபதி வஸ்திராபரணமாய் நீளும் பட்டியல். வேர்த்து வழிந்து களைத்து விட்டேன்.
கையில் அகப்பட்ட பழைய வார ஏட்டுடன் ஈசிசேரில் சாய்ந்தேன். கவிப் பேரரசு வைரமுத்துவின் கட்டுரை. தன் மகன் பற்றிய வரிகள்! பெட்டிச் செய்தியாக என் மகனிடம் மட்டுமே தோற்க விரும்புகிறேன்! எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள். மகனிடம் தோற்பது எவ்வளவு சுகம். பிரகலாதனிடம் தோற்ற இரண்யன், மகனிடம் பாடம் கேட்ட சிவன் என இந்தத் தோல்வி காலம் காலமாகத் தொடரும் தொடர்கதை தானே!
கைகள் வார இதழைப் புரட்ட சிந்தனை இதயத்தைப் புரட்ட நினைவுகள் சிறகடித்துப் பறந்தன. தவமாய் தவமிருந்து பெற்ற ஒரே மகன் விவேக். நஞ்சையும், புஞ்சையும் நாலு தலைமுறைக்குக் குந்தித் தின்றாலும் குறையாத செல்வம். புள்ள படிச்சு ஒண்ணும் ஆகப் போறது இல்லை. கல்யாணப் பத்திரிகையில் பின்னால் போட்டுக் கொள்ள ஒரு டிகிரி படிண்ணேன். அந்தப் பயபுள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படிப்பேன்னான். சரி தொலையட்டும் என்று தலையாட்டினேன். அப்படி தலையாட்டினது தப்பாய்ப் போச்சு.
படிச்சு முடிச்சதும் கம்ப்யூட்டர் சம்பந்தமான தொழில் நடத்தணும். கோடி கோடியா சம்பாதிக்கனும்னு ஒத்தைக் கால்ல நின்னான். சிபாரிசு அம்மாக்காரி மேலிடத்து சிபாரிசை மீற முடியுமா? மீறினால் உள்நாட்டுக் கலவரம் வெடிக்குமே. பய அரசியல்வாதி ஆக வேண்டியவன். நல்லாவே கூட்டணி அமைக்கிறான். என் எதிர்ப்புகளை அம்மா என்ற பிரம்மாஸ்திரம் மூலமாக மண்ணைக் கவ்வச் செய்யும் மகாபுத்திசாலி.
இந்தப் பனிப்போர் ஒருநாள் வளைகுடாப் போராக வெடித்தது. அந்தநாள் நன்றாக நினைவில் இருக்கிறது. எனக்குப் பிடித்த உருளைக்கிழங்கு கறியைம், உருண்டைக் குழம்பையும் ஒருபிடி பிடித்து ஓய்வாக அமர்ந்து இருந்த நேரம் பயபுள்ள மெதுவாக ஆரம்பித்தான். 'அப்பா நான் கம்ப்யூட்டரில் மேலே படிக்கணும். தனியாத் தொழில் தொடங்கணும். அதுக்கு அமெரிக்காப் போகணும். இதுக்கு தான் உருண்டைக் குழம்பும், உருளைக்கிழங்குமா? எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. இரண்டு நாளா அம்மாவும், புள்ளையும் குசுகுசுன்னு பேசிகிட்டு குறுகுறுன்னு முழிக்கும் போதே தெரியும். பய ஏதோ குழி பறிக்கப் பிளான் பண்ணுறான்னு. எதுக்கு இருக்குறத உட்டுட்டுப் பறக்கிறத பிடிக்கப் போற. நல்ல மாடுன்னா உள்ளூரிலேயே விலை போகும்' என்று சீறிய என்னை அடக்கினான்.
'ப்ளீஸ் என்னைக் கொஞ்சம் பேசவிடுங்க. பரம்பரை பரம்பரையா நீங்க விவசாயம் பார்க்கிறீங்க. பண்ணையாராவே இருக்கீங்க. உங்ககிட்ட வேலை பார்க்கிறவங்களும் அப்படியே இருக்காங்க. வருஷாவருஷம் தண்ணீர்ப் பிரச்சனை இயற்கை உற்பாதம்னு ஏகப்பட்ட சிக்கல். விவசாயம் வேணும்தான். அதுலயும் புதுமை செய்யணும். அதுக்கான பயிற்சி மேற்கொள்ளனும்னு யோசிச்சு இருக்கீங்களா? எனக்கு விவசாயம் தெரியாது. தெரிஞ்சது கம்ப்யூட்டர் மட்டும்தான். அந்தத் துறையில் முத்திரை பதிக்கணும் 'பில்கேட்ஸ்' மாதிரி. விவசாயத்துக்கும் கம்ப்யூட்டர் உபயோகம் செய்யலாம். என்ன உரம், என்ன மருந்து என்று கேட்டுத் தெளியலாம். என்ன விலை என்று வீட்டில் இருந்தபடியே பேசி முடிக்கலாம்.
எனக்குள் ஒரு பொறி அதை என் கண்களில் படித்து விட்டான் அந்தப் பயபுள்ள. ஆனாலும் என் ஈகோ முற்றிலும் அகலவில்லை. 'முடிச்சிட்டியா, இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா' என்றேன் நக்கலாக. 'இதுக்கெல்லாம் முடிவு கிடையாது அப்பா! நீங்க போதும்கிறது எனக்குப் போதல. எனக்குப் போதும்கிறது நாளை என் மகனுக்குப் போதாது. மாறுதல் என்பது மட்டும்தானே உலகில் மாறாத உண்மை. நாடு என்ன செஞ்சது என்பதை விட நாட்டுக்காக நாம என்ன செஞ்சோம்கிறது தான் முக்கியம். தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு விவேகானந்தன் என்று பேர் வச்சுட்டீங்க. அந்தப் பெயரை நான் காப்பாற்ற வேண்டாமா?'
'சின்ன வயசில் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையான்னு கேட்பீங்க. அம்மா பிள்ளைன்னு வாய் தவறி சொன்னாலும் தாங்க மாட்டீங்க அத்தனை பாசம் என்மீது. மேலதான் கடமுடான்னு சத்தம். அடிமனதில் சில்லென்ற பாச ஊற்று. அதை சுவைத்தவன் நான். கத்துகிறதுக் காகத்தான் நான் அமெரிக்காப்போறேன். கற்றதை நம்ம மண்ணில்தான் களம் இறக்குவேன்'. மளுக்கென கண்களில் முட்டிய நீரை அடக்க முடியாது தோற்றேன்.
'என் பிரிவைத் தாங்க முடியாதுன்னுதான் இப்படி அழுகுணி ஆட்டம் ஆடுறீங்க!' இலக்கு பார்த்து அவன் எய்த வார்த்தைகள் - என்னால் மறுக்க இயலவில்லை. இருந்தாலும் முழுவதும் இறங்கி வர என் வறட்டு கௌரவம் இடம் தரவில்லை.
'இதோ பாருடா விவேக் என்ன விட்டா நீ பாட்டுக்குப் பேசி கிட்டே இருக்கே. உன் இஷ்டத்திற்கு எல்லாம் ஆட முடியாது. சிவனேன்னு அப்பாவுக்கு ஒத்தாசையா வீட்டோடே கிட' என்ற என்னவளின் நடிப்பை நிஜம் என்று எண்ணி ஏமாந்தேன். அவள் சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்கா விட்டால் என் தலை வெடித்து விடும். அப்படி ஒரு குணம் எனக்கு.
'இரண்டு வருஷம் தானே, போயிட்டு வாடா ராஜா. அவ கிடக்கிறா' என்ற போது தாயும், பிள்ளையும் 'சக்ஸஸ்' என்று கண் ஜாடையில் பேசிக் கொண்டதை உணராத மடையன், என் வாயாலேயே என்னை வீழ்த்தி மகனை அமெரிக்கா அனுப்பிய ராட்சஸி அவள் என்பதை அவள் வாயாலேயே கேட்டபோது எனக்கு எவ்வளவு அதிர்ச்சி. ராட்சசி என்று பல்லைக் கடித்தேன்.
அழகான ராட்சஸி என்று கை கொட்டி சிரிக்கும் விவேகம். சே எல்லாம் பிரமைதான். மகன் அடுத்த வாரம் வரப்போவதை ஒலி பரப்பத்தான் கோயிலுக்குப் போறேன் என்று போயிருக்கிறாள்; சிரித்து சிரித்தே என்னைச் சிறையிலிட்ட ராட்சஸி.
விமான நிலையத்தில் கடைசி நிமிடத்தில் என் காதருகே கிசு கிசுத்த வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வர எனக்குள் புன்னகை. அப்பா! உங்க பிள்ளை ஒருநாளும் அமெரிக்க மாப்பிள்ளை ஆகமாட்டான். இது உறுதி என்றவனை ஏறிட என்னுள் வெட்கம். மனசை எந்தக் கம்ப்யூட்டர்ல படிக்கிறான் இந்தப் பயபுள்ள. அவன் மூச்சுக் காற்றின் கதகதப்பும் அரும்பு மீசையின் குறுகுறுப்பும் இப்போதும் என் காதிலும், கழுத்திலும் என் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன் பெருமிதமாக.
என் நாடி பிடித்து துல்லியமாகக் கூறும் மகனைக் கர்வமாகப் பார்க்கிறேன். இந்த மேதையின் தகப்பன் இவன் என்று நாளை ஊர் சொல்லும். நான்தான் என் பாச வலையைச் சற்றே இறுக்கி விட்டேனோ? முதல் முதலாகச் சிந்திக்க ஆரம்பிக்கிறேன். மகன் வந்ததும் டவுனில் இருக்கும் இடத்துல ஒரு ஐ.டி. சென்டர் ஆரம்பிக்கச் சொல்லணும். என் பண்ணையாட்களின் வாரிசுகளுக்கு அதுல வாய்ப்பு தரணும். நிறைய வேலை இருக்கு. என் புள்ள எனக்கு மட்டும் மகனல்ல. இந்த நாட்டுக்கே சிறந்த குடிமகனா சிறக்கணும்.
குப்பெனன்ற மல்லிகைப்பூ வாசம். வந்துட்டா மகராசி. நான் இவ்வளவு நேரம் புலம்புனத எல்லாம் அவகிட்ட சொல்லிடாதீங்க. என்னைக் கிண்டலடிச்சே கொன்னுடுவா? புள்ளயும் தானுமா கூட்டணி அமைச்சு என்னைக் கோழி அமுக்குவது போல ஒரே அமுக்கா அமுக்கியதை உங்ககிட்டேயும் சொல்லி மானத்தை வாங்குவா! ப்ளீஸ் சொல்லாதீங்க! மகன் கிட்டத் தோற்கலாம்; மனைவி கிட்டத் தோற்கலாமா? ஹி, ஹி, ஹி!
சிறுகதை-9
ஜடம்
கிறீச்... கிறீச்...
எண்ணெய் காணாத ஊஞ்சல் சங்கிலி ஈனஸ்வரத்தில் முனகியது. மெல்ல ஆடிய ஊஞ்சல் சங்கிலியில் தலை சாய்த்து அமர்ந்து இருந்த சாரதா ஊஞ்சல் கொக்கிகளையே வெறித்தாள். இரண்டு கொக்கிகளிலும் பிணைக்கப்பட்ட நான்கு சங்கிலிகள். ஊஞ்சலோடு இணைக்கப்பட்ட விலங்குகளாக. எவ்வளவு நேரம் ஆடினாலும், எத்தனை வேகத்தில் ஆடினாலும் கூடத்தை விட்டு நகராத ஊஞ்சல். அந்தக்காலத் தேக்குப் பலகை. நான்கு புறமும் பித்தளைப் பூண்களும், குமிழ்களும் தங்கம் போல் தகதகக்கும் ஊஞ்சல். மெல்ல அசை போட்டாள்.
இந்த ஊஞ்சல் போலவே குடும்பம், குழந்தைகள், கடமை, சமூகம் என்று நான்கு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுத் தாலி என்ற தளையில் மாட்டப்பட்டதுதான் என் வாழ்வும். குடும்பத்தை விட்டு நகராத வாழ்க்கை ஓட்டம். புது மணப்பெண்ணாகக் கணவனுடன் ஊஞ்சலில் அமர்ந்த போது எத்தனை பரவசம். அப்போது வயது பதினெட்டு.
அந்தக்கால காதல் மன்னன் போல உருவம், சொந்த வீடு, ஒரே பிள்ளை, அரசு உத்தியோகம், யாரையும் வசியப்படுத்தும் பேச்சுத்திறன், தாயினும் மேலான மாமியார். தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்ற கர்வம் அவளுள்.
அவள் அதிர்ஷ்டசாலி இல்லை, துரதிருஷ்டசாலி என்பதை மணமான ஐந்து ஆண்டுகளிலேயே உணர்ந்ததும் அதிர்ச்சி. அதற்குள் கையிலும், வயிற்றிலுமாக இரண்டு பிள்ளைகள். சரவணன் தோற்றத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் காதல் மன்னன் என்பதை அறிந்தது இரண்டாவது பிள்ளையை சுமக்கும் போதுதான். உறவு, உடன் பணியாற்றுபவள் என்று ஏராளமான பெண்களுடன் சகவாசம், குடும்ப செலவுக்கு பாதிப்பணம், மீதிப் பணம் அவனுடைய லீலைகளுக்கு. பிறந்த வீட்டில் ஓரளவு கொடுத்துத் தாங்கியதுடன் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்து ஆளாக்கியும் விட்டனர். சமூக அந்தஸ்திற்காக மட்டுமே மனைவி குழந்தைகள். மற்றபடி அவர்கள் கொத்தடிமைகள் என்ற எதேச்சதிகார மனப்பான்மை அவனுள்.
எல்லாவற்றையும் மௌனமாக ஜீரணித்துத் கொண்டாள் குழந்தைகளுக்காக. மாமியாரும் போய்ச்சேர சரவணனுக்கு மிகவும் குளிர் விட்டுப் போயிற்று. கணவனது லீலைகளை அவள் காதுபடவே விமரிசிக்கும் உறவுகள், நட்புகள். அதற்கு பயந்தே வீட்டோடு முடங்க ஆரம்பித்தாள் சாரதா. இது எதற்காகவும் கவலைப்படாத சரவணன். ஒன்று விட்ட அத்தை பெண் சங்கரியுடன் அடிக்கும் கொட்டம். அப்பப்பா!
அவள் புருஷனுக்கு வெளிநாட்டில் வேலை. அது இருவருக்குமே வசதியாக போய் விட்டது. அவளைத் தேடி இவர் போவதும், இவரைத் தேடி அவள் வருவதும், நாள் கணக்கில் டேரா போட்டு சினிமா, பூங்கா, ஹோட்டல் என்று ஊர் சுற்றுவது. வக்கணையாக சாரதாவை ஆக்கிப் போடச் சொல்லி நொட்டை சொல்லிக் கொண்டே சாப்பிடுவது, கண்டித்த சாரதாவை 'இஷ்டம் இருந்தால் இரு இல்லாவிட்டால் என் பிள்ளைகளை என்னிடம் விட்டு விட்டு, ஒப்பன் வீட்டுக்கு ஓடு' என்ற பிரம்மாஸ்திரம் மூலம் மிரட்ட மௌனியாகி விட்டாள்.
ஆச்சு, ஆண்டுகள் ரெக்கைக் கட்டிக் கொண்டு ஓட, பிள்ளைகள் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக சிங்கப்பூர் குடியுரிமை பெற்று கை நிறையச் சம்பாதிக்க, பெற்றோரும் ஒருவர் பின் ஒருவராகப் போய்ச் சேர தனி மரமானாள் சாரதா. இதற்குள் சங்கரியின் ஒரே மகள் வேலை பார்த்த இடத்திலேயே காதல், ஊதல் என்று திசை மாறி விலக சங்கரி காட்டில் அடைமழை.
பெரியவனுக்குத் திருமணம் ஆகி ஒரு குழந்தை. சின்னவனுக்குப் போன வாரம் திருமணம். ஒரு வாரமாக விருந்து, வைபவம் எல்லாம் முடிந்து பெண்ணும், பிள்ளையும் நேற்று சென்னைக்கு மறுவீடு சென்று விட்டனர். அங்கிருந்த படியே சிங்கப்பூர் செல்கிறார்கள். இரண்டு பிள்ளைகளுக்கும் உத்யோகம், திருமணம் என்று எல்லாக் கடமைகளையும் கௌரவமாகச் செய்து முடித்தாகிவிட்டது. இனிமேல்...
நேற்று விருந்து முடிந்து அனைவரும் ஊர் சென்றபின் மிஞ்சியவள் சங்கரி மட்டுமே. கூடத்தில் அட்டகாசமாக சரவணனுடன் அரட்டைக் கச்சேரி. பக்க மேளமாக நொறுக்குத் தீனி, வெற்றிலை, பாக்கு. சாரதா சாமான்களை ஒழித்துப் போட்டு அடுப்பங்கரையைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்.
ஆரம்பித்தது சங்கரிதான். 'ஏன் அத்தான் உனக்கு அடுத்த மாசம் அறுபது வயது முடியப் போவுதே, மணிவிழாவை திருக்கடையூரில் வை. அதுதான் விசேஷம்' என முன்மொழிய, வழி மொழிந்தார் சரவணன். 'சாரதா கிட்ட சொல்லிட்டியா' என்று அவளே நக்கலாகக் கேட்டுச் சிரித்தாள் அட்டகாசமாக.
'அந்த ஜடத்தை என்ன கேட்பது. தாலி கட்டக் கழுத்தை நீட்டுறது மட்டும் தான் அவள் வேலை, என்று அலட்சியமாக சரவணன் கூற, கைதட்டி வரவேற்றாள் சங்கரி. எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டே பாத்திரங்களை வேலைக்காரியிடம் ஒழித்துப் போட்டுக் கொண்டு இருந்தாள். வேலைக்காரியின் கண்களில் தெரிவது அனுதாபமா? இல்லை அலட்சியமா? அனுமானிக்க இயலாமல் தடுமாறினாள். எல்லோருமே புறப்பட்டும் சங்கரி மட்டும் தங்கி விட்டாள்.
காலையில் அவளை பஸ் ஏற்றி விடச் சென்றவர் ஒன்பது மணி தாண்டியும் வரவில்லை. திருமண வேலையின் களைப்பு,. சங்கரியின் எக்களிப்பு எல்லாம் சேர்ந்து உடலும், உள்ளமும் சோர்ந்தது. எப்படா தலையைச் சாய்க்கலாம் என்று தவிப்பு.
ட்ரிங்ங்ங்...
அழைப்பு மணியின் அசுர அலறல். அவர்தான் இப்படி அழுத்தமாக மணியை இயக்குவது, அதிகாரத் தோரணையுடன். கதவைத் திறந்தாள்.
'ஒன்பது மணிக்கே என்ன தூக்கம்? போனவன் அப்படியேவா போயிடுவேன்.'
அமிலமாக வந்து விழுந்த வார்த்தைகள். மௌனமாக டிபனை எடுத்து வைத்தாள்.
'எனக்கு ஒரு இழவும் வேண்டாம். நீயே கொட்டிக் கொள். நாளைக்கு திருக்கடையூர் போகணும். எட்டு மணிக்கேப் புறப்படணும். சாப்பாடு வேண்டாம். வெந்நீர் போட்டு வெச்சாப் போதும்' என்றார் உறுமலுடன்.
'எதுக்குத் திருக்கடையூர்?'
'என்ன நக்கலா? அறுபதாம் கல்யாணத்திற்கு அட்வான்ஸ் குடுக்கத்தான்?'
'யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?'
'ஏய் என்ன ஆச்சு உனக்கு? உனக்கும் எனக்கும் தான் கல்யாணம்' என்று குரலை உயர்த்தினார்.
'முதல் கல்யாணத்தின் அன்னியோன்னியத்தையும் புனிதத்தையும் புதுப்பிக்கத்தான் இரண்டாவதா அறுபதாம் கல்யாணம். அந்நியமாய் வாழற, இல்லறம் என்ற புனிதத்தைப் போற்றாது ஊருக்காக வாழற நமக்கு எதற்கு அறுபதாம் கல்யாணம்? உங்க சந்தோஷத்திற்காகவும் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கத்தானே இந்த ஏற்பாடு.
'பார்க்கப் போனால் என்னிலும் உங்களுக்கு மேலானவள் சங்கரிதான்! அவள் கழுத்துல தாலி கட்டுங்க. சந்தோஷமா நானே முன்னே நின்று எல்லா வேலையும் செய்யுறேன். அவளும் எத்தனை நாள்தான் துணைவியாவே இருப்பா? என்று அமைதியாக அதேசமயம் அழுத்தம் திருத்தமாகக் கூறினாள் சங்கரி.
கையை ஓங்கிப் பாய்ந்த சரவணன் மௌனியாய் உறைந்து நின்றார் ஜடமாக.
சிறுகதை-10
நேற்று - இன்று - நாளை
மதியம் மகள் வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே கோபாவேசமாய் இருந்தார் மூர்த்தி. கூண்டில் அடைபட்ட புலியாய் தன் அறையிலேயே அடைந்து கிடந்தார். அவ்வப்போது உறுமலாக வரும் சம்மந்தி வீட்டாரைப் பற்றி கமெண்ட்கள். இது எதையும் காதில் வாங்காதவளாக தன் போக்கில் தினசரி அலுவல்களைக் கவனிக்கும் வசுமதி. முப்பது வருட தாம்பத்தியத்தில் கணவரின் போக்கை நன்றாகவே அறிந்து அதற்கான நீக்குப் போக்கில் வாழப் பழகியவள் அவள்.
விஷயம் இதுதான். உள்ளூர் கோவில் கும்பாபிஷேகம். மகளைப் பார்த்து அழைத்து வர நேற்று மாயவரம் சென்றவர். சம்பந்தி தன்னை சரியாக வரவேற்க வில்லை. மருமகன் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. தன்னோடு மகளை அனுப்ப வில்லை. 'முடிந்தால் கும்பாபிஷேகத்திற்கு வருகிறோம்; அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. தனியே விட்டு வரமுடியாது' என்று தட்டிக் கழிக்கும் மாப்பிள்ளை என்று பொங்கிப் பொங்கி மாயும் மூர்த்தி. இரண்டே பெண்கள். முதல் மகள் வீட்டில்தான் இந்தக் கூத்து. இரண்டாவது பெண் திருச்சியில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள்.
வளைகாப்பு, சீமந்தம், பிரசவம் என்று ஆறுமாதம் சீராடிச் சென்றவள் தான் மகள் ராதா. மூன்று மாதம் ஓடிவிட்டது. வரவில்லை. கும்பாபிஷேகம் சாக்கில் மகளையும் பேத்தியையும் சீராட்டலாம் என்ற ஆசைக்குத் தடா.
மாப்பிள்ளை மோகன் நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் - மாமனாருக்கு பென்ஷனே ஐந்து இலக்கத்தில். சொந்தவீடு வண்டி வாகனம் என்று நல்ல வசதி - வீட்டோடு வேலைக்காரி - பண்டிகை - பிறந்தநாள் என்றால் பவுனும், பட்டுமாக அசத்தும் மாமியார் என ராணி மாதிரி இருக்கிறாள். ஆனால் என்ன பிறந்த வீட்டுக்கோ அவர்கள் சம்மந்தமான விசேஷங்களுக்கு வருவதோ, ராதாவை அனுப்புவதோ வேப்பங்காயாய் கசக்கும் அவர்களுக்கு.
எனவே இவர்களாலும் அவர்களுடன் ஒன்ற முடியாத நிலை. தாமரை இலைத் தண்ணீராய் ஒரு வேளைத் தங்கலுடன் முடியும் பயணம். 'வரட்டும் அந்தப் பயலை என்ன செய்கிறேன் பார்' என்று உறுமும் கணவரைப் பார்க்க வேடிக்கையாகவே இருந்தது வசுமதிக்கு. மருமகனை என்ன செய்யப் போகிறாராம். மகளைக் கொடுமைப்படுத்தினால் வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தில் கேஸ் போடலாம், அப்புறம் மகளை வாழாவெட்டியாக வீட்டோடு வைத்துக் கொள்ளலாம். என்ன ஆயிற்று இவருக்கு. ஆசையாக இருந்தால் அடிக்கடிப் போய் பார்த்து வருவதுதானே? மதியமும் சாப்பிடலை, விட்டத்தை வெறித்த படியே சாய்வு நாற்காலியில் தஞ்சம்.
மல்லிகைப்பூ இட்லியும், மணக்க மணக்கத் தக்காளிக் கொத்சுவும் வைத்து சாப்பிட அழைத்தாள். 'ஏய், உனக்கு ஏதாவது அறிவு இருக்கா?' வேணும்னா நீயேக் கொட்டிக்க' - இடியாய் வந்து விழுந்த வார்த்தைகள்.
'மதியமும் சாப்பிடல, இப்பவும் சாப்பிடலைன்னா பிரஷர் எகிறும்.' 'எகிறுனா எகிறட்டும்; செத்துத் தொலைக்கிறேன் அப்பவாவது பொண்ணை அந்தப் பய அனுப்புவானா? மாட்டானா?' சட்டென உடைந்தார். மௌனமாக இட்லியை வைத்து கொத்சுவை விட்டு அதன்மீது சிறிது நல்லெண்ணெய் விட்டு நீட்டினாள், கூடவே பொடியும். விருட்டென எழுந்து ஜன்னல் அருகே நின்றார்.
மௌனமாகத் தட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள் வசுமதி. ரெளத்திரமானார் மூர்த்தி. 'ஏண்டி நான் சொல்றது உன் மண்டையில ஏறலையா? நான் ஒருத்தன் இங்க புலம்பிகிட்டே இருக்கேன், நீ பாட்டுல முழுங்கற. சொல்லிகிட்டு இருக்குற நான் என்னக் கேணப்பயலா?' உறுமினார்.
மௌனமாக மூன்றாவது இட்லிக்கு முன்னேறினாள் வசுமதி. 'சம்மந்தி வீட்டார்னா, மாப்பிள்ளைன்னா அப்படித்தான் இருப்பாங்க. பெண்ணைக் கட்டிக் குடுத்ததோட நம்மக் கடமை முடிஞ்சிட்டு; அவ பேர்ல நமக்கு எந்த உரிமையும் இல்ல இல்லியா?' சவுக்கடி விழுந்தது போலத் துடித்துத் திரும்பினார். 'ஏய்... ஏய் நீ என்ன சொல்ல வர்ற...'
'முப்பது வருஷத்துக்கு முன்னாடி நீங்க சொன்னதைத்தான் சொல்றேன். நமக்காவது ரெண்டு பெண். நான் ஒரே பெண். என்னைப் பிறந்த வீட்டுக்கு நிம்மதியா போகவிட்டு இருக்கீங்களா? பிரசவத்திற்குக் கூட அனுப்பமாட்டீங்க. ஆனா செலவு பூரா அவங்களே செய்யணும். நாள் கிழமைக்கு ஒரு துணிமணி உண்டா? அதுவும் பொறந்த வீட்லதான். அதோட அந்த நகை, இந்தப் பாத்திரம், பட்டுப் புடவைன்னு லிஸ்ட் நீளும். ஐநூறு ரூபாய் சம்பளம், தனியார்ன்னு பொய் சொல்லி இருநூறு ரூபாய் சம்பாத்தியம் வாங்கினிங்க. உங்க அப்பாவும் ஜவுளிக்கடையில் கணக்குப் பிள்ளை. சொந்த வீடு கூட கிடையாது. வாடகை வீடு. என் நகை நட்டை வைச்சு உங்க இரண்டு தங்கச்சியையும் கட்டிக் கொடுத்து ரெண்டு தம்பிகளையும் படிக்க வைச்சீங்க. அவுங்க கை உசந்ததும் உங்களைக் கை கழுவி விட்டு ஒதுங்கிட்டாங்க.'
'ஏதோ எனக்குத் தெரிஞ்ச தையல் தொழிலை விஸ்தாரமாச் செய்ததால் இத்தனையும் சாத்தியம் ஆச்சு. அதுக்கும் எங்க அப்பாதான் ஏற்பாடு செய்தார். நாலு மிஷின் வாங்கிக் கொடுத்து தனது பிரண் ரெடிமேட் கடையில் ஆர்டர் பிடிச்சுக் கொடுத்து என்ன பாடுபட்டு இருக்கார். இப்ப நாலு ஆள் போட்டு தைக்கிறேன். வீடு வாசல் வண்டின்னு ஆச்சு நீங்களும் தத்திகுத்தி ஏதோ அரசு வேலைக்குப் போய் ரிடையரும் ஆயாச்சு. இவ்வளவு செஞ்ச என் பிறந்த வீட்டாரை என்னைக்காவது மதிச்சு ஒரு வாய் சோறு நிம்மதியாய் போட்டு இருக்கிங்களா? வருஷந்தோறும் சண்டை வம்பு. இன்னைக்குப் பொண்ணை கும்பாபிஷேகத்திற்கு அனுப்ப வில்லைன்னு இந்தக் குதி குதிக்கிறீங்களே. என் ஒரே தம்பி கல்யாணத்துக்கு என்னை சந்தோஷமாய்ப் போக விட்டீங்களா? அரசில்வாதி மாதிரி 'ஹார்ட் அட்டாக் என்று நாடகமாடி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி அந்த நேரத்துக்கு மூணாவது மனுஷன் மாதிரி தலையக் காண்பிச்சு சீரை மட்டும் வாங்கிக் கிட்டு உடனே வந்துட்டோம். காரணம் உங்க அண்ணன் மகளைக் கட்டிக்கலைன்னு கோபம்.'
'நானும் தெரியாமத்தான் கேக்கறேன். வாய்க்கு வாய் எங்கப் பிறந்த வீட்டைக் குத்தம் சொல்ற நீங்க உங்க வீட்டுப் பொண்ணை மட்டும் காட்டணும்னு எதிர் பார்க்குறது என்ன நியாயம். என்னாலக் கவலைப்பட்டு அவமானப்பட்டு எங்க அம்மா ஹார்ட் அட்டாக்ல பொசுக்குன்னு போயிட்டாங்க. தம்பியும் சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டான். அதெல்லாம் கிடக்கட்டும். அப்பாவுக்கு சீரியஸ்ன்னு தந்தி வந்தபோது என்ன செஞ்சீங்க. மறுநாள் ஆடி அமாவாசை சமைச்சு வச்சுட்டுப் போன்னீங்க. நான் போய் சேர்வதற்குள் அப்பா போய் சேர்ந்து விட்டார். இப்ப என்னவோ என் சாவுக்குப் பொண்ணு வருமான்னு புலம்புறீங்க' என்றபடி நான்காவது இட்லிக்கு முன்னேறினாள்.
'ஏய் என்ன வாய் நீளுது. எப்பவோ நடந்ததை எல்லாம் இப்போ இழுக்கற. அப்ப ஏதோ குடும்ப சூழல் அப்படி ஆச்சு. அதே குடும்ப சூழல்தான் இப்ப சம்மந்தி வீட்டுக்கும்'. 'என்ன சம்மந்தி வீட்டுக்கு வக்காலத்தா, இல்லை பொண்ணைப் பெத்தவங்களுக்கு வக்காலத்து' என்றபடி ஐந்தாவது இட்லிக்கு முன்னேறினாள். 'எப்படி உனக்கு சாப்பாடு இறங்குது. நீ பொண்ணைப் பெத்தவளான்னு சந்தேகமா இருக்கு.' 'வேணும்னா புள்ளய மாத்திட்டாங்கன்னு என் பொறந்த ஊட்ல சண்டை போட்டுப் பாருங்களேன். இப்ப குத்தம் குறை சொல்ல யாரும் இல்லை. அதனாலதான் சம்மந்தி வீட்ல பாயுறீங்க. மத்தவங்களைக் குறை சொல்லும்போது உங்களப் பத்தியும் யோசிங்க' என்றபடியே இட்லி மீது பொடியைத் தூவி எண்ணெயில் முழுக்காட்டி தோய்த்து விழுங்க ஆரம்பித்தாள்.
கடன்காரி, பொடி வைத்துப் பேசுவதில் மட்டுமில்ல. இட்லிப் பொடி செய்வதிலும் கெட்டிக்காரி. எள் சேர்த்த பொடி. பொட்டுக்கடலை பொடி, தேங்காய் சேர்த்த பொடின்னு விதவிதமா செய்வதில் கில்லாடி. இப்ப தேங்காய் சேர்த்தப் பொடி வாசனை அள்ளுது. இன்னொரு முறை சாப்பிடச் சொன்னால் சாப்பிடலாம். மெல்ல இறங்கி சுதியுடன் 'அப்ப என்ன என்னதான் செய்யச் சொல்ற?'
'இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோசனம்? நீங்க என்னைப் பெத்தவங்கள ஆட்டி வச்சீங்க. இப்ப உங்களை உங்க மருமவன் ஆட்டி வைக்கிறார். நாளை அவர் மருமகன் ஆட்டி வைப்பார்! இது தொடர்கதை.'
'யாராவது திருந்தினாத்தான் இது சிறுகதை ஆகும். இல்லைன்னா இது மெகா தொடர் தான்' என்றபடி உணவோடுதன் உணர்வுகளையும் சேர்த்து விழுங்கும் வசுமதியைப் பார்த்து முதன்முறையாகத் தலை குனிந்தார் மூர்த்தி. 'என்ன ஒண்ணு நீங்க இன்று உங்க பெண்ணுக்கு அழறீங்க. நேற்று நான் எனக்காக அழுதேன். இன்று மகளுக்காக அழுகிறேன். நாளை பேத்திக்காகவும் அழுவேன்' என்றவளை ஏறிடத் திராணியின்றி தானே இட்லியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார் கண்கள் கசிய.
சிறுகதை-11
கண்ணுக்குத் தெரியாத கை
பால்கனியில் நின்று லைட்டரை உயிர்ப்பித்தான் சரவணன். விலை உயர்ந்த பில்டர் சிகரெட் மெல்லப் புகைய ஆரம்பித்தது. புகையை நெஞ்சு நிறைய நிரப்பி மெல்ல வெளியேற்றினான். மனம் பரபரப்பு அடங்கி சற்றே லேசானது. அப்படி ஒன்றும் செயின் ஸ்மோக்கர் அல்ல அவன். பரபரப்பாக மனம் படபடக்கும்போது ஆசுவாசம் அடைய அவ்வப்போது சிகரெட். அதுதான் அவனுடைய சீக்ரெட்! கண்மூடி ஆழ்ந்து சுவாசித்தான். நெஞ்சில் பரவசம்.
எப்போது ஏழாம் தேதி வரும் என்று எதிர்பார்ப்பு. வழக்கமாக சிகரெட் புகைத்தால் படபடப்பு அடங்கும். ஆனால் இன்று கூடியது. மெல்ல சிரித்துக் கொண்டான். சிகரெட்டிற்குக் கூட என் மனஓட்டம் தெரிகிறது.
புகைவளையம் மேலே எழும்ப எழும்ப, அவன் அடிமனது ஆசைகளும் கூடவே மேலெழுந்தது. மெல்லக் கண்களை மூடிக் கொண்டான்.
நிஷா!
என்ன ஒரு ஸ்வீட் நேம்! ஆறு மாதம் ஆகிவிட்டது. அவள் அலுவலில் சேர்ந்து. 'கேம்பஸ்' இண்டர்வியூ மூலம் தேர்வானவள் படுசுட்டி, கெட்டிக்காரி. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவள். அலுவலகத்தில் அனைவருமே அவளிடம் தனி மரியாதையுடன் நடந்து கொண்டனர். அவள் மேல் ஒரு கண் சரவணனுக்கு. அவன் நினைத்தப் பெண்களை சுவைக்காமல் விட்டதில்லை. அவன் விரித்த வலையில் சிக்காத மான்களே இல்லை எனலாம். அப்படி ஒரு முகராசி அவனுக்கு. வயது நாற்பதை எட்டி விட்டாலும், தோற்றம் முப்பதிலேயே. ஜிம் - யோகா என்று பாடிவை நன்கு மெயின்டென்ஸ் செய்பவன். நல்ல ஊதியம். அளவான குழந்தைகள். அதிகம் கேள்வி கேட்காத மனைவி. அப்புறம் என்ன சரவணன் காட்டில் 'அடாத மழைடா, அடைமழைடா' தான்.
இளம் வயதிலேயே மேனேஜராக பிரமோஷன்; தன் அதிகாரம், அழகு, பணம் அத்தனையும் பயன்படுத்தித் தனக்குப் பிடித்தவளை வளைத்து ருசிக்கும் ஜெகஜாலம்! இது ஆபீசில் அரசல் புரசலாகத் தெரிந்தாலும் யாருக்கும் வெளியே சொல்லும் தைரியம் இல்லை; காரணம் மேலிடத்தில் அவனுக்கு இருந்த செல்வாக்கு, மற்றும் சொல்வாக்கு. ஆண்டுக்கு ஆண்டு அதிக டன் ஓவர் காட்டும் திறமை அனைவருடைய வாயையும் கட்டிப் போட்டு இருந்தது.
அவனுடைய மிடுக்கையும், நுனிநாக்கு ஆங்கிலத்தையும், தாராள செலவுகளையும் கண்டு தானே வலிய வந்து விழும் பெண்களைத்தான் இதுவரை சுவைத்து இருக்கிறான். இவர்களுள் விதிவிலக்கு நிஷா. அவனுடைய சாதுர்யமான காய் நகர்த்தலைத் தனது சாதுர்யத்தால் கண்டு கொள்ளாதது போலவே நடக்கும் நிஷா. இவள் மரக்கட்டையா? அல்லது மண்டைக்கனமா? தெரியாமல் துவண்டான்.
பின்னர் ரகசிய விசாரணை மூலம் அவள் பின்புலம் அறிந்ததும் லேசான நிம்மதி.
அல்பாயுஸில் போய்ச் சேர்ந்த அப்பா, நாலு வீட்டில பத்துப் பாத்திரம் தேய்த்துக் குழந்தைகளை கௌரவமாக ஆளாக்கிய அம்மா, ப்ளஸ் டூ படிக்கும் தம்பி, பத்தாவது படிக்கும் தங்கை. புறநகர் பகுதியில் ஒண்டுக் குடித்தனம். கார்ப்ப ரேஷன் ஸ்கூலில் மாநிலத்தில் இரண்டாவது ரேங்க் வாங்கிய நிஷா, ஸ்காலர்ஷிப் மூலம் கல்லூரிப் படிப்பு. அங்கும் மெடல். அப்புறம் என்ன? கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தற்போது சரவணனுக்குப் பர்சனல் செகரட்டரி.
எது நடந்தாலும் ஏன் என்று கேள்வி கேட்க நாதியில்லாத நிலைமை. எனவே தைரியமாக தனது அசுத்த காயை நகர்த்தினான்.
ஆம்!
அடுத்த வாரம் பெங்களூரில் நடக்கும் போர்டு மீட்டிங்கிற்கு நிஷாவையும் அழைத்துச் செல்வது. அதை அவள் மறுக்க முடியாது. அங்கு வைத்தே அவளை வீழ்த்துவது. மினிடம் ஒரு மோதிரம், சுடிதார். மேக்ஸிமம் பட்டுப் புடவை, ஒரு நெக்லஸ் வேலை முடிந்தது. அப்புறம் என்ன, ஊலலல்லாலாதான். அவளிடமும் சொல்லி விட்டான். ரயில் டிக்கட்டும் ரிசர்வ் செய்தாகி விட்டது. ஆனந்த வெள்ளத்தில் மிதந்தபடி அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
ஆடிவெள்ளி. நிரம்பி வழியும் துர்க்கையம்மன் சன்னிதி. நீர் வழியும் விழிகளுடன் நிஷா. தாயே மகிசாசுரனை சம்ஹாரம் செய்த நீ, இந்த மேனேஜர் அசுரனிடம் இருந்து என்னைக் காப்பாற்று. கணகணவென்று மணியோசை. கற்பூர ஆரத்தியில் அன்னையின் மந்தகாசப் புன்னகை. குங்குமம் வாங்கி சற்றே நிம்மதியுடன் புறப்பட்டாள் நிஷா.
சாலை விளக்குகள் ஒளிர திடுக்கிட்டு எழுந்தான். ஓ மைகாட். மணி ஏழு ஆகப் போகிறது. புறப்பட்டான். தனது சிவப்பு மாருதியில் ஏறிப் பறந்தான். வீடே நிசப்தமாக இருந்தது. வாசலில் வரவேற்கும் பவானி எங்கே? ஹாரன் சத்தம் கேட்டதும் ஓடிவந்து கேட்டைத் திறக்கும் நந்தினிக் குட்டியையும் காணோம். உள்ளே விரைந்தான்.
ஹாலில் பேயறைந்த கோலத்தில் பவானி. அழுது வீங்கிய முகத்துடன் நந்தினிக் குட்டி. அரண்டு போய் நிற்கும் மகன் ராகுல். என்ன நடக்குது, திகைத்தான்.
'என்னங்க, இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா? நம்ம புள்ளை படிக்கும் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் வந்து... வந்து...'
'சொல்லித் தொலைடி.
'நம்ம புள்ளையத் தொடக் கூடாத இடத்துல எல்லாம் தொடறாராம். நாளைக்கு ஸ்பெஷல் கிளாஸ் உனக்கு மட்டும். வராட்டிப் பெயில் போட்டுடுவேன்னு சொல்றாராம். யார் கிட்டயும் சொன்னா டி.சி. குடுத்துடுவேன், ரெட் மார்க் கோடன்னு மிரட்டுராராம். ஏங்க இப்படி வேலியே பயிரை மேயலாமா?' தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
பூமியே காலடியில் நழுவுவதாக உணர்ந்தான் சரவணன். சாரி நிஷா. என்று முனகியபடியே ரயில் டிக்கட்டைக் கிழித்து எறிந்தான். 'நந்து குட்டி அப்பா இருக்கேன் பயப்படாதே, உன்னை வேறு ஸ்கூலில் சேர்த்து விடுகிறேன். உங்க கரஸ்பாண்ட் என் பிரண்ட், என்றான் ஆதரவுடன். எதுவோ அவனுக்கு விளங்கியது.
எதிர்ச் சுவற்றில் படபடக்கும் காலண்டரில் மகிஷாசுரமர்த்தினி புன்முறுவலுடன்.
சிறுகதை-12
காக்கும் கரங்கள்
ட்ட்ரிங்ங்ங்......
போன் ஒலித்தது. எடுத்தேன். அவர் தான். 'ஏய் சரசு, சாயங்காலம் நாலு மணிக்கே வந்து விடுவேன். நம்ம சரவணன் சார் மகளுக்குக் குழந்தை பிறந்து இருக்கு; பார்க்கப் போகணும். ரெடியாய் இரு' வைத்து விட்டார்.
சரவணன் கணவருடன் பணி புரிபவர். அதையும் தாண்டி இரண்டு குடும்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு. முதலில் பக்கத்துப் பக்கத்துப் போர்ஷனில்தான் குடி இருந்தோம். பார்ப்பவர்கள் உறவா என்று அதிசயிப்பார்கள்.
இரண்டு பிள்ளைகளும் வயிற்றில் இருக்கும் போது மசக்கையில் தவித்த போது சரவணன் மனைவிதான் பெற்ற பெண் போலப் பார்த்துக் கொண்டார். அப்புறம் சொந்த வீடு கட்டி நாங்கள் இங்கு வர சற்றே தொடர்பு குறைவு. இருந்தாலும் அடிக்கடி போனிலும் நாள் கிழமையின் போது நேரிலுமாக எங்கள் உறவு தொடர்ந்தே வருகிறது. நேற்று கூட இந்த வாரம் குழந்தை பிறந்துவிடும் என்று டாக்டர் சொன்னதாகக் கூறினர்.
சட்டென இட்லி வார்த்துப் பொடியும், காரச்சட்னியும் செய்து சிறிது இடியாப்பமும் செய்து பேக் பண்ணி முகம் கழுவி, வேறு சேலைக்கு மாறவும் அவர் வரவும் சரியாக இருந்தது. காபி கொடுத்து கதவைப் பூட்டி பில்லியனில் தொற்றிக் கொண்டேன். குழந்தைகள் லீவுக்குக் கிராமம் சென்று இருந்தனர். எனவே சாவகாசமாக வரலம். குழந்தைகள் இல்லாமல் போரடித்த எனக்கு இந்த பயணம் மாற்றாக அமைந்தது.
இதோ ஹாஸ்பிடல் வந்து விட்டது. வாசலிலேயே சரவணன் வாயெல்லாம் பல்லாக, தாத்தா ஆன பரவசம். மாடியில் 10ம் நம்பர் பெட்டில் அவர் மகள் பாமா. பக்கத்தில் ரோஜாக் குவியலாகப் பெண் குழந்தை. அள்ளி எடுத்து என் கைகளில் தந்தார் சரவணனின் மனைவி லட்சுமி அக்கா. குழந்தையைக் கொஞ்சி குடும்பக் கதை பேசி புறப்பட்டோம். டிபன்பாக்ஸ் நாளை வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி விடை பெற்றோம். கீழே வந்து வண்டியை ஸ்டார் செய்ய எத்தனை உதை வாங்கியும் உறுமாமல் மௌனமாக நின்றது வண்டி. சரி, பக்கத்து மெக்கானிக் ஷாப்பில் சரிசெய்து கொண்டு வருகிறேன். நீ உள்ளே போய் உக்கார்' என்று வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்று விட்டார்.
விதியே என்று திரும்பவும் வரவேற்பு அறையில் வந்து அமர்ந்தேன். நகரின் மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனை அது. ஸ்கேன், எக்ஸ்ரே, குடும்பநல அறுவை, மகப்பேறு இல்லாதவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை, ரத்தம், நீர் டெஸ்ட் என அனைத்து வசதிகளும் தன்னுள்ளே அடக்கி நீண்டு நிமிர்ந்து விரிந்து பரந்த மருத்துவமனை.
வண்ணமயமான தோட்டம். வரிசை வரிசையாக நின்ற நான்கு மூன்று இரண்டு சக்கர வாகனங்கள். பார்த்துப் பார்த்து சொர்க்கபுரியாக அமைக்கப்பட்ட வரவேற்பு அறையில் அமர்ந்தபடி கண்களைச் சுழல விட்டேன். இளவரசி போன்ற மிடுக்குடன் கண்ணாடித் தடுப்புக்குப் பின்னே ரிஷப்ஷனிஸ்ட். கம்ப்யூட்டர், நான்கு வண்ணங்களில் தொலைபேசி, அடுக்கடுக்காகப் பைல்கள்.
வெள்ளுடை தேவதைகள் பரபரப்பாக உலவ, காத்திருப்போர் எப்போது டாக்டர் வருவார் என்று எதிர்பார்ப்புடன், மீண்டும் கண்களைச் சுழல விட்டேன். கழுத்தை இறுக்கும் டையும், காலை இறுக்கும் பூட்சுமாக மருந்துக் கம்பெனி பிரதிநிதிகள். வாட்சை அடிக்கடி திருப்பிப் பார்த்தபடியே தவிப்புடன்.
சற்று தள்ளி கலர் கலராய் வளையலும், வெட்கச் சிரிப்புமாய்த் தலைச்சன் பிள்ளைக்காரி, பக்கத்தில் நெருக்கமும், பூரிப்புமாய் இளம் கணவன், நல்ல ஜோடிப் பொருத்தம்.
அடுத்து வேர்த்து விறுவிறுத்த முகத்துடன் உதடு கடித்து வலியை விழுங்கி இப்பவோ, அப்பவோ என்று அட்மிஷனுக்குக் காத்திருக்கும் நடுத்தர வயது பெண் தோளில் முதல் குழந்தையைச் சாய்த்துக் கவுண்டரில் விபரம் கூறிக் கொண்டு இருப்பவன் தான் கணவன் போலும்.
அப்புறம் தடுப்பூசி, மாதாந்திர டெஸ்ட் என்று நீண்ட வரிசை சற்று தள்ளிக் கலங்கிய கண்களும் சற்றே மேடிட்ட வயிறுமாக ஒரு பெண் பக்கத்தில் இருப்பது மாமியாரும் புருஷனும் என்பதைப் பேச்சிலிருந்தே ஊகிக்க முடிந்தது. ஏனோ அந்தப் பெண்ணைப் பார்த்ததும் என்னுள் ஒரு நெகிழ்வு. நெருங்கி விசாரித்தேன். முதலில் பெண். இப்போது இரண்டாவது ஆறு மாதம். நேற்று ஸ்கேன் எடுத்தோம், இன்று ரிசல்ட் என்று நறுக்குத் தெறித்தது போல் மாமியார்க்காரிக் கூறினாள்.
சற்றே சலசலப்பு. டாக்டரின் வருகை. கடவுளைக் கண்டது போல் ஒரு பரசவம் காத்திருந்தோர் முகத்தில். இவரும் ஒருவிதத்தில் காக்கும் கடவுள் தானே. சந்தன நிறம், புடவையும் அதே கலரில் ஜாக்கெட்டும், நவரத்ன டாலர் சங்கிலியுமாக டாக்டர் முன்னே வர தலைவனைத் தொடரும் தொண்டர்களாக சீரான இடைவெளியில் நடைபோடும் பணிப்பெண்கள். காக்கும் கடவுளைக் காக்கும் துவாரபாலகிகளாக இரு பெண்களும் அறைவாசலிலேயே நிற்க, டாக்டர் உள்ளே சென்று அமர்ந்தார். க்யூ மெல்ல நகர ஆரம்பித்தது.
ஏழாம் நம்பர் டோக்கன் யார்? நர்ஸ் வினவ, அந்தப் பெண்ணும், கணவனும் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தனர். இறுகிய முகத்துடன் மாமியார்க்காரி. சற்றே நேரத்தில் அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக அந்த பெண் வர, புருஷனும், மாமியாக்காரியும் மௌனமாக அமர்ந்தனர். சற்றைக்கெல்லாம் நர்ஸ் அழைக்க ஆபரேஷன் தியேட்டருக்குச் சென்றாள் அந்த பெண்.
எனக்கு ஒருவாறாகப் புரிய ஆரம்பித்தது. ஸ்கேனில் இரண்டாவதும் பெண் என்றதும் அழிக்க ஏற்பாடு. அடப்பாவிகளா! முன்னாலே எங்கே போச்சு அறிவு? என்னுள் புலம்பல். பார்த்தா படிச்சவங்க போலத் தெரியுது. என்ன படிச்சு என்ன பிரயோஜனம்?
கம்சனைப் போல டாக்டரம்மா, ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைய ஒடுங்கிய குரலில் அந்தப் பெண்ணின் அலறல் வெளியே கசிந்தது. கூடவே என் கண்களும். சக்கர வியூகத்தில் புகுந்து வெளிவர முடியாது மாண்ட அபிமன்யுவின் கதியா அந்தக் குழந்தைக்கு? காக்கும் கடவுளான டாக்டருக்கு அழிக்க என்ன உரிமை இருக்கிறது. எல்லாம் காசு படுத்தும் பாடு. ஸ்கேன் அறையின் வெளியே இருந்த போர்டையே வெறித்தேன்.
ஆணா? பெண்ணா? என்று கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்ற வாசகம் என்னைப் பார்த்துக் கைகொட்டி சிரித்தது. ஒரே தலைவலி. காபி சாப்பிட்டால் தேவலாம். நல்லவேளை அதோ அவர் வந்து விட்டார். பக்கத்து ஓட்டலுக்குச் சென்றோம்.
ஏய், என்னாச்சு, ஆஸ்பத்திரி வாசனை ஒத்துக் கொள்ளவில்லையா? என்றவரிடம் மௌனமாக தலையாட்டி டிகாஷன் தூக்கலாய் சர்க்கரை கம்மியாய் இரண்டு காபி என்று சொல்லிவிட்டு இருக்கையில் கண்மூடி சரிந்தேன். மூடிய கண்களுள் ஆஸ்பிடல் சம்பவங்களின் அலைக்கழிப்பு.
'என்னம்மா, மருமவளுக்கு எப்படி இருக்கு?' 'நல்லா இருக்கா' அந்த மாமியார்க்காரியின் பதில். எனக்குப் பின்புறம் இருந்து வந்த குரல்கள் தொடர்ந்தன. எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. தலைக்குள் சிவமணியின் டிரம்ஸ் அலறல்!
'ஏதோ இந்த மட்டும் முன்னாடியே ஸ்கேன் பண்ணுனதால நல்லதாப் போச்சு. பெத்துக்கிட்டு அவதிப்படறத விட இதுமேல்தான். ஆனாலும் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுதும்மா நல்லாவே மாமியார்க்காரி நடித்தாள்!
'என்னம்மா நீ ஊருக்குப் புத்திச் சொல்றவங்க. நீங்களே இப்படி உடைஞ்ச போகலாமா? அப்புறம் அந்தப் பெண்ணுக்கு யார் ஆறுதல் சொல்றது'
'அந்தப் பொண்ணுதான் இந்த முடிவுக்கே வந்தது. நான் கூட வேண்டாம்னு தான் சொன்னேன். நல்லாத்தான் ப்ளேட்டைத் திருப்புறா, கெட்டிக்காரிதான். அந்தப் பொண்ணு இவகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிது. மகன்காரனும் சரியான அம்மாக் கோண்டு போ,. பல்லைக் கடித்தபடியே காப்பியை ஆற்றினேன். மேலும் பேச்சு தொடர்ந்தது.
'முதல் ஸ்கேனிலேயே டாக்டருக்குச் சந்தேகம். அதான் இரண்டாவது ஸ்கேன். புள்ளக்குச் சரியான மூளை வளர்ச்சி இல்லையாம். என் குழந்தைய அந்த நிலைமையில பார்க்க முடியாது. அப்படியே பெத்துக் கிட்டாலும் எனக்குப் பிறகு யார் கவனிப்பா' என்று பிடிவாதமாக இந்த முடிவுக்கு வந்துட்டா மருமவ. அவ சொல்றதும் நியாயம் தானேன்னு ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டோம். காந்திஜியே கருணைக் கொலை தப்பில்லன்னு சொல்லி இருக்காங்கன்னு டாக்டரும் சொன்னாங்க. அதான்'
எனக்குத் தலைசுற்றியது. நம்முடைய புத்தியை என்னன்னு சொல்றது. நல்லவேளை இப்பவாவது உண்மை தெரிஞ்சுது. அபாண்டமாக டாக்டரைப் பற்றி நினைச்சது எல்லாம் எவ்வளவு தப்பு. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்று இப்போதுதான் புரிகிறது. அல்லதை நீக்கி நல்லதைக் காக்கும் மகிஷாசுரமர்த்தினி டாக்டரம்மா மானசீகமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். 'என்ன ஆச்சு தலைவலி' என்றவரிடம் 'போயே போச்சு' என்றேன் உற்சாகமாய்.
'என்ன மாயம்! காபி சாப்பிட்டதும் எப்படி போச்சு' என்றவரிடம் 'வீட்டுக்கு வந்ததும் சொல்றேன். தலைவலி எப்படி வந்தது, எப்படி போச்சு' என்று கண்ணடித்து சிரித்தேன். என் உற்சாகம் வண்டிக்கும் தொற்றிக் கொள்ள 'தென்மேற்கு பருவக்காற்று சிலுசிலுவென்று வீசுது தேனிப்பக்கம்' என்று முனகியபடியே பில்லியனில் தொற்றிக் கொண்டேன். வண்டி வெண்ணையாய் வழுக்கிச் சென்றது.
சிறுகதை-13
உறவுகள்
சே... என்ன பிழைப்பு.
அலுத்துக் கொண்டாள் கீதா. நான் ரயிலில் ஏறிப் போனால் என் தரித்திரம் இஞ்சினில் ஏறி எனக்கு முன்னே போய் நிற்கிறது. அவள் தேடிவந்த தனியார் பள்ளி நிறுவனர் ஊரில் இல்லையாம். ஏதோ அவசர வேலையாம். அடுத்த வாரம் வரச்சொல் என்று கிளார்க்கிடம் கூறி சென்று விட்டாராம். அதுதான் கீதாவின் சலிப்புக்குக் காரணம். அவளுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை, வேதனை.
மனசுக்குள் குமைந்தபடி மீண்டும் பேருந்து நிலையம் வந்தாள். அவளுக்கான பஸ்ஸீக்கு இன்னும் அரை மணிநேரம் காத்திருக்க வேண்டும். கண்களை மூடியபடியே பேருந்து நிலைய இருக்கையில் சாய்ந்தாள். மூடிய கண்களின் உள்ளே அவளை அலைக்கழிக்கும் பழைய நினைவுகள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னே முரளியைக் கைப்பிடித்து மண வாழ்வில் அடிஎடுத்து வைத்தாள். மாநிறம், ஆனாலும் 'ப்ருதிவிராஜ்' போன்ற எடுப்பான மிடுக்கான தோற்றம். சிரிக்கும் கண்கள், நல்ல படிப்பு நல்ல உத்தியோகம், ஒரே பிள்ளை, நல்ல வசதியான குடும்பம், அன்பான மாமியார், மாமனார், பக்கத்து ஊர். ஏற்கெனவே நல்ல அறிமுகம். வாழ்க்கை இனிமையாக ஓடியது. ஆனந்த வெள்ளத்தில் திளைத்தாள் கீதா. யார் கண்பட்டதோ முரளியின் நடவடிக்கைளில் மாற்றம். லீவு நாட்களிலும் வீடு தங்குவதில்லை. ஆபீசுக்கும் மட்டம் அடிக்க ஆரம்பித்தான். மெல்ல மெல்ல புரிந்தது காரணம். நண்பர்களின் சகவாசத்தில் குடிப் பழக்கம் ஆரம்பம். தட்டிக் கேட்ட கீதாவிடம் முதலில் சாரி சொன்னவன் பின்னர் எகிற ஆரம்பித்தான். ஒருநாள் நிலைமை ஓவராகப் போக எதிர்த்துக் கேட்டவளை ஓங்கி அறைந்து விட்டான், அதுவும் அண்ணன் ரவியின் முன்னிலையில். அப்புறம் என்ன, ரவியும், முரளியும் முட்டி மோத, பெரியவர்கள் ஏதும் புரியாமல் குழம்ப, அண்ணனுடன் பிறந்தகம் வந்து ஒருமாதம் ஓடிவிட்டது. அம்மாவும், அப்பாவும் சமாதானம் பேச முயல அண்ணன் ரவி மட்டும் கீதாவுக்கு சப்போட். 'கைநீட்டி அடித்த அந்தக் குடிகாரனுடன் குடித்தனம் நடத்த வேண்டாம், மரியாதையா டைவர்ஸ் குடுக்கணும் அந்தப்பய, இல்லாட்டி வரதட்சணை கொடுமை, மகளிர் வன்கொடுமை யின்னு கேஸ் போடுவேன்' என்று மிரட்ட கீதாவும் தலையை ஆட்டி வைத்தாள். மாமியார் மாமனார் 'கேஸ் போட வேண்டாம். குடும்பமானம் போய்விடும், என்று கெஞ்ச, 'அப்படியானால் அவனுக்குச் செய்த சீர் செனத்திகளைத் திருப்பித் தரணும். ஜீவனாம்சமாக டவுனை ஒட்டி இருக்கும் 10 ஏக்கர் நிலத்தைக் கொடுக்கணும்' என்று கண்டிஷன் போட வேறுவழியின்றி ஒத்துக் கொண்டனர் பெரியவர்கள். முரளி எத்தனையோ முறை நேரிலும், போனிலும் கெஞ்ச விரட்டி அடித்தான் ரவி. வாய் பேசாது மௌனித்தாள் கீதா.
நேற்றுதான் சொன்னான் அண்ணன். 'உன் நகையை எல்லாம் பாங்க் லாக்கரில் வைத்து விட்டேன். உனக்குப் பொழுது போகலைன்னா பக்கத்து ஊரில் என் நண்பன் தனியார் பள்ளி நடத்துகிறான். அதில் உனக்கு வேலை போட்டுத் தர்ரேன்னு சொல்லி இருக்கான். போய்ப்பார்' என்று கூற காலையில் கிளம்பி சென்ற போதுதான் அடுத்தவாரம் வரச் சொல்லித் தகவல்.
அண்ணனுக்குத்தான் என்மேல் எவ்வளவு பாசம். அவன் மிரட்டவில்லை என்றால் அந்தக் கிழங்கள் சொத்து குடுக்குமா? எனக்கு தான் வேலை கிடைக்குமா? இது புரியாமல் குட்டையைக் குழப்பும் அம்மாவும், அப்பாவும். 'எடுத்தோம் கவுத்தோம்னு இப்படி செய்யக் கூடாது. குடும்பம்னா அப்படி இப்படித் தான் இருக்கும். இப்ப நேரம், காலம் சரியில்லை. அதனாலதான் இந்தக் குழப்பம். மாப்பிள்ளை எவ்வளவு கெஞ்சுறார், இனிமே குடிக்க மாட்டேன்னு சத்யம் செய்யுறார். ஒருதடவை மறப்போம். மன்னிப்போம்'னு ஒரே அட்வைஸ். வேலை கிடைசுட்டா இந்த நச்சரிப்பில் இருந்து விடுதலைன்னு பார்த்தா இன்னும் ஒருவாரம் காத்து இருக்கணும். நானும் வேலைக்குப் போய் வாழ்ந்து காட்டணும். சம்பாதிக்கிற திமிர்லதானே கை நீளுது. கருவிக் கொண்டாள். அப்பாவும் அம்மாவும் கோயில் குளம்னு போய் இருக்காங்க. பொண்ணு புருஷனோட வாழணும்னு தலயாத்திரை; வர ஒருவாரம் ஆகும். எனவே புலம்பல் இருக்காது. நிம்மதியா டிவி பார்க்கலாம் என்று எண்ணியபடியே பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். கதவு சாத்தி இருந்தது; திறக்கப் போனவள் தன் பெயர் அடிபடவே தயங்கியபடியே திண்ணையில் அமர்ந்தாள். உள்ளே அண்ணியிடம் ரவி பேசிக் கொண்டு இருந்தான். 'ஏய் நாத்தனார் கிட்ட கொஞ்ச நாள் பாசமா நடிடி. அப்பத்தான் என் ஐடியா ஒர்க் அவுட் ஆகும்'.
'என்ன பெரிய ஐடியா, வாழற பொண்ணை வாழாவெட்டியா ஊட்ல வச்சு அழகு பாக்குறதா, புள்ள பூச்சிய மடியில கட்டிக்கிட்டது மாதிரி'
'ஏய், அவ புள்ள பூச்சி இல்லடி, பொன்முட்டை இடுற வாத்து. இன்னைக்கு அந்தப் பய முரளி சொத்துப் பத்திரத்தைக் கொண்டு வருவான். அதுக்குத் தான் அவளை அப்புறப்படுத்தினேன். நேர்ல புருஷனைப் பார்த்ததும் மனசு மாறிட்டான்னா. அதுக்குதான். அப்புறம் அவ நகைகளை லாக்கரில் வைக்கல. எல்லாத்தையும் வித்து எனக்கு இருந்த கடனையெல்லாம் அடைச்சுட்டேன். புருஷனோட போறேன்னா நகைகளைக் கொண்டான்னு கேட்பாளே. இந்தக் கிழங்களின் வாயை அடைக்க ஒரிஜினல் மாதிரி ஒரு செட் கவரிங்ல வாங்கி வச்சுட்டேன். அப்புறம் அவளுக்கு வர்ற நிலத்துக்கு ஒரு கோடி தர்றேன்னு ரியல் எஸ்டேட்காரன் சொல்லி இருக்கான். நம்ப சொத்துலேயும் பங்கு தர வேண்டாம். வேலைக்குப் போகச் சொன்னதற்குக் காரணம். கையை விட்டு சோறு போட வேண்டாம். அதோட ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்துட்டா நம்ம புள்ளை இரண்டையும் சைக்கிளில் அனுப்பி விடலாம். ஆட்டோ செலவு, ட்யூஷன் செலவு மிச்சம். அதோட வீட்டு வேலையிலும் ஒத்தாசையா இருப்பா. எனவே வர்ற மாசத்தில் இருந்து வேலைக்காரிய நிப்பாட்டப் போறேன். நல்ல வேளை புள்ளை எதுவும் பிறக்கல. எல்லா சொத்தும் நமக்குத்தான். நம்ம வீட்டுக் கிழங்கள் இரண்டும் வருவதற்குள் எல்லாத்தையும் செட்டில் செய்யணும். அதுகளுக்கு மூக்கு வேர்த்து விட்டால் முட்டுக்கட்டை போடுங்க. எப்படி நம்ம ஐடியா?'
'அதனாலே எல்லாமே கைக்கு வரும்வரை நாத்தனாரை உள்ளங்கையில் வைத்துத் தாங்கு. இப்ப அந்தப்பய முரளி வந்துடுவான். அத்தோட இந்தப் பையில் பாரின் சரக்கு இரண்டு பாட்டில் இருக்கு. பத்திரமா எடுத்து வை. இந்த சந்தோஷத்தைக் கொண்டாடணும். போன வாரமே அது என்னன்னு இந்தப் பசங்க துளைத்து எடுத்துட்டாங்க. அதுக கண்ல படாம மறைவா வை. இப்ப அந்தப்பய முரளி வந்துடுவான்' என்று ரவி கூறுவதைக் கேட்டதும் தலை சுற்றியது கீதாவுக்கு. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. வர்றது யாரு, முரளியேதான். வண்டி சத்தம் கேட்டதும் ரவி சட்டென வெளியில் வந்தான் கீதாவைக் கவனிக்கா மலேயே. ரவியிடம் முரளி நீட்டிய பத்திரத்தை இடைமறித்து வாங்கினாள் கீதா.' குடுத்தாச்சுல புறப்படு' என்று அதட்டியவனைக் கையமர்த்திய கீதா, பத்திரத்தை சுக்கல் சுக்கலாக கிழித்து எறிந்தாள்.'ஏய் என்ன பயித்தியமா' என்ற ரவியிடம், 'இல்ல இப்ப தெளிந்து விட்டது' என்றாள் நமட்டு சிரிப்புடன்.
சட்டென்று முரளியின் வண்டியில் தொற்றி ஏறியவள் 'நம்ம வீட்டுக்குப் போகலாம்' என்று அவன் காதில் கிசுகிசுத்தாள். 'ஏய், ஏய் எங்கேப் போறே, யாரைக் கேட்டுட்டு போறே' என்று பின்னேயே ஓடி வந்தவனிடம் கீதா கூறினாள். 'என் மகனை கேட்டுட்டுப் போறேன். இவ்வளவு கேவலமான மாமா வேண்டாம்னு சொல்றான். அதான்'.
சட்டென அவள் கைபற்றி 'தேங்க் காட்' என்று கண்ணீருடன் கூறிய முரளி வண்டியை ஸ்டார்ட் செய்தான். செய்வதறியாது முகம் வெளுத்துத் தலை குனிந்தான் ரவி.
சிறுகதை-14
புதிய பாதை
கனத்த மௌனம்!
இரண்டு மகன்கள், அவர்கள் மனைவிகள், குழந்தைகள், மைத்துனன் சிவா, அண்ணன் முருகையன் என வீடு நிறைய உறவுகள் இருந்தும் மௌனம். மெல்ல மச்சினன் சிவாதான் பேச்சை ஆரம்பித்தான்.
'அத்தான் நீங்க செய்யுறது உங்களுக்கே நியாமாப்படுதா?'
'என்ன பெரிய நியாயத்தைக் கண்டுட்ட' சீறினார் ஆறுமுகம்.
'அது இல்ல வந்து.. வந்து இந்த வயசுக்கு மேல இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சா ஊரு உலகம் என்ன சொல்லும்?'
'அவுங்களப் பத்தியும்தான் ஊரும் உலகமும் காறித் துப்பிச்சுது. அதுக்காக யாரும் முடிவை மாத்திக்கலிய. அதையெல்லாம் கேட்டியாநீ?'
'இல்ல.. அதுக சிறிசுகள் ஏதோத் தெரியாத்தனமா நடந்துகிட்டுதுங்க. இனிமே அப்படி விட்டேத்தியா நடக்கமாட்டாங்க'
'இப்ப வக்காலத்து வாங்க வர்றிய, அப்ப எங்க போச்சு உன் புத்தி.'
'அத்தான் நடந்தது நடத்ததா இருக்கட்டும். இனிமே நடக்கப் போறது நல்லதாவே இருக்கும்.'
'அதைத்தான் நானும் சொல்றேன். இனிமே நடக்கப் போவது நல்லாவே நடக்கும். அதுல எந்த மாற்றமும் இல்லை' உறுமினார் ஆறுமுகம்.
இதுவரை மாமாவை முன்னே களம் இறக்கிப் பின்னே பதுங்கி இருந்து கவனித்த மகன்கள் இருவரும் நேருக்கு நேர் மோத ஆரம்பித்தனர்.
'கிழவனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கலன்னு காறித் துப்புறாங்க. வெளில தலைக்காட்ட முடியல.'
'அம்மா போன ரெண்டு வருஷமா அடுத்தத் தெருவுலதான இருக்கீங்க ரெண்டு பேரும். என்னை சோத்துக்கு ஆலாப் பறக்க விட்டுட்டு வாடகை வீட்டுக்கு மாறினீங்க. ஆபிஸ் கிட்ட இருக்கு, பள்ளிக்கூடம் கிட்ட இருக்குன்னு சாக்கு. அம்மா இருக்கும்போது இருந்த அதே ஆபிஸ், அதே பள்ளிக்கூடந்தானே. அப்போ அம்மா உங்க பெண்டாட்டிகளை உட்கார வச்சு விதம் விதமா ஆக்கிப் போட்டா. அவங்களும் ஒரு கையில டிவி. ரிமோட்டும், மறுகையில செல்போனுமாப் பொழுதைப் போக்கினாங்க. போதாக்குறைக்கு அவளைப் பத்தி போட்டுக் குடுப்பாங்க. நீங்களும் அதைக் கேட்டுக்கிட்டு ஆடினீங்க. பொறுத்தது போதும்னு பொசுக்குன்னு போய் சேர்ந்துட்டா, என்னை நட்டாத்துல விட்டுட்டு. விதம் விதமா கிழத்துக்கு ஆக்கிப் போட முடியாதுன்னு கிளம்பிட்டீங்க. உங்க அத்தனை பேரையும் உக்கார வச்சு அந்தக் கிழம்தானே விதம் விதமா ஆக்கிப் போட்டுச்சு? சோறு போட்டா பணம் குடுக்காமலாப் போயிடுவேன்?'
'ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கல முதியோர் இல்லத்துல சேரவும் இஷ்டம் இல்ல, நான் வளர்ந்து வாழ்ந்த இடத்துலேயே கடைசி காலத்தைக் கழிக்க ஆசைப்படுகிறேன். இது தப்பா?'
'நல்லா ஆசைப்படுங்க, யார் வேண்டாங்கறது. அதுக்கும், இப்ப நீங்க எடுத்து இருக்கற முடிவுக்கும் என்ன சம்பந்தம்?'
பாத்ரூம்ல வழுக்கி விழுந்து, படுத்த படுக்கையாக் கிடந்தப்போ கூட என்ன, ஏதுன்னு எட்டிப் பார்க்கல ஒருத்தரும். இப்ப ஒட்டு மொத்தமா வந்து இருக்கீங்க எல்லாரும். அடுத்த வீட்டு பார்வதிதான் என்னை கவனிச்சுக்கிட்டா. அவளும் என்னைப் போலத்தான், தனிக்கட்டை. புருஷன் போய்ச் சேர்ந்து 10 வருஷம் ஆச்சு. புள்ள குட்டியும் கிடையாது. அண்ணன் வீட்டுல தங்கிக்கிட்டு நாலுவூட்ல பத்துப் பாத்திரம் தேய்ச்சு வயிறு வளர்க்கிறா. அவ மனிதாபிமானத்தோட எனக்கு ஒத்தாசை செஞ்சத ஊதி ஊதிப் பெருசாக்கி அவளை அவமானப்படுத்திட்டீங்க. அவளுக்கும் அம்பது வயசாயிட்டுது. நாதியில்ல. அதனால நீங்க செஞ்ச அவமானத்தைத் தொடைக்கிறதுக்கு எனக்கு வேற வழி தெரில. அதனாலதான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன். நாங்க ஒண்ணும் உடல் சுகத்துக்காக இந்த முடிவுக்க வரல. தம்பதிகள் என்ற போர்வையில் நண்பரகளாகத் தான் இருக்கப் போகிறோம். யார் என்ன சொன்னாலும் அதைப் பத்திக் கவலை இல்ல.
நீங்க பதட்டப்படுவது எதுக்குன்னு நல்லாவேத் தெரியும். சொத்துப் பார்வதிக்குத் போயிடுமேங்கிறது தானே உங்க பயம்?' அனைவரும் தர்மசங்கடத்தில் நெளிந்தனர். தொடர்ந்தார் ஆறுமுகம்.
'நேற்றே உயில் எழுதிட்டேன். நிலத்தை உங்க பேருக்கு எழுதி வச்சுட்டேன். இந்த வீடு எனக்கும், பார்வதிக்கும். பிறகு உங்களுக்கே. என் சேமிப்பு பணத்துல வரவட்டி அவ வயித்துக்குப் போதும். அவளுக்குப் பிறகு அந்தப் பணத்துக்கும் நீங்கதான் வாரிசு. பொறந்த கடமையை நீங்க ஒழுங்காச் செய்யலன்னாலும் பெத்தக் கடன ஒழுங்காச் செய்யாட்டி ஊருலகம் காறித் துப்புவாங்கல்ல, என்ன' என்று நிறுத்தினார்.
'என் மேல இருக்குற கோவத்துல பார்வதியை மெரட்டினிங்கன்னா எல்லா சொத்தும் அனாதை இல்லத்துக்குப் போயிடும் ஜாக்கிரதை. அதை தடுக்க எந்தக் கட்டாயப் பஞ்சாயத்துக்கும் அதிகாரம் இல்லை. எல்லாம் நானே சுயமா வாங்கியது' என்றவரை இடைமறித்தார் அண்ணன் முருகையன். 'ஆயிரம்தான் இருந்தாலும் நாளைக்குக் கொள்ளி போட்டுத் திவசம் திங்கள்னு செய்யப் போறது அவுங்கதானே?'
'அந்தச் சிரமமும் அவுங்களுக்கு வேணாம்னுதான் 'உடல்தானம்' செய்ய முடிவு செஞ்சு இருக்கோம் இரண்டு பேரும்' மிரண்டு போனார் முருகையன்.
அதுமட்டுமல்ல, ரெண்டு அனாதைக் குழந்தைகளைத் தத்து எடுத்து படிக்க வைக்கப் போறோம். பெத்த புள்ளங்கதான் என்னை அனாதையா உட்டுட்டீங்க. அதனால அனாதைப் புள்ளங்களப் பெத்தப் புள்ளங்களா வளர்க்க முடிவு எடுத்த இருக்கோம். அதுக்கெல்லாம் பணம் வேணும்ல, அதனால நான் ஜவுளிக்கடையில கணக்கு எழுதப் போறேன். பார்வதி பத்து பேருக்கு மெஸ் மாதிரி சமைச்சுக் கொடுக்கப் போறா. அதனால கிழவன் எப்ப நம்மகிட்ட வந்து ஒட்டி விடுவானோன்னு பயப்படாம இருங்க. ஆங், சொல்ல மறந்துட்டேன். நான் 'ரிஜிட்டிரார்' ஆபிஸ் போறேன். வருவதற்குள் உங்களுக்கு என்ன சாமான்கள் வேணுமோ அத்தனையும் எடுத்துக்கிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க. அப்புறம் அண்டாவைக் கொண்டா, குண்டானைக் கொண்டான்னு கட்டப் பஞ்சாயத்துக்கு வராதீங்க' கம்பீரமாகப் புறப்பட்டார் ஆறுமுகம். எதிர்வீட்டு எஃப்.எம்மில் கர்ஜித்துக் கொண்டு இருந்தார் டி.எம்.எஸ்.
"யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடாப் போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க"
சிறுகதை-14
ஒரு தாயின் கடிதம்
"என்னங்க பொண்ணு இப்படி சொல்லிவிட்டு போறா எனக்கு பயமா இருக்குங்க".
ஐந்து வருஷமாப் பயந்தது போதும். இனிமேலும் என்னால் பயப்படமுடியாது. முடிஞ்சா அனுசரிச்சுகிட்டு இருக்கட்டும்; இல்லாட்டி புள்ளைங்களோட வந்துடச் சொல்லு. நான் சோறு போடுறேன்.
"புள்ளைங்களைத் தரமாட்டேன்னு சொல்லிட்டா?"
புடிச்ச பீடை உட்டுதுன்னு கைய வீசிகிட்டு வரச்சொல்லு. ஆயுசுக்கும் சோறும் துணியும் நான் தர்றேன். தெளிவாச் சொல்லிப்புடு உன்பெண்ணுகிட்ட. நான் நாளைக் காலை முதல் பஸ்சுக்குப் புறப்படனும். திருச்சியில் மீட்டிங் வர இரண்டு நாளாகும். நல்லதா ரெண்டு செட் ட்ரெஸ் எடுத்து வை விடியற்காலையில் கிளம்பனும் சாப்பாட்டை எடுத்துவை." அதட்டலாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
பொங்கிக் கொண்டு வந்தது மீனாட்சிக்கு. "என்ன மனுஷன் இவர். ஒரே மகள் அப்படி நொந்து போய் அழுது புலம்பிகிட்டுப் போறா. இவர் கொஞ்சம் கூட அலட்டிக்கவே இல்லை. இந்த ஆண் பிள்ளைகளே இப்படித்தானா?"
அங்கே மகளைக் கடித்துக் குதறும் மருமகன். இங்கு மௌனமாகக் கழுத்தறுக்கும் இவர். மாசம் ஒரு முறை இவர் மீட்டிங்குன்னு போறது எதுக்காக? கூட வேலை பார்க்கும் லதாவோட கும்மாளம் போடத்தானே? அதையெல்லாம் கண்டும் காணாம இருப்பது நான் பெற்ற மக்களுக்காகத் தானே? ஒற்றைப் பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டு நாய்படாத பாடு. பிள்ளை இஞ்ஜீனியரிங் படிக்கிறான். ஹாஸ்டல் வாசம். அவன் கிளம்பி என்ன பாடுபடுத்தப் போறானோ?
சே என்ன வாழ்க்கை சுயமரியாதையை அடகு வைத்து ஊருக்காக வாழ்ந்து...ஹீம் என்னத்தக் கண்டேன் மௌனமாக ட்ரெஸ்சை அயர்ன் பண்ண ஆரம்பித்தாள்.
அயன் பாக்ஸ் மிதமான உஷ்ணத்துடன் துணியில் உலாவர, அவள் எண்ணங்கள் அதீத உஷ்ணத்துடன் நெஞ்சில் உலாவந்தது.
ஒரே மகளை பார்த்துப் பார்த்து தகுதிக்குமேல் செலவு செய்து திருமணம் செய்து கொடுத்து அடுத்த ஆண்டே இரட்டைக் குழந்தை பிறக்க வளைகாப்பு சீமந்தம் ஆஸ்பத்திரி அது இது என்று செலவுகள் கழுத்தை நெறிக்க முழி பிதுங்கி விட்டது.
இதற்குள் தனியாரில் வேலை பார்த்த மருமகன் சொந்த பிசினஸ் பண்றேன்னு போட்ட நகைகளைத் தொலைக்க, வறுமையின் நிறம் சிவப்பு என்பது நிதர்சனமாயிற்று. ஏற்கனவே அம்மாக் கோண்டான மாப்பிள்ளை. இரண்டு தங்கை தம்பி அம்மா அப்பா என வீடு நிறைய கூட்டம்.
ஒரே பெண் தானே அதைச் செஞ்சாஎன்ன இதைச் செஞ்சா என்னன்னு கேட்கிறாங்க என்று கோரிக்கையுடன் வரும் மகள். மகன் வரும் மகிழ்ச்சியை விட அவள் என்ன கேட்கப் போகிறாளோ என்ற திகில் எப்போதும் அடிவயிற்றில். ராசி இல்லாத மகளை எங்க தலையில் கட்டி விட்டாங்க. அதை ஈடு கட்டவே இந்த வசூல் வேட்டை என்ற வியாக்கியானம் வேறு.
யோசித்துப் பார்த்ததில் பொருளாதாரத்தின் பொருள் தான் தாரம் என்று உண்மை உரைக்க ஆரம்பித்தது அரைகுறையாய் விட்ட கம்ப்யூட்டர் படிப்பைத் தொடரச் செய்து வேலையும் கிடைத்து இரண்டு மாதசம்பளமும் வாங்கி விட்டாள் உஷா. இது எதையுமே கண்டு கொள்ளாத கணவன் நடேசன் சிறு சேமிப்பு முகவராக மீனாட்சி பணி புரிந்ததால் கணிசமான வருமானம் அதை வைத்தே உஷாவுக்கு வேண்டியதைச் செய்தாள் மீனாட்சி.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நிம்மதியாக உண்டு உறங்க ஆரம்பித்தாள் மீனாட்சி அந்தநிம்மதியில் இடி விழுந்தது இன்று உஷா கொண்டு வந்த செய்தியால். விஷயம் இதுதான்.
உஷாவின் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி வேலைக்குத் தேர்வானாள். வட்டாட்சியர் அலுவலகத்தில் கம்யூட்டர் ஆப்ரேட்டர் பணி. அங்குதான் வில்லங்கம் அரங்கேறி இருக்கிறது.
முறைப்படி தேர்வானவளுக்கு ஐம்பது ஆயிரம் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கின்றனர் அங்கு இருந்த பழம் பெருச்சாளிகள். எங்களைக் கலக்காமலே மாப்பிள்ளை கடன் வாங்கி லஞ்சம் தந்து இருக்கிறார். மாதா மாதம் அவள் சம்பளத்தில் இருந்தே வட்டியுடன் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
உஷா வேலை பார்க்கும் அலுவலகம் அருகே ஒரு நகைக் கடை. அதில் நகை சீட்டு சேர வேண்டுமென கடை அதிபர் கோரிக்கை வைக்க அனைவரும் சீட்டில் சேர்ந்தனர். உஷாவையும் வற்புறுத்த மறுத்து இருக்கிறாள்.
அப்போது அவள் நாக்கில் ஏழரைச்சனி. வேலைக்கு கொடுத்த லஞ்சப் பணத்திற்குத் தவணை கட்டவே திணறுகிறேன் எனவே சீட்டில் சேரமுடியாது என்று கூறி இருக்கிறாள்.
இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வேலைக்கு லஞ்சம் என்று சில உண்மை விளம்பிப் பத்திரிகைகள் உரிக்க நேர்மையான மாவட்ட ஆட்சியருக்கு டென்ஷன் தவிக்கிறார் தன் வரம்புக்கு உட்பட்ட அலுவலகம் அத்தனையிலும் ரகசியமாகத் தகவல் சேகரிக்க ஏற்பாடுகள் செய்கிறார்.
அப்புறம் என்ன!
உஷா லஞ்சம் வழங்கியது மாவட்ட ஆட்சியருக்கு தகவல் பறக்கிறது. கூடவே பெருச்சாளிக்கும் தகவல் கசிகிறது. காட்டிக் கொடுக்காவிட்டால் சீட்டைக் கிழிப்பேன் என்று கலெக்டர் விரட்ட, காட்டிக் கொடுத்தால் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவோம். கலெக்டர் மூணுமாசத்தில் கிளம்பிடுவாரு. அப்புறம் எங்ககிட்டதான் குப்பை கொட்டணும், உனக்கு ரெட் மார்க்குடுத்து சஸ்பெண்ட் செய்து விடுவோம்னு பெருச்சாளிகள் மிரட்ட அரண்டு போன உஷா புருஷன்கிட்ட சொல்லியிருக்கிறாள்.
அவரும் லஞ்சம் வாங்கியவரிடம் எகிற உள்ளுர் ரவுடி மூலம் பதில் வந்தது. அவர் கிட்ட எசகு பிசகா நடந்து கிட்டா உங்க பெண்டாட்டி மானத்தை எப்படி வாங்குறதுன்னு எங்களுக்குத் தெரியும் என்று எச்சரிக்க. உடனே மருமகன் அவனைப் போட்டுத் தள்ளுவேன் என்று உதார்விட மறுபடியும் உஷா கண்ணீருடன் காலையில் ஆஜர்.
அதுக்குதான் இந்த மனுஷர் இப்படிப் பேசுறாரு பேரப்புள்ள எடுத்துட்டு பலானடூர் போறார். மகளுக்கு ஆயுசுக்கும் சோறு போடுவாராம் சுகத்தையாரு தர்றதாம். புரிஞ்சுதான் பேசுறாரா; இல்ல புரியாததுபோல நடிக்குறாரா? கண்ணீருடன் வேலை முடித்துப் படுக்கும் போது இரவு மணிபத்து
விடிஞ்சும் விடியாமலும் நடேசன் கிளம்பிவிட்டார். ஜீரம் அளவாய் கொதிக்கப் படுக்கையிலேயே கிடந்தாள். மாலைதான் எழுந்தாள் எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை. பிரதோஷம் என்பது நினைவுக்கு வர அவசரம் அவசரமாகக் குளித்து குக்கரில் ஒருகை அரிசி வைத்து கோவிலுக்கு அவசரம் அவசரமாகப் புறப்பட்டாள்
கோவிலுக்குள் நுழையவும் அபிஷேகம் ஆரம்பம் ஆகவும் சரியாக இருந்தது. கண கணவென்று மணி ஒலிக்கப் பால் அபிஷேகம்."அப்பனே என் வயிற்றிலும் பால் வார்க்கனும், பெற்ற வயிற்றைக் குளிரவைக்கனும்" கண் மூடிப் பிரார்த்தித்துப் பிரசாதம் வாங்கித் திரும்பும் போது மனம் சற்றே லேசானது வழியில் ஆட்டோவில் ஏதோ அறிவிப்பு.
"நாளைக் காலை பத்து மணி அளவில் மாவட்ட ஆட்சியரின் குரை தீர்க்கும் நாள் முகாம். உள்ளுர் பள்ளிக்கூடத்தில். அவரவர்கள் குறைகளை மனுவாக எழுதித் தர வேண்டும். உடன் ஆவன செய்யப்படும் என்ற அறிவுப்பு கூடவே நோட்டீசும் விநியோகம்.
இரவு நெடு நேரம் ஆகியும் உறக்கம் வரவில்லை. சாப்பிடவும் தோன்றவில்லை. சாதத்தில் தண்ணீர் ஊற்றிவைத்துவிட்டுக் காப்பியும் பிரட்டும் சாப்பிட்டாள். ஒரு முடிவுடன் எழுந்து எழுத ஆரம்பித்தாள்.
வணக்கம்!
மதிப்புற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கட்கு எழுதுவது இது கடிதம் அல்ல. கருணை மனு.
பிரச்சனைக்குரிய வட்டாட்சியர் அலுவலக கம்யூட்டர் ஆப்ரேட்டர் உஷாவின் தாய் நான். மிகுந்த போராட்டகளுக்கிடையே தற்போதுதான் மகள் வாழ்வில் சற்றே வெளிச்சம். அதற்குள் இந்தலஞ்சப் பிரச்சனை.
இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் அவள் நிலை என் எதிரிக்குக் கூட வர்வேண்டாம். ஒரு புறம் உங்களுடைய கண்டிப்பு. மறுபுறம் அவர்களின் மிரட்டல். அவர்களை வெட்டிப் போடுவேன் என்று வெற்றுச் சவடால் அடிக்கும் மருமகன். வேலை போய் விட்டால் அந்த வீட்டில் எனக்கு வேலை இல்லை. எனவே இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை என்று புலம்பும் மகள். விட்டேத்தியான என் கணவர். மகளுக்காகவே வாழும் நான்.
அவளுக்கு எதுவும் ஆகிவிட்டால் என் மரணமும் திண்ணம். எங்கள் நால்வரின் உயிரும் உங்கள் கையில் எங்களுக்கு வாழ்வாசாவா என்பதைத் தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
சட்டப்படி முடிவெடுக்காமல் தர்மப்படி முடிவு எடுக்கும் படி.
மன்றாடும் ஒரு தாயின் தாய் மீனாட்சி.
என்று எழுதிமுடித்துக்கவரில் போட்டு வைத்துப் படுக்கையில் விழுந்தாள். எப்போது உறக்கம் வந்தது என்பது அவளுக்கே தெரியாது.
எழும் போது மணி எட்டு. பரபரவென்று எல்லாவேலையும் முடித்துக் குளித்து ஒருவாய்காபி குடித்து நேற்று தண்ணீர் ஊற்றிய சாதத்தை டப்பாவில் போட்டு மோரும் உப்பும் கூடவே ஒரு நாரத்தங்காய் ஊறுகாய்துண்டையும் போட்டு பாட்டிலில் தண்ணீர் பிரஷர் மாத்திரை சகிதம் புறப்பட்டாள் கடிதத்துடன். பள்ளிக்கூடத்தை அடையவும் சைரன் ஒலிக்க சரேலென கலெக்டரின் வாகனம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
டவாலி முன்னதாக இறங்கிக் கதவைத்திறந்து விட நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாகக் கலெக்டர். சம்பிரதாயமாக விழா துவங்க அவரவர் மனுக்களுடன் வரிசைகட்ட மீனாட்சியும் வரிசையில் இணைந்தாள்.
ஒவ்வொரு மனுவாக வாங்கிப் படித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆவன செய்யும்படி அறிவுறுத்தவரிசை நகர்ந்தது. மீனாட்சியும் கைகள் நடுங்க மனுவைக் கொடுத்து பதைப்புடன் ஏறிட்டாள்.
படித்து முடித்தவரின் கண்கள் அவளைத் தீர்க்கமாக ஊடுருவ கடிதத்தின் மீது பேப்பர் வெயிட்டை வைத்தார். கழுத்து நரம்பு புடைக்க முகம் சிவந்து குப்பென்று துளிர்த்த வியர்வையை கைக்குட்டையால் ஒற்றி ஒருமிடறு தண்ணீர் குடித்தவர் "நெக்ஸ்ட்" என்றார்.
தவிப்புடன் நகர்ந்தவளுக்குத் தலைசுற்றியது கலெக்டரின் பார்வைபடும் இடத்தில் அமர்ந்தாள். அடிக்கடி அவருடைய பார்வை மீனாட்சியின் பார்வையை சந்தித்து சடேரென்று வெட்டித் திரும்ப முள்ளின் மேல் அமர்ந்தது போல் தவித்தாள் மீனாட்சி. இதற்குள் மதிய உணவு இடைவேளை வர கூட்டம் கலைய ஆரம்பித்தது. தானும் கொண்டு வந்த பழைய சாதத்தை சாப்பிட பசி மயக்கமும், பிரஷர் மயக்கமும் கைகோர்க்க வேப்பமர முடிச்சில் சற்றேதலை சாய்த்தவள் "ஜனகணமன" என்று தேசியகீதம் ஒலிக்க வாரி சுருட்டி எழுந்தாள்.
கூட்டம் முடிந்துவிட்டது. தேசியகீதம் முடியும் முன்னே முண்டியடித்துக் கலைந்த கூட்டம். மேடையில் கலெக்டர் பரிவாரமும் உள்ளுர் பிரமுகர்களும் மட்டும். தனித்து நின்ற மீனாட்சி நிராசையுடன் நகர வேகமாக வந்த டவாலி அவளுடை கடிதத்தை அவளுடைய கைகளில் திணித்து விரைந்தார்.
அவளைக் கடந்த கலெக்டரின் பார்வையும் உடல்மொழியும் ஏதோ உணர்த்துவது போல் சட்டென கடிதத்தைப் பிரித்துப் பார்தவளுக்கு அதிர்ச்சி. கருணைமனு என்று முடித்த இடத்திற்குப் பக்கத்தில் பச்சை மசியில் முத்து முத்தாக "ஏற்கப்பட்டது" என்ற ஒற்றை வார்த்தை.
கையெடுத்துக் கும்பிட்டாள் கண்ணீருடன் தலையசைத்து அதைஏற்று சட்டென வண்டியில் ஏறியகலெக்டர் ஆயாசத்துடன் கண்களை மூடினார் வண்டி புறப்பட அவர் நினைவுகள் பதினைந்து ஆண்டுகள் முன்னே சென்றது.
அவர் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த நேரம் புகுந்த வீட்டாரின் டார்ச்சர் தாங்காது வயிற்றுப் பிள்ளையுடன் தீக் குளித்த அவர் அக்காவின் உருவம் நெஞ்சில் நிழலாடியது.
"அக்கா அன்று உன்னைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இன்று ஒரு தங்கையையும் இரு குழந்தைகளையும் காப்பாற்றி விட்டேன்" என்று உள்ளுக்குள் முனகிக் கொண்டவர் சட்டென சுதாரித்து அடுத்த வியூகம் அமைத்து பெருச்சாளிகளை வேட்டையாட முனைகிறார் கலெக்டர் புருஷோத்தமன்!